30 Dec 2011

Filter Coffee


அம்மா காப்பி, சூடா! பையன்.
இதோ பார் சண்முகம் வந்திருக்கிறார், காப்பி கொண்டா! கணவர்.
ஒரே தலைவலி, ஒரு கப் காப்பி சூடா குடும்மா.பெண்.
இந்த காப்பி நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் ஒன்று.
காலையில் கையில் செய்தித்தாளுக்கு சுவை சேர்ப்பது காப்பிதானே?
காப்பியை சுவைத்துக் குடிக்கிறோம். அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று என்றாவது கவலைப் பட்டிருக்கிறீர்களா? 
கொஞ்சம் காப்பி புராணம்!

எனக்கு கல்யாணம் ஆன புதிசு. ஒரு நாள் என் மாமியாருக்கு உடம்பு சரியில்லாமல்  போனது. ‘’டிகாஷன் இல்லை, கொஞ்சம் போட்டுவிடு,’’ என்றார்.பில்டரிலிருந்து டிகாஷன் எடுப்பதை பார்த்திருக்கிறேனே தவிர அது அங்கே எப்படி வருகிறது என்று எனக்குத் தெரியாது. ‘’பில்டரில் மூன்று ஸ்பூன் பொடி போட்டு, ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் விடு,’’ என்றார். ஆயிற்று, என்றேன். சொன்னபடி செய்தாயிற்று. டிகாஷன் மட்டும் இறங்கக் காணோம். ‘பில்டர் தலையில் ஒரு தட்டுத்தட்டு,’’ என்றார் மாமியார். பில்டர் தலையில் ஒரு தடவை என்ன, பலமுறை தட்டியும், ம்ஹும், டிகாஷன் மட்டும் ஒரு சொட்டு வரவில்லை. ‘’என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை,’’ என்று பாடிக்கொண்டு இருந்தார் அருணா சாயிராம்.

‘’இதோ பாரும்மா,கொஞ்சம் சூடான தண்ணீரை டபராவில் விட்டு, பில்டர் மேல் பாத்திரத்தை அதன் உள் வை,’’ என்றார். அப்பாடா என்று டிகாஷன் ஒரு மாதிரி இறங்கிற்று. 1. பில்டரின் மேல் பாத்திரத்தை கொஞ்சம் சுட வைத்து பிறகு பொடி போடவேண்டும். 2. பொடியை அடைக்கக்கூடாது.3.முதலில் தண்ணீரை ஒரு பக்கமாக விட்டுவிட்டு பிறகு முழுதும் விடவேண்டும்.4.முதல் டிகாஷன் இறங்கியவுடன் அதை வேறு பாத்திரத்தில் விட்டு  வைத்த பின் மேல் கொண்டு தண்ணீர் விட வேண்டும்.5. கூடியவரை முதல் நாள் ராத்திரியே நிதானமாக டிகாஷன் போடுவது நலம். இதெல்லாம் டிகாஷன் போடுபவர்கள் கவனிக்க. அல்லது டிரெயினிங் எடுத்துக் கொள்வது நல்லது.

இந்தப் பிரச்சினைகள் வேண்டாம் என்று தான் இன்ஸ்டண்ட் காப்பிப் பொடிகள் எல்லாம் வந்து விட்டன. ஆனாலும் சரியான விகிதத்தில் டிகாஷனும், பாலும்,சர்க்கரையும் கலந்தால்தான் டிகிரி காப்பி. புதிதாக காய்ச்சிய பாலில் சர்க்கரை சேர்த்து, இரண்டு ஆற்று ஆற்றி, முதல் டிகாஷன் அளவாய் சேர்த்தால் ஏ ஒன் காப்பி கிடைக்கும்!

இன்றைய காலகட்டத்தில் காப்பிப் பொடிகள் கஷ்டமில்லாமல் கிடைக்கிறது. எழுபதுகளில் ‘’காப்பி போர்டில்’’ அரசாங்க விலையில் காப்பிக் கொட்டை கிடைக்கும். பீபரி, ரோபஸ்டா, கொட்டைகளை வாங்கிக் கொண்டு, காப்பிக்கொட்டை வறுத்து அரைக்கும் கடைக்குப் போய், அவர்கள் வறுத்து அரைக்கும் வரை கதைப் புஸ்தகம் படித்து பொடியை வாங்கி வருவதர்க்குள் காப்பி குடிக்கும் ஆசையே போய் விடும். 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக இந்தக் கதைதான்.

60 களில் இன்னும் கஷ்டம். என்னுடைய தாயார் பெரிய இரும்பு வாணலியில் காப்பிக் கொட்டையை வறுப்பார். ஆறியபின் ஆட்டுக்கல்லில் போட்டு இரும்பு உலக்கையால் இடித்து, சலித்து எடுத்து வைப்பதற்குள் உன் பாடு என் பாடு ஆகிவிடும். சரியான பதத்தில் வறுக்காவிட்டால் கரிந்து போய் விடும். கொஞ்சம் முன்னே எடுத்து விட்டால் இடிக்கவராது. பாவம் மனைவி கஷ்டப்படுகிறாளே என்று அப்பா வறுக்கவும், பொடிக்கவும் மிஷின் வாங்கி வந்தார்.

image

ஒரு இரும்பு அடுப்பு, சற்றே நீள் வடிவில். அதன் மேல் வைக்கும்படியான உருளை வடிவில் மேல் பாத்திரம், கைப்பிடியுடன். முதலில் நெய்வேலி நிலக்கரி போட்டு அடுப்பை பற்றவைத்து விடவேண்டும். பின்னர் உருளை வடிவப் பாத்திரத்தில் {இரும்புதான்) ஒரு டம்ளர் கொட்டையைப் போட்டு சுற்ற வேண்டும். நான் கூட ஆசையாகச் சுற்றியிருக்கிறேன். வாசனை வந்தவுடன் மூடியைத் திறந்து கொட்டையை எடுத்துவிட்டு அடுத்த ரவுண்ட். அட, சூடான மூடி, திறக்க வராமல் வம்பு பண்ணும். இடுக்கியால் ஒன்று வைத்தால் தான் திறக்கும்.இப்படியாக ஒரு மூன்று டம்ளர் வறுப்பதற்குள் அடுப்புக் கனல் கம்மியாகிவிடும்! மீண்டும் கரியைப் போட்டு அது எரிந்து மீண்டும்……….மீண்டும்………மகா மகா பொறுமை …..பொறுமை…………. !

சரிதான், எப்படியோ வறுத்துவிட்டோம்! பொடிக்க வேண்டுமே! பொடிக்கும் மிஷினை மேசை மேலே பொருத்தி விட்டு கரண்டி கரண்டியாய் கொட்டையைப் போட்டு சுற்ற வேண்டும். ரொம்ப நைசாக பொடிக்க ஆரம்பித்தால் ஈஷிக் கொண்டு மிஷின் சுற்ற வராது. சரிதான் கொஞ்சம் கர கரப் பொடி என்றால் டிகாஷன் சொய்ங் என்று இறங்கிவிடும். சும்மாவா பாடினாள் அவ்வைப் பாட்டி, ‘’பொறுமை என்னும் நகை அணிந்து பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்,’’ என்று!

இத்தனை பாடு பட்டு கடைசியில் காப்பி நல்லா இல்லை என்றால் எப்படி இருக்கும்? நல்ல வேளையாக இப்போது காப்பிப் பொடிகள் கிடைக்கின்றன. காப்பி மேக்கர் வந்து விட்டதால் டிகாஷன் போடுவது ஒருவாறு சுலபமாகதான் இருக்கிறது.  காப்பி என்று ஒன்று கிடைத்தால் போதும் என்று ஆகிவிட்டதால் இப்போதெல்லாம் யாரும் ரொம்ப குற்றம் சொல்வதில்லை என்று நினைக்கிறேன். அப்படியும் நல்ல காப்பி தான் வேண்டுமென்றால் சிரமம் பார்க்காமல் ‘மையாஸ்’ ஹோட்டல் க்யூ வில் போய் நிற்பீர்களாக.

27 Dec 2011

ஏங்கும் விழிகள்-இராம. இராமநாதன்


பல ஆண்டுகளுக்கு முன்பு திரு.இராம. இராமநாதன் அவர்கள் எழுதி வெளியிட்ட கவிதை இது. எனக்குப் பிடித்த வரிகள், கவிதைகளை எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு. இக் கவிதையை இங்கு எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சின்ன விழி மலரில் உறவு கண்டேன்-அவன்
சிரிப்பில் மயங்கிய நான் கனவு கண்டேன்,
பொன்னிப் புதை மணலில் பிரிவு கண்டேன்-அவன்
போன இடம் தேடிப் புலம்புகின்றேன்.

அணைத்து மகிழ்வதர்கோர் அன்னையானான்
அடித்துத் திருத்துதர்க்கோர் தந்தையானான்,
நினைத்து வணங்குதற்கோர் தெய்வமானான்-அவன்
நின்ற இடந்தேடி நினைவிழந்தேன்.

மழலைச் சொல் உதிர்த்து வாய் திறக்கும்-ஒரு
வார்த்தை வந்து நின்று மயங்க வைக்கும்
நிழலை இழந்த ஒரு நெஞ்சமடா-அவன்
நிறுத்தி வழி நடந்த கோயிலடா!

கட்டுப்படுவதற்கோர் காவல் வைத்து-அதன்
கரையில் அவனிருந்து காத்து வந்தான்
சிட்டுப் பறந்தவுடன் திணறுதடா-நெஞ்சம்
தினமும் அவனையிங்கு தேடுதடா!

உயிருக்கு உயிராய் நின்றவனின் எழில்
தோய்ந்து கிடந்தவொரு திருமுகத்தை
எப்படி மறந்திருப்போம் வாழ்க்கையில்-தினம்
ஏங்கும் விழிகளிடம் என்ன சொல்வோம்!

24 Dec 2011

ஜீவகாருண்யம்.


 ஜீவன்களுக்கு கருணை காட்டுவது ஜீவகாருண்யம். உயிர் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும், பறப்பன, நடப்பன, ஊர்வன, நீர் வாழ்வன,  என எல்லா உயிர்களுக்கும் அன்பு காட்டுவது கருணை. பசித்த உயிர்களுக்கு உணவு அளிப்பது கருணை. கருணை எப்படி வரும்? அன்பு நிறைந்த உள்ளத்தில் கருணையும் நிறைந்திருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒருவர் கேட்டார், ”காசு வாங்காமல் சாப்பாடு போட்டால் அது அன்னதானம்தானே?

ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். புத்தர் ஒரு முறை தன் முந்தைய பிறவி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாராம். ஒரு சக்கரவர்த்தியின் மூன்றாவது மகனாக, மகாசத்வர் என்ற பெயருடன் பிறந்த புத்தர் மிகச் சிறு வயதிலேயே எல்லா உயிர்களையும் தன் குழந்தையாக நடத்தினார்.
ஒரு நாள் சக்கரவர்த்தி தன் மூன்று மகன்களுடனும், பரிவாரங்களுடனும் வேட்டையாடச் சென்றார். வழியில் ஓர் பெண்புலி குட்டிகளை ஈன்ற அயர்ச்சியில் பசியுடன் படுத்திருந்தது. இந்தத் தாய்ப் புலிக்கு மீண்டும் உயிரளிக்க என்ன வழி என்று மஹாசத்வர் கேட்டார்.

புதிய ரத்தமும், மாமிசமும் தான் அதனை உயிர்ப்பிக்கும் என்றனர் அனைவரும்.
யார் இந்தப் புலிக்கு தன் சதையையும், இரத்தத்தையும் கொடுத்து அதன் குட்டிகளையும் காப்பாற்றுவார்கள் என்று கேட்டார் மகாசத்வர்.
யார் கொடுப்பார்கள்? என்று பதில் வந்தது.

மஹாசத்வரின் மனம் உருகியது. அவர் எண்ணினார், இது வரையும் பல பிறவிகளையும் எடுத்து, சம்சாரத்திலே உழன்று, ஆசை, கோபம்,அறியாமை காரணமாக பிறருக்கு மிகச்சிறிய அளவிலேயே உதவியிருக்கின்றேன். இப்போது எனக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவ்வாறு மகிழ்ந்த மஹாசத்வர் மற்றவர்கள் அனைவரையும் செல்லுமாறு கூறினார்.

பின்னர் அமைதியாக, சப்தமின்றி பசியோடு படுத்திருந்த புலியின் முன்பு சென்று படுத்துக்கொண்டார். புலியோ அயர்ச்சியின் காரணமாக வாயையும் திறக்கமுடியாத நிலையில் இருந்தது. இதை உணர்ந்த சத்வர் அருகிலிருந்த ஓர் கூரிய குச்சியினால் தன் உடலைக் கிழித்து புலி இரத்தத்தை உறிஞ்சும் படியாக செய்தார். புலி அவரை உண்டது.

புலிக் குட்டிகளைக் காப்பாற்ற தன்னையே  உணவாகக்  கொடுத்த இந்த செய்கையானது, மறு பிறவியில் அவர் மிக உயர்ந்த பிறவி எடுக்க காரணமாயிற்று. அவர் உடலை உண்ட புலியும், அதன் குட்டிகளும் மறு பிறவியில் அவருடைய சீடர்களாகப் பிறந்தனர். இத்தகைய கருணைச் செயலை புத்தரால் மட்டுமே செய்ய இயன்றது. தன்னையே பிறருக்காக தியாகம் செய்வதே மிகப் பெரியகருணைச் செயலாகும் என்கிறது,”The Tibetan book of living and dying.”

”கருணை எனும் ஜீவநதியின் ஊற்று பெருக்கெடுக்குமானால் அதுவே மரணத்தை வெல்லும் மிக உயர்ந்த அமிழ்தம், உலக மக்களின் வறுமையை நீக்கக் கூடிய, எடுக்க எடுக்க வற்றாத செல்வம், அனைவருடைய நோய்களையும் நீக்கக் கூடிய தெய்வீக மருந்து, பிரபஞ்சத்தோடு மானுடத்தை இணைக்கும்  பாலம்” என்று சொல்கிறது புத்தமதம்.

இதையே அருட் பிரகாச வள்ளலாரும் எடுத்துச் சொல்கிறார். ஜீவர்களுடைய பசிப் பிணியைப் போக்குவதே மிகப்பெரிய தவம். தன்னுடைய உடல் உழைப்பால் பெற்ற செல்வத்தில் சிறிதளவாவது பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல், உணவு அளித்தல் தவம். போதும் போதும் என்று மனிதனை சொல்லவைக்கக் கூடியது உணவு ஒன்றேயாகும்.
இதையே அருணகிரிநாதர் கந்தரலங்காரத்தில், அட நிறையக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, “நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்” என்கிறார். கொஞ்சம் நல்லவரா, ”பிடி சோறு இட்டு உண்மின்,” என்கிறார்.
இப்போது சொல்லுங்களேன் அன்னதானம் என்றால் என்னவென்று.

22 Dec 2011

நினைவுகள்.


ஒவ்வொரு நாளும் இரவைப் பகலும், பகலை இரவும் துரத்துகின்றன.
பருவங்கள் மாற, மணித்துளிகள் நாட்களாய், வாரமாய், மாதமாய்
மறைந்து போகின்றன.ஆனால் இந்த எண்ணங்கள் மட்டும்,  ஏன்
விட்டுப்பிரியாமல், ஓய்வே இல்லாமல், அமைதியின் மடியில்
சாயாமல், எல்லாம் போனபின்பும் என்னைச் சுற்றிச் சுற்றி
வந்து என் உறக்கத்தை கவர்ந்து போகிறது? கட்டுப்பாடற்ற
காட்டாற்று வெள்ளமாய் அடித்துச் செல்கிறது! தெரியுமா?
              ==========
மலைச் சிகரங்களைத் தழுவிச் செல்லும்
வெண்மேகங்களைப் போல -நாம்
பிரிவதற்கே சந்திக்கிறோம்!
சந்தித்த சுவடுகள் கூடத் தெரியாமல்!
              ==========
 

நீ  தொலைந்து போய் விட்டாய், நான் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!
                               ———-
நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னால்
உன்னை எனக்குத் தெரியாது!
இப்போதும் உன்னை எனக்குத்
தெரியவில்லை! என்ன ஆச்சரியம்!
           ————-
உன்னுடையது என்று நீ எதனை
விட்டுப் போனாய், உன் குழந்தைகளை…,
குழந்தைகள் அவரவர் வாழ்க்கைப் பாதையில்!  என்னுடையது என்று
எதுவுமேயில்லை என்னைத் தவிர

15 Dec 2011

நினைவுகள்

  1.                   பிரிக்கமுடியாத நினைவாய், பிரியமுடியாத உணர்வாய்,
                      உயிராய், ஒளியாய், ஒலியாய், ஒவியமாய்,காவியமாய்,
                      நீ,என் உயிரில், உள்ளத்தில், எண்ணத்தில் எப்பொழுதும்!

                      அன்று,
                      கடற்கரையில் கால் நனைத்து ஓடிவந்த அலைகள்,
                      காற்றினிலே ஓசையிடும் ஓலம் வந்து எதிரொலித்த
                      நேரம், நேசமுடன் மெரினாவின்  கடற்கரையில், நீ
                      எனக்காய்  பாடினாயே,  பாடல்கள் அனைத்தும்
                      ரகசியமாய் என் காதில்,  மென்மையுடன்  ஒலிக்கும்!

                      கடற்பரப்பில் நிலவொளியின் பாதையொன்று
                      மினுமினுக்க, அவ்வொளியில் கால்பதித்து, கரம்
                      கோர்த்துச் செல்ல ஆசைமிகும்!  அந்நாளில்
                      பேசிமகிழ்ந்த போதுகளை மனமிங்கே அசைபோட,
                      ”விட்டுப்பிரியேன்,” என ”தொட்டபெட்டாவின்,”
                      சிகரத்தில், வெட்டவெளியில், தேனிலவில், பட்டப்
                      பகலில் சொன்னவன் நீ!  என் உயிர் கவர்ந்து போனாய்!

                      உடல் மட்டும் இங்கே உன் நினைவுகளில்!
                      பூங்காவின் வழித்தடங்கள், கால் பதித்த தடயங்கள்,
                      கரம் கோர்த்து நடந்து சென்ற பாதைகளின் ஒரத்தில்,
                      வீசுகின்ற காற்றாய்,  கதிரவனின் பொற்கதிராய்,
                      நிலவொளியின் தண்கதிராய் உன்னை எங்கும்
                      தேடுகின்றேன்! நீ வருவாயோ மாட்டாயோ………
                      நான் வருவேன் உன்னிடத்தில்…………..,

                      முதுமையிலும் உன் காதல் இனிக்கிறது,
                      சோகத்திலும் என் நெஞ்சை நிறைக்கிறது.
     

14 Dec 2011

பாலனென்ற அண்ணன்.(9.9.1943-22.11.2011)

  1.       

    image
    ” பாலனென்று தாவி அணைத்தேன் அடி யசோதா ,” என்ற பாடல்  எங்கோ ஒலிக்கிறது! பாலன் நினைவு வந்து விட்டது. பாலன் என்றால் குழந்தை என்றல்லவா பொருள்! அது என்ன பாலன் என்று பெயர் வைத்தீர்கள்?

                         அட, அவன் பெயர் பாலசுப்பிரமனியன். பாலா என்று கூப்பிட்டுக் கூப்பிட்டு பாலன் என்றே ஆகிவிட்டது. அதனால் என்ன, கேரளாவில் பாலன் என்ற பெயர் பிரபலமானது தான். இரண்டு அண்ணன்களுக்குத் தம்பி, இரண்டு தம்பிகளுக்கும், இரண்டு தங்கைகளுக்கும்  அண்ணன். ஶ்ரீ.வைத்தியனாத ஐயர், லஷ்மி அம்மாவிற்கு சீமந்தம் பண்ணாத முதல் புத்திரன். ஆம், ஶ்ரீ வைத்யனாத ஐயருக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப் பட்டவள்தான் அம்மா.

                          1943ஆம் வருடம் செப்டம்பர் மாதம், 9ஆம் தேதி, ஆவணி, பூராட நட்சத்திரத்தில் செக்கச்செவேல் என்று குழந்தையைப் பெற்றெடுத்தாள் லஷ்மி அம்மா. அவனும் வளர்ந்தான், கூடவே ஆஸ்த்துமா. சாதாரணமாக எல்லோருக்கும் தந்தைவழி, தாய் வழிப் பாட்டனார் சொத்துக்கள் கிடைக்கும். வீடு, வயல், நகை, பணம் என்று. ஆனால் பிறவியிலேயே அவனுக்குக் கிடைத்த சொத்து என்ன தெரியுமா? வாழ்னாள் முழுவதும், கடைசி மூச்சு வரையிலும், மருந்துகளையே நம்பி வாழும் நிலையை ஏற்படுத்திய ஆஸ்துமா நோய்தான். இதுவென்ன ஆஸ்துமா நோயெல்லாம் சாதாரணம், மருத்துவ வசதிகள்  நிறைய உள்ளனவே என்று நீங்கள் சொல்லலாம்! 1950 களில் அவ்வளவு மருத்துவங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. குடும்பச் சொத்து, யாரும் பங்குக்கு வராதது, மருந்துகள், மருத்துவர்களுக்கு கட்டுப்படுமா?

                        சிறு வயதில் ஸ்வர்ணபுரியில் நான் பெரும்பாலும் பாலனுடைய நண்பர்கள்,ஜகதீஷ்,கணேஷ், சுந்தர் ஆகியோருடன் நிறைய விளையாடியிருக்கிறேன். ஜகதீஷ் என் தோழி பிரேமாவுடைய அண்ணன். அதனால் பாலன் தன் தங்கைக்கும் பிரேமா என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தான். நானும் அவனும் வேணுமான அளவு சண்டை போட்டிருக்கிறோம். ரொம்ப கோபம் வந்தால் என்னை, காளி, மஹாகாளி, பத்ரகாளி என்று  திட்டுவான். மற்றபடி அவனுக்கு மூச்சு  வாங்க ஆரம்பித்தால் ரொம்பவே கஷ்டமாக இருக்கும். உடனே  அம்மா குமட்டி அடுப்பை பற்ற வைத்து இரும்பு வாணலியை ஏற்றி, அரிசி உமியை மூட்டையாகக் கட்டி வாணலிச்  சூட்டில் சுட வைத்த உமி மூட்டையால் ஒத்தடம் கொடுப்பாள். சித்தரத்தைக் கஷாயம் தயாராகும். இப்படியாக  வளர்ந்த பாலனுக்கு குன்னூர் குளிர் இன்னும் பகையானது. அவனும் தினம் ஊட்டியில் உள்ள அரசாங்க ஆர்ட்ஸ் கல்லூரிக்கு டிரெயினில் போகவேண்டும். அவனுக்காக ஒரு சூடு தாங்கும் டிபன் கேரியர் வாங்கப்பட, அதையும் தூக்கிக் கொண்டு போவான்.

                         இவ்வாறு இருக்கையில் ஒரு முறை அவனுக்கும் மிகவும் மோசமான மூச்சிரைப்பு வந்துவிட எல்லோரும் பயந்தே போனோம். டாக்டர் வரவழைக்கப்பட்டு ஊசி போட்டபின் தான் அவனுக்கு சரியானது. அப்போது  எட்டாம் வகுப்பில் சரித்திரப்பாடத்தில் எங்களுக்கு பாபர், ஹுமாயூன் பற்றிய பாடம் இருந்தது. தன் மகன் ஹுமாயூனுக்கு உடல் நலம் மோசமான போது தகப்பனார் பாபர், தன் மகன் படுக்கையை மூன்று முறை சுற்றி வந்து, தன் மகனின் நோயைத் தனக்குத் தந்து அவனைக் காப்பாற்ற வேண்டும் என வேண்ட  அவ்வாறே பாபர் இறந்தார் எனவும், ஹுமாயூன் பிழைத்ததாகவும் கதை. நானும் அப்படியே பாலன் கட்டிலை சுற்றி வந்து அவனுடைய ஆஸ்த்மா எனக்கு வரட்டும் என்றும், அவனுக்கு குணமாக வேண்டும் என்றும்  வேண்டிக்கொண்டேன். இதைப் படிப்பவர்கள் சிரிக்கலாம். ஆனால் என்னுடைய களங்கமற்ற மனமும், அவன் மூச்சுத் திணறி பட்ட கஷ்டமும் என்னை அப்படித்தான் செய்யத் தூண்டியது. துரதிர்ஷ்ட வசமாக எனக்கு ஆஸ்த்துமா வந்தது, அவனுடையது போகவில்லை. அவனுக்கு குணமாகியிருந்தால் நான் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன்.

                                 பிறகு அவனும் காரைக்குடி செட்டினாடு பாலிடெக்னிக்கில் படிக்கப்போனான். அவன் படிப்பு முடிய, நான் கல்லூரியில்! நான் இரண்டாம் ஆண்டு படிக்கையில் அவனுக்கு வேலை கிடைத்து வரங்காவ் சென்றான். வாழ்க்கை மிகவும் குறுகியது! குழந்தைப் பருவம் கண்ணனுடைய பிருந்தாவனம் போன்றது. கவலையில்லாமல் சுற்றித் திரிந்து, ஆடிப்பாடி, தாயின் அன்பில், தாலாட்டில், அவளுடைய பாசத்தில், நேசத்தில், ஊறித் திளைத்து, சகோதர, சகோதரிகளுடன்பேசிச் சிரித்து, மகிழ்ந்து, ஆனந்த வாழ்க்கை அப்போதே முடிந்து விடுகிறது.! ஆம் அவரவர் வழியில், காலம் காட்டிய பாதையில் திசை மாறிப்போனோம். அன்பும், பாசமும், அக்கறையும் மென்மையாகப் பேசும் இயல்பும் உடையவன். ஆஸ்த்மா என்னும் ஆஸ்தியால், அதற்காக அவன் சாப்பிட்ட மருந்துகளின் பக்கவிளைவால், அவன் பட்ட கஷ்டங்கள் அதிகம்.

                                 வீட்டின் விசேஷங்கள், முக்கிய நிகழ்ச்சிகளில் எல்லாம் சந்தித்திருக்கிறோம், ஆனால் தன்னுடைய கஷ்டங்கள் பற்றி என்றும் அவன் சொல்லியதில்லை. திருமணமாகி 13 ஆண்டுகளுக்குப் பின் அவனுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு நல்லவேளையாக பரம்பரை ஆஸ்த்தியைக் கொடுக்காமல் பொன்னும், பொருளும், பணமும் வைத்துச் சென்றான். நம்முடைய பிறப்பும், வாழ்க்கையும் நம்முடைய கைகளில் இல்லை, ஆண்டவன் வகுத்தபடியயே நடக்கிறது  என்ற மாபெரும் உண்மையை உணர்வோமானால் வாழ்க்கை சந்தோஷமானதே.

                             சென்ற ஆண்டு,நவம்பர் மாதம் 22ஆம் தேதி,விண்ணுலகு எய்திய அவனுடைய, ஆன்மா சாந்தி அடையவும், மீண்டும் பிறக்கையில், நோயின்றிப் பிறக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.
                                                      
     

12 Dec 2011

ஆண்டவனோடு அரை மணி நேரம்.[மொழிபெயர்ப்பு]


”வாழ்க்கையை நோக்கி உன்னால் புன்முறுவல் பூக்க முடியுமானால், வாழ்க்கையும் எப்போதும் உன்னை நோக்கிப் புன்முறுவல் பூக்கும்”.
ஆண்டவனுடைய வழிகாட்டுதலை உணர்ந்து, அதன் படி நடக்க விரும்பி, தெய்வீகத் தொடர்பு ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது சாதாரண வாழ்விலும்,யோக வாழ்விலும் சிக்கலாக இருக்கிறது. மனிதனுக்கு, தானே அந்தத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது தெரியவில்லை. இறைவனே அந்தத் தொடர்பை ஏற்படுத்துகிறான். அவனே உன்னை வந்து அடைகிறான். உன் மனசாட்சியை ஒழுங்குபடுத்துகிறான். சொல்ல வேண்டியதைச் சொல்லி, செய்யவேண்டியதைச் செய்கிறான். மின்சார இணைப்பை செருகி, பட்டனைத்  தட்டிவிட்டால்  எவ்வாறு  விளக்கு  எரிகிறதோ, அது போல நீயும் இறைவனோடு  தொடர்பு கொள்ள வேண்டியதுதான். மற்ற எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்வான்.
”மனிதன் மட்டும் ஆன்மிக விழிப்படைய தன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டால் எல்லாமே மாறி விடும்,” என்கிறார் ஶ்ரீ அரவிந்தர். எனவே முக்கியமானது உன் அனுமதியே. ”நான் என்னை மாற்றிக் கொள்ள விரும்புகிறேன். குறைபாடற்றவனாக, நிறைவானவனாக இருக்க விரும்புகிறேன். தெய்வீக நிலையை அடைய விரும்புகிறேன்.”என்று உன் விருப்பத்தை வெளியிட்டு, உன்னைத்  திறந்த மனத்துடனும், உண்மையாகவும், அவன் கரங்களில் ஒப்படைப்பாயாக.
உன்னுடைய அனைத்து ஆசைகளும்,விருப்பங்களும் உன் ஆத்ம நிவேதனத்திற்கும்,இணைப்பிற்கும் தடையாக வரக்கூடும்.

ஆராய்ந்து பார்க்குமிடத்து உனக்கு நான் அறிவுறுத்துவது என்னவென்றால்,”காலையில் எழுந்தவுடன் அரைமணி நேரம் ஆண்டவனுக்காக செலவிடு. இதை உன் வாழ்வின் கொள்கையாய் செய். இறைவனுக்காக மட்டுமே அரைமணியாவது  செலவிடுவேன் என்று சங்கல்பித்துக் கொள். உன்னுடைய குறைபாடுகள், தயக்கங்கள்,சந்தேகங்கள், நம்பிக்கையின்மை,ஆகிய எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தீர்மானத்தைச் செய்
.
ஒவ்வொரு நாளும் காலையில் அரை மணி நேரமாவது அவனுடன் பேசு. உன்னுடைய பிரச்சனைகளை அவன் முன் வை. உன் பேரார்வ விழைவுகளை அவனிடம் கூறு. உனக்கு மிகவும் நெருக்கமான, பிரியமானவர்களிடம் சொல்வது போல், எல்லாம் வல்ல, எல்லாம் அறிகின்ற, அந்த தெய்வத்தினிடம் அவன் உன் குரலைக் கேட்பான் என்ற நம்பிக்கையோடு செலவிடு.

ஒரே ஒரு நாள் முயற்சி செய்; விளைவைப் பார்.ஒரு நாளில் உனக்குத் தெரியும் என்ன பலன் கிடைத்தது, என்ன கிடைக்குமென்று. இதை ஒரு முறை ஒழுங்காகச்  செய்தால் வாழ்னாள் முழுவதும் செய்ய விரும்புவாய்.

உங்களில் யாரெல்லாம் இறைவனின் வழிகாட்டுதல் தேவையென உணர்கிறீர்களோ,நியதிப்படி வாழ விரும்புகிறீர்களோ,அவர்களுக்கெல்லாம்  இறைவனை அடைய மேற்கொள்ள வேண்டிய முதற்படி இதுவே ஆகும். முந்தைய பிறவிகளில் இருந்தும், பிறந்ததிலிருந்தும்,குழந்தைப் பருவத்திலிருந்தும் பல்வேறு வினைப்பயன்கள் மனத்தளவில் ஊன்றப்பட்டுள்ளன. அவை நாம் இறைவனோடு தொடர்பு கொள்வதைத் தடுக்கின்றன.

ஆனால் ஒரு முறை தொடர்பை நாம் ஏற்படுத்திக்கொண்டு விட்டால், இறைவன் எல்லாவற்றையும் சரி செய்கின்றான். இதுவே நம் துன்பங்களை எல்லாம் விலக்க எளிய வழியாகும். மற்ற எல்லா முறைகளிலும் கடினமான தவம் தேவைப்படுகிறது. நீங்கள் இறைவனுடன் பேசும் பொழுது உங்கள் ஆர்வத்தில், எண்ணத்தில் இருக்கும் தவறுகள் எல்லாம் மறைந்து போவதைக் காண்பீர்கள். உங்கள் குறைபாடுகளை உணர்ந்து திருத்திக் கொள்வீர்கள்.நம் வாழ்க்கை முழுவதும் இறைவணுக்கு அர்ப்பணிக்கும் பிரார்த்தனையாக இருக்கவேண்டும்.
   [Translation of the article ‘Half an hour with God.’]

9 Dec 2011

காவிரி நதியுடன் கை கோர்த்து



                                             காலச்சுவடுகள்.


மலைசூழ் மாநகர் எனப் போற்றப்படும் சேலம் தமிழ் நாட்டின் ஒரு ஜில்லாவாகும். பல சமயக் குரவர்களால் பாடல் பெற்ற சுகவனேச்வரர் திருக்கோயில் இங்கே உள்ளது. மிகப் பெரிய அக்கோயிலில் அம்பிகையின் பெயர் சுவர்ணாம்பிகை. கோயிலின் எதிரில் பேலஸ் தியேட்டர். பக்கத்தில் தியசாபிகல் சொசைட்டி. இந்த சொசைட்டியின் ஆரம்பப் பாடசாலையில் தான் அடியேனுடைய அட்சர அப்பியாசம் ஆரம்பம். பக்கத்திலேயே வீடு. அந்தச் சின்ன குடியிருப்பு வீடு இன்னும் நினைவு இருக்கிறது.

1950ம் ஆண்டு என் தந்தையார் சேலம் புறனகர்ப் பகுதியில் புதிதாகத்தோன்றிய ஸ்வர்ணபுரியில் வீடு ஒன்று கட்டினார். நல்ல பெரிய வீடு. ஓடு இறக்கிய வாசல்  ஹால், இன்றைய வரவேற்பு அறைபோல. கூடவே அப்பாவின் ஆபீஸ் ரூம். அடுத்து கூடம். அப்பாவின் படுக்கை அறை. உள்ளே போனால் பூஜை யிடத்தோடு கூடிய பெரிய புழங்கும் இடம். இன்னொரு சிறிய ரூம், ஸ்டோர் ரூம். அடுத்து சமையலறை. எதிரில் இன்றைய பாஷையில் சாப்பாட்டு அறை. பின் பக்கம் குளியலறை, ஒன்றுக்கு இரண்டாக டாய்லெட். கண்டாமுண்டா சாமான்களை பத்திரப் படுத்தும் அறை.

புதிய வீட்டின் புதுமனை புகும் விழா முடிந்த கையோடு என்னை ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள செயிண்ட் மேரீஸ் ஹைஸ்கூலில் சேர்த்தார் என் அப்பா.என் அண்ணன் பாலனை லிட்டில் ப்ளவர் மாணவர் பள்ளியிலும், தம்பிகள் இருவரையும் வீட்டின் பக்கத்தில் இருந்த கலைமகள் ஸ்கூலிலும் சேர்த்தார். யார் என்னை தினமும் கொண்டு விட்டார்கள் என்று நினைவில்லை. நான்கு,ஐந்தாம் வகுப்புகள் படிக்கும் போது பெரிய அண்ணா ராஜப்பன் சைக்கிளில் கூட்டிப்போவார். ஒரு நாள் என் பாவாடை சைக்கிள் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு விட்டது. புதுப்பாவாடை என்று நினைக்கிறேன். அதைக் கிழியாமல் எடுப்பதற்க்குள் போதும் போதும் என்று ஆகி விட, பாவாடை முழுவதும் சைக்கிள் மை ஈஷிக்கொள்ள, வீட்டுக்கு வந்ததும் அம்மா ஆ,ஊ,என்று வசைபாட, அன்றோடு சைக்கிளில் அண்ணாவுடன் பறக்கும் பாக்கியத்தை அடியேன் இழந்தேன். அண்ணாவுக்கு சைக்கிளை வெகு வேகமாக,சைக்கிள் பாரைப் பிடித்துக் கொள்ளாமல், எங்கள் மூன்று பேரையும் வைத்துக்கொண்டு ஓட்டப்பிடிக்கும். ஊர்க்காரர்களுக்கு என்ன, கிருஷ்ணரைப் பற்றி கோபியர்கள் புகார் செய்தது போல் வீட்டில் மெனக்கெட்டு வந்து புகார் சொல்லிப் போவார்கள்.  நிறையமுறை அண்ணாவுடன் சைக்கிளில் சுற்றியிருக்கிறேன். அது ஒரு ஜாலியான அனுபவம்.

image


காலையில் சாப்பாட்டுத்தூக்குடன், தோழிகளுடன் புளியம் பழம் பொறுக்கிக் கொண்டு , பள்ளிக்குப் போவது வருவது. அந்தக்காலத்தில் வீட்டுப்பாடம் எல்லாம் கிடையாது. சாயங்காலம் பூராவும் விளையாட்டு. ஆறு மணிக்கு விளக்கேற்றி வைத்து அம்மா ஸ்லோகங்கள் சொல்லிக்கொடுப்பதை கற்றுக் கொண்டு படிக்க உட்காருவோம். ஒன்பது மணிக்கு முன்னால் தூங்கிவிடுவோம்.

வீட்டைச் சுற்றி அழகான தோட்டம் போட்டிருந்தார் அப்பா. பின் பகுதியில் அவரைக் கொடியின் காய்கள் பார்ப்பதற்கே அழகாய் இருக்கும். சுவைக்கு கேட்கவே வேண்டாம்.வெண்டை, கொத்தவரங்காய், கத்தரி, முள்ளங்கி, கேரட் கீரைகள் என எல்லாக்காய்களும் காய்க்கும். காய்கள் மட்டும் போதுமா? ஒரு பகுதியில் கனகாம்பரம், டிசம்பர், ரோஜா,வாசலில் ராமபாணம் எனப்படும் மல்லிகைக் கொடி ஓட்டின் மேல் படர்ந்து பூத்துக்குலுங்கும். மாலை வேளைகளில் ஒட்டின் மேல் மெதுவாய் இறங்கி, எல்லா மொக்குகளையும் ஒன்று விடாமல் பறித்துக் கட்டி, அம்மாவிடம் அதற்காக நிறைய  திட்டும் வாங்கியிருக்கிறேன். ராமபாணப் பூவின் தெய்வீக மணத்தில் ஒரு மயக்கம்! வாசலில் குண்டு மல்லி, முல்லைப் பூங் கொடிகளும் உண்டு.

அசோகா, சவுக்கு, மரமல்லி, பாதாம் மரங்களும்,சிறிதாகப் பூக்கும் வெண்மை நிற நந்தியாவட்டைச் செடியும் வாசலில் இருந்தது. அப்பா தினமும் காலையில் ஸ்லோகம் சொல்லிக்கொண்டே இந்தப்பூக்களைப் பறிப்பார். கூடை நிறைந்ததும் ‘அன்னபூரணியை’ அழகாக அலங்காரம்  செய்வார். அவர் காலமாகி முப்பத்தைந்து வருடங்களாகியும் இன்னும் அவர் சொல்லும் ‘அன்னபூரணாஷ்டகம்’ என் காதுகளில் ஒலிக்கிறது.

வீட்டின் பக்கவாட்டில் மாதுளை, சப்போட்டா, கொய்யா மரங்கள் இரண்டு, சிவப்பு, வெண்மை சதைப்பற்று உள்ளது, எனப் பழமரங்களும் இருந்தது.வாசல் கேட்டை ஒட்டி திராட்சைக் கொடி ஒன்றை அப்பா வைத்தார்.  அந்தப்பக்கமாக வருபவர்களும், போகிறவர்களும் ‘இது என்ன கொடி சார் ‘ என்பார்கள். ‘திராட்சை’ என்றால், ‘சார், ஒரு நாயை அடித்து வேரில் புதையுங்கள், அப்போதுதான் இந்த ஊரில் திராட்சை காய்க்கும்,’ என்பார்கள். இதைக் கேட்டுக்கேட்டு அலுத்துப்போய் அப்பா ஒரு நாள் அந்தக்கொடியை வெட்டி விட்டார். இப்போது எழுதுவது எல்லாம் 1952 முதல் 1959 வரை என் நினைவில் நிற்பவை.

காலை வேளைகளில் அப்பா ஊரில் இருக்கின்ற சில நாட்களில், பல் தேய்ப்பது கூட தோட்டத்தில்தான் நடக்கும். காலணாவுக்கு வெற்றிலை வாங்கி வந்தால் ஆரஞ்சு மிட்டாய் கிடைக்கும். சத்தமாக அப்பாவின் குரல் கேட்டால் சண்டை நடப்பது தெரியும். அப்பாவின் அம்மா, என் பாட்டியின் கைங்கரியம். ஸ்லோகம் சொல்லிக்கொண்டெ அடிக்கடி அம்மாவுக்கு அர்ச்சனை செய்து கொண்டு இருப்பாள். விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து காப்பி போட்டு, சமையல் செய்துவிட்டு, ஏழு மணிக்கு எண்ணெய்க்கிண்ணம், குடம் சகிதம் கோயிலுக்குப் புறப்பட்டு விடுவாள். அரச மரத்தடிப் பிள்ளையாருக்குத் தண்ணீர் அபிஷேகம் செய்து, பூ போட்டு, விளக்கேற்றி மூன்று பிரதட்சணம் செய்து, வீடு வந்து ஜபமாலையை உருட்டிக் கொண்டே சகட்டுமேனிக்கு அம்மாவைத் திட்டிக்கொண்டு இருப்பாள். யாராவது பக்கத்தில் வருவது தெரிந்தால் உடனே ராம, ராம என ஜபம் செய்வது போல் பாசாங்கு செய்வாள். என்னை அடிக்கடி ஸ்லோகங்கள் படித்துக்காட்டச் சொல்வாள் ஆதலினால் தமிழ் மொழியில், படிப்பில் ஓர் ஆர்வம் ஏற்பட்டது. ஹிந்து பேப்பர் சுப்ரமணிய ஐயர் வீட்டில் வெள்ளி தோறும் நடைபெறும் பஜனைக்கு, பாட்டிக்குத்  துணை நான்தான். ஆசை ப்ரசாதத்தின் மேல் தான் என்றாலும் திருப்புகழும் என்னைப் பற்றிக் கொண்டது.

எங்கள் வீட்டின் வலது பக்கம் அந்தக்காலத்தில் சினிமா புகழ்’ கேமராமேன்’ டபிள்யு.ஆர் சுப்பாராவ் குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். அவருடைய சகோதரர் குடும்பமும் சேர்த்துக் கூட்டுக் குடும்பம். ஏழெட்டுக் குழந்தைகள். வீடே கலகலவென இருக்கும். அங்கே போய்விட்டால் நேரம் போவதே தெரியாது.

முதல் வீட்டில் சுப்ரமணிய ஐயர் குடும்பம்.அவருக்கு மூன்று பெண்கள்.
மங்களம், சாரதா, சாந்தா என்று பெயர். இடது கைப்பக்கம் நாலு வீடு தள்ளி குருமூர்த்தி ஐயர்,பொன்னம்மா டீச்சர்,நன்னையர் வீடுகள். விளையாட நிறைய குழந்தைகள் இருந்ததால் எப்போதும் ஆட்டமும்  ஓட்டமும்தான்.

கோவிலுக்குப் பக்கத்தில் மாதர் சங்கக் கட்டடம். சகுந்தலா மாமிதான் பிரசிடெண்ட். அவள் பெண் இந்திரா நன்றாக டான்ஸ் ஆடுவாள். எனவே கிருஷ்ணஜயந்தி சமயத்தில் பாட்டும் டான்சும் அமர்க்களப்படும். இந்திராதான் எப்போதும் கிருஷ்ணர்!
1956ல், அதாவது, நான் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது  என் தங்கை பிரேமா பிறந்தாள்; ஒரு நாள் மாலை நான் பள்ளி விட்டு வந்து கொண்டிருந்த போது அம்மா வேலைக்காரப் பெண்ணுடன் வருவதைப் பார்த்தேன். செயிண்ட் மேரிஸ் கான்வெண்டைச் சேர்ந்த ஆஸ்பத்திரிக்கு அம்மாவுடன் போய் வந்தேன். பாவம் அம்மா, மூச்சு முட்ட 2  கிலோமீட்டர் நடக்கவேண்டுமென்றால், அதுவும் நிறை மாத கர்ப்பிணியாய்?

அதன் பிறகு அம்மா ஒரு நாள் என்னையும், என் அண்ணா பாலனையும், சொசைட்டி ஆபீசில் பணி புரியும் கிறித்துவ நண்பர் ஒருவருடன் ஸ்டேஷனுக்கு, அதாவது சேலம் ஜங்ஷனுக்கு இரவு நேரத்தில்
அனுப்பினாள். என் அம்மாவின் அம்மா, ரயிலில் இருந்து இறங்கி பெயர் சொல்லிக் கூப்பிடுவாள் என்றும், நாங்கள் இருவரும் பாட்டியை அடையாளம் கண்டுகொண்டு அழைத்து வரவேண்டும் என்றும் ஏற்பாடு. எனக்கு பத்து வயது, பாலனுக்கு பன்னிரண்டு, மோகனுக்கு ஏழு, ரவிக்கு ஆறு வயது. ஸ்டேஷனில் ரயிலும் வந்தது, பாட்டியும் வந்தாள். சாமானங்களுடன் இறங்கிய பாட்டி, கமலா, பாலா என்று கத்தவும், உடன்
வந்த நண்பர் எங்களைப் பக்கத்தில் அழைத்துப் போய், அடையாளம் கண்டு பாட்டியுடன் வீடு வந்தோம்.

மருத்துவச்சியின் துணையுடன் பிரேமா பிறந்தாள். அன்று மீண்டும் அந்த நண்பருடன் சொசைட்டி ஆபீஸ் சென்று, [அந்தக்காலத்தில் எஸ்.டி டி.,புக் செய்யவேண்டும்] அப்பாவுக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. பல சமயங்களிலும் நான் யோசித்ததுண்டு, அம்மாவுக்கு ஏன் அப்பாவிடம் அவ்வளவு கோபம் வருகிறது என்று. அப்போது விவரம் தெரியாத வயசு.ஆறு குழந்தைகளுக்கு தகப்பனான பிறகும், ஏழாவது குழந்தை பிறக்கும் சமயத்தில், கூட இருக்காமல் அப்படி என்ன வேலை? அண்ணாவுடன் சேர்த்து ஐந்து குழந்தைகளுக்கும் சமைத்து, எல்லா வீட்டு வேலைகளையும் எப்படித்தான் செய்தாளோ? கோபம் வராமல் என்ன செய்யும்? இந்தக் காலத்தில் ஆண்கள் பரவாயில்லை.  பெண்களும் ஆளக்கற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்கதுதான்.

இந்த நிலையில் ஏழு போதாதென்று எட்டாவதாக வந்தவள் தான் லஷ்மி! ஆமாம் எங்கள் வீட்டுப் பசு மாடு. முக்கியமாக பிரேமாவிற்காக வாங்கிய லஷ்மிக்கு வலது பக்கத்தோட்டப் பகுதியில் கொட்டகை போடப்பட்டது. பசும்புல், சோளத்தட்டை, வைக்கோல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு எல்லாம் கூடவே வந்தது. பாவம் அம்மா, ஊற வைத்த பருத்திக் கொட்டை அரைப்பதற்கு ரொம்பக் கஷ்டம், அதனோடு புண்ணாக்கையும் சேர்த்து அரைப்பாள். மாட்டுக் கொட்டாயை சுத்தம் செய்தல், சாணி தட்டுதல், மாட்டைக் குளுப்பாட்டுதல் என முதுகொடியும் வேலைதான். ஆனால் பசும் பால் சுவையோ சுவைதான். வெள்ளித்தட்டில் சாதம் போட்டு, பால்விட்டுப் பிசைந்து சாப்பிடு சாப்பிடு என்பாள் அம்மா. எனக்குத் தெரியாது, ஒரு நாளாவது அம்மா பால் சாப்பிட்டாளா என்று!

கேட் திறந்திருந்தால் லஷ்மிக்கு குஷிவந்து விடும். ஒரே ஓட்டம் தான். அதுவும் பின்னால் யாராவது ஓடி வருவதைப் பார்த்துவிட்டால் இன்னும் வேகமாக ஓடுவாள். அம்மா ஓடிப் போய் கூப்பிட்டால் தான் நிற்பாள். லஷ்மியைத் துரத்திக் கொண்டு, லஷ்மி ஓடுவாள்! ஆம், அம்மாவின் பெயரும் லஷ்மி.

பசு மாடு வீட்டில் இருந்தாலே அழகுதான். அதன் முகத்திலேதான் எத்தனை அமைதி. அந்த சாந்தம் தான் லஷ்மீகரம். எங்கள் லஷ்மியும் குழந்தை பெற்றாள். கன்றுக் குட்டிக்கு அம்மா ராகிக் கஞ்சி வைத்து நீளமான மூங்கில் குழாயில் ஊற்றிப் போட்டுவாள். கடைசியில் கன்றுக்கு நோய் வந்து இறந்து போனது. அப்பாவும் குடும்பத்தை நீலகிரி மாவட்டம், குன்னூருக்கு கூட அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். லஷ்மியும் விற்கப்பட்டாள்.

சுவாமிபடங்கள் வைக்கப்பட்டிருந்த ஹாலில் உள்ள ரூம் தான் எங்களுடைய விளையாட்டு மைதானம். ரவியும், மோகனும் கட்டில் மேல் உள்ள படுக்கையில் உட்கார்ந்து கொண்டு ஜிகுபுகு என்று ரயில் ஓட்டுவார்கள். அப்பா வீட்டில் இருந்தால் கப்சிப், ஆனால் சாப்பிடும் போது மாட்டிக் கொள்வோம். பொது அறிவுக் கேள்விகளை அப்பா கேட்பாரென்பதால் சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு ஓடி விடுவோம். அப்பா என்றால் சிம்மசொப்பனந்தான்!

நான் ஏழாம் வகுப்பு படித்தகாலத்தில் தான் சுஜாதா பக்கத்து வீட்டிற்கு குடி வந்தாள். அவளுக்கு சாவித்திரி டீச்சரைப் பிடிக்கும்.டீச்சருக்கும் கர்னாடக சங்கீதத்தில் ஆர்வம் இருந்ததால் நட்பு வளர்ந்தது. ஆம், சுஜாதாவின் அம்மாதான் பிரபலபாடகி அனந்தலஷ்மி சடகோபன். அவர்களுடைய பாடல்
களை, அதுவும் ஊத்துக்காடாருடைய பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
  
ஏழுவயது வரையான என் குழந்தைப்பருவம் இனிமையானதுதான். பாட்டு,விளையாட்டு என சிட்டுக்குருவியைப் போல சுதந்திரமாகத் திரிந்த நாட்கள் அவை. பள்ளிக்கூடம் ,அந்த மாதா கோயில்,பள்ளியைச் சார்ந்த தோட்டம், நடந்து செல்லும் புளிய மரங்கள் அணி வகுத்த சாலை, பச்சைப்பசேலென்று இரு புறமும், கண்களுக்கு குளிர்ச்சி தரும் வயல்கள், தண்ணீர் நிறைந்த ஏரி, சாமரம் வீசும் சுகமான தென்றல் காற்று, கள்ளமில்லாத ஒரு சிறுமி, ஒருநதியைப் போல…..! ஆம், ஒவ்வொரு பெண்ணும் ஒரு நதிதான்,……………….!
  
என் அப்பாவிற்கு பிரமோஷனுடன் கூடிய டிரான்ஸ்வர் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு! குடும்பத்துடன் இடம் பெயர்ந்தோம்.குன்னூரில் சந்திப்போம். மலை சூழ் மா நகரிலிருந்து,  மலைகளின் அரசி,.நீலகிரிக்கு….. 
                                    ——————————————

6 Dec 2011

A Translation of the Poem 'Rose of God'.


                                       இறைவனின் ரோஜா.
1.கடவுளின் ரோஜா, நீலநிற சொர்க்கத்தின் சிந்தூரக்கறை,
ஆனந்த ரோஜா, இனிய ஜோதி, வானவில்லின் வர்ணஜாலப் பரவசம்!
மானுடத்தின் இதயத்தில் குதித்தெழுவாய், ஓ அற்புதமே சுடரே,
நாமமற்றவனின் மலர்க்கொடியே, தெய்வத்திறனுடையவனின் அரும்பே.

2. இறைவனின் ரோஜா, முழுமையில் பூக்கும் மெய்யறிவு,
ஒளியின் ரோஜா, இறுதிநோக்கின்  மாசற்ற  இதயம்!
எங்கள் மண்ணின் மனதில் வாழ்வாயாக; ஓ விளக்கமுடியாத,
பொன்னே, மலரே, காலமற்றவனின் முதன்மைச் சூரியனே,
உன்னதப்பொழுதின் அதிதியே.

3. ஆண்டவனின் ரோஜாவே, முடிவற்ற சக்தியின் செந்நிறமே, வல்லமையின் செவ்வடிவே,
ஆற்றலின் ரோஜாவே, உன் வைரஒளிச்சுடர் இரவின் கருமையை ஊடுருவும்!
மானுட மனத்திட்பத்தின் சுடர் விளக்கே, உனது ஆச்சர்யத்திட்டத்தை வரை பட மாக்குவாய்.
அமரத்துவத்தின் வடிவே, மனிதனில்  தெய்வீக வெளிப்பாடே.

4. தெய்வீக ரோசாவே, தெய்வ அவதாரத்தின் ஆசைக் கருஞ்சிவப்பே,
வாழ்க்கையின் ரோசாவே, இதழ்கள் கூட்டத்தின் இசைக்கும் வர்ணஜாலமே!
இனிய மந்திர ஒலியியைத்து, மானுடர் உடலை உருமாற்றி, பூமியையும் சொர்க்கத்தையும்
இணைத்து, காலத்தின் குழந்தைகளுக்கு இறவா வரமருள்வாய்
.
5. இறைவனின் ரோஜாவே, நிலைபேறுடையவனின் திருமுகத்தில் திகழும்
ஆனந்த பரவசத்தின் நாணச் சிவப்பே. அன்பின் ரோஜாவே, அனைவரின் ஆழ்மன
மாணிக்கமே, கருணையின் செந்நிற விழைவே, இயற்கையின் மடியில் விம்மி ஏங்கும்
இதயத்தினின்றும் மேலெழுவாயாக! இப்பூவுலகை விந்தைகளின் விளைநிலமாய்,
வாழ்க்கையை பேரின்பத்தின் முத்தமாக்குவாய். ———-ஶ்ரீ அரவிந்தர்.

வெண் தாமரையே, அவதார புருஷனே, மஹாயோகியே,
புதுவையை புனிதப் புண்ணிய பூமியாக்கிய தேவனே,
ரோஜாவைப் பாடிய இனிய கோகிலமே,
செந்தாமரைக் கண்ணனே, தெய்வீக ஒளியை
பொன் மேனியிலே தாங்கிய அரவிந்தமே.

2 Dec 2011

தவம்


யாருமில்லாத வெறுமையில் காலடி ஓசை கேட்க மோனத்தவம்
செய்யும் அன்னை வீடு. தெய்வப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு
சுவைத்து மகிழ்ந்த சுவர்கள். சாவித்ரி காவியத்தைக் கேட்டுப்
பரவசமடைந்த தென்றல் காற்று. அவர்கள் இருவரும் இணைந்து
இசைத்த ‘ஆனந்தமயி,சைதன்யமயி ‘நிறைந்த அறைகள்!
ஶ்ரீஅரவிந்தர், அன்னை, வள்ளலார், ரமணர் சாட்சியாக இருவரும்
ஆன்மாவின் துணைவர்களாய் தவம் செய்த இல்லம்.
விதியால், காலனால், பிணைந்த கைகள் பிரிந்த நேரம்
பிரியமுடியாத சோக கீதம்! மீண்டும் இசை கேட்குமா?
காலடிகள் ஓசையின்றி உள்ளே வந்து எங்களுக்குத் துணை
சேர்க்குமா? காலம் பதில் சொல்லுமா? காத்திருக்கும் …..வீடு!

1 Dec 2011

Death- By Scott Holland.


Death is nothing at all.
I have slipped away into the next room.
I am I,
you are you;
Whatever we were to each other,
That we still are.
Call me by old familiar names,
speak to me in
the easy way,
Which you always used to.
Wear no air of solemnity or sorrow.
Laugh as we always laughed,
At the little jokes we enjoyed together.
Play, Smile,think of me,pray for me.
What is death but a negligible accident.
I am waiting for you-for an intervel-
Somewhere very near,just around the corner.
All is well.

29 Nov 2011

My childhood Days.

.
                                    Now I am 66 and when I go back in memory lane to my childhood days I feel so happy.  I read an article in ‘The Hindu’ and that made me to do some writing. I was born in Salem district, Tamilnadu. My father built a house at Swarnapuri, a colony near 5 roads. Now it is the center, with the New Bus stand.
                                    In the year 1951, we shifted to the new house. Salem dt is famous for its water scarcity and so along with my mother I used to carry a small bucket to the public water tank. A big water tank was there at the back yard of the house and we had to fill it up.  Our next door neighbour's  had a big family with seven children. We would go to the next house not  through the main entrance. We used to jump over the compound wall only. Evenings were fun filled with games like kilithattu,  Gilliththandy, Marble-Goli aattam, Pambaram, Pandy,  Kannamoochchi, Catching game, kambuththalli  and others. One more game I remember. We used to sit in circle and the person who was out will hold a kerchief in hand and run around singing, ''குலை குலையா முந்திரிக்கா, நிரைய,நிரைய சுத்தி வா,கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான், கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி.'' Then he will drop the cloth behind someone and the game will go on.
                           
    Whenever there was current cut we used to be very happy and run out to play. One day my father brought a petromax Lamp and we cursed the man who found out that light. No more play at nights. Summer holidays were great fun. We used to enjoy day in and day out playing  indoor games like Pallanguzhi, seven stones, one, two or empty, Thaayakkattam and Anthaakshari  will go on till the evening.
My paternal grandmother used to tell stories.  I was her letter writer. Everytime I wrote a letter she would  give me a quarter anna.   I used to escort her to the temple, Bhajans and Upanyaasams in our colony. She used to sing some old country songs on how the train introduced by the Britishers were a wonder.

We had a beautiful garden at home with Gova, sappota trees, a vegetable garden and flowering plants. Gardening was a great hobby which made me one with nature. The  stick ice brought in big thermass flask had its own wonderfull smell and taste.
Playing, singing, wandering without any thought of future and studies we really had a wonderful childhood. Life’s problems, worries, pains and expectations are there always  in every ones lives. We crossed the bridges whenever necessary  and lived our lives as and how it came. I studied in St.Mary’s School which was a kilometer away from home.It was a pleasure to hang the bag with very few books on the head and walk along the green fields under the shades of Tamarind trees. Collecting tender tamarinds and that which were about to ripe with a light green colour were our favourite play.
There was a burial ground on my way to school and I have seen the dead bodies being brought there. It never frightened me and took it as part and parcel of life.
image
The school was another place of happiness. They gave importance to reading, hand writing and recitation.Once a child becomes thorough with the Alphabets of the Mother tongue and the ability to read and write fluently self confidence instills itself in the child. I remember a small incident when I was in std 1.One day our teacher asked all of us to bring one rupee for the orphanage children as donation.  My father gave me a beautiful one Rupee coin and gave me a quarter anna which was known as(காலணா) in those days for me to buy a”’ mittayi’. I loved the (கம்மர் கட்டு மிட்டாய்) made out of coconut and jaggary. When the Head mistress came to collect the money I gave her the one Rupee and the’ kalana’ to her and told her that I want her to buy a mittay for the orphanage. She was so happy to hear my words and patted me.To give is a great thing in life. I have seen the orphanage attached to the school and used to feel very sad on seeing those children. I studied in the school upto my 7th std.
My mother wanted me to learn music and so they found out a teacher who was also teaching our neighbour's daughters. It was a pain to see him at 8 o’ clock in the morning disturbing me getting ready to school. If I start singing the previous days song he will raise his voice and his eyebrows and that was the end of music. I regretted for not learning the art later on in my life.
It was a joy to go to my maternal grandparents house at Ottappalam, in Kerala. The small house was surrounded by Jackfruit, Mango and coconut trees and the Pineapple shrubs surround the house like a compound wall.It was like today’s holiday resort. Woodpecker’s accompany the music of the koeils, and Fire flys at the dark nights made us spellbound. There was no electricity. My grandma used to make us sit around her with a pot full of curd rice and would tell us stories while placing the rice in our palms. The story and the food made us sleep and dream about the characters of the story.
Thinking about my childhood days I feel so happy that I was like a butterfly free and all those elders and friends made it worthy of treasuring it in my memory till today.

27 Nov 2011

கணந்தோறும்........


                        புகைப்படமும், நிழற்படமும் காண்பவர்கள்  கண்முன்னால்,
                         நீயோ படமுமில்லை, நிழலுமில்லை  கணந்தோறும்
                         சுழலுகின்றாய் கண்ணுக்குத் தெரியாமல்!
                         என் கண்கள் காணவில்லை கண்முன்னால் நீ!
                         குரலொலியோ கேட்கவில்லை  பேசுகிராய் நீ!
                          என் நெஞ்சில் உணர்வுகளாய் எப்போதும் நீ!
                         உன்னோடு என் பயணம் இறுதி மட்டும்,
                         கணந்தோறும்.    

25 Nov 2011

அன்னை.


                              நிலவு முகம், நீள் நீல விழி மலர்கள்,
                              பொங்கித் ததும்பும் ஆனந்தம்.
                              பிறை நிலவின் நடுவே ஒளி வீசும்,
                              மாணிக்கப் பரல்கள் போன்ற பற்கள்.
                              மலர்ந்து மகிழ்வைப் பரப்பும்
                              மந்தகாசப் புன்னகை.அமைதியை
                              அன்பை,அதில் விளையும் அழகை
                              ஆனந்தத்தைப் பிரதிபலிக்கும்
                              காந்தக் கண்கள்.மனதைச் சுண்டி
                              இழுத்துத் தன்னுள்ளே இணைக்கும்
                              பார்வை.வாழ்வின் வழிகாட்டி,
                              ஒளி பொருந்திய பாதையில்
                              மானுடத்தை அணைத்து அழைத்துச்
                              செல்லும் ‘அன்னை’ யின் பொற்
                              பாதங்களுக்கு வணக்கம்.

20 Nov 2011

பயணம்.

 
                           நம்முடைய விருப்பத்தைக் கேட்காமலேயே பயணம் தொடர்கிறது. எப்போது, எங்கு, எப்படி அது நிற்கும் என்பது தெரியாது!  வாழ்க்கை  எப்படியோ என்னை  ஒரு ஒன்றுமில்லாத ஜடமாக்கிவிட்டது. உன்னுடைய பிரிவின் தாக்கம் என்னை என்னவெல்லாம் செய்துவிட்டது?
யாரோ சொன்னார்கள் உன்னை மறக்கமுடியாதென்று! புயலடிக்கும் கடல் தன்னுடைய அலைகளாகிய தொட்டிலின் தாலாட்டில் அமைதியடையவில்லையா? காட்டுத் தீ சாம்பல் படுக்கையில் உறங்கவில்லையா?
நீயும் நானும் பிரிந்தாலும், அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தில் பசும் புல்லும், வண்ண மலர்களும் சூரிய ஒளியில் சிரிக்கின்றனவே! தென்றல் காற்றின் மென் தழுவல் சிலிர்க்கவைக்கிரதே! வட்டநிலா வான் வெளியில் ஒளி வீச உன் பொன்முகம் கண்டு என் உள்ளத்தில் தூய அன்பு பொங்கிப் பெருகும். அமைதி பிறக்கும். ஆனந்த அலைகள்தோன்றும். உன்னில் நான் அமைதியடைவேன். என்னில் நீ!  நிசப்தத்தின் மடியில்  நீயும் நானும்! பேசாத மவுனத்தின் இசைக்கும் ஒலியில் எல்லாம் மறக்க எய்தும் சுகம்!  மறக்க முடியாத சுகம். நினைவுகளுடன் நிலைத்து நிற்கும் சுகம்.

17 Nov 2011

கல்யாணம்.


விரலுக்கு மோதிரம், வலது கைக்கு வாட்ச், இடது கைக்குக் கடகம்,
கழுத்துக்கு மைனர் செயின், கோட்டுடன் சூட்டு, பூட்சு, குடை, விசிறி,
கட்டிலுடன்.மெத்தை, போர்வை, காட்ரெஜ்  பீரோ, சாப்பிட வெள்ளித்
தட்டு ,டம்ளர், தேனிலவுக்கு டிக்கெட், ஏ.சி. ரூம்,இத்தனையும் நீ
செய்தால், மஹாராஜாபோல நானும் உன் பக்கம் வந்து நின்று
கல்யாணம் செய்து கொள்வேன், சம்மதமா என்றான் தோழி!
நல்லவேளை இடுப்புக்கு ஒட்டியாணம், காதுக்கு வைரக் கடுக்கன்
காலுக்கு வீரக்கழல், இவையெல்லாம் வேண்டாமென்றாய்!
நான் என்ன வியாபாரம் பேச வந்தேன்,என்று நீ நினைத்தாயோடா?
பாவை நான் என்ன, தங்கச் சுரங்கம் வைத்துள்ளேனா? பக்கத்தில்
பணம் காய்க்கும் மரமும் இல்லை! பெற்றவர்கள் என்னை
பெண்மைக்குப் பெருமை சேர்க்க, நிமிர்ந்த நன்நடை, நேர்
கொண்ட பார்வை, கல்விச்செல்வம், விருந்தோம்பல், கொடை,
வீரம், தயவு, கருணை என நற்குணச் செல்வம் பலவும் பரிவுடன்
எந்தன் உள்ளம் மகிழ்ந்திடத் தந்துள்ளார்கள். உனக்கு
வாழ்க்கைத் துணை நலம் வேண்டுமா, அன்றிப் பொருள் கொடுத்து
உன்னை வாங்கும் வியாபாரி வேண்டுமா நீயே சொல்வாய்.

அந்த நாள் ஞாபகம்

 
      அந்த  நாள்  ஞாபகம் வந்ததே என் சொல்வேன் தோழி,
      மாலையிட்டுக் கரம் பிடித்து, மாங்கல்யம் பூட்டிய நாள்,
      மறக்க முடியுமா தோழி? …….மணந்ததும், வாழ்ந்ததும்
      பெற்றதும், வளர்த்ததும், மறக்கமுடியுமா தோழி?
      காலம் போனதும், காலன் வந்ததும்  கண்ணில்
      நிற்குதடி தோழி! இல்லாமல் இருக்கின்றார்,
      பேசாமல் பேசுகின்றார், எப்போது மீண்டும்
      என்னிடத்தே வருவார் சொல் தோழி?                                   

10 Nov 2011

சிரிப்பு


    சிரிப்பில் தான் எத்தனை வகை, அசட்டுச்  சிரிப்பு,
    அவிட்டுச் சிரிப்பு, அறுவைச் சிரிப்பு, ஆஹா……..
    ஆனந்தச்சிரிப்பு, விகடச்சிரிப்பு, வில்லன் சிரிப்பு,
     நமுட்டுச் சிரிப்பு, நாணச்சிரிப்பு, ம்ம்ம்ம்ம்ம்ம்,
    குபீர்ச்சிரிப்பு, குப்புறச்சிரிப்பு, விழுந்து விழுந்து„
    விக்கல் எடுக்க, புன்னகையோ,
    கடமைக்காக, கடனுக்காக, கற்பனைக்காக,
    காசுக்காக, காதலுக்காக, காரணத்துக்காக…..
    என்னுடைய புன்னகை
    என்னில் என்னுடன்,எனக்காக!——

தனியே.

தனியே.
தனியே தாய் வயிற்றில் வாசம்,தனியே நிலமகள் மேல் ஜனனம்,
தனியே விருப்பும், வெறுப்பும், தானே தனக்காய் வாழும்.
தனியே கடைசிப் பயணம்,தனியே நெருப்பில் தகனம்,
தனியே நீரில் கரையும், தனியே தானாய் மறையும்.
நான் என்றும் எனதென்றும் ,தானென்றும் தனக்கென்றும்
மாயச்சுழ்லில் சுழலும்.
நானும் இல்லை,நீயும் இல்லை,எனதும் இல்லை உனதும் இல்லை
காலம் போனால் எதுவும் இல்லை,காலன் வந்தால் ஒன்றும் இல்லை.  

3 Nov 2011

வியப்போடு உலகைப் பார்க்கும் குழந்தை,
வெறுமையாய் வானம் பார்க்கும் முதுமை!!                              
                  ——-
தாய்ப்பறவைகள் இரண்டும் கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்து
குஞ்சுகளைத் தேடுகின்றன …………………………….
சூரியனோ மேகத்தின் பின் மறைந்து கொள்கிறான்,
மேகங்களோ கண்ணீர் மழையைத் தூவும்,
காற்று மவுனமாய் சாட்சி சொல்ல,
பூங்காவே துக்கத்தில் மலர்களை சமர்ப்பிக்கும்.