27 Dec 2011

ஏங்கும் விழிகள்-இராம. இராமநாதன்


பல ஆண்டுகளுக்கு முன்பு திரு.இராம. இராமநாதன் அவர்கள் எழுதி வெளியிட்ட கவிதை இது. எனக்குப் பிடித்த வரிகள், கவிதைகளை எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு. இக் கவிதையை இங்கு எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சின்ன விழி மலரில் உறவு கண்டேன்-அவன்
சிரிப்பில் மயங்கிய நான் கனவு கண்டேன்,
பொன்னிப் புதை மணலில் பிரிவு கண்டேன்-அவன்
போன இடம் தேடிப் புலம்புகின்றேன்.

அணைத்து மகிழ்வதர்கோர் அன்னையானான்
அடித்துத் திருத்துதர்க்கோர் தந்தையானான்,
நினைத்து வணங்குதற்கோர் தெய்வமானான்-அவன்
நின்ற இடந்தேடி நினைவிழந்தேன்.

மழலைச் சொல் உதிர்த்து வாய் திறக்கும்-ஒரு
வார்த்தை வந்து நின்று மயங்க வைக்கும்
நிழலை இழந்த ஒரு நெஞ்சமடா-அவன்
நிறுத்தி வழி நடந்த கோயிலடா!

கட்டுப்படுவதற்கோர் காவல் வைத்து-அதன்
கரையில் அவனிருந்து காத்து வந்தான்
சிட்டுப் பறந்தவுடன் திணறுதடா-நெஞ்சம்
தினமும் அவனையிங்கு தேடுதடா!

உயிருக்கு உயிராய் நின்றவனின் எழில்
தோய்ந்து கிடந்தவொரு திருமுகத்தை
எப்படி மறந்திருப்போம் வாழ்க்கையில்-தினம்
ஏங்கும் விழிகளிடம் என்ன சொல்வோம்!

No comments:

Post a Comment