7 Dec 2016

தேங்காயும்,சோசியமும்!

வயதில் பெரியவர்களையும், குழந்தைகளையும் பார்க்கப் போகும் போது வெறும் கையோடு போகக்கூடாது என்பது நம்முடைய பண்பாடு. அதேபோல வந்தவர்களை நன்கு உபசரித்து விடை பெறும்போது ஒரு பழமாவது கொடுப்பதும்தான். ஆ அதுதான், என் பேரப்பையனைப் பார்க்க ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டி காந்திபஜார் சென்று  திரும்பிவர ஆட்டோவில் ஏறினேன்.

ஆட்டோ ஓட்டுனர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒரு விதம்! சிலர் சகஜமாகப் பேசுவார்கள். சிலர்பேச மாட்டார்கள். நேற்று நான் ஏறிய ஆட்டோக்காரர் கொஞ்சமாகப் பேசுபவர். போகவேண்டிய இடம் சொன்னதும் ஓ, எனக்குத் தெரியுமே என்றார். அப்பாடா வழி சொல்ல வேண்டாம் என்று நினைத்தவுடனே எதிர்பாராத தலைப்பில் பேச ஆரம்பித்தார்.

ஓ அந்தக்கோயில் பக்கத்திலா வீடு, நீங்க அப்படின்னா தினம் போவீங்களா என்றார்.
ஒரு அடையாளத்துக்குதான் சொன்னேன், நான் அந்த இடத்துக்குப் பக்கத்தில் இருக்கிறேனே தவிர தினம் தினம் எல்லாம் போகமாட்டேன் ஐயா என்றேன்.
உங்களுக்கு இந்த தேங்காய்  கட்டினால் காரியம் வெற்றி பெறும் என்பதில் நம்பிக்கை இருக்கிறதா?  சிலர் ரொம்பப் பெருமையா பேசறாங்க என்றார்.

எனக்கு அந்த நம்பிக்கையெல்லாம் கிடையாது. நடக்கப்போவதை,காணாமல் போனதை கண்டுபிடித்துக் கொடுப்பதை, மற்றும் இன்னபிற மனிதனுடைய வேண்டுகோளுக்கெல்லாம் வழி சொல்லுகிற சக்தி, தேங்காயைக் கட்டினால்தான் வரும் என்றால் பொய்! நடப்பது எதுவென்றாலும் அதை ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனதையும், தாங்குகிற சக்தியையும் கொடு என்றுதான் நான் கடவுளிடம் வேண்டுவேன் என்றேன்.

நீங்க சொல்வதுதான் சரி. அப்படிதான் இருக்கவேண்டும்.
ஏன் கேட்டேன் என்றால் நான்கூட ஒருமுறை தேங்காய் கட்டினேன். ஒன்றும் நடக்கவில்லை.உங்களுக்கு நல்லது நடந்துதா என்று தெரிந்து கொள்ள்வே விரும்பினேன் என்றார்.

வீடு வந்துவிட்டது.இறங்கினேன். ஆனால் பாருங்கள் இப்போதெல்லாம் ஆசிரமத்து மூன்று தெருக்களிலும் சோழி ஜோசியம் பார்க்கிறவர்கள் இரண்டு மூன்று பேர் இங்கே செவ்வாய், சனிக்கிழமைகளில் ஆஜர்! நல்ல ஆஜானுபாகுவாக இருக்கிறார்கள். நெற்றியில், விபூதி,சந்தனப் பொட்டு,பாய் விரித்து உட்கார்ந்துகொண்டு சோழிகளைப் பரப்பி வைத்து, பக்கத்திலேயே ஒரு சில சிறு அட்டைகள்! ஏதாவது எழுதியிருக்கும் என்று நினைக்கிறேன்!
அவர்கள் முன்னால் கையை நீட்டிக்கொண்டு இள வட்டங்கள் ஜோடியாக  அமர்ந்து சோதிடம் கேட்கிறார்கள்! கடவுளைவிட சோசியக்காரனிடம் அதிக நம்பிக்கை உள்ளவர்கள் போலும்!

என்றைக்காவது ஒருநாள் நானும் சோதிடம் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்!

வேடிக்கையான உலகம்! வினோதமான சிந்தனைகள்!

30 Nov 2016

புதிய பார்வை



அமைதி தவழும் உச்சி வெயில் பொழுது. வேப்பம் பூக்கள் நறுமணம் பரப்பும் பங்குனி மாதத்து, மென்குளிர் காற்றில் ஆங்காங்கே காகங்கள் கரைய, அணில்கள் ஓடிவிளையாட சிறிய ஊஞ்சலில்  அந்த இல்லத்து விளையாட்டு மைதானத்தில் வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள் சங்கரியும் சாந்தாவும். மதிய உணவுக்குப் பின் அங்கே அமர்ந்து பேசுவது அவர்களுக்கு வாடிக்கைதான்.

அந்த நேரத்தில் இல்லத்தின் வேலையாள் சுரேஷ் அங்கேவந்து, அம்மா உங்க இரண்டு பேரையும்  ஐயா ஆபீஸ் ரூமுக்கு வரச்சொன்னாங்க, என்றான்.
என்ன சுரேஷ், என்ன சமாச்சாரம்? ஐயா எப்பவும் கூப்பிட்டு அனுப்பமாட்டாரே என்றார் சங்கரி
அது என்னவோ தெரியலைங்க. இந்த இல்லத்தப் பார்க்க யாரோ வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன் என்றான் சுரேஷ்.

அலுவலக அறையின் வாசலிலே நின்றிருந்தார் அந்த இல்லத்தின் உரிமையாளர் மாதவன். வாங்கம்மா, என்றவர் அவர்களை சுரபிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  இவங்க பிரபலமான தமிழ் மாத இதழ் , "செங்கமலம்" பத்திரிகையின் உதவி ஆசிரியர். சுற்றுவட்டாரத்தில் உள்ள முதியோர் இல்லங்களைச்சுற்றிப் பார்த்து ஒவ்வொரு இல்லத்தின் சிறப்பம்சங்களைப்பற்றியும், சுகாதாரம், உணவின் தரம், மருத்துவ வசதிகள் ஆகியவற்றைத் தரவரிசைப்படி மதிப்பீடு செய்து தங்கள் பத்திரிகையில் வெளியிடப் போகிறார்களாம்.

நான்கு பேரை பேட்டி எடுக்க வேண்டுமென்றார்கள். அதற்குதான் உங்களைக் கூப்பிட்டேன். மங்களம்மாவையும், சேதுப்பாட்டியையும் வரச் சொல்லியிருக் கிறேன். புகைப்படம் வேண்டாமென்றால் சொல்லிவிடுங்கள். உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் தாராளமாகச் சொல்லலாம். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்று சொல்லி எழுந்து போனார் மாதவன்.

மாதவன் தாயை நேசித்தவர். வேலை நிமித்தம் வெளிநாட்டில் வாழ்ந்த பொழுது, அவருடைய மனைவியின் அலட்சியம், கவனிப்பின்மை காரணமாகத் தாயை இழந்தவர். அதனாலேயே ஆதரவற்ற முதியோர்களைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருக்கிறது என்று தன் மனைவியை விவாகரத்து செய்து தனியொருவராக, நிலம் வாங்கி சகல வசதிகளுடன் கூடிய அந்த முதியோர் இல்லத்தைத் தன் தாயின் பெயரால் நடத்தி வருகிறார். தன் தாய் கடைசி காலத்தில் யாருமில்லாதவராக இறந்ததைப் போல குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் தவிக்கக்கூடாது. அவர்களுக்கு உறு துணையாக இருக்கவேண்டும் என்பதே அவர் லட்சியமாக இருந்தது.

வணக்கம் அம்மா! சார் சொன்னது போல நான் செங்கமலம் பத்திரிகையிலிருந்து  வந்திருக்கிறேன். இந்தக் காலத்தில் நிறைய முதியோர் இல்லங்கள் பற்றிய விளம்பரங்களைப் பார்க்கிறோம். இந்த இல்லத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டதால் நேரில் வந்தோம். சொல்லுங்கள், இந்த இல்லத்தில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஏன் இங்கு வந்தீர்கள். உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா? உங்களுடைய அனுபவங்களை எங்கள் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சங்கரி சொன்னார். வணக்கம் சுரபி அவர்களே. இந்த இல்லத்தில் அயல் நாடுகளில் வசிக்கும் பிள்ளைகளுடைய பெற்றோர், உள்நாட்டிலேயே இருந்து கொண்டு பராமரிக்க முடியாத குழந்தைகளின் தாய், தந்தையர், தாங்களாகவே விரும்பி வந்தவர்கள், குழந்தையில்லாதவர்கள், என்று பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் சொல்ல ஒரு கதை இருக்கி றது.

ஆமாம் அம்மா! கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவந்த சமுதாய அமைப்பு நீங்கி இன்று பெரும்பாலும் தனித்தீவுகளாகவே இளைய தலைமுறை வாழவிரும்புகிறது இல்லையா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சாந்தாம்மா?

மேடம், இன்றைக்கு பெரும்பாலும் பிள்ளைங்க அப்பா,அம்மாவை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடுகிறார்கள், என்ற தவறான அபிப்ராயம் இருக்கிறது. என்னைப் பாருங்கள். நான் ஆசைப்பட்டுதான் இங்கே வந்தேன். எங்கள் வீட்டில் அனுப்பவே விரும்பவில்லை. குடும்ப வாழ்க்கைப் பொதியை எல்லாம் சுமந்துட்டேன். எல்லாக் கடமைகளையும் முடித்தும் விட்டேன்.
எனக்காக நான் வாழ விரும்புகிறேன். அதற்கு ஏற்ற இடம் இதுதான் என்று நான் எண்ணினேன்.

அப்படியா, ஆச்சர்யமாயிருக்கிறது! உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?
எனக்கு ஒரு மகனும்,மகளும் இருக்கிறார்கள். இருவருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள்.

அப்படியா! பேரன் பேத்திகளோடு ஜாலியாக விளையாடி, மகிழ்ச்சியாக இருப்பதற்கு பதில் இங்கே ஏன் வந்தீர்கள்?
 நான் மகிழ்ச்சியாக இல்லை என்று யார் சொன்னது? எல்லாதாய்மார்களும் பையனுக்குத் திருமணம் ஆனாலும் தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தானே சமைப்பது, எல்லாவற்றிலும் தலையிடுவது, மருமகளுக்கு அறிவுரைகள் சொல்வது, பேரக் குழந்தைகளை வளர்ப்பதில் ஆளுமை செய்வது என செயல்படுகிறார்கள்.

திருமணம் என்று ஆனால் அவர்களுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ நாம் அனுமதிக்க வேண்டும்.  குடும்பம், சாப்பாடு, தூக்கம் இவை எல்லாவற்றுக்கும் மேலே ஒரு வாழ்க்கை இருக்கிறது

நீங்கள் என்னை ஆச்ச ர்யப்படுத்துகிறீர்கள்.

 கடவுளைக் காண வேண்டும், அதற்கான முயற்ச்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு. தியானம் செய்து தவ வாழ்க்கை மேற்கொள்ளவும், பெரிய மகான்களுடைய வாழ்க்கை வரலாறுகள், அறிவுரைகள் ஆகியவற்றைப் படித்து உணரவும் ஆசைப்பட்டேன். அதற்கான சகல வசதிகளும் இங்கே உள்ளன.

நல்லா இருக்கே நீங்க சொல்வது! எல்லோரும் இந்தக்காலத்தில் எல்லோரும் காசி, கைலாச, மானசரோவர் யாத்திரைகள் போகிறார்கள். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்கிறார்கள். நீங்க என்னவோ முதியோர் இல்லத்தில் கடவுளைப் பார்க்கணும் என்று சொல்கிறீர்களே.

ஆமாம், கடவுளை வெளியே தேடுபவர்கள் யாத்திரை போகிறார்கள். "உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்" என்ற தெளிவு இருப்பதால் என்னுள்ளே
இருக்கும் ஆண்டவனைத் தேடி எனக்குள் நானே யாத்திரை செய்கிறேன்!



ஓ, இங்கே எங்களுக்கு வேளைக்கு உணவு, படிக்க நூலகம், விளையாட உடற்பயிற்சி செய்ய வசதிகள், அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவ மனை எல்லாம் உள்ளது. ஓய்வு நேரத்தில் சத்சங்கம் நடத்துகிறோம், ஞானிகளுடைய அறிவுரைகளையும், வாழ்க்கை வரலாறுகளையும் வாசிக்கிறோம்.உடல் நலமில்லாதவர்களுக்கு அனுசரணையாக, ஒருவர்க்கு ஒருவர் உதவியாக ஒரு குடும்பமாக இருக்கிறோம்.

சுரபி, சாந்தா அவர்கள்தான் இங்கே வருகிறவர்களுக்கெல்லாம் கவுன்சிலிங் கொடுப்பார்கள். வந்தவுடன் அழுகையும், துக்கமுமாய் வருபவர்கள் பிறகு வீட்டிற்கு போகவே விரும்புவதில்லை தெரியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக மாதவன் எங்கள் எல்லோருக்கும் பிள்ளையாக இருக்கிறார்.

கேட்கவே நன்றாக இருக்கிறது. கடைசியாக ஒரே ஒரு கேள்வி. நீங்கள் கடவுளைக் கண்டுபிடித்து விட்டீர்களா?

ஆம் சுரபி! சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட தன்னலமற்ற அன்புதான் கடவுள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளத்திலிருந்து பொங்கிப் பெருகும் உணர்வுதான் கடவுள். அதில் அமைதியும் ஆனந்தமும் இருக்கிறது மகளே.

புதியதோர் பார்வையில் முதியவர்களின் முதிர்ச்சி நிறைந்த எண்ணங்களை அறிந்து கொண்டேன்.
அந்த ஆனந்தத்தை, அமைதியை நான் என்னுடன் அடுத்துச் செல்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் சாந்தா, சங்கரி அவர்களே! நன்றி வணக்கம்.





















8 Oct 2016

யாசகன்

.நான் யாசகம் கேட்கப் போன நாளில்

வீடுதோறும் சென்று யாசிப்பதற்காக நான் கிராமத்துக்குச் செல்லும் பாதையில்நடந்து கொண்டிருந்தேன்.
ஒரு கனவு போல தங்கரதம் ஒன்று சற்றுத் தொலைவில்
வருவதைக் கண்டேன்.
எந்த அரசர்களுக்கெல்லாம் அரசன் இதில் தோன்றுகிறானோ என
வியந்தேன்.
என்னுடைய நம்பிக்கை சுடர் விட்டது.
ஆகா, என்னுடைய வறுமை தீரும் நாள் வந்துவிட்டது என மகிழ்ந்தேன்.
தங்கத் தேரைச் சுற்றிலும் எழுந்த தூசு முழுதும் செல்வம்
சிதறிக் கிடக்கக் கண்டேன் .
கேளாமலேயே நமக்கு பிச்சை கிடைக்கும் என நம்பினேன்.

என் நம்பிக்கை வீணாகவில்லை.
தேர் என் முன்னால் வந்து நின்றது.
தெய்விகப் புன்னகை மிளிர்ந்த முகத்தின்
பார்வை என் மேல் விழுந்தது.
தாங்கள் இரதத்திலிருந்து கீழே இறங்கினீர்கள்!
இன்றைய நாள் நல்ல நாள் என்று எண்ணினேன்.

ஆனால் எதிர்பாராத ஒன்றுதான் நிகழ்ந்தது!
என் முன்னால் நீண்ட கரங்கள்.....?
எனக்குத்தர உன்னிடம் என்ன இருக்கிறது, என்ற கேள்வி!

மாபெரும் அரசனாகிய தாங்கள்
பிச்சைக்காரனான என்னிடம்
கரங்களை விரித்து யாசிப்பதா?
ஒரு கணம் நான் குழப்பமடைந்தேன்! திகைத்தேன்!
என்ன செய்வது எனத் தெரியாமல் நின்றேன்!
பிறகு என் பையிலிருந்து ஒரு சோளத்தின் மணியை
தங்கள் கரங்களில் வைத்தேன்!

அந்த நாளின் முடிவில் என் பையைத் தரையில் கவிழ்த்தேன்!
என்ன ஆச்சர்யம்!
நான் சேகரித்த சிறுதானியக் குவியலில்
ஒளிவிடும் துண்டுத்தங்கம்.

என் கண்களிலிருந்து கண்ணீர்  பொங்கி வழிகிறது.
உள்ளம் நெகிழ
என்னிடம் உள்ள அனைத்தையும் தங்களுக்கு அர்ப்பணிக்கும்
இதயம் எனக்கு இருக்கவில்லையே என இப்போது
விம்மி விம்மி அழுகிறேன்..

               - இரவீந்திரநாத தாகூரின் கீதாஞ்சலியிலிருந்து

( இறைவன் பூமியில் இறங்கி நமக்கு உதவ வரும் நாளில் எதை அர்ப்பணிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு ஶ்ரீ அன்னையின் பதில்.
பூமிக்கு வரும்போது இறைவனும் யாசகனாகிவிடுகிறான். நாம் கொடுப்பதை
எல்லாம் வாங்கிக் கொள்கிறான்)



14 Sept 2016

உண்ணாவிரதமும் காவிரியும்

உண்ணாவிரதமும் காவிரியும்

 1993 ஆம் ஆண்டு, ஜூலை மாதம்.
இரு திருமணங்கள் நிறைவாய் நடந்த திருப்தியில் திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு நேரில்சென்று எங்கள் நன்றியைச்சொல்லி வணங்கப் புறப்பட்டோம். வழக்கம்போல் மதுரையில் இறங்கி பஸ் பயணம்.
மதுரையிலிருந்து தூத்துக்குடியின் உப்பளங்களைப் பார்த்துக் கொண்டேசெல்லும் பயணம் இனிமையானது. திருச்செந்தூரை நெருங்கநெருங்க மருக்கொழுந்தின் நறுமணம் வீசும், கடற்கரைக்காற்று நாசியை வருடும். சண்முகனின் திருவடிகளை தியானித்து இருக்கும் மனம்.

கடற்கரைக்கோயில் திருச்செந்தூர் சுமார் இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது.எப்படி அவ்வளவு அழகான கோயிலை கடற்கரையில் கட்டினார்கள் என்பது ஆச்சர்யத்திற்குரியது.  சூரனை வென்ற முருகப்பெருமான் கையில் தாமரை மலரை ஏந்தி சிவபூசை செய்யும் திருக்கோலம்.  அபிஷேக ஆராதனைகள் செய்து, கண்குளிர தரிசனம் செய்தோம்.பன்னீர் இலையில் விபூதிப்பிரசாதம் பெற்றுக்கொண்டு  விடுதிக்கு திரும்பினோம்.

பெங்களூரில் வயதான மாமியைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றிருந்ததால்
அன்றே மாலையில் திரும்ப முடிவுசெய்திருந்தோம்
விடுதியை ஒப்படைத்து பேருந்து நிலையம் சென்ற எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
எந்த பஸ்ஸும் ஓடாது! தமிழ்நாட்டில் ஜெயலலிதா காவிரிப் பிரச்னைக்கு தீர்வுகாண உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருக்கிறார்கள் என்றார்கள். உணவகங்களை மூடிக்கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டைத்தவிர பேருந்துகள் எல்லாவற்றையும் பணிமனைக்கு கொண்டு போய் விட்டார்கள்.

பேருந்து நிலையத்தில் என்ன செய்வது என்று திகைத்துப் போய் சுற்றிவந்த எங்களுடைய நிலையைப்பார்த்த பேருந்து நிர்வாகி, " சார், மாலை ஆறு மணிக்கு இங்கிருந்து பெங்களூருக்கு ஒரு பேருந்து செல்கிறது. எங்கும் நிற்காது. பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி இல்லை என்றாலும் உங்களுக்கு ஆட்சேபணையில்லை என்றால், உங்களை அழைத்துப் போகச் சொல்கிறேன் என்றார். சரிதான், துணிந்து போய்விடுவோம் என முடிவு செய்தோம்.

பேருந்தில் கண்டக்டர் தவிர நாங்கள் இருவர்தான் பயணிகள். மத்தியில் உள்ள சீட்டில் அமர்ந்து கொள்ளுங்கள். ஜன்னலை மூடிவிடுங்கள் என்றார் ஓட்டுனர்.
பேருந்து எங்கும் நிற்காமல் சேலம்டவுன் பேருந்து நிலையத்தில் ஓட்டுனரின் ஓய்வுக்காக, ஐந்து நிமிடங்கள் நின்றது.

சுமார் பன்னிரண்டு மணி நேரப் பயணத்துக்குப் பின் பெங்களூரை அடைந்தோம். எப்படியோ முருகப் பெருமான் காலியான ஒரு பேருந்தை எங்களுக்காக அனுப்பினான் என்று, அடுத்தவருடம் கண்டிப்பாக வந்து உன்னை தரிசனம் செய்கிறேன் என்று வேண்டிக் கொண்டேன்.

இந்தக் காவேரி நதித்தண்ணீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைதான் எத்தனை நினைவுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது!!






1 Sept 2016

வகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை?

வகுப்பறை: மனவளம்: வாழ்வென்பது எது வரை?: மனவளம்: வாழ்வென்பது எது வரை? சீன அறிஞர் எழுதியது, அது தமிழாக்கத்தில்.......!!! வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!! தேவைக்கு செலவி...

29 May 2016

Important days in June 2016

June 1 - World Milk Day
   "    5 - World Environment Day
   "    8 - World Oceans Day
   "  12 - World day against child labour
   "  14 - World Blood donor Day
   "  15 - Elder abuse Awareness Day
   "  20 - World Refugee Day
   "  21 - International day of Yoga
   "  23 - United Nations Public Service Day
   "  26 - International day Against Drug Abuse
   "  29 - National Statistic Day.

காத்திருத்தல்.......!

 சூரிய ஒளியில் பளபளக்கும் இளந்தளிர்களோடு கம்பீரமாய்க் காட்சி அளிக்கும் மரங்கள். இளவேனிற்கால வரவை பறைசாற்றும் வேப்பமலர்களின் நறுமணம். அணில்களின் கொக்கரிப்பு, காக்கைகளின் கட்டைக் குரலொலி! அமைதியில் ஆழ்ந்து உறங்கும் இருப்பிடங்கள்.

அங்கே ஒரு மருத்துவமனை!
மருத்துவமனையின் நுழைவாயிலில் போடப்பட்டுள்ள நாற்காலிகள்! 
அதில் உலகத்துச் சோகங்களையெல்லாம் ஒன்றாய்த் திரட்டி உண்டதுபோல் காட்சியளிக்கும் முதியோர்கள்.
குட்டையாய் வெட்டப்பட்ட தலைமுடி, இரவு உடை எனப்படும் நீளஅங்கி.  
சிறிதளவு ஒப்பனை செய்யப்பட்ட முகமலர்கள். அதில் பிரதிபலிக்கும் துயரம். அம்மாவென்று அழைத்து ஒரு நிமிடமாவது நம்முடன் பேசமாட்டார்களா, நம்மைப் பார்த்து அதிக பட்சம் ஒரு புன்னகை செய்யமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு! ஏக்கம்! அன்பின் ஆதரவு தேடி நீளும் கரங்கள். கலங்கும் கண்கள்!படிக்கவே வருத்தமாக உள்ளது அல்லவா? 

அமைதியின் சன்னிதியில், புற உலகத்தாக்கங்கள், உணவு, உடை, உறைவிடம் ஆகிய எதற்கும் கவலை கொள்ளத்தேவையற்ற ஒரு வாழ்வு ! ஆனால் மனிதமனமோ அன்புக்கு ஏங்கி, அலைபாய்கிறது! 

மரணத்தின் தலைவாயிலில், பிறருடைய உதவியை எல்லாவற்றுக்கும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் நிலைமை கொடுமையானது. 
அது மரணத்தை யாசிக்கும் நேரம்! 
மனித வாழ்வின் இறுதிக்கட்டத்தில் மிச்சம் இருப்பது மரணத்தின் மீது மானுடம் செலுத்தும் அன்பு!
என்ன வேடிக்கை, காலனின் கரங்களைப் பற்றிக் கொள்ள விரும்பும் நேரம்.......ம்....!

எனது குடும்பத் தோப்பின் மரம் ஒன்று சாய்ந்துகொண்டிருக்கிறது!
  






2 Apr 2016

குழம்புக்கூழ்

அவசரத்தில் கை கொடுக்கும் குழம்புக் கூழ், வேலைக்குச் செல்லும், தனியே சமையல் செய்து சாப்பிடும் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம்!
தேவையான பொருட்கள்:
1.சாம்பார் பொடி(நான் எம்.டி.ஆர்)பொடி பயன்படுத்துகிறேன்
2.ஓடு,கொட்டை இல்லாத சுத்தப்படுத்திய புளி
3.உப்பு
4.தாளிக்க எண்ணை
5.கடுகு
6.வெந்தயம்
7.பெருங்காயக்கட்டி சிறிது
8.மஞ்சள் தூள்

15 நாட்களுக்கு வேண்டிய கூழ் செய்ய எப்படி அளப்பது? பிரமாதமாக ஒன்றும் இல்லை!
தினப்படி குழம்பு செய்ய எவ்வளவு புளி எடுப்பீர்கள்? அதே போல் 15 உருண்டை புளி! அதேபோல பொடி, உப்பு!
அடுத்ததாக இந்தப் புளியை ஒருமுறை தண்ணீரில் கழுவி நன்றாக வடித்துவிடுங்கள்.
இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் ஒரு விசிலுக்கு வைத்து எடுங்கள்! நன்கு ஆற விடுங்கள்.
மிக்சியில் வேகவைத்து ஆறிய புளியை மிருதுவாக ஆகும் வரை அரையுங்கள்.
ஒரு கடாயில் எண்ணை விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள், கருவேப்பிலை சேர்த்து
கடைசியில் சாம்பார்த்தூள் சேர்க்கவும். வாசனை நாசிக்கு வரும் போது அரைத்து வைத்துள்ள புளிக் கூழை சேர்த்து நன்றாகக் கிளறி, உப்பு சேர்க்கவும். ஆறியதும் பாட்டிலில்போட்டு வைக்கவும்.
குக்கரில் பருப்பும், காயும் சேர்த்து வேக வைத்து அதில் இந்தக் கூழை தேவையான அளவு சேர்த்தால் குழம்பு ரெடி.
என்னம்மா இன்னைக்கு ஒரே உப்பு, புளித்து வழியுது, காரம் தூக்குது என்று யாரும் சொல்ல முடியாது! அதிகப்படியாக,

வற்றல் வறுத்து புளிக்கூழ் சேர்த்தால் வற்றல் குழம்பு.
கொஞ்சம் தனியா, தேங்காய் அரைத்துச் சேர்த்தால் சாம்பார்.
வெண்டை, கத்தரி வதக்கிஒரு மூடித் தேங்காய் அரைத்துச்சேர்த்து கூழையும் சேர்த்தால்  சரவணபவன் ஸ்பெஷல்.ட்
நிலக்கடலையை வறுத்துக் கொண்டு கூழோடு சேர்த்து, சிறிது தனியாப்பொடியோடு கலந்தால் புளியோதரை.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வேளைக்குத் தேவையான அளவு சமைத்துக் கொள்ளலாம்.

நான் என் கணவருடன் இரண்டு ஆண்டு காலம் அரவிந்தர் தியானமையத்தில் நடந்த காலை நேர வகுப்புகளுக்கு சென்றுவந்தேன். 9.30க்கு வேன் வந்துவிடும். பருப்பும், காயும் குக்கரில் வைத்துச் சென்று விடுவேன். திரும்ப வந்ததும் ஒரு மணிக்கு சுடச் சுட கூழ் சேர்த்து குழம்பு.

ஒரு வாரத்துக்கு செய்து பாருங்கள்!
நீங்களே தயாரிக்கும் சாம்பார் பொடியையும் உபயோகிக்கலாம்.
பெரும்பாலும் சமையல் செய்வதில் அளவுதான் காலை வாரும்.
ஒருநாள் தயாரிப்பின் அளவு, எத்தனை மடங்கு வேண்டுமானாலும் அதிகரித்துச் செய்து கொள்ளலாம்.

அதிக நாள் தயாரிப்பாயின் எண்ணை அளவு கூடுதல் வேண்டும். தக்காளி, வெங்காயம் சேர்த்து  மணக்க மணக்க திடீர் சாம்பார் ! சுவைத்து மகிழுங்கள்!

4 Jan 2016

அண்ணா அண்ணா!



கடை வீதிக்குப் போய் சாமான்கள் வாங்கிக் கொண்டு வருகிறேன் எதிரிலே கையில் சூட் கேசுடன் அண்ணா! இந்த நேரத்தில் எங்கே கிளம்பி விட்டீர்கள் என்கிறேன். சென்னைக்குதான் என்று என்னை அணைத்துக் கொள்கிறார்! என் கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. எதற்கு அழுகிறாய், கண்களைத் துடைத்துக் கொள், என்கிறார்.

அண்ணா, எனக்கு மிகவும் பிரியமானவர். சின்னவயதில் அண்ணாவுடன் சைக்கிள் வாகனத்தில் நிறைய சுற்றியிருக்கிறேன். சைக்கிளில் ஹேண்டில்பாரைப் பிடித்துக் கொள்ளாமல் கையை இரண்டுபக்கமும் நீட்டிக்கொண்டு சைக்கிள் மிதிப்பார். வெகு வேகமாகப் பறக்கும் சைக்கிளின் பின் சீட்டில் பயமும், சிரிப்பும், பெருமிதமுமாக உட்கார்ந்து செல்வது ஒரு அனுபவம்! குழந்தைகள் படத்திற்கு என்னைமட்டும் ஸ்பெஷலாக அழைத்துப் போயிருக்கிறார். பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் என்னை விட்டுவிட்டுதான் கல்லூரிக்குப் போவார்.

பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.  அண்ணாவுக்கு வேண்டிய பஸ் இன்னும் வரவில்லை. எங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது! அடடா அண்ணா பஸ் ஏறிவிட்டால் இந்த இருட்டில் எப்படி தனியே வீட்டுக்குப் போவது என்று யோசிக்கிறேன். அதற்குள் அண்ணா சொல்கிறார், 'வா போய் ஒரு காப்பி குடித்துவிட்டு வருவோம். பஸ் எப்போது வரும் என்று தெரியவில்லை.' அண்ணாவுக்கு அடிக்கடி காப்பி குடிக்கவேண்டும். ஒரு அரை டம்ளர் காப்பி என்று அரைமணிக்கு ஒருமுறை சமையலறையில் குரல் கேட்கும்..... பக்கத்தில் இருக்கும் டீக்கடைக்குள் நுழைகிறோம்.

காப்பி குடித்து வரும் போது அண்ணா சொல்கிறார் போய் அந்த ஆனந்தவிகடனை வாங்கிவாயேன். நான் பஸ் வருகிறதா என்று பார்க்கிறேன்.
நான் போய் விகடனை வாங்கி வருவதற்குள் கனவு கலைந்துவிட்டது!ஆனால் கனவு போலவே இல்லாத இதய நிறைவு!

 நீலகிரியில், குன்னூரில் நாங்கள் வாழ்ந்த காலத்தில் அண்ணா பிஏ, படித்து முடித்திருந்தார். நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சனி, ஞாயிறுகளில் விடியற்காலையில் இருவருமாய் நடக்கப் போய்விடுவோம். மெல்லிய பனித் திரை போர்த்த இயற்கையையும், பறவை ஒலிகளையும், மெளனத்தின் ஆனந்தத்தையும் ரசிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தது அண்ணாதான்.  நடைப் பழக்கம் எனக்கு அவரால்தான் வந்தது.
தமிழ் வாணனின் கல்கண்டு பத்திரிகையை தவறாமல் வாங்கி வருவார். இயற்கை உணவுப் பழக்கங்கள் அந்தக்காலத்திலேயே அவரிடம் ஏற்பட்டதற்கு காரணம் கல்கண்டு பத்திரிகைதான்.
தினமும் காலையில் ஆசனங்கள் செய்வார். அதைப் பார்த்து பத்மாசனம் உள்ளிட்ட யோகாசனங்களை அவரிடம் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

''மேல் குன்னூரில்" சிறிது காலம் கணக்கு வாத்யாராகப் பணிபுரிந்த போது தான் வாங்கிய முதல் சம்பளத்தை என்னிடம்தான் கொடுத்தார். புதிய உறவுகளை உயிர்ப்பிக்கும்  திருமணங்கள்   பழைய உறவுகளை வெட்டி விடுகின்றன என்பதில் சந்தேகமில்லை. பாதைகள் மாறினாலும், இதயத்தின் அன்பு மாறுவதில்லை.

அண்ணா எப்போதுமே அதிகம் பேசமாட்டார். நான்கு வயதில் தாயை இழந்தவர்.  இன்னும் ஓராண்டில் எண்பதாவது பிறந்த நாளைக் கொண்டாடவேண்டும் என்று எண்ணிய வேளையில் மருத்துவ மனையில், நண்டின் பிடியில்! மனம் வருந்துகிறது!

பச்சை இலைகள் முதிர்ந்து சுருங்கி கீழே வீழ்ந்து மண்ணோடு மண்ணானாலும் தாய்மரத்தின் முத்திரை எப்போதும் நீங்காதிருக்கும் அல்லவா?

  அண்ணனிடம் கொண்ட அன்பின் நினைவலைகளில்  குளிர் காய்கிறது மனம்.