7 Dec 2016

தேங்காயும்,சோசியமும்!

வயதில் பெரியவர்களையும், குழந்தைகளையும் பார்க்கப் போகும் போது வெறும் கையோடு போகக்கூடாது என்பது நம்முடைய பண்பாடு. அதேபோல வந்தவர்களை நன்கு உபசரித்து விடை பெறும்போது ஒரு பழமாவது கொடுப்பதும்தான். ஆ அதுதான், என் பேரப்பையனைப் பார்க்க ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டி காந்திபஜார் சென்று  திரும்பிவர ஆட்டோவில் ஏறினேன்.

ஆட்டோ ஓட்டுனர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒரு விதம்! சிலர் சகஜமாகப் பேசுவார்கள். சிலர்பேச மாட்டார்கள். நேற்று நான் ஏறிய ஆட்டோக்காரர் கொஞ்சமாகப் பேசுபவர். போகவேண்டிய இடம் சொன்னதும் ஓ, எனக்குத் தெரியுமே என்றார். அப்பாடா வழி சொல்ல வேண்டாம் என்று நினைத்தவுடனே எதிர்பாராத தலைப்பில் பேச ஆரம்பித்தார்.

ஓ அந்தக்கோயில் பக்கத்திலா வீடு, நீங்க அப்படின்னா தினம் போவீங்களா என்றார்.
ஒரு அடையாளத்துக்குதான் சொன்னேன், நான் அந்த இடத்துக்குப் பக்கத்தில் இருக்கிறேனே தவிர தினம் தினம் எல்லாம் போகமாட்டேன் ஐயா என்றேன்.
உங்களுக்கு இந்த தேங்காய்  கட்டினால் காரியம் வெற்றி பெறும் என்பதில் நம்பிக்கை இருக்கிறதா?  சிலர் ரொம்பப் பெருமையா பேசறாங்க என்றார்.

எனக்கு அந்த நம்பிக்கையெல்லாம் கிடையாது. நடக்கப்போவதை,காணாமல் போனதை கண்டுபிடித்துக் கொடுப்பதை, மற்றும் இன்னபிற மனிதனுடைய வேண்டுகோளுக்கெல்லாம் வழி சொல்லுகிற சக்தி, தேங்காயைக் கட்டினால்தான் வரும் என்றால் பொய்! நடப்பது எதுவென்றாலும் அதை ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனதையும், தாங்குகிற சக்தியையும் கொடு என்றுதான் நான் கடவுளிடம் வேண்டுவேன் என்றேன்.

நீங்க சொல்வதுதான் சரி. அப்படிதான் இருக்கவேண்டும்.
ஏன் கேட்டேன் என்றால் நான்கூட ஒருமுறை தேங்காய் கட்டினேன். ஒன்றும் நடக்கவில்லை.உங்களுக்கு நல்லது நடந்துதா என்று தெரிந்து கொள்ள்வே விரும்பினேன் என்றார்.

வீடு வந்துவிட்டது.இறங்கினேன். ஆனால் பாருங்கள் இப்போதெல்லாம் ஆசிரமத்து மூன்று தெருக்களிலும் சோழி ஜோசியம் பார்க்கிறவர்கள் இரண்டு மூன்று பேர் இங்கே செவ்வாய், சனிக்கிழமைகளில் ஆஜர்! நல்ல ஆஜானுபாகுவாக இருக்கிறார்கள். நெற்றியில், விபூதி,சந்தனப் பொட்டு,பாய் விரித்து உட்கார்ந்துகொண்டு சோழிகளைப் பரப்பி வைத்து, பக்கத்திலேயே ஒரு சில சிறு அட்டைகள்! ஏதாவது எழுதியிருக்கும் என்று நினைக்கிறேன்!
அவர்கள் முன்னால் கையை நீட்டிக்கொண்டு இள வட்டங்கள் ஜோடியாக  அமர்ந்து சோதிடம் கேட்கிறார்கள்! கடவுளைவிட சோசியக்காரனிடம் அதிக நம்பிக்கை உள்ளவர்கள் போலும்!

என்றைக்காவது ஒருநாள் நானும் சோதிடம் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்!

வேடிக்கையான உலகம்! வினோதமான சிந்தனைகள்!