24 Aug 2014

யார் மைந்தன், யார் மகன்?( திருப்புகழ்)

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனுக்கு திருப்பெரு வடிவம்
காட்டி  ஆட்கொண்டு, கோயில் கொண்ட திருத்தலம்.

தமிழ் மறையாம் திருப்புகழைப் பாடிய அருணகிரிநாதர் திருச்செந்தூருக்குச் சென்ற போது, முருகப் பெருமானின் திருநடனம் காணவிரும்பி வேண்ட, பெருமானும் திருநடனம் புரிந்து அருள்செய்தார்.
''கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சி நடனங்கொளும் கந்தவேளே''என்று
அதனைத் திருப்புகழில் ஏற்றிப் பாடுகின்றார் அருணகிரி.

திருப்புகழில் இல்லாதது எதுவுமில்லை!  வரலாறுகளை, வாழ்க்கை நிகழ்வுகளை, உறவுகளை, காதலை, காமத்தை, மனிதர்களுடைய பல மனப் பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது திருப்புகழ்.

இன்றைய முதியோர்களைப் பார்க்கும் போது திருப்புகழ் நினைவுக்கு வருகிறது. முதுமையின் துன்பங்களை அவர்தான் எப்படியெல்லாம் எடுத்துச் சொல்கிறார்!  முதுமை வருகிறது.  கூடவே வயிறு பெருத்து, முன்னே தள்ளுகிறது. தலைமுடி வெளுத்து, வாய்ப்பல் உதிர்கிறது! முதுகு வளைய, உதடுகள் தொங்குகின்றன. மூன்றாவது காலாய் ஊன்றுகோல் முன்னேவர, இருமல் கிண்கிண் என ஒலிக்கிறதாம்.
பேசுவது யாருக்கும் புரியாதவாறு வாய் குழறுகிறது. ஒளி பொருந்திய கண்கள் தூங்குவது போலக் காணப்படுகிறது. காது கேட்கும் சக்தியை இழந்துவிடுகிறது. போதாத குறைக்கு நோய்கள், அதனால் வரும் துன்பங்கள்!
நோயைக் குணப்படுத்துகிறேன் என வரும்  வைத்தியனால் படும் துன்பம்!

ஆக இந்த துன்பங்களுக்கு சிகரம் வைத்தார் போலும், பிள்ளை என்ன செய்கிறான்! அப்பா அப்பா எவ்வளவு சொத்து வைத்திருக்கிறாய்? கடன் எவ்வளவு? மிச்சம் மீதி தேறுமா? என்றெல்லாம் கேட்கும் போது அன்பு காட்டி ஆறுதல் சொல்லாமல் சேர்த்து  வைத்திருக்கும் காசைப் பற்றிக் கவலைப்படும் மகனால் ஏற்படும் துன்பம்!
போனால் போகட்டும்!மரணம் எல்லோரையும் தழுவுவதுதானே! யமராசன் வந்து, பாசக்கயிற்றால் கட்டியிழுக்கும் வேளை! மலமொழுக, ஆவி மயங்குகிறது! அப்போது யார் துணை?

முருகப் பெருமானே, சூலாயுதம் கொண்டு எம தூதர்கள் எனைச் சூழும் போது வேலாயுதத்துடன் வேகமாக மயில்மீது அமர்ந்து வந்து என்னைக் காத்து அருள்புரிய வேண்டும்!

அது யார் மயில் மீது வந்து காப்பவன்? முருகனா? இதுவரை கேள்விப்பட்டதில்லையே! அவனைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

அட இது கூடத் தெரியாதா?
கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும் சடாமுடியிலே தரித்திருக்கும் சிவபெருமானின் மைந்தன்!
கடலலைகள் முத்தமிடும் செந்திலம்பதியின் அதிபன் சண்முகன்!
அழகன் முருகன், வள்ளியம்மையின் மணவாளன்!
சூரபத்மனால் சிறைவைக்கப்பட்ட தேவர்களைப் போரிலே வென்று வெற்றிவாகை சூடியவன்!
அட இன்னும் தெரியவில்லையா?

இப்போது இன்னும் ஓர் அடையாளம் சொல்கிறேன்.
அதோ அயோத்யை மாநகரம்! தசரத மகாராஜாவின் அந்தப்புரத்திலே கோசலை தேவியார் குழந்தை ஸ்ரீராமனை அழைக்கும் குரல் கேட்கிறதா? என் அப்பனே வருக, ரகுநாயக வருக, மைந்தனே வருக, மகனே வருக, என் கண்ணே, ஆருயிரே, என்று கொஞ்சி, என் அரசே கொஞ்சம் பாலருந்த வருக, மலர்களை சூடிக்கொள்ள வருக என்றெல்லாம் அழைக்கிறாள், கேட்கிறதா?

மகாவிஷ்ணுவாகிய திருமால் ராமனாக அவதாரம் செய்த பொழுது கோசலை ராமபிரானை இவ்வாறெல்லம் அழைக்கும் பேறு பெற்றாள். அவளுக்கு அந்தப் பேற்றை வழங்கிய திருமாலின்
மருகன் முருகன். ஆம் உமையம்மையின் சகோதரன் அல்லவா இந்தத் திருமால்!

அந்தகன் வரும் போது அவனியில் உற்ற துணை முருகப் பெருமானைத் தவிர யாராக இருக்க முடியும்?
முருகப் பெருமானே உயிர் பிரியுங்காலத்தில் வந்து என்னைக் காத்து அருள் புரிவீர்!

உறவுமுறைகளை மிக மிக அழகாக சொல்வதிலே வல்லவர் அருணகிரியார். மாமன் மருகன் உறவு முறைகளைச் சொல்லியே ராமாயணக் கதையை திருப்புகழிலே இழைத்திருக்கிறார்!

திருமுருக கிருபானந்த வாரியாரின் திருப்புகழ் விளக்க உரை திருப்புகழ் கற்போருக்கு வரப் பிரசாதமாகும். ''தொந்திசரிய ''எனத் தொடங்கும் இப்பாடலில் ராமபிரானை கோசலை,'மைந்த வருக மகனே வருக ' என அழைக்கிறாள். அதற்கு வாரியார் அவர்களின் விளக்கத்தைப் பார்ப்போம்.

''மைந்தன், மகன்  என்ற இரு சொற்களும் ஒரே பொருளைக் கொடுப்பன அல்ல.

1. உரிய வயது வந்தும் தாய் தந்தையர் பாதுகாப்பிலேயே இருப்பவன் -  பாலன்.

2. வயது முதிர்ந்த தந்தை வேலை செய்ய தானும் உதவி செய்யாமல் செலவு செய்பவன்- பிள்ளை.

3. தந்தைக்கு ஞானம் உரைக்கும் அளவுக்கு உயர்ந்த அறிவு பெற்றவன் - குமாரன்.

4. தந்தைக்கு நற்கதி தருகின்றவன் - புத்திரன்.

5. தந்தைக்கு நன்மையைச் செய்கின்றவன் - புதல்வன்.

6. தான் பிறந்த குடும்பத்தைக் காத்து ஆலமரத்தின் விழுது மரத்தைத் தாங்குவது போல் நிற்பவன் - மகன்.

7. தந்தையின் குடும்பம், தாயின் குடும்பம், குருவின் குடும்பம், நண்பரின் குடும்பம் என எல்லோருடைய          குடும்பங்களைக்  காப்பாற்றுபவன் - மைந்தன்.

இராமர் ,  தன் குடும்பம், குகனுடைய குடும்பம், சுக்ரீவன், விபீஷணன், ஆகியோருடைய குடும்பங்களைக் காத்தலினால், மைந்தன் என்றும், தான் பிறந்த குடும்பத்தையும் காத்தலினால் மகன் என்றும் அழைக்கப் பெற்றார். 

எத்தனை அழகான விளக்கம் பாருங்கள். திருப்புகழ் கடலில் குதித்துக் குளித்துக் களித்து முத்தெடுங்கள்!
திருச்செந்தூர் கோயில் கோபுரம்.









நாழிக் கிணறு - திருச்செந்தூர்.