21 Apr 2015

அட்சயதிரிதியை

இன்றைக்கு அட்சய த்ரிதியை, என்ன நகைக்கடைக்குப் போகலியா, என்றாள் தோழி.
அட்சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாதது என்று அர்த்தம்.வங்கியிலிருந்து எடுக்க எடுக்க எப்படி பேங்க் பேலன்ஸ் குறையாம இருக்கும்? என்றேன். 

அதுதான் நகையா வளரும் என்கிறாள்! நகை தானாக வளருமா என்றேன். 

நகைக்கின்றாள்!

தங்கக் கனிமத்தை வெட்டி எடுத்து, உருக்கி, பிரித்து அதை ஒரு வடிவில் கொண்டு வந்து சூட்சுமமாக நகாசு வேலை செய்வதால்  அது நகை.அந்த நகைக்கு சொந்தக்காரியாக ஆகும் போது மென்மையாகப் புன்னகை வருவது இயல்புதானே!

ஆமாம். ஆனால் இந்த நகை படுத்தும் பாடு, பெரும்பாடு!
 'நகையோ', நகையோ இரண்டும் பயங்கரமானவை என்றேன்.

ஆம், பெண்கள் இடம், காலம், நேரம் பார்த்துதான் நகைக்கவேண்டும். இல்லாவிடில்,'என்ன கர்வம், சிரிக்கிறாயா 'என்று அழவைத்து விடுவார்கள். 
திரெளபதி நகைத்தாள், பாரத யுத்தம் வந்தது!

தங்க நகையை வீட்டில் வைத்தால் திருடிவிடுவார்கள் என்று தினந்தோறும் பயப்பட வேண்டுமே! வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்துக்கு பணம் கட்ட வேண்டும். அதிர்ஷ்டம் செய்தவை நகைகளால் அணிபெறும் இரும்புப் பெட்டிகள்!

நகை வாங்குகிறோமோ இல்லையோ பிறர் நகைப்புக்கு ஆளாகக்கூடாதம்மா என்றேன். ஆமாம் சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே என்று ஒரு பாடல் கூட இருக்கிறதே என்றாள்.

அடடா, அப்பா நகை வாங்கிக் கொடுக்கும் போது, சந்தோஷம்!
கணவன் வாங்கிக் கொடுக்கும் போது பெருமை!
தன்னுடைய உழைப்பால் பெற்ற பணத்தால் வாங்கும் போது பெருமிதம்!

பட்டுப் புடவையோடு நகைகளை பொருத்தமாக அணிந்து கொண்டு,மலர் சூடி,புன்னகையோடு நிற்கும் மகளிரைப் பார்த்து மகிழாதவர் உண்டோ?