29 May 2017

ஶ்ரீஅரவிந்தர்- 9

ஶ்ரீஅரவிந்தர் -9

ஶ்ரீஅரவிந்தர் பாரதத்தின் மறுமலர்ச்சி, விடுதலை இவற்றிற்கு  அரசியல் பங்கேற்பு இன்றியமையாததாகும் என்பதை அறிந்தவர். ஆனால் அனைத்துக்கும் பின்னால் ஒரு சக்தியின் துணையும் இருந்தால்தான் இது நிறைவேறக்கூடும் என நம்பினார்.

இந்த அடிப்படை சக்தியைப் பற்றிய ஏதோ ஓர் உண்மை எங்கேனும் இருக்க வேண்டும் என்பதை அறிய யோகம் பயின்றார். தனக்கு யோகம் கைகூடும் நிலையில்
அந்த சக்தியிடம் பின்வருமாறு வேண்டுகிறார்.

"நீ இருப்பது உண்மையானால் என் உள்ளத்தை அறிவாய்,
நான் முக்தியைக் கேட்கவில்லை,
பிறர் கேட்கும் வேறு வரங்களைக் கேட்கவில்லை
இந்த சமுதாயத்தை உயர்த்துவதற்கு  வேண்டிய 
பலத்தையே நான் உன்னிடம் கேட்கிறேன்!
நான் அன்பு செய்யும் இந்த மக்களுக்காக
வாழவும், உழைக்கவும், எனது வாழ்வை அர்ப்பணிக்கவும்
அனுமதி கொடு என்று மட்டுமே நான் உன்னைப் பிரார்த்திக்கிறேன்."

பாரத நாட்டுக்காக, நாட்டு மக்களின் நன்மைக்காக, உயர்வுக்காக  திரை மறைவில் ஒரு மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ஶ்ரீ அரவிந்தர்.

இந்திய மக்களின் விடுதலை வேட்கைக்கு எதிராக ஆங்கில அரசு எல்லா வகைகளிலும் அடக்கு முறையைக்கை யாண்டது. இந்து, முஸ்லிம் மக்களைப் பிரித்தாளும் வங்கப் பிரிவினையைக் கொண்டு வந்தது
அதனால் விடுதலை இயக்கத்தை தீவிரப் படுத்தவும், மக்கட் சக்தியை ஒருங்கிணைக்கவும்  பாரத சக்தியாக, சுதந்திர தேவியாக அன்னை பவானி உருவெடுத்தாள்.

அன்பு, ஞானம் இவற்றை வழங்கும் வலிமை மிக்கவள் துர்கை!
எடுத்த செயலை திறம்பட நிறைவேற்ற வல்லவள் மகாலட்சுமி!
உறவு, சக்தி இவைகளை இணைப்பவள் மகாசரஸ்வதி!
இந்த மூவரின் ஒரே வடிவமாகத் திகழ்பவள் அன்னை பவானி!

விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற இளஞர்களை உக்கிரம் வாய்ந்த மக்கட் சக்தியாகக் கண்டார் ஶ்ரீ அரவிந்தர். அதனாலேயே  அமைதி நிறைந்த மலைப்பகுதியில் அன்னை பவானிக்கு கோவில் எழுப்பி, நாட்டுப் பற்றும், பிரம்மச்சரிய விரத ஆர்வமுடைய இளைஞர்கள் வழிபாடு செய்து விடுதலை இயக்கத்தில் சேர வேண்டுமென விரும்பினார்.
  (அரவிந்தர் இதில் பங்கேற்கவில்லையென்றும், அவருடைய இளைய சகோதரர் பாரின் என்பவரே பவானி மந்திர் தோன்றக் காரணமாவார் என்பவரும் உண்டு.)

பங்கிம் சந்திர சட்டோபாத்தியா ஒரு வங்காள எழுத்தாளர், கவிஞர்.( 1838 - 1894)
இவர் எழுதிய நூல் "ஆனந்தமடம்". தேசத்தாயின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் என்ற உட்கருத்தைக் கொண்டது இந்நூல்.இதில் இடம் பெற்ற பாடலே " வந்தேமாதரம்" என்னும் அன்னை வாழ்த்துப் பாடல்.

இப்பாடல், அன்றைக்கு ஏழு கோடி மக்கட் தொகையைக் கொண்டிருந்த வங்கம் அதன் பதினான்கு கோடிக் கரங்களில் வாளேந்தியிருந்ததாகச் சித்தரித்தது.
கடினமான அடக்கு முறைகளால் விடுதலைப் புரட்சியாளர்களைத் துன்புறுத்தி வந்த ஆங்கிலேயர்களை நடுநடுங்கச் செய்த "வந்தேமாதரம்" என்ற உரிமைக் குரல் பாரதத் தாயை தீயோரை அழிக்கும் வாளேந்திய காளியாகவே காண்பித்தது.
விடுதலை இயக்க வீரர்களை ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடத் தூண்டும் சக்தியாக, எதிர்ப்போரைப் பொடிப்பொடியாக்கும் பவானியாக, துர்க்கையாகப் போற்ற வழிவகுத்தது

'வந்தேமாதரம்'என்று உரக்கச் சொல்பவர்களைக் கைது செய்தது ஆங்கில அரசு. சிறையில் அடைத்தது!  
ஆனால் இந்தியா முழுவதும் மக்கள் வந்தேமாதரம் என முழங்கி  தங்கள் விழிப்புணர்வை, சுதந்திர தாகத்தை உலகறியச் செய்தார்கள்.
இந்திய தேசிய விடுதலை இயக்கம் தீவிரமடையக்காரணமாக இருந்த மந்திரச்சொல் " வந்தேமாதரம்".

(ஶ்ரீஅரவிந்தர்,பவானிமந்திர், ஆனந்தமடம்,வந்தேமாதரம்,சுதந்திரதேவி, நாட்டுப்பற்று)




14 May 2017

ஶ்ரீஅரவிந்தர் -8


இந்திய விடுதலைப் போரில் பெரும் பங்கு வகித்தவர்கள் வங்காளிகள். இன்றைக்கும் அந்தமான் சென்று அங்குள்ள " செல்லுலார் ஜெயில்" என அழைக்கப் படும் சிறை வளாகத்தைக் காண்போர் அங்கு உயிர் நீத்த வங்காள  விடுதலைச்சிங்கங்களின் பெயர்ப் பட்டியலைக் காணலாம்.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்கம் முழுமையாக ஆங்கிலேயர் வசமானது.அது வங்கத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனக்கருதப்படுகிறதுமக்கள் ஐரோப்பிய நாகரிகம் என்ற மதுவுண்டு அடிமைத்தனத்தில் திளைத்திருந்தனர்.

ஆகவே மக்களுடைய  மனதில் பூரண சுதந்திரம் பெற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் தன் முதல் கடமையென அரவிந்தர் தீர்மானித்தார். அதே சமயம் ஆங்கிலேயர்களுடன் நேருக்கு நேர் போராடி சுதந்திரம் பெற, துப்பாக்கி ஏந்திப்  போரிடும் வீரர்களைத் தயார்செய்ய வேண்டும். அதற்கு சுமார் முப்பது ஆண்டுகள் ஆகும் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது.

அந்தக்காலத்தில் வங்காளிகளுக்கு யாரும் போர்ப்பயிற்சி அளிக்கக் கூடாது என ஒரு சட்டம் இருந்ததுஆனால் 1899 ஆம் ஆண்டு தன் நண்பர்களின் உதவியுடன் ஜாடின் பானர்ஜி என்ற பெயருடைய  வங்காள இளைஞனை யாரும் அறியாமல் பரோடா சமஸ்தான ராணுவத்தில் சேர்த்து போர்ப் பயிற்சி பெற வைத்தார் அரவிந்தர்.ஓராண்டுப் பயிற்சி முடிந்ததும் கல்கத்தாவிற்கு அனுப்பி வங்காள இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கத் தேவையான பணம், செய்ய வேண்டிய வேலைகள், தேவையான பொருட்கள் ,தீவிரவாதிகளை தயார் செய்யும் முறை ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் அளித்தார். ஜாடின் திறமையும்,பொறுப்பும்,உடல் வலிமையும் உள்ளவராக இருந்தார். எனவே வங்காளத்தின் மூலை முடுக்குகளில் உள்ள இளைஞர்களைப் பல குழுக்களாகச் சேர்த்து சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கத் தயார் செய்துவந்தார்.

1902 ஆம் ஆண்டு கல்லூரி விடுமுறையின் போது வங்கம் சென்ற அரவிந்தர் துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெற்றார். வங்கத்தின் சுதந்திரப் போராட்ட புரட்சியாளர்களை ஒன்று சேர்த்து ஒரு கையில் வாளும்,மற்றொரு கையில் பகவத்கீதையையும் ஏந்தி, பாரதத்தாயின் சுதந்திரத்திற்குப் பாடு படுவேன், . தீவிர வாதிகளின் குழுக்களைப்பற்றி யாரிடமும்  எதையும் சொல்லாமல் ரகசியம் காப்பேன் என சத்தியப் பிரமாணம் செய்ய வைத்தார். மகாராஷ்ட் ராவில் லோகமான்யதிலகர் தலைமையில் இத்தகைய தீவிரவாதக் குழுக்கள் செயல் பட்டுவந்தன.

அரவிந்தரின் சகோதரர் ' பாரின்' சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தார். அரவிந்தரின் வழி காட்டுதலால் வங்கத்தின் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட உதவி செய்தார். பல இடங்களிலும் தீவிரவாத பயிற்சி முகாம்களை ஏற்படுத்தினார். விளையாட்டுத் துறை என்ற பெயரில் குதிரை ஏற்றம், கம்பு சுழற்றுதல்,துப்பாக்கியைக் கையாளுதல், ஆகிய பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப் பட்டன. ஆயிரக்கணக்கான வங்க இளைஞர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க முன் வந்தனர். 1903 ஆம் ஆண்டு மீண்டும் வங்கம் சென்று அனைத்தையும் பார்வையிட்டார்  அரவிந்தர்

1905 ஆம் ஆண்டு ஆங்கில அரசு வங்காளத்தை இரண்டாகப்பிரித்தது. அது இந்திய வரலாற்றில் கருப்புதினமாகக் கருதப்படுகிறது. இப்பிரிவினைக்கு  இஸ்லாமியர்களின் ஆதரவு இருந்தது. இந்துக்கள் இதனை எதிர்த்தனர்.இந்தியா முழுவதும் வங்கப்பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.பொதுக் கூட்டங்களும்போராட்டங்களும் நடத்தப்பட்டன.
ஸ்வராஜ்யம், சுதேசி இயக்கம் தோன்றியது. சிதறிக்கிடந்த இந்திய நாட்டில் முதன்முதலாக தேசிய இயக்கமாக விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.

இந்த காலகட்டத்தில் , 'நாட்டுப்பற்றும், இந்தியத்தாயின் மேல் அன்பும் உடைய இந்த நாட்டுமக்களுக்கு ஆன்மிகவலிமை கண்டிப்பாக வேண்டும்' என்பதை வலியுறுத்தும் ஶ்ரீ அரவிந்தரால் எழுதப்பட்ட " பவானிமந்திர்" என்ற தீவிரவாதப் புத்தகம் இந்தியா முழுதும் வழங்கப்பட்டது.

வலிமையின் அன்னை(சக்தி) எனவும், இந்தியத்தாய் எனவும் அழைக்கப்படும் அன்னை பவானிக்கு மிக உயரமான, தூய்மை வாய்ந்த இடத்தில் கோயிலொன்று  கட்டப்படவேண்டுமென்றும், தங்களுடைய குடும்ப,சுக சவுகரியமான வாழ்க்கையைத் தியாகம் செய்யத்தயங்காத கர்மயோகிகள் இங்கே அன்னையின் முன் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவோம் என சத்யப்பிரமாணம் செய்ய வேண்டுமென்றும் இந்த நூல் கூறிற்று.

இந்திய நாட்டின் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க விழைந்தனர்.

(ஶ்ரீஅரவிந்தர், பரோடா, வங்காள இளைஞர்கள்,போர்ப்பயிற்சி.)



6 May 2017


முகப்பானை
அலுவலகத்தில் வேலை செய்வோர் விடுமுறை எடுத்துக் கொள்ள விரும்பினால் 'பாட்டி செத்துட்டாங்க' லீவு வேணும் என்று அந்தக்காலத்தில் கேட்பார்களாம் !காரணங்கள் கண்டு பிடிப்பது ஒன்றும் கடினமானதல்ல என்கிறார் பாரதியார். ஆனால் பொய் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண்டும் அல்லவா?' பானைக்குள் தேளிருந்து பல்லால் கடித்தது, அதுதான் லீவு எடுத்தேன் என்று சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது? பானை....பானை

குயவன் திறமையாகச் செய்யும் மண்பானையைப் பார்த்து ஆச்சரியப்படாதவர் உண்டா? மண் பானை நீர் வெயில் காலத்தில் தேவாமிர்தம்! மண்பானைச் சமையல் உடல் நலத்திற்கு நன்மை செய்யும். பானை வயிறு உடையவன் வினாயகப் பெருமான். மனிதர்களுக்குப் பானை வயிறு இருந்தால் தொப்பை

மண்பானையை விடுங்கள், வெண்கலப்பானை தெரியுமா?

கேரளமாநிலத்தில் புகழ் பெற்றது வெண்கல உருளிகள்செம்பும், ஈயமும் கலந்த கலவையே வெண்கலம். இந்த உருளிகள் மிகவும் கனமாயிருக்கும். உயரம் குறைவாக, வட்ட வடிவில் தேய்த்துக் கிளற வாகாயிருக்கும். நன்றாகத் தேய்த்து உபயோகப் படுத்தப் படுத்த வெள்ளிபோல் பளபளக்கும்கேரளக் கோயில்களில் நைவேத்யமாகச் செய்யப்படும் 'அடைப்பிரதமன், பாயசம்' எல்லாம் இதில்தான் செய்வார்கள். வெண்கலத்தால் பானை போல செய்யப்படும் பாத்திரம்தான் வெண்கலப்பானை!

 எங்க வீட்டில்  அழகான வெண்கலப்பானை உண்டு. வாய் குறுகியும்,அடி பெருத்தும் இருக்கும்.அதில்தான் அம்மா அந்தக்காலத்தில் பாலைக் குறுக்கி, திரட்டுப் பால் செய்வாள். நிதானமான தணலில் அடிபிடிக்காமல் பால் கொதிக்கும். மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் திரட்டுப்பாலின் சுவை இன்னும் என் நாவுக்கு
சொந்தம்

என்ன இப்போது வெண்கலப்பானை ஆராய்ச்சி என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். சீதாவின் வீட்டிற்கு அவள் சினேகிதிகள் வந்திருந்தார்கள். எங்கே உன் மாமியாரைக் காணோம் என்று ரகசியமாகக் கேட்டாள் ரமா. கையை உள்ளே காட்டி, முகத்தை உப்பிக்காட்டினாள் சீதா! " வெங்கலப்பானையா, என்ன ஆச்சு?" எனச்சிரித்தாள் ரமா! அதாவது மாமியாருக்கு மருமகள் மீது கோபம், முகத்தைத்தூக்கி உம்மென்று வைத்துக் கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்!

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே கூட ஆண் பெண் வித்யாசம் இல்லாமல் பல வெங்கலப்பானைகள்! வெண்கலப்பானை அழகானது
அப்படியென்றால் வெங்கலப் பானை சமையல் பாத்திரம் இல்லையா?இல்லை வெங்கலம், வெம்மையான பாத்திரம் தொட்டால் சுடும்! உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும்
உலக நாடக மேடையில் ஒரு சிலர் வெங்கலமாக இருக்கிறார்கள். உம்மணாமூஞ்சிகள்!

மனிதனுக்குத் தன் மனதிலுள்ள பொறாமை, கோபம், எரிச்சல் ஆகிய கீழ்மைக் குணங்களை என்ன செய்வது என்று தெரியாத போது தனக்குப் பிடிக்காதவர்களைப் பார்த்துக் கடுஞ்சொற்களை வீசுதல், பழித்தல் எனத் தன்வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறான். அதில் அவனுக்கோர் நிம்மதி கிடைக்கிறது. பார்த்தாயா நான் அவனை ஒரு கிழி கிழித்துவிட்டேன் என்று பெருமையடித்துக் கொள்கிறான். தன்னிடம் யாரும் நெருங்காதவாறு முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்கிறான். சிடு மூஞ்சி என்ற பட்டப்பெயர் பெறுகிறான். அங்குதான் வருகிறது வெங்கலப்பானை!

சமீபத்தில் ஜெயநகரில் உள்ள வங்கிக்குப் போயிருந்தேன். ஓராண்டுக்கு முன் அதே வங்கிக் கிளையில் பணியாற்றியவர்கள் எல்லோரும் போனவுடன் வணக்கம் சொல்வார்கள், என்ன வேண்டுமென்று கேட்டு  செயலாற்றுவார்கள். சீனியர் சிடிசன் என்ற ஒரு மரியாதையிருக்கும். நிறைய புது முகங்கள் இப்போது. அதனாலென்ன? ஆளாளுக்கு வெங்கலப்பானை முகமூடி அணிந்திருக்கிறார்கள்.

மோதிஜியின்  பணப்பரிமாற்றமில்லா வாழ்வுதான் நல்லது போல! அது போலவே சாப்பிடும் அவசியமில்லா மனிதனை கடவுள் படைத்தால், அல்லது வலை மூலமாக அரைக்கணத்தில் செய்திப் பரிமாற்றங்கள் செய்வதுபோல் பசித்தவன் வயிறு நிறைந்தால்  வங்கிக்குப் போகவேண்டாம் என்று ஞானம் வந்துவிட்டது! நடக்குமா?

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டால் முகத்தசைகள் இறுகி பார்க்க சகிக்கமுடியாமல் பயமுறுத்தும். அதுவே அமைதியான முகத்தில் தசைகள் இளகி பளபள என  ஜொலிக்கும். பார்ப்பவர்களுக்கும் அன்பை வழங்கும். முகத்தில் சிரிப்பு மலர காசா, பணமா செலவு? வெங்கலப்பானையாய் இருக்காதீர்கள், புன்னகை பூக்கவைக்கும் மலராய் இருங்கள்! 🌻அதை விடுங்கள்.....

ஞானப்பானை' கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் வாழ்ந்தவர், குருவாயூரப்பனிடம் அதீத பக்தி பூண்டவர் "பூந்தானம்" என்பவர். அவர் பாடிய பாடல்கள் சந்தான கோபாலம், ஞானப்பான, என்ற பெயர்களில் நூல்வடிவில் உள்ளன.
'ஞானப்பான' என்றால் "ஞானத்தைத் தரும் களஞ்சியம்" எனப்பொருள்படும்.
அதாவது 'பான' என்றால் களஞ்சியம். கலைக்களஞ்சியம் என்கிறோம் அல்லவா?

'ஞானப் பான', ஒரு வேளை வெங்கலப் பானையாகாமல் இருக்க மனிதர்களுக்கு உதவுமா?





F7B50B6F-7253-468C-A598-F1CEB097A5BD-1-2048x1536-oriented.png