4 Aug 2019

எத்தனை நாட்கள்?

எழுதி எத்தனை நாட்கள் ஆகி விட்டன!  உடம்பும் மனமும் படுத்தும் பாட்டில் எழுதுவதாவது,!எழுத நினைக்கும் போது தூக்கம் வருகிறது! தூங்கலாம் எனப் படுத்தால் கதை கதையாய் வாழ்க்கை நிகழ்வுகள் கண் முன்னே வலம் வருகின்றன! சரிதான் காலையில் எழுதலாம் எனத் தீர்மானம் கொண்டு வந்தால் எழும் போதே சுப்ரபாதம் பாடிக் கொண்டு பக்கவாத்யத்தைத் தேடுகிறது நுரையீரல். கூடவே கும்மாளம்  போடுகின்றன கை, கால் வலிகள். சூடான காப்பியை உள்ளே இறக்கினால், சிற்றுண்டிக்கு வேண்டுகோள் விடுகிறது வயிறு! அதுவும் நிறைவேறினால் தூக்கம் வருகிறது!  முதுமையின் அலப்பறைகள்! பின்னால் என்னத்தை எழுதுவது!

காலையில் சீக்கிரம் எழுந்து ஓடிய காலம் காலாவதியாகிவிட்டதே!
ஒவ்வொரு நாள் ஒரு மாதிரி! எழுந்து காப்பி குடிக்க ஏழரை மணி! அதன் பின் உடனே குளிக்கப் போகாமல் எப்போ  வரும் என்று மலஜலம் கழிக்க காத்திருக்கும்படி ஆகி விடுவது ஒரு சாபக் கேடு! அது முடிந்து குளித்து வரும் போது மணி பத்து!
காலைச் சிற்றுண்டியை அளவோடு சாப்பிட நினைத்தாலும் வயிற்றுக்குள்ளே தோசை விழுந்ததும்
போதாது போதாது என்கிற கூவல்! அடுத்து வருவது சுகமான தூக்கம்! அதற்குள் நாகம்மை வந்து விடுவாள்.  அவள் போக ஒரு மணி.
அதன் பின் மதிய உணவு! தூக்கம்!
இப்போதெல்லாம் சாயங்காலம் காப்பியை நிறுத்தி விட்டோம், எனவே சூடாக தொண்டையை நனை என்கிறது நாக்கு! சரியென்று டீ குடித்தால் வினய் வருவார்!
காய்கறி, அது, இதுவென்று அங்கும் இங்கும்  போய் வந்தால் மாலைப் பொழுது போய் விடும்.
ஆறேமுக்கால், ஏழு மணிக்கெல்லாம் இரவு உணவு! அது முடிந்தால் டீ.வியில் ஒரு வலம்!
ஒன்பது மணிக்கு மாஸ்டர் செஃப், பத்து மணிக்கு காப்பி டிகாஷன்!

அதற்குப் பின் எழுத எங்கே முடிகிறது!
படுத்தால் வராத தூக்கத்தைக் கண்டு பிடித்து அப்படி இப்படி புரண்டு படுத்து தூங்க மணி ஒன்று!
காலையில் அதே கதைதான். இப்படியாக ஓடுகின்ற கதிரவன் பின் ஓடும் வாழ்க்கை! ஆகா இதோ எழுதி விட்டேன். டங்கணக்கா, டங்கணக்கா டண்!

  ஆகா இதோ எழுதி விட்டேன்.