25 Mar 2015

கூப்பிடுங்கள் "ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......


சென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம்! ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவதற்குள் பொட்டி பொட்டியாய் கட்டடங்கள் காட்சியளிக்கும்.  அந்த முக்கால் மணிதான் ஜாலி....! 

விமானநிலையத்தில் இறங்கியதும் கதிரவனின் தழுவலில் நனைந்து, வேர்வையில் குளிக்க ஆரம்பித்துவிடுவோம். சொந்தக்காரர்கள் காரில் போனால் பரவாயில்லை. இல்லையென்றால்.............லொங்கு லொங்கென்று பேருந்து நிற்குமிடம் நடந்து, நொந்து நூலாகி பஸ் பிடித்து வீடு போய் சேர்வதற்குள் இனிமேல் கடவுள் சாட்சியாக எந்த ஊருக்கும் போவதில்லை என்று பிரசவ வைராக்யம் வந்துவிடும்! ( வந்திருக்கிறது)

இந்த முறை சென்னையில் ஒரு திருமணம்! கிழக்குக் கடற்கரைச் சாலையில்...!பல ஆண்டுகளுக்குப் பின் உறவினர்களை சந்திக்க வேண்டும், தம்பி, தங்கையோடு சில நாட்கள் பேசி மகிழவேண்டும் என்ற ஆவல் காரணமாக ''லேண்டட்"

சென்னையில் மட்டுமல்ல பெங்களூரில் கூட 'கால் டாக்சி' கலாசாரம் அதிகமாகிவிட்டது. எல்லோருக்கும் எல்லா டாக்சிகளையும் அழைப்புவிடுக்கும் நம்பர்கள் தெரிந்திருக்கிறது! போனால் வந்தால் கூப்பிடு டாக்சியைதான்.
நான் மட்டும் அதற்கு விதிவிலக்கா? ஓ.எம்.ஆர் சாலையில் பயணிக்க வேண்டுமென்றால் என்னத்தை செய்வது? டாக்சி டாக்சி......

பூந்தமல்லி சாலையிலிருந்து, சிறுசேரி செல்ல வேண்டியிருந்தது. வேகத் தேடுதலில் (ஃபாஸ்ட் டிராக்) இண்டிகா காரை அனுப்பச்சொன்னால்  பிரம்மாண்டமான பெரிய வேன் வந்து நிற்கிறது! பயணிப்பது நான் மட்டும். கேன்சல் செய்ய முடியாது. எனவே சரிதான் என்று ஏறிவிட்டேன். எப்படிப் போக வேண்டும் என்று தெரியாதாம்! நீங்க சொல்ற வழியில போறேன், கரக்டா சொல்லுங்க, நான் ஊட்டிக்குப் போனப்போ வாடிக்கையாளர் செல் வழிகாட்டியால் சரியான இடத்துக்கு வழிசொல்லிட்டாரு, என்று நமக்கு வழி தெரியுமா என்ற கொஞ்சம் நோண்டல்!  (மகன் வழி சொல்லிவிட்டார்)

டிரைவர் சரியான "ஜொள்ளுப் பார்ட்டி.'' மவுண்ட் ரோடு போவதற்குள் பத்து தடவை திரும்பித் திரும்பி பின்னால் பார்க்கிறார். கண்களை நேருக்கு நேர் பார்த்து பேச முயல்கிறார். லட்சக் கணக்கில் வண்டி வாங்கி லாபம் இல்லையாம்! இன்னும் என்னவோ........ 

ஜி. பி. எஸ் சிஸ்டம் என்ற 'சாலை வழிகாட்டி'யை என் அலை பேசியில் உயிர்ப்பித்தேன்! அடக் கடவுளே! சார்ஜ் ரொம்ப கம்மியாகி இருந்தது. என் மகளுக்கு ஒரு குறுஞ் செய்தி..... அவளோடு கன்னடத்தில் பேச ஆரம்பித்தேன். ஓ, ஒரு வழியாக சாலையைப் பார்த்து வண்டியை ஓட்டி, என்னை சிறு சேரியில் இறக்கிவிட்டார் கேரளத்து மேனன்.

அதற்குப் பின் எட்டு நாளில் ஓ ஒலா, அழுக்குக் கார், தூங்குமூஞ்சி டிரைவர், அது என்ன, சுங்கச் சாவடி காசை நீங்கதான் கொடுக்க வேண்டும், போக வர 44 ரூபாய் இந்த அம்மாவுக்கு கொஞ்சம் சொல்லுங்க என்று வம்புக்கார டிரைவர்கள்!

ஒருகாலத்தில் நடக்க முடிகிறதூரம், அதாவது ஒரு கிலோ மீட்டர் என்றால் நடந்தே போய் விடுவோம். அத்ற்கும் மேலே எனில் பேருந்துக்காக எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து பயணிப்போம். ஆட்டோ ஊருக்குப் போகும் போது மட்டுமே! எங்க சேலத்தில் குதிரை வண்டி ரொம்ப பிரசித்தம்! வண்டிக்குள்ளே பரப்பியிருக்கும் புல்லின் வாசனை நாசியை நிரப்பும். ஆளைப் பார்த்து வண்டிக்குள்ளே உட்கார வைக்கும் வண்டிக்காரன் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார விடமாட்டான். அவனைப் பார்த்தால் தெனாலிராமனும் குதிரையும் கதை ஞாபகம் வரும்.

இருந்த எட்டு நாளில் ஏழு நாட்கள் 'ஓலாவிலும், ஃபாஸ்ட் டிராக்கிலும்' சென்னையின் சாலைகளில்.  டாக்சிக்காக 5000 ரூபாய்  செலவாயிற்று!.......பரவாயில்லை...! 

எப்படியிருந்தாலும் பிறந்த வீட்டின் பாசமும், நேசமும் மறக்கப் போமோ! சென்னையின் கடற்கரைக் காற்றும், வெயிலும்,  மறக்கமுடியுமா என்ன? 

சென்னை சென்னைதான்! 


No comments:

Post a Comment