25 Mar 2015

கூப்பிடுங்கள் "ஓ ல லா, ஃபாஸ்ட் , டாக்சி டாக்சி.......


சென்னைக்குப் போவதென்றாலே குஷிதான். முக்கால் மணிநேரத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வான்வெளிப் பயணம்! ஆகாயப் பஞ்சுப் பொதிகளைக் கொஞ்சுவதற்குள் பொட்டி பொட்டியாய் கட்டடங்கள் காட்சியளிக்கும்.  அந்த முக்கால் மணிதான் ஜாலி....! 

விமானநிலையத்தில் இறங்கியதும் கதிரவனின் தழுவலில் நனைந்து, வேர்வையில் குளிக்க ஆரம்பித்துவிடுவோம். சொந்தக்காரர்கள் காரில் போனால் பரவாயில்லை. இல்லையென்றால்.............லொங்கு லொங்கென்று பேருந்து நிற்குமிடம் நடந்து, நொந்து நூலாகி பஸ் பிடித்து வீடு போய் சேர்வதற்குள் இனிமேல் கடவுள் சாட்சியாக எந்த ஊருக்கும் போவதில்லை என்று பிரசவ வைராக்யம் வந்துவிடும்! ( வந்திருக்கிறது)

இந்த முறை சென்னையில் ஒரு திருமணம்! கிழக்குக் கடற்கரைச் சாலையில்...!பல ஆண்டுகளுக்குப் பின் உறவினர்களை சந்திக்க வேண்டும், தம்பி, தங்கையோடு சில நாட்கள் பேசி மகிழவேண்டும் என்ற ஆவல் காரணமாக ''லேண்டட்"

சென்னையில் மட்டுமல்ல பெங்களூரில் கூட 'கால் டாக்சி' கலாசாரம் அதிகமாகிவிட்டது. எல்லோருக்கும் எல்லா டாக்சிகளையும் அழைப்புவிடுக்கும் நம்பர்கள் தெரிந்திருக்கிறது! போனால் வந்தால் கூப்பிடு டாக்சியைதான்.
நான் மட்டும் அதற்கு விதிவிலக்கா? ஓ.எம்.ஆர் சாலையில் பயணிக்க வேண்டுமென்றால் என்னத்தை செய்வது? டாக்சி டாக்சி......

பூந்தமல்லி சாலையிலிருந்து, சிறுசேரி செல்ல வேண்டியிருந்தது. வேகத் தேடுதலில் (ஃபாஸ்ட் டிராக்) இண்டிகா காரை அனுப்பச்சொன்னால்  பிரம்மாண்டமான பெரிய வேன் வந்து நிற்கிறது! பயணிப்பது நான் மட்டும். கேன்சல் செய்ய முடியாது. எனவே சரிதான் என்று ஏறிவிட்டேன். எப்படிப் போக வேண்டும் என்று தெரியாதாம்! நீங்க சொல்ற வழியில போறேன், கரக்டா சொல்லுங்க, நான் ஊட்டிக்குப் போனப்போ வாடிக்கையாளர் செல் வழிகாட்டியால் சரியான இடத்துக்கு வழிசொல்லிட்டாரு, என்று நமக்கு வழி தெரியுமா என்ற கொஞ்சம் நோண்டல்!  (மகன் வழி சொல்லிவிட்டார்)

டிரைவர் சரியான "ஜொள்ளுப் பார்ட்டி.'' மவுண்ட் ரோடு போவதற்குள் பத்து தடவை திரும்பித் திரும்பி பின்னால் பார்க்கிறார். கண்களை நேருக்கு நேர் பார்த்து பேச முயல்கிறார். லட்சக் கணக்கில் வண்டி வாங்கி லாபம் இல்லையாம்! இன்னும் என்னவோ........ 

ஜி. பி. எஸ் சிஸ்டம் என்ற 'சாலை வழிகாட்டி'யை என் அலை பேசியில் உயிர்ப்பித்தேன்! அடக் கடவுளே! சார்ஜ் ரொம்ப கம்மியாகி இருந்தது. என் மகளுக்கு ஒரு குறுஞ் செய்தி..... அவளோடு கன்னடத்தில் பேச ஆரம்பித்தேன். ஓ, ஒரு வழியாக சாலையைப் பார்த்து வண்டியை ஓட்டி, என்னை சிறு சேரியில் இறக்கிவிட்டார் கேரளத்து மேனன்.

அதற்குப் பின் எட்டு நாளில் ஓ ஒலா, அழுக்குக் கார், தூங்குமூஞ்சி டிரைவர், அது என்ன, சுங்கச் சாவடி காசை நீங்கதான் கொடுக்க வேண்டும், போக வர 44 ரூபாய் இந்த அம்மாவுக்கு கொஞ்சம் சொல்லுங்க என்று வம்புக்கார டிரைவர்கள்!

ஒருகாலத்தில் நடக்க முடிகிறதூரம், அதாவது ஒரு கிலோ மீட்டர் என்றால் நடந்தே போய் விடுவோம். அத்ற்கும் மேலே எனில் பேருந்துக்காக எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து பயணிப்போம். ஆட்டோ ஊருக்குப் போகும் போது மட்டுமே! எங்க சேலத்தில் குதிரை வண்டி ரொம்ப பிரசித்தம்! வண்டிக்குள்ளே பரப்பியிருக்கும் புல்லின் வாசனை நாசியை நிரப்பும். ஆளைப் பார்த்து வண்டிக்குள்ளே உட்கார வைக்கும் வண்டிக்காரன் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார விடமாட்டான். அவனைப் பார்த்தால் தெனாலிராமனும் குதிரையும் கதை ஞாபகம் வரும்.

இருந்த எட்டு நாளில் ஏழு நாட்கள் 'ஓலாவிலும், ஃபாஸ்ட் டிராக்கிலும்' சென்னையின் சாலைகளில்.  டாக்சிக்காக 5000 ரூபாய்  செலவாயிற்று!.......பரவாயில்லை...! 

எப்படியிருந்தாலும் பிறந்த வீட்டின் பாசமும், நேசமும் மறக்கப் போமோ! சென்னையின் கடற்கரைக் காற்றும், வெயிலும்,  மறக்கமுடியுமா என்ன? 

சென்னை சென்னைதான்! 


8 Mar 2015

ஒளிப் பெண்

மத்ர தேச அரசன் அஸ்வபதி. அவரின் மனைவி மாலவி. ஒரு பேரரசனுக்கு உரிய அத்தனை நற்குணங்களும் உடைய அஸ்வபதி ராஜனுக்கு மகப் பேறில்லை. எனவே அவன் குழந்தைப் பேறு வேண்டி தியானம் செய்தான். அவன் வேண்டுகோளுக்கு இரங்கி இறையருளால் பிறந்த தெய்வக் குழந்தையே சாவித்ரி. 

அவள் பிறந்த அந்த நாளில், எங்கும் மென்மையான இசை ஒலித்தது. வெண்மையான  மல்லிகையின் நறுமணம் வீசிற்று. மாமரங்களின் மலர்மணம் நாசியை நிரப்பிற்று. தேனுண்ணும் வண்டுகள் ரீங்கரித்து ரகசியமாய் மலர்களுக்கு சேதி சொல்லியது. சூரிய ஒளி இறைவனின் புன்னகையைச் சுமந்து வந்தது. இயற்கை ஆராதனை செய்ய அழகுக் கோலம் பூண்டது .

இறைவனையும் மனித மனதையும் இணைக்கும் பாலமாய் தெய்வத்தன்மை வாய்ந்த அழகுக் குழந்தையாய்த் தோன்றினாள் சாவித்ரி. அவள் பிரபஞ்ச ஒளிச் சக்தியின் மகள். பேரழகும், அறிவும், கலைகளில் ஆர்வமும், தேர்ச்சியும் நிறைந்து சகலகலாவல்லியாய், அரண்மனையின் ஒளிவிளக்காய், மரியாதைக்குரியவளாய் தன் தெய்வத்தன்மை வெளியே புலப்படாவண்ணம் வளர்ந்த சாவித்திரிக்கு உரிய பருவம் வந்தும் ஏற்ற கணவன் கிடைக்கவில்லை. அதனால் தந்தையான அசுவபதி அவளை பயணம் மேற்கொண்டு அவளுக்கு ஏற்ற மணாளனைத் தேடிக்கண்டு வருமாறு கூறுகிறார்.

ரதத்தில் ஏறிய இளவரசி நெடிய பரந்த சாலைகளையும்,, நகரங்களையம், சிறு கிராமங்களையும், சமவெளிகளையும், நதிகளையும், காடுகளையும் கடந்து செல்கிறாள். வானத்து விண்மீன்கள் அவளுடைய நண்பர்களாகின்றனர். இரண்டு ஆண்டு பயணத்தின் பின் அழகியதோர் காட்டின் விளிம்பில் பகைவர்களால் காட்டிற்குத் துரத்தப்பட்ட சால்வ தேச அரசன் த்யுமத்சேனனின் மகன்  சத்யவானைக் காண்கிறாள். அவனே தன் 'ஆன்மாவின்சினேகிதன்' துணை என்பதை அறிகிறாள். மயில்கள் ஆட, குயில்கள் கீதமிசைக்க, காட்டுமரங்கள் தலையசைத்து ஆசிவழங்க தென்றல் மந்திரம் மொழிய காட்டுப் பூக்களால் ஆன மாலையை சத்யவானுக்கு அணிவிக்க அவர்களுடைய திருமணம் வானமும் பூமியும் சாட்சியாக நடக்கிறது. மனங்கள் ஒன்று படுவதே மணம் அல்லவா?

தந்தையின் அரண்மனைக்குத் திரும்பிய சாவித்ரியின் முடிவைக்கேட்டு அசுவபதி மகிழ்கிறார். ஆனால் அங்கே அந்த சமயம் வந்த நாரதர் சத்யவான் ஒரே ஆண்டில் மரணமடைவான் என்பது விதி என்கிறார். தன்முடிவை மாற்றிக் கொள்ள விரும்பாத சாவித்ரி தன் தாய் தந்தையர் ஆசிகளுடன் சத்யவான் வசிக்கும் கானகத்தை அடைகிறாள். 

அரசகுமாரி, கானகத்தில், குடிசையில் தன் திருமணவாழ்வைத் தொடங்குகிறாள். சத்யவானின் தாயும் தந்தையும் அவனுடன் வசிக்கின்றனர். அவர்களுடைய தேவைகளை அறிந்து பணிவிடை செய்யும் சாவித்ரி என்ற மங்கையர் திலகம் வீட்டுவேலைகள் அனைத்தையும் செய்கிறாள். கணவனுடைய காதலில் மெய்மறந்து வாழும் அவளுக்கு சத்யவான் அந்த ஆண்டு முடிவில் இறந்துபோவான் என்ற உண்மை தெரிந்தும் அதை வெளியே காண்பித்துக் கொள்ள முடியாமல், அதே நேரத்தில் தனக்குள்ளே அந்த ரகசியத்தைப் பாது காக்கவேண்டிய கட்டாயத்தில் கடமைகளைச் செய்கிறாள். 

வாழ்க்கையின் இக்கட்டான தருணங்களில் ஏதோ ஒரு சக்தி நம்மை வழிநடத்துகிறது.  தன் கணவனின் மரணம் நிகழப் போவதை அறிந்து கொண்டு,தன் துயரத்தை வெளிக்காட்டாது வாழ்வது என்பது எத்தனை கடினமான செயல்! மானுடம் மரணத்திற்கு அடிமைப்பட்டக் கிடக்கிறது. மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் வழியைக் காண்பதற்கே நீ பிறந்தாய்! எல்லோரையும் போல துயரத்தை ஏற்றுக் கொள்வதற்காகப் பிறக்கவில்லை. மானுடத்தின் விதியாகிய மரணத்தை எதிர்த்து நிற்கும் வழியை உனது ஆத்மசக்தியால் காண்பாயாக என்ற குரல் அவள் உள்ளத்தில் ஒலிக்கிறது.

பகல் வேளைகளில் பணிவிடையும்,இரவு நேரத்தில் கணவன் உறங்கியபின் சத்யவானை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கான யோகத்தை ஆரம்பிக்கிறாள். அதுதான் ஆன்மாவின் யோகம்! அது என்ன யோகம்? நம்முடைய தினசரி வாழ்வில் நாம் உண்கிறோம், உறங்குகிறோம்.வேலை செய்கிறோம்! ஆனால் உண்மையில் நம்முடைய உடலாகிய அதிசயத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. நோய் வந்தால் ஒழிய நம் உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிய முயற்சிப்பதில்லை!

நம் உடலின் முக்கிய செயலான மூச்சை உள் வாங்கி வெளிவிடும் பிராணமய உறுப்புகளை, உண்பவற்றை சீரணித்து சமநிலைப் படுத்தும் அன்னமய தேகத்தை, சிந்தித்துச் செயல்பட உதவும் மூளையின் அறிவு சார்ந்த செயல்களை நடத்தும் மனமய உறுப்புகளை, நரம்பு மண்டலத்தை இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் சக்தியை, அதற்கு பக்கபலமாக இருக்கும் ஆன்மாவை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.



சாவித்ரி ஒருமைப்பட்ட மனதுடன் தன்னுள்ளே ஆழ்ந்து நோக்குகிறாள். முதன் முதலில் மிகமிகப் பெரிய வெறுமையிலிருந்து தோன்றிய ஏதோ ஒன்று மெல்லமெல்ல ‘நான்’ எனும் முனைப்பை ஏற்படுத்துகிறது. “நான்” என்ற முனைப்பைச்சுற்றி எண்ணங்கள், உணர்ச்சிகள், பழக்கவழக்கங்கள் உருவாகின்றது. இதற்குப் பின்னால் ஆன்மா உள்ளது! ஐம்புலன்களின் வசப்படும் மனது காலமெனும் அலைகடலால் அமைதி இழக்கிறது. அதனால் தன் ஆழ்மனதின் தனிமையில் இறைவனின் ஒரு பகுதியாகிய விளங்கும் ஆன்மாவைக் கண்டறிய மனிதனால் முடிவதில்லை. ஆயின் ஆன்மாவைக் கண்டவனால் மரணத்தை வெல்லமுடியும் என்பதை சாவித்ரி உணர்கிறாள்.  அளப்பறிய அமைதியும், ஆனந்தமும், வலிமையும் பெறுகிறாள்.அவள் முகத்தில்  அமைதி பிரதிபலிக்கிறது.

மறுநாள் சத்யவான் இறக்கவேண்டிய தினம். என்றுமில்லாத அதிசயமாக சத்யவானுடன் அனுமதி பெற்றுச் செல்கிறாள் அவள். காட்டின் அதிசயங்களையெல்லாம் அவளுக்குக் காண்பித்துக் கொண்டே செல்கிறான் சத்யவான். மரம் வெட்டுகையில் கீழே சாய்கிறான்.உலகத்தில் மிகப்பெரிய சக்திவாய்ந்தவன் மரணதேவன்தான். பிறவி எடுத்தவர்கள் அனைவருமே அவனுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவனுடைய பாசக் கயிற்றிலிருந்து யாருமே தப்பமுடியாது.

மரணதேவன் அவனுடைய ஆன்மாவைக் கவர்கிறான். பெரியதோர் மரத்தின் கீழ் கணவனுடைய உடலை மடிமீது தாங்கிய சாவித்ரி, உயிரற்ற சத்யவான்! சத்யவானின் ஒளிஉடலாகிய ஆன்மாவை கவர்ந்து செல்லும் எமனின் பின் தன்னுடைய *“உட்சோதியில் கலந்து உலகத்தை மறந்து, ஒருமையுற்று” பயணிக்கிறாள் சாவித்ரி. 

மகாவிஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத்தை பகவத்கீதை காட்டுகிறது. ஆனால் உலக மாதாவாகிய அதிதி என்னும் ஆதிபராசக்தியின் தரிசனத்தை ஶ்ரீ அரவிந்தர் தன் “சாவித்ரி” மகாகாவியத்தில் அற்புதமாகக் காண்பிக்கிறார். 

 சாவித்ரியின் இதயக் கோயிலில் குடிகொண்டிருக்கும் அன்னை அவளுடைய யோகத்தால் எமனுக்கு தரிசனம் தருகிறாள். எப்படி?மரண தேவன் திகைத்து நிற்குமாறு, ஒளிமயமாக காட்சியளித்துத் தன் முகத்திரையை நீக்குகிறாள். நட்சத்திரங்களாக ஜொலிக்கும் கண்கள், பிரபஞ்சத்தையே ஆடையாய் அணிந்த மகாசக்தி. அறிய விரும்பும் யோகியரின் மூலாதாரத்திலிருந்து, சகஸ்ரகமலத்தை அடைந்து, மூளையின் அணுக்களைத் தங்க மயமாக்கி ஆனந்த அமுதத்தைப் பொழியும் அன்னை!

*“வாலை உமாதேவி, மாகாளி, வீறுடையாள்
மூலமாசக்தி, ஒரு மூவிலைவேல் கையேற்றாள்,
மாயை தொலைக்கும் மகாமாயை தானாவாள்
பேயைக் கொலையைப் பிணக்குவையைக் கண்டுவப்பாள்
சிங்கத்தி லேறிச் சிரிப்பால் உலகழிப்பாள்
சிங்கத்தி லேறிச் சிரித்தெவையுங் காத்திடுவாள்.
கடாவெருமை ஏறுங் கருநிறத்துக் காலனார்
இடாது பணிசெய்ய இலங்கு மகா ராணி.
மங்களம் செல்வம் வளர்வாழ்நாள் நற்கீர்த்தி
துங்கமுறு கல்வியெனச் சூழும் பலகணத்தாள்,
ஆதி பராசக்தி -"

 மரணமற்றவன், பிறத்தலும் இறத்தலும் இல்லாத அதிதி தேவியின் தரிசனத்தை சாவித் ரியிடம் பெறுகிறான். மனிதனால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழமுடியும் என்பதற்கு முதற்படியாக சத்யவானின் ஆன்மாவைக் கொடுக்கும்படி ஆணையிட சாவித்ரி சத்யவானுடைய உயிருடன் பூமிக்கு வருகிறாள்.

சாவித்ரி தன் கணவனின் உயிரை மீட்டு வந்த நாளாகக் கருதப்படும் மாசி- பங்குனி மாதங்கள் சேரும் நல்ல நேரத்தில் தமிழ்நாட்டுப் பெண்டிர் காரடையான் நோன்பு மேற்கொள்கிறார்கள்.

யமனோடு சாமர்த்யமாகப் பேசிய பெண் என்ற வகையில் சாவித் ரி பேசப்படுகிறாள். அதே போல நோன்பு நாளில் விரதம் இருந்து, அரிசிமாவினால் செய்த அடையை நிவேதனம் செய்து நோன்புக் கயிறு அணிந்து கொள்வதுதான் சாவித்ரி விரதம் என நம்பப்படுகிறது. உண்மையில் பார்க்கப் போனால் பெண்கள் இயற்கையிலேயே  தன்னுடைய குடும்பத்திற்காக திருமணமானபின் பிறந்த வீட்டையும் வாழ்ந்த வாழ்வையும் துறந்தவர்கள். பின் பெற்ற குழந்தைகளுக்காகவும் கணவனுக்காகவும் வாழ்பவர்கள்! அதுவே தவம்.  

ஆன்மாவை அறிய, ஒருமையோடு தூய்மையான வழிபாடு செய்யும் சக்தியுடையவர்கள் பெண்கள். ஆண் பெண் இருவரிடமும் சக்தியாய் அன்னை விளங்குகிறாள். அவளை வழிபடுவோம். ஆணின்றிப் பெண்மை முழுமையடைவதில்லை. பெண்மையின் அன்பு இன்றி ஆணின் வாழ்வு ஒளி பெறுவதில்லை!

இந்தக் கதை மகாபாரதத்தில் வருவதாகும். மகாபாரதத்தின் திரெளபதி, இராமாயணத்து சீதை, அகலிகை, மண்டோதரி, தாரை ஆகிய அனைத்து மாந்தரையும் விட மிக உன்னதமானவளாக, யோக வாழ்வினால், தன் தவத்தால் கணவனின் உயிரை மீட்டு வந்த சாவித்ரி பெருமைக்கு உரியவள்.

(மகான் மகாயோகி ஶ்ரீஅரவிந்தரின் மந்திரச் சொற்களால், படைக்கப்பட்ட காவியம் “சாவித்ரி”. அவருடைய கருத்துக்களை இங்கே சேர்த்திருக்கிறேன்.)

  • பாரதியாரின் பாஞ்சாலி சபதம்