18 Nov 2015

மழையும் வெள்ளமும்

சென்னையில் வெள்ளம்! மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது! படகுகளில் மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள் என்ற செய்திகளைப் படித்த போது 76ல் புயலோடு கூடிய பலத்த மழையில்
அண்ணாநகர் வெள்ளக்காடானது நினைவுக்கு வருகிறது. அப்போது கலைஞர் ஆட்சிதான். இன்றைய நாட்களைப் போல் உடனுக்குடன் புகைப்படங்கள், தொலைக்காட்சிப் புலம்பல்கள் இல்லாத நாட்கள்.

நாங்கள் அண்ணாநகர் ஆரோவில் குடியிருப்பில் இருந்தோம். நல்ல மழை காரணமாக கூவம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டோட அப்போதுதான்  உருவாகிக் கொண்டிருந்த புறநகர்ப் பகுதியாய் விளங்கிய அண்ணாநகர் முழுதும் வெள்ளக்காடு. மாலை நேரத்தில் திடீரென தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தது! கழிவு நீரோடு கலந்து தண்ணீர்த் தொட்டிகள் எல்லாம் நிறைந்து விட்டது. நீண்ட பாம்புகள் தண்ணீரோடு தண்ணீராக மிதந்தன. என்ன செய்வது?

எங்கள் மாடியில் குடியிருந்த நண்பர் வீட்டில் வயதான மாமியாரையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு கட்டில் மேல் நாற்காலியை போட்டுக் கொண்டு உட்கார்ந்தோம்! வெள்ளம் வீட்டில் புகுந்தால் கதவுகளைச் சாத்தக் கூடாது ஆதலால் பின் பக்கக் கதவையும் திறந்து வைத்தோம். சமையலறை அலமாரியின் முதல் தட்டு வரை தண்ணீர்! அதே போல படுக்கை அறையிலும்! வெள்ளம் வீடு புகும் என்பதறியாததால் வைத்திருந்த புத்தகங்கள் எல்லாம் நனைந்து போயின. மின்சாரம் இல்லை, சமைக்க முடியாது, படுக்க முடியாது!

நல்ல வேளையாக மழை விட்டது. விடியற்காலையில் தண்ணீரும் சிறிது சிறிதாக வடிய ஆரம்பித்தது. அப்போதெல்லம் அண்ணாநகரில் ஹோட்டல்கள் கிடையாது. அப்படி வாங்கி சாப்பிடும் பழக்கமும் கிடையாது. ('sump')தண்ணீர் சேகரிக்கும் தொட்டி நிறைய சாக்கடை நீர்.
நான்கு குடித்தனக் காரர்களும் தண்ணீரை வாளிகளில் எடுத்துக் கொட்டி, பிளீச்சிங் பவுடரைப் போட்டு தேய்த்துக் கழுவி மீட்டெடுப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. அந்தத் தண்ணீர் தொட்டியோ பத்தடி ஆழம்,நீளம் உடையது.

வீட்டுக்குள் சேர்ந்த தண்ணீரை வெளியேற்றி, துடைத்து எடுப்பதற்குள் முதுகு உடைந்தது. நடுவக்கரை பாலத்தில் ஐந்தடிக்கு மேல் வெள்ளம்! பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பேருந்தைப் பிடிக்க, பள்ளியை அடைய அண்ணாநகர் வளைவைத் தாண்டி நடந்து போக வேண்டும். 

இளமையின் வலிமையில் கடந்த   அந்த நாட்களின் நினைவுகள்!

அதற்குப் பின் இப்போதுதான் இப்படியொரு மழை என்று நினைக்கிறேன். இன்றைய அண்ணாநகரில் எங்கள் பழைய வீட்டில் தண்ணீர் புகுந்ததா தெரியவில்லை!