30 Dec 2011

Filter Coffee


அம்மா காப்பி, சூடா! பையன்.
இதோ பார் சண்முகம் வந்திருக்கிறார், காப்பி கொண்டா! கணவர்.
ஒரே தலைவலி, ஒரு கப் காப்பி சூடா குடும்மா.பெண்.
இந்த காப்பி நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் ஒன்று.
காலையில் கையில் செய்தித்தாளுக்கு சுவை சேர்ப்பது காப்பிதானே?
காப்பியை சுவைத்துக் குடிக்கிறோம். அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று என்றாவது கவலைப் பட்டிருக்கிறீர்களா? 
கொஞ்சம் காப்பி புராணம்!

எனக்கு கல்யாணம் ஆன புதிசு. ஒரு நாள் என் மாமியாருக்கு உடம்பு சரியில்லாமல்  போனது. ‘’டிகாஷன் இல்லை, கொஞ்சம் போட்டுவிடு,’’ என்றார்.பில்டரிலிருந்து டிகாஷன் எடுப்பதை பார்த்திருக்கிறேனே தவிர அது அங்கே எப்படி வருகிறது என்று எனக்குத் தெரியாது. ‘’பில்டரில் மூன்று ஸ்பூன் பொடி போட்டு, ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் விடு,’’ என்றார். ஆயிற்று, என்றேன். சொன்னபடி செய்தாயிற்று. டிகாஷன் மட்டும் இறங்கக் காணோம். ‘பில்டர் தலையில் ஒரு தட்டுத்தட்டு,’’ என்றார் மாமியார். பில்டர் தலையில் ஒரு தடவை என்ன, பலமுறை தட்டியும், ம்ஹும், டிகாஷன் மட்டும் ஒரு சொட்டு வரவில்லை. ‘’என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை,’’ என்று பாடிக்கொண்டு இருந்தார் அருணா சாயிராம்.

‘’இதோ பாரும்மா,கொஞ்சம் சூடான தண்ணீரை டபராவில் விட்டு, பில்டர் மேல் பாத்திரத்தை அதன் உள் வை,’’ என்றார். அப்பாடா என்று டிகாஷன் ஒரு மாதிரி இறங்கிற்று. 1. பில்டரின் மேல் பாத்திரத்தை கொஞ்சம் சுட வைத்து பிறகு பொடி போடவேண்டும். 2. பொடியை அடைக்கக்கூடாது.3.முதலில் தண்ணீரை ஒரு பக்கமாக விட்டுவிட்டு பிறகு முழுதும் விடவேண்டும்.4.முதல் டிகாஷன் இறங்கியவுடன் அதை வேறு பாத்திரத்தில் விட்டு  வைத்த பின் மேல் கொண்டு தண்ணீர் விட வேண்டும்.5. கூடியவரை முதல் நாள் ராத்திரியே நிதானமாக டிகாஷன் போடுவது நலம். இதெல்லாம் டிகாஷன் போடுபவர்கள் கவனிக்க. அல்லது டிரெயினிங் எடுத்துக் கொள்வது நல்லது.

இந்தப் பிரச்சினைகள் வேண்டாம் என்று தான் இன்ஸ்டண்ட் காப்பிப் பொடிகள் எல்லாம் வந்து விட்டன. ஆனாலும் சரியான விகிதத்தில் டிகாஷனும், பாலும்,சர்க்கரையும் கலந்தால்தான் டிகிரி காப்பி. புதிதாக காய்ச்சிய பாலில் சர்க்கரை சேர்த்து, இரண்டு ஆற்று ஆற்றி, முதல் டிகாஷன் அளவாய் சேர்த்தால் ஏ ஒன் காப்பி கிடைக்கும்!

இன்றைய காலகட்டத்தில் காப்பிப் பொடிகள் கஷ்டமில்லாமல் கிடைக்கிறது. எழுபதுகளில் ‘’காப்பி போர்டில்’’ அரசாங்க விலையில் காப்பிக் கொட்டை கிடைக்கும். பீபரி, ரோபஸ்டா, கொட்டைகளை வாங்கிக் கொண்டு, காப்பிக்கொட்டை வறுத்து அரைக்கும் கடைக்குப் போய், அவர்கள் வறுத்து அரைக்கும் வரை கதைப் புஸ்தகம் படித்து பொடியை வாங்கி வருவதர்க்குள் காப்பி குடிக்கும் ஆசையே போய் விடும். 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக இந்தக் கதைதான்.

60 களில் இன்னும் கஷ்டம். என்னுடைய தாயார் பெரிய இரும்பு வாணலியில் காப்பிக் கொட்டையை வறுப்பார். ஆறியபின் ஆட்டுக்கல்லில் போட்டு இரும்பு உலக்கையால் இடித்து, சலித்து எடுத்து வைப்பதற்குள் உன் பாடு என் பாடு ஆகிவிடும். சரியான பதத்தில் வறுக்காவிட்டால் கரிந்து போய் விடும். கொஞ்சம் முன்னே எடுத்து விட்டால் இடிக்கவராது. பாவம் மனைவி கஷ்டப்படுகிறாளே என்று அப்பா வறுக்கவும், பொடிக்கவும் மிஷின் வாங்கி வந்தார்.

image

ஒரு இரும்பு அடுப்பு, சற்றே நீள் வடிவில். அதன் மேல் வைக்கும்படியான உருளை வடிவில் மேல் பாத்திரம், கைப்பிடியுடன். முதலில் நெய்வேலி நிலக்கரி போட்டு அடுப்பை பற்றவைத்து விடவேண்டும். பின்னர் உருளை வடிவப் பாத்திரத்தில் {இரும்புதான்) ஒரு டம்ளர் கொட்டையைப் போட்டு சுற்ற வேண்டும். நான் கூட ஆசையாகச் சுற்றியிருக்கிறேன். வாசனை வந்தவுடன் மூடியைத் திறந்து கொட்டையை எடுத்துவிட்டு அடுத்த ரவுண்ட். அட, சூடான மூடி, திறக்க வராமல் வம்பு பண்ணும். இடுக்கியால் ஒன்று வைத்தால் தான் திறக்கும்.இப்படியாக ஒரு மூன்று டம்ளர் வறுப்பதற்குள் அடுப்புக் கனல் கம்மியாகிவிடும்! மீண்டும் கரியைப் போட்டு அது எரிந்து மீண்டும்……….மீண்டும்………மகா மகா பொறுமை …..பொறுமை…………. !

சரிதான், எப்படியோ வறுத்துவிட்டோம்! பொடிக்க வேண்டுமே! பொடிக்கும் மிஷினை மேசை மேலே பொருத்தி விட்டு கரண்டி கரண்டியாய் கொட்டையைப் போட்டு சுற்ற வேண்டும். ரொம்ப நைசாக பொடிக்க ஆரம்பித்தால் ஈஷிக் கொண்டு மிஷின் சுற்ற வராது. சரிதான் கொஞ்சம் கர கரப் பொடி என்றால் டிகாஷன் சொய்ங் என்று இறங்கிவிடும். சும்மாவா பாடினாள் அவ்வைப் பாட்டி, ‘’பொறுமை என்னும் நகை அணிந்து பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்,’’ என்று!

இத்தனை பாடு பட்டு கடைசியில் காப்பி நல்லா இல்லை என்றால் எப்படி இருக்கும்? நல்ல வேளையாக இப்போது காப்பிப் பொடிகள் கிடைக்கின்றன. காப்பி மேக்கர் வந்து விட்டதால் டிகாஷன் போடுவது ஒருவாறு சுலபமாகதான் இருக்கிறது.  காப்பி என்று ஒன்று கிடைத்தால் போதும் என்று ஆகிவிட்டதால் இப்போதெல்லாம் யாரும் ரொம்ப குற்றம் சொல்வதில்லை என்று நினைக்கிறேன். அப்படியும் நல்ல காப்பி தான் வேண்டுமென்றால் சிரமம் பார்க்காமல் ‘மையாஸ்’ ஹோட்டல் க்யூ வில் போய் நிற்பீர்களாக.

No comments:

Post a Comment