29 Feb 2012

அமைதியின் மடியில் 1

துன்பங்கள் வரும் போது தனித்து வருவதில்லை கூட்டமாகதான் வரும் என்று கேள்விப்படுகிரோம். பலருடைய வாழ்விலும் நேருவதுதான் இது. 1977 ஆம் ஆண்டு  உடல்நலக் குறைவு, என் தந்தையாரின் மரணம் என மனம் நொந்திருந்த நேரம்!

இத்தனைக்கும் நடுவில் இரண்டாம் வகுப்பிலும், ஐந்தாம் வகுப்பிலும் படிக்கின்ற இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு எனக்கு ஒரு ஆசை! பிரமாதமான, வானத்துச் சந்திரனை பூமிக்குக் கொண்டுவரவேண்டும் என்ற ஆசையில்லை. மேற்படிப்பு, எம். ஏ., தமிழ்  படிக்கவேண்டும் என்ற விருப்பம்  அது.  பி. ஏ ., பொருளாதாரம் பாஸ் செய்திருந்த எனக்கு தமிழ் மொழி மேல் ஏற்பட்ட காதல் காரணமாக ஏற்பட்ட ஆசைதான் அது.  ஏற்கெனவே பள்ளி ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். புதிதாக  ஆரம்பிக்கப்பட்ட பள்ளி ஆகவே மேல்கொண்டு பதவி உயர்வு, சம்பள உயர்வுகளுக்கும் உதவிக் கரம் நீட்டும் என தலைமை ஆசிரியையும் தூண்டினார்.

ஒரு மருமகளாய், மனைவியாய், தாயாய், ஆசிரியையாய் நான்கு அவதாரங்கள்  எடுத்துக் கொண்டு ஜெட் வேகத்தில் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. மெதுவாக என் கணவரிடம் என் விருப்பத்தை தெரிவிக்க அவருக்கு ஒரே சந்தோஷம். எப்படி என்று விவாதித்தோம். தபால் படிப்பு வேண்டாம் என்று முடிவு செய்து மாலைக் கல்லூரியில் படிக்க முடியுமா என்று ஆராய்ந்தோம்.

நாங்கள் தீர்மானித்தால் போதுமா?  என் மாமியாரிடம் அனுமதி கேட்ட போது முழு ஒத்துழைப்பு தருவதாக சொன்னதால் மாலைக் கல்லூரியில் சேர்வது எனத் தீர்மானம் செய்தேன். மாலைக் கல்லூரிகளின் பட்டியலைப் பார்வை இட்டபோது பக்கத்தில் இருப்பது பச்சையப்பன் கல்லூரிதான் எனத் தெரிந்தது. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி தர்ணா செய்வார்கள். பெயர் கேட்டாலே கொஞ்சம் பயம் தான்.

கல்லூரி நேரம் மாலை ஆறு மணி முதல் எட்டு மணிவரை. விண்ணப்ப படிவம் வாங்கி வரச் சென்ற என் கணவர் இன்னொறு அதிர்ச்சியான செய்தியைத் தெரிவித்தார். கல்லூரிக்குள் நுழைந்த நேரம் ஆங்கிலப் பேராசிரியர் திரு. சுப்பையனைப் பார்த்தேனா, நீங்களும் சேருங்கன்னு சொன்னாரா, நானும் ஆங்கில வகுப்பில் சேரப்போகிறேன் என்பதுதான் அது. சரிதான் இரண்டு பேரும் காலை எட்டு மணி முதல் இரவு ஒன்பது வரை  வெளியில் இருந்தால் யார் குழந்தைகளையும்,  வீட்டு வேலைகளையும் பார்ப்பது?

சமாளித்துக் கொள்ளலாம் என்று ஒரு தைரியம்! அப்போது எனக்கு 31 வயது.என்னவருக்கு 35. வேடிக்கையாக இருக்கிறது, இல்லையா? மாலைக் கல்லூரி மாணவர்களாக நாங்கள் இருவரும்! அவர் ஆங்கில இலக்கியம், நான் தமிழ்.  இரண்டு ஆண்டுகள் நான்கு செமெஸ்டர்கள்.

ஆங்கிலப் பேராசிரியர்  ஶ்ரீ அரவிந்தர், அன்னையின் பக்தர். அடிக்கடி பாண்டிச்சேரி சென்று வருபவர். என்னுடைய  உடல் நிலைக் கோளாறு பற்றி அவரிடம் என் கணவர் சொல்ல, அன்னையின் சமாதிக்குச் சென்று வேண்டிக்கொள்ளுங்கள் எல்லாம் சரியாகும் என்றார் அவர். அது வரையிலும் எங்களுக்கு அன்னை அரவிந்தரைப் பற்றித் தெரியாது.

ஒரு ஞாயிறன்று விடியற்காலை பாண்டிச்சேரியை அடைந்தோம். முதலில் ஆசிரமத்திற்குச்சென்றோம். தாமிர நிறத்தில் விதைகள் அடங்கிய காய்களுடன், மஞ்சள் மலர்களைக் கொத்துக் கொத்தாய் சூடிக்கொண்டு  காட்சியளித்த மரத்தின் அடியில்  அன்னை, அரவிந்தரின் சமாதி. சமாதியின் மேல் அழகிய மலர்களால் அலங்காரம். அந்த மலர்களின் மீது மொய்க்கும் வண்டினம். மலர்களிலிருந்து கண்ணுக்குத் தெரியாமல் நாசியை நிரப்பும்  நறுமணம். மென்மையான ஊதுவத்திகளின்  வாசனையைச் சுமந்து கொண்டு வீசும் தென்றல் காற்று. இவற்றின் ஊடே எங்கும் கிடைக்காத, அமைதியின் அழகு!
சாந்தத்தைக் கைகளில் சுமந்து கொண்டு, உணருகின்ற உள்ளம் உடையவருக்கு மட்டுமே கிடைக்கும் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒளி அலைகள்! எந்த வழிபாட்டிலும் கிடைக்காத  பேரானந்தம்.
எந்தக் கோவிலிலும் ஏற்படாத இதயத்தை வருடும் சிலிர்ப்பு.

அந்த நாளில், அந்த நிமிடத்தில் அன்னையின் தங்கச்சங்கிலியில் கட்டுண்டோம். ஒரு முறை அன்னையின் அன்பு வட்டத்துள் நுழைந்துவிட்டால் எல்லாம் அவள் பொறுப்பு! அன்றிலிருந்து இன்றுவரை அன்னயின் பாதுகாப்பில்,  எது நடந்தாலும் அவள் செயல் என்று வாழ்வதால் எல்லாவற்ரையும் தாங்கிக் கொள்ள முடிகிறது.

கடந்த முப்பத்தைந்து வருடங்களாக அரவிந்த ஆசிரமம் எங்கள் தாய் வீடு. பாண்டிச்சேரிக்கு நேரில் போக முடியாவிட்டாலும் வருந்துவதில்லை. ஏன் தெரியுமா? அரவிந்த ஆசிரமும், சமாதியும் இதயகமலத்தில் கோவில் கொண்டிருப்பதால்தான் அதே ஆன்மிக அமைதி! ஆனந்தம். அமைதியின் மடியில் தலைசாய்த்து அழுவதிலே ஒரு சுகம். எங்கும், எப்போதும் அவள் இரு கரம் நீட்டி அணைக்கக் காத்திருக்கிறாள் என்ற நம்பிக்கை! அவதார புருஷர் அரவிந்தரையும், அதிதியாம் அன்னயையும், இறைவனின் தெய்வீகப்பேரொளி புவியில் இறங்கிய இந்த நாளில் வணங்குகிறேன்.

என் உடல் உபாதையும் தீர்ந்தது. எங்களுடைய கல்லூரிப் படிப்பும் முடிந்தது .இடையில் எத்தனையோ தடங்கல்கள்! எதிர் நீச்சல் போடுவதுதான்  வாழ்க்கைக்கு சுவை சேர்க்கும் இல்லையா? இன்றைக்கு நினைத்துப் பார்த்தால் மலைப்பாக, அட, எப்படி எல்லாவற்றையும் சமாளித்தோம் என்று அதிசயமாக இருக்கிறது. 

















No comments:

Post a Comment