22 May 2012

நினைவு நாள்

வேடிக்கையான தலைப்பு அல்லவா? இன்று நினைவு நாள் என்றால் மற்ற நாட்கள் எல்லாம் நினைவு இல்லாத நாட்களா? இல்லை யாராவது ஞாபகப்படுத்தினால் தான் நினைவு வருமா? யார்,எதை நினைவுபடுத்தமுடியும்?

தலைவன் சொன்னான், 'நினைத்தேன் ' என்று.
தலைவி தலைவனை ஒரு வழி செய்கிறாள்.எப்படி நினைத்தேன் என்று சொன்னீர்கள்? அப்படியானால் என்னை மறந்ததாகதானே அர்த்தம்? அது எப்படி என்னை மறக்கமுடிந்தது? அப்போது வேறு யாரை நினைத்தீர்கள்! ஆகா, என்னை நீங்கள் ஒரு கணமேனும் மறக்கலாயிற்றா? சொல்லிச் சொல்லி புலம்புகிறாள்.

தலைவன் நிலைமை என்ன என்று கற்பனை செய்தால் சிரிப்புவரும். இந்த நாடகத்தை வள்ளுவர் இரண்டு வரிகளில் காவியமாகத் தீட்டுகிறார்.

பாருங்களேன் 'நினைத்தேன்' என்ற சொல்லின் சக்தியை. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒருசில மனிதர்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றார்போல் இயற்கை நியமித்துள்ளது. ஒருவர் மறைந்து விட்டால் நாம் அவரை மறந்து விட்டோம் என்று அர்த்தமா?

ஏன் நினைவு வைத்துக்கொள்கிறோம்? ஒவ்வொருவரும், அவரவர்  பெற்றோர்கள், தாத்தா, பாட்டி என மூன்று தலை முறையினரை நினைத்து நன்றி சொல்வதற்காக. எதற்கு நன்றி? நம் மூதாதையர்களின்  வழிவழி வந்த அணுக்களையும்,  குணாதிசயங்களையும் நாமும் பெற்றுள்ளோம். எல்லோரையும் ஒரு சேர நினைக்கின்ற நாள்தான் நினைவு நாள்.

என் அண்ணா சொல்வார், நம்ம அப்பா அம்மா எல்லாம் அவர்களை மறக்கவே முடியாத மாதிரி பரம்பரைச் சொத்து கொடுத்து இருக்கிறார்கள் தெரியுமா?  அதுதான் சர்க்கரை வியாதி, ஆஸ்த்துமா, ரத்த அழுத்தம்! வேடிக்கையான விமர்சனம்தான் !
ஆனால் எத்தனை உண்மை பாருங்கள்.

பின் ஏன் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கிறீர்களா?  மறக்க முடியாது. அதனால்தான்.
                                                   நினைவுநாள்!

No comments:

Post a Comment