17 May 2012

இதயத்தில் நீ?

சென்றவாரம், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும்  ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரின் உள்ளம் உருக்கும் கடிதம் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. ''எந்தத்  தவறும் செய்யாத எனக்கு ஏன் இந்த தண்டனை? ஒவ்வொரு மனிதனிடமும் இறைவன் குடி கொண்டு உள்ளான் என்று படித்திருக்கிறேன். ஆனால் மனிதர்களிடம்  என் நம்பிக்கை போய்விட்டது.'' எத்தனை தூரம் உள்ளம் உடைந்து போயிருந்தால் இவ்வாறு எழுத இயலும் என்று நானும் மனம் வருந்தினேன்.

மனிதனிடம் கடவுள் இருக்கின்றான் என்றால், மனிதன் மிருகங்களைவிடக்  கேவலமாக சக மனிதனை நடத்துகின்றானே ஏன்? எங்கெங்கு நோக்கினும் எத்தனை வெறியாட்டங்கள்! இலங்கைப் படு  கொலைகள், கவுதமாலாச்  சிறைக் கைதிகளின் அவல நிலை, என்று தொடரும் வகைவகையான கொடூரங்கள்!

உலகம் தோன்றிய நாளிலிருந்து மனிதனின் மனதில் எழுந்த, இன்னும் விடை கிடைக்காத கேள்வி ஒன்று உண்டென்றால் அது கடவுளைப் பற்றியதுதான். இந்த உலகைப் படைத்தவன் யார்? எப்படி இருப்பான்? உருவம் உண்டா, இல்லையா? மனிதனைப் போலவா? ஒரு முகமா, ஆனை முகமா? ஆறு முகமா? கைகள் இரண்டா, நான்கா, ஆறா, பத்தா, பன்னிரண்டா?
அவர் வசிக்கும் இடம் எது? திருப்பதியா, திருப்பாற்கடலா, வைகுண்டமா, கைலாசமா? அவருடய தரிசனம் எங்கு கிடைக்கும்?
என்ன செய்தால் அவர் அருள் கிடைக்கும்? அர்ச்சனையா, அபிஷேகமா, அலங்காரமா?
உபவாசம் இருக்க வேண்டுமா? வேண்டாமா?
அங்கப் பிரதட்சணம் செய்தால் அருள்வானா!
ஆசார அனுஷ்டானங்கள் மூலம் அவனை அடைய முடியுமா?
இன்னும் எத்தனையோ கேள்விகள்!

மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் காளியின் அருளால் மகாகவிகாளிதாசன் ஆனான்.
வேடன் வால்மீகியானான். நான் ஆக முடியாதா?  எத்தனையோ கதைகள் நம் நாட்டில்! தடுக்கி விழுந்தால் கோவில், எழுந்து நின்றால் கதை! 

எல்லா மஹான்களும் கடவுள் இருக்கிறார், நம்பிக்கையோடு, பக்தியோடு அவனை வணங்கினால் கண்டிப்பாக அவன் அருள் கிடைக்கும். கடவுள் எங்கும், எல்லாமுமாய், இருக்கிறார். எல்லோருடைய இதயத்திலும் ஆன்மாவாக இருக்கிறார் என்கிறார்கள். அவ்வளவு தானே, நம்முடைய இதயத்தில் இருக்கின்ற ஒன்றை நம்மால் காண முடியாதா?

நீங்கள் எந்த முறைப்படி தியானம் செய்கிறீர்கள் என்று சகோதரி ஒருவர் கேட்டார். இதயத் துடிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று சொன்னார்கள் என்றேன். இதயமா, அது எங்கே இருக்கிறது? எனக்கு இதயம் நல்லெண்ணை விலை ஜாஸ்தி என்பதுதான் தெரியும் என்றார்கள்.

சமீபத்தில் இதய நோய் நிபுணர் ஒருவர் பேட்டியளித்த போது அவரிடம்  ''கடவுள் இருக்கும் இதயம் என்று ஒன்று மனித உடம்பில் இருக்கிறதா? ஏழு சக்கரங்களும், அவற்றில் தாமரை மலர்களும் உள்ளனவாமே?''எந்த ஆபரேஷனின் போதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. மருத்துவ உலகில் தலை சிறந்த மேதைகள் கூட துடிக்கின்ற இதயத்தைத் தவிர வேறு எதையும் பார்த்ததில்லை என்ற பதில் வந்தது.

'உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம், வள்ளல்  பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்,''
'நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்,'' என்ற பாடல்கள் உணர்த்துவது என்ன?

காசியையும், கைலாசத்தையும் தரிசித்தேன், கங்கையிலே நீராடினேன், காலைமுதல் மாலைவரை உன் நாமம் மொழிந்தேன், ஆனாலும் நீ எனக்கு தரிசனம் தரவில்லையே! தரிசனம் தராவிடினும் பரவாயில்லை! கஷ்டங்களை அல்லவா கொடுக்கிறாய்?

கடவுள் மின்சாரம் மாதிரி. அவர் எங்கும் இருக்கிறார். ஆனால் அவரைப் பார்க்கமுடியாது. எப்போது, எங்கே பவர்கட், எத்தனை மணி நேரம் என்று சொல்லமுடியுமா? கஷ்டங்கள் பவர்கட் மாதிரி. மின்சாரம் வந்து விடும் என்ற நம்பிக்கைதான்.

என் இதயம் மிகவும் பெரியது என்றாள் என் தோழி! அப்படியா மிக்க சந்தோஷம். எல்லோருக்கும் அத்தகைய மன நிலை வாய்ப்பதில்லை என்றேன். என்ன நீ, எனக்கு 'heart enlargement,' ஆகியிருப்பதாக நேற்றுதான் எக்ஸ்ரே  பரிசோதனையில் தெரியவந்தது! நீ என்ன சந்தோஷப் படுகிறாயா? என்றாள்.


'இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே, அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே ,'என்ற பாடல் ஒலிக்கிறது.

கடவுளே, இறைவனே, ஆண்டவனே, பரம்பொருளே, எங்களுக்கு உன்னை உணர்ந்து கொள்ளக் கூடிய சக்தியைத் தருவாய்!









No comments:

Post a Comment