13 May 2012

துத்தி அம்மா

அம்மா என்றால் அழகுதான்.  அதுவும் பிள்ளையோ பெண்ணோ ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டால் என்ன பெருமிதம்! எங்கள் துத்தி அம்மாவும் அப்படிதான். பிள்ளையைப் பெற்றுவிட்டாளாம். சாப்பிடவும், டாய்லெட் போகவும் மட்டும்தான் எழுந்திருப்பாள். மற்ற நேரமெல்லாம் ஒரே தூக்கம். பிள்ளை பெற்ற அயர்ச்சி. தன் குழந்தை இந்தப்பக்கம் கொஞ்சம் வந்துவிட்டால் முன்னால் படுத்துக்கொள்வாள்.

ஆயிற்று கொஞ்சம் நடக்கப் பழகியதும் கீழே வந்தாகிவிட்டது. என்ன அரவணைப்பு, என்ன காவல் ஆஹாஹா பார்க்கப் பார்க்க ஆச்சரியம்தான். விளையாட்டு முடிந்துவிட்டால் பத்திரமாக தூங்க வைப்பாள்.எங்கெல்லாம் போகவேண்டுமோ அவசர அவசரமாகப் போய்விட்டு வந்துவிடுவாள். விழித்துக் கொண்டாலும் இடத்தைவிட்டு நகரக்கூடாது என்று  குழந்தைக்கு கண்டிப்பான உத்தரவு வேறு.

குழந்தைக்கு கால் முளைத்து விட்டது. அங்கும் இங்குமாய் எங்கு போனாலும் பின்னாலேயே போய் கேட்டை விட்டு  வெளியே போகவிடாமல், சுற்றிச்சுற்றி வந்து துத்திக்கு கால்வலி வந்துவிடும். மேலே ஏறவும் கீழே இறங்கவும் கற்றுக் கொடுத்துவிட்டாள். போக்கிரியான குழந்தை. எங்களோடு மாலையில் வந்து உட்காருவாள். கொஞ்சம் சத்தம் கேட்டால் போதும் ஒரே ஓட்டம்தான்.

இடம் மாறிவிட்டாள் தன் குழந்தையின் பாதுகாப்புக்காக. நன்றாக நடக்கவும், ஓடவும், விளையாடவும் ஆரம்பித்தது சின்னப்பெண். சிறிது சிறிதாக எங்களுடன் பழக அனுமதித்தாள். ஒரு நாள் காலையில் எப்படியோ இறந்துவிட்டது சின்னப்பெண்.

எழுந்து வந்ததும் தோட்டத்திற்குக் கூட்டிப் போய் காண்பித்தாள் துத்தி. என்ன ஆறுதல் சொல்வது அவளுக்கு. சுற்றிவந்து நகர்த்திப் பார்த்து என்ன செய்தும் பயனற்றுப் போகவே அழுதது அதன் மனசு. இரண்டு மூன்று நாட்கள் பால்குடிக்காமல் பித்துப்பிடித்தது போல் அலைந்து வேறு எங்கோ போய்விட்டாள். அவளைத் தேடித்தேடி அலுத்துப் போனோம்.

ஆம் எங்கள்வீட்டுப் பூனைக்குட்டி, அம்மா!அற்புதமான அன்பு வடிவான அம்மா! அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.




1 comment: