21 May 2012

எனக்குப் பிடித்த கதை 2

அது ஒரு கடற்கரை கிராமம். அங்கு பிறந்து, வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவன் முத்தையா. கடலும் அலையும் அவனது தோழர்கள். மணிக் கணக்கில் கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க அவனுக்குப் பிடிக்கும். எண்ணங்களும் சலனங்களும் அற்ற அந்த அமைதிதான் ஆண்டவனின் சந்நிதானம் என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை. எத்தனையோ பேர் ஆண்டுக்கணக்காக தவம் செய்தும் எட்டாத ஓர் இடம் அவனுக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது.

ஒரு நாள் பிரார்த்தனையின் போது அவன் மனம் ஒருமித்து இறைவனோடு இணைந்திருக்கையில் அவனுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல், உனக்கு விருப்பமான எதை  வேண்டுமானாலும் கேள். நீ எனக்கு மிகவும் பிடித்தமானவன் என்றது.

முத்தையா சொன்னான், 'ஐயா என்னோடு எப்போதும் நீங்கள் இருக்க வேண்டும். உங்களுடைய காலடிச் சுவடுகளை நான் எப்போதும் காணவேண்டும்.'
சரி, அப்படியே ஆகட்டும் என்றான் இறைவன்.

எப்போதும் ஆண்டவனுடைய அடிச்சுவடுகளை இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வான். இன்பமடைவான்,  மனம் நிறைய நன்றி சொல்வான்.

அவனுடைய வாழ்விலும் ஏதோ துயரங்கள். சொல்லாமல் வருவதும், செல்வதும், மனிதனை அவ்வப்போது இழுத்துப் பிடித்து நான் இருக்கிறேன் என்று வாட்டி வதைப்பதும் துன்பங்கள்தானே?
வாழ்க்கைப் புயலில் சிக்குண்டவனாய் நொந்து போனவன்  பின்னால் திரும்பிப் பார்த்தான். தன்னுடைய காலடிச் சுவடிகள் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது.

இறைவனிடம் கேட்டான்,'பார்த்தீர்களா, எப்போதும் என்னோடு இருப்பேன் என்று சொன்னீர்களே, உங்களுடைய காலடிச் சுவடுகளையே காணோமே? எங்கே போனாய் ஐயா?'

இறைவன் சிரித்தான் ,' நீ பார்த்தது உன்னுடைய காலடிச் சுவடுகளை அல்ல. எப்போதெல்லாம் துன்பத்தால் நீ துவண்டு போகிறாயோ அப்போதெல்லாம் நான் உன்னை என் மீது சுமந்து போகிறேன். அதனால்தான் உன்னால் இரண்டு காலடித் தடங்களைப் பார்க்க முடியவில்லை! நீ பார்த்த காலடித் தடங்கள் என்னுடையவை. உனதல்ல!'

துன்பம் வரும்போது சுமக்கிறேன். இன்பம் வருங்கால் இறக்கிவிடுகிறேன். மனிதனோ துன்பத்தில்தான் என் துணையை நாடுகிறான். இன்பத்தின் போது அடுத்த துன்பத்திற்கு அடிக்கல் நாட்டுகிறான் என்றார்.

உண்மைதான்! எத்தனை துன்பங்கள் வந்தாலும் மீண்டும் மனிதனை உயிர்த்தெழச் செய்யும், முன்னோக்கிச் செல்ல உந்தும் அந்த மஹாசக்திக்கு வந்தனைகள்.










1 comment: