1 May 2012

பிறந்த நாள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்கிறோம்! முதல் எழுத்தை எடுத்துவிட்டு 'இ' போட்டால் அர்த்தம் மாறிவிடும்.
இறந்தநாள் வாழ்வில் துக்கம்! ஆம். 'துக்கள்'- -'ள்' மாறி 'ம்' வந்தால் துக்கம் ஆகிவிடும். வேடிக்கையான மொழியல்லவா?
எதற்காக இந்தப் பிறந்த நாள், கல்யாண நாள் எல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பது  எனக்குத் தெரியாமலே இருந்தது. நான் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நாட்கள் அவை. என் தோழி சொன்னாள், '' அட அசடே, இந்த மாதிரி நாட்களில் எல்லாம் ஒரு மாதாத்திற்கு முன்னாலேயே  புதுப் புடவை வேண்டும் என்று சொல்லக் கற்றுக் கொள், இல்லையென்றால் புடவைகள் சேராது. புடவை, நகை எல்லாம் வாங்கிக் கொள்ள ஒரு புதிய யுக்திதான் இது'' என்றாள்.

சரிதான் சொல்லிதான் பார்ப்போமே என்று என்னவரிடம் சொன்னேன், ''நம்ம கல்யாண நாள் வருது. எல்லாரும் புதிசு வாங்கிக்கறாங்க. நீங்க எனக்கு என்ன வாங்கிக் கொடுக்கப் போறீங்க?''
அதுக்கென்னம்மா, வாங்கித் தந்தாப் போச்சு, என்றார். 
எங்கள் திருமண நாளும் வந்தது. மாலை வீட்டிற்கு வந்தவரின் கையில் ஒரு பார்சல்! 

பரவாயில்லையே, முதல் தடவை சொன்னவுடன் வாங்கிவந்து விட்டாரே, என்று ஒரே சந்தோஷம்.
காப்பி, டிபன், பாயசம் எல்லாம் முடிந்தவுடன், பார்சலைப் பிரியேன்மா! உனக்குப் பிடித்ததைதான்
வாங்கி வந்திருக்கிறேன்.
மிகுந்த ஆவலுடன் பார்சலைப் பிரித்தேன். உள்ளே..........!
புத்தகங்கள் என்றால் எனக்கு உயிர்! நிஜம்தான்.  அதற்காக?
ஸ்வாமி சித்பவானந்தரின் பகவத் கீதைப் பேருரைகள் புத்தகம் என்னப் பார்த்து சிரித்தது!  ஒரு திருமண நாளுக்கு கொடுக்கக் கூடிய பரிசா இது என்று எனக்கு ஒரே ஏமாற்றம்! ஆனால் அதனை வெளியே காட்டிக் கொள்ள முடியாத நிலை.

தன் கையெழுத்தோடு, வாழ்த்தோடு, அன்போடு கொடுத்த அந்தப் புத்தகம் இன்று என்னை புன்னகையோடு மனத்தை நெகிழ வைக்கிறது. எத்தனையோ பிறந்த நாட்கள், மணநாட்கள் வந்து போயின. எத்தனையோ புடவைகள்,....  எல்லாம்  கிழிந்து போயின.
 திருவருட்பாவும்,  திருப்புகழும், கீதையும் மனதை நிமிர்ந்து நிற்கச் செய்து, வாழ்க்கையை நடத்திச் செல்லும் தோணிகளாய் துணை நிற்கின்றன.
 நேற்று வழிநடந்த ஆண்டுகளைத் திரும்பிப் பார்த்தேனா.............!




No comments:

Post a Comment