29 Apr 2012

யார் நல்லவர்?

                                      ''மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்        
                                       மாட்டும் வழக்கத்தைக் கொண்டுவந்தே,
                                       வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார், அதை
                                       வெட்டி விட்டோமென்று கும்மியடி!''

பாரதியாரின்  ''பெண்கள் விடுதலைக் கும்மி''யிலிருந்து இந்த  நான்கு வரிகள் கண்முன்னே!
ஏன் தெரியுமா?
நேற்று முன் தினப் பத்திரிகைச் செய்தி!  அட, என்ன செய்தி? வீட்டுக்குள் இடம் இல்லையென்று பெற்ற தாயை மாட்டுத் தொழுவத்தில் வைத்துக் காப்பாற்றும் மகனைப் பற்றியது தாங்க..

 அவன்  வீட்டுக்குள் இடப்பற்றாக்குறை!

''வெளியே போ, என்று துரத்திவிடாமல் வீட்டிலதானே இருக்கிறாள் என் தாய்! அவளுக்கு நான்கு பெண்கள்! மூன்று பிள்ளைகள்! மத்த யாரும் கவனிக்காம இருக்கும் போது நாந்தான் பார்த்துக் கொள்கிறேன். பகலிலும் இரவிலும் சாப்பாடு கொடுக்கிறாள் என் மனைவி! ஏன்யா பெரிசு பண்றீங்க? நேற்று கூட அவளுக்கு  காய்ச்சல். டாக்டர் கிட்ட கூட்டிப்போய் மருந்து வாங்கிக் குடுத்துருக்கேன். போங்கய்யா, பொழப்பத்தவங்களே!'' என்கிறான் பிள்ளை.

மாட்டுத்தொழுவத்தில்  கன்றுக்குட்டிக்குப் பக்கத்தில் ஒரு பாயில் ஒரு தலைகாணி, ஒரு போர்வை! ஈக்கள்மொய்க்க, கொசுக்கள் ரீங்காரமிடும். மாட்டுச் சாணமும், மூத்திரமும்!  இரவு நேரங்கள் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
நிஜமாகவே அவன்  நல்லவந்தான்.

பலவருடங்களுக்கு முன்னே எங்கள் கண் முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு குடும்பம். தாய், தந்தை, இருமகன்கள். ஒரே பெண். பெரிய பையன் கல்யாணம் செய்துகொண்ட கையோடு மனைவி வீட்டோடு போய் விட்டான். பெண் மணமாகி கொஞ்சம் தள்ளி நல்லபடி வாழ்ந்தாள். இரண்டாவது பையன் கல்யாணம் செய்து கொண்டான். குழந்தைகளும் பிறந்தார்கள். இதனிடையே பெரியவர் காலமானார். மருமகள் அவள் அம்மா வீட்டுக்குப் பக்கத்தில் வீடு  பார்த்தாள்.  பின்னாலேயே பிள்ளை!
இந்த அம்மா தனியே விடப்பட்டார். வெளியேயிருந்து யாரும் பேசக்கூடாது என்று வெளிக் கதவைப் பூட்டி விட்டுப் போய் விடுவார்கள். தனிமை அந்த அம்மையாரை படுக்கைக்குத் தள்ளியது.  வாரம் ஒரு முறை வந்து வேலைக்காரி  குளிக்க வைத்துப் போவாள். சாப்பாடு? சமையல் செய்யவோ, துளி வெந்நீர் வைக்கவோ அடுப்பும் கிடையாது. மதிய நேரத்தில் அந்த அம்மாவின் பெண் கஞ்சி  கொடுத்துவிட்டுப்      போவாள். அவ்வளவு தான்.

ஒரு  வாரம்  சென்றிருக்கும்  நல்ல கடுமையான  ஜுரத்தில்  பிதற்றும்  சப்தம்  கேட்டது.  ஜன்னல்
 சற்றே  திறந்திருக்க  உள்ளே  எட்டிப்பார்த்தேன்.  அடையாளமே  தெரியாதவாறு, வெட்டப்பட்ட  தலைமுடி,  குழி விழுந்த கண்கள்.  பாத்ரூம் வாசலில் சுருண்டு கிடந்த அவர்களைப் பார்த்துப் பதறிப் போய் அவர்களின் பெண்ணுக்கு தொலை பேசியில் சொல்ல, ''என்னங்க செய்யறது. தம்பி    சம்சாரம்      சாவிய  வாங்கிட்டுப் போயிடிச்சு. எங்க வீட்டுக்காரர் என்னைய போகக் கூடாதுன்னு சொல்லிட்டார். நான் என்ன பண்ணமுடியும் சொல்லுங்க,'' என்றாள்.

நல்ல வேளையாக அந்த அம்மாளைக் கடவுள் இன்னும் சோதிக்காமல்  தன்னுடன் சேர்த்துக் கொண்டான். பூப் பல்லக்கென்ன, மேளதாளம் என்ன, கடைசி ஊர்வலம் வெகு ஜோர்!  உயிருடன் இருக்கும் போது  ஒரு வாய் சோறு போடாமல்  செத்தபின் என்ன வேண்டிக்கிடக்கிறது.

ஏன், எப்படியென்று தெரியவில்லை மனைவி செய்வதை எல்லாம் சர்வ சாட்சியாய்ப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தான் இந்தப் பிள்ளை.

யார் நல்லவர்?

                       ''தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
                        தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
                        பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கு
                        எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
                        பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
                        புனிதநீ  ஆதலால்  என்னை
                        அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
                        அம்மைஅப்  பாஇனி ஆற்றேன்.''
                                                        -  திருஅருட்பா
                                      











1 comment:

  1. வீட்டு வாசலோடு, அருகில் உள்ள மயானத்துக்குச் செல்லும் இறுதி ஊர்வலங்களை பார்க்கும்போதெல்லாம் என் மனதில் தோன்றும் எண்ணங்களை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். தேவையற்ற பூப்பல்லக்கும் ஆட்டமும் பாட்டமும் எதற்கு?

    ReplyDelete