19 May 2012

எனக்குப் பிடித்த கதை -1

அது ஒரு சிறிய கிராமம்.  அக்கிராம மக்களின் ஒரே பொழுது போக்கு அந்த ஊர் கோவிலிலே நடக்கும் உபன்யாசங்கள், வில்லுப்பாட்டு இவற்றைக் கேட்பது. ஒரு சமயம் அங்கு கதை சொல்வதிலே திறமை உள்ள  ஒருவர் முருகப்பெருமானின்  கதையை சொல்லவந்தார்.

மாலைப் பொழுது. ஜனங்கள் எல்லோரும் கூடினார்கள். கதையும் ஆரம்பித்தது. முருகப் பெருமானின் அவதாரத்தைப் பற்றி விளக்கியவர் குழந்தை  முருகனின்  அழகைச்  சொல்ல ஆரம்பித்தார். அந்த  நேரத்தில்  அவ்வட்டாரத்தில் திருட்டுக் கொள்ளையடிக்கும் மாயாண்டி அங்கே வந்தான்.  தூணிலே சாய்ந்து கொண்டு  அவனும் கதையை கேட்க ஆரம்பித்தான்.

வேணி இளம் பிறை முடித்த சிவபெருமான் ஆசனத்திலே  அமர்ந்திருக்கிறார். அன்னை பார்வதி குழந்தையை அள்ளி அணைத்து முத்தமிட குட்டி முருகன் ஓடுகின்றான். காலிலே தண்டை சப்தமிடுகிறது. கொலுசு கொஞ்சுகிறது. தங்கச்சிலம்பு ஒலிக்கிறது. இடையிலே பொன் அரைஞாண் ஒளிவீசுகிறது.  கைகளிலே வளையல்களை அணிவித்திருக்கிறாள் அம்மை. விரல்களிலே வைர, வைடூரிய மோதிரங்கள் மின்னுகின்றன.

திருமார்பிலே நவரத்னங்கள் இழைக்கப்பட்ட பொன்னாபரணங்கள் சூரிய ஒளியைத் தோற்கடிப்பனவாய் வர்ணஜாலங்களை வீசுகின்றன, சிறிய ரோஜா இதழ்களை ஒத்த உதடுகள். அதிலே தவழும் மோகனப் புன்னகை. காந்தக் கண்கள்.  நெற்றியிலே திருநீறு. நடுநாயகமாய் பளிச்சென்று குங்குமப்பொட்டு. வைரங்கள் மின்னும் சின்னக் கிரீடம்.

இந்த முருகன் அழுகின்றவர்களை அள்ளி அணைக்கும் அன்னை. துன்பத்தில் துடிப்பவர்களைத் தாங்கிப் பிடிக்கும் தந்தை. அவன் பெருமை சொல்பவர்களுக்கு விளையாட்டுத் தோழன். அடியார்களுக்கு குரு.  கதை தொடர்ந்தது. மாயாண்டியின் மனம் அவன் வசமில்லை. அந்த  சின்னக் குழந்தையின் அழகிலே பூரணமாய் லயித்திருந்தது.

கதை முடிந்து அவரவர் வீடுகளுக்குப் போனார்கள். மாயாண்டி கதை சொன்ன கண்ணப்பர் பின்னால் போனான்.
சாமி அந்தச் சின்னப் பையனப் பத்தி சொன்னியே, அவன் எங்க இருக்கான்னு கேட்டான்.
சின்னப் பையனா, எந்த சின்னப் பையன்?
அதுதான் சொன்னியே காலில கொலுசு போட்டுக்கினு...
கண்ணப்பர் சிரித்தார். எ ன்னப்பா, வெளையாடிரியா? நான் கதையில்ல சொன்னேன். நெசமா அப்பிடி யாரும் கெடையாது.
ஏய், நெசமா சொல்லிப்பிடு. அவன் போட்டு இருக்கற நகை எல்லாம் எனக்கு வேணும்.  அந்தப் பையன் எங்க இருக்கான்? சொல்லலே கத்தியால குத்திப்பிடுவேன்,  என்று கத்தியை உருவினான்.
கண்ணப்பருக்கு  சப்தநாடியும் ஒடுங்கிற்று. ஐயய்யோ, ஏதோ ஒரு கிறுக்கனிடம் மாட்டிக்கொண்டோமே என்ன செய்வது என்று யோசித்தார். மாயாண்டியோ கத்தியும் கையுமாய் நின்றான்.

அந்தப் பையன் அதோ அங்க தூரத்தில தெரியுது பாரு ஒரு சின்ன மலை, அங்கதான் எங்கியாவது இருப்பான் என்றார்.
அவன்  பேர் என்னன்னு சொல்லிடு, அப்பதான் கூப்பிடமுடியும் என்றான் மாயாண்டி.
முருகன் என்று கண்ணப்பர் சொல்ல, நான் போய் கூப்பிடுவேன், கிடைக்கலன்னா திரும்ப இங்கதான் வருவேன். என்ன ஏமாத்தலாம்னு நெனைக்காதே புரிஞ்சுதா? என்று புறப்பட்டான் அவன்.

கண்ணப்பர் தலையில் கை வைத்துக் கொண்டார். மாயாண்டி மலைப் பக்கம் நடையைக் கட்டினான்.
அவன் நினைத்த மாதிரி அந்த மலை அவ்வளவு கிட்டத்தில் இல்லை. வழியில் ஒரு காடு வேறு. நடக்க நடக்க பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டி முருகா, முருகா என்று சொல்லிக்கொண்டு வழி நடந்தான்.

ஒரு வழியாக கண்ணப்பர் காட்டிய இடத்திற்கு வந்தான். ஏய் முருகா எங்க இருக்கே நீ? ஓடி வா, என்று கூப்பிட்டான். அந்த இடத்தில் ஒரு ஈ, காக்கை இல்லை. அவனுக்கோ அலுப்பு. அந்த ஆளை என்ன செய்யரேன் பாரு என்று சொல்லிக் கொண்டே மீண்டும் கூப்பிட்டான். தான் ஒரு சின்னக் குழந்தையை காட்டில் நின்று கொண்டு அசட்டுத்தனமாக கூப்பிடுவது அவன் புத்தியில் உரைக்கவில்லை.

ஆனால் அவன் கண் முன்னால் அந்தக் குழந்தை ஓடி வந்தது. இந்த நகை எல்லாம் வேணுமின்னுதானே என்னக் கூப்டே எடுத்துக்கோ, முண்டாசுத் துணிய கீழே விரி, என்றது. எல்லா நகைகளையும் கழட்டிப் போட்டது. ஒரே ஓட்டமாய் ஓடி மறைந்தது.

மாயாண்டிக்கு எதுவுமே புரியவில்லை. எல்லாம் கனவு போல இருந்தது. ஆனால் நிஜம்தான் என்பதற்கு சாட்சியாக விரித்த துணியில் பளபளக்கும் நகைகள்!
நகைகளை மூட்டையாகக் கட்டியவன் ஒரே மூச்சில் கண்ணப்பர் வீட்டில் போய் நின்றான். சாமி, சாமி என்று கூப்பிட்டவன், 'ஐயா, பாத்தீங்களா,' என்று மூட்டையைப் பிரித்தான். தன் கண்களையே நம்பமுடியாமல், கதையில் சொன்ன அத்தனை நகைகளையும் கண்முன்னே பார்த்தார்.

மாயாண்டி சொன்னான், 'ஐயா நான் ஒரு திருடன்தான். நகை மேலே ஆசைப்பட்டுதான் குழந்தையைத் தேடிப் போனேன். ஆனால் அழகாக ஆபரணங்கள் அணிந்து வந்த குழந்தை அழகு என்றால், நகைகளை எல்லாம் கொடுத்துவிட்டு  நின்ற அந்தக் குழந்தை இன்னும் அதி அற்புதமான அழகு! எனக்கு திரும்பவும் போய் அந்தக் குழந்தையை தூக்கி, மடிமேல் வைத்துக்கொண்டு கொஞ்ச வேண்டும். இதெல்லாம் வேண்டாம்' என்றான்.

கண்ணப்பர் முருகனைக் கூப்பிட்டார். அப்பனே உன் கதையை பட்டிதொட்டி எல்லாம் சொல்லிவருகிறேன். என் கண் முன்னாலே நீ ஒரு தடவைகூட வந்ததில்லை. ஒரு திருடனுக்கு காட்சி கொடுத்தது மட்டுமல்லாமல் உன் நகைகளையும் கொடுத்திருக்கிறாயே? இது என்ன ஆச்சரியம்? என்று கேட்டார்.

முருகன் சொன்னான்,  "கண்ணப்பரே, பல ஆண்டுகளாக நீர் என் கதையை பலருக்கும் சொல்லி வருகிரீர். எப்படி? வெறும் கதையாகதான் சொல்லிவருகிரீரே தவிர உண்மையில் உங்களுக்கு நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் மாயாண்டியோ கதையைக் கேட்ட அந்த நிமிடத்திலிருந்து என்னைத் தவிர வேறு  சிந்தனையின்றி என்னைத் தேடி வந்தான். அதனால்தான் நான் அவனுக்கு தரிசனம் தந்தேன்,' என்றான்.

கடவுளை எப்படி வணங்க வேண்டும்? காலெங்கோ நடக்க, கை எதையோ செய்ய, மனம் எங்கோ மேய, வாய் எதையோ பேச செய்யும் எந்தச் செயலும், பக்தி உட்பட வெற்றி பெறுவதில்லை.

பூஜை செய்ய உட்காருகிறோம்.  அப்போதுதான் செல்பேசி ஒலிக்கும்,  மனைவிக்கு சமையலில் சந்தேகம் வரும், பையனுக்கு கல்லூரி பீஸ் கட்டவேண்டும் என்று நினைவுவரும், நண்பர் வருவார், பைப் ரிப்பேர் செய்ய ஆள் வருவான்.

என்னதான் செய்வது? எந்தச் செயலை செய்தாலும் ஒரே ஒரு நிமிடம் எனக்கு அந்தச் செயலை அர்ப்பணித்துவிட்டு  செய். பூஜை புனஸ்காரங்கள் வேண்டாம் என்கிறான் கீதோபதேசம் செய்தவன். செய்து பாருங்களேன்.

நிறைய கதைகளைப் படிக்கிறோம். ஒரு சில கதைகளே மனதில் நிற்கின்றன. அவ்வாறு என் நினைவில் நிற்கும் கதை இது.


























2 comments:

  1. patti, the story was of learning value for me. i liked it. appa read out and transalated the same in english, but i could understand most of the tamil words.
    invoking your blessings,
    arjun

    ReplyDelete
  2. What a story! It is true we are not concentrating while praying hope I will correct it in future

    ReplyDelete