5 Aug 2012

முருகனும் நானும் 1

உங்களுக்கு முருகனைத் தெரியுமா? தமிழ் தெரிந்த எல்லோரும் வழிபடும்  அழகன், தெய்வயானையின் மணவாளன், வள்ளிநாயகியின் உள்ளம் கவர்ந்த கள்வன், ஒரு நொடியில் மயில் மீதேறி உலகையே வலம் வந்து எல்லோரையும் அதிசயிக்கச் செய்தவன்! ஒரு கணத்தில் உலகமே தாய் தந்தையருள் அடங்கி இருக்கிறது என வலம் வந்து மாங்கனியை வென்ற விநாயகரின் தம்பி.  செஞ்சடையில் கங்கையையும்,  அம்புலியையும், நீலகண்டத்தில் பாம்பையும், கொன்றை மாலையையும், இடையிலே யானைத் தோலையும்  தரித்து, அங்கமெல்லாம் வெண்ணீறு அணிந்தவன் குமாரன். "திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை,'' உமையவளின் செல்வமுத்துக் குமரன்.ஆறு படை வீடுகளுக்கு உரிமை உடையவன்.

போதும், போதும் தெரிந்துவிட்டது, அபிஷேக, அலங்காரப் பிரியனாய், வள்ளி தெய்வானையோடு திருத்தணியில் காட்சிகொடுப்பவன், மாம்பழம் கிடைக்கவில்லையென்று கோபித்துக் கொண்டு ஆண்டிக் கோலத்தில் பழனிமலையில் கோயில் கொண்டவன். அவனைத் தெரியாமல்  யார் இருக்க முடியும்? திருச்செந்தூரின் கடலோரத்தில் அரசு புரியும் செந்தில்நாதன் அவனைத்தானே சொல்கிறீர்கள்.
திருப்பரங்குன்றம் என்ற இடத்திலும், பழமுதிர்ச்சோலையிலும், திருவேரகத்திலும் அதே பெயருடைய ஒருவன் இருக்கிறான் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவன்தானே.

ஆமாம் அவனையேதான் சொல்கிறேன். அவனுக்கு பல வீடுகள், பல நாமங்கள். அவனுக்கும் எனக்கும் என்ன உறவு என்கிறீர்களா? அவன் எல்லோருக்கும் உறவுதான். எனக்கு? துன்பம் வந்து அழும்போதெல்லாம் அள்ளி அணைத்து ஆறுதல் சொல்லும் அம்மா. வாழ்க்கைப் போராட்டத்தில் ஓடிக்களைத்து விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தித் தாங்கிக் கொள்ளும் அப்பன், திக்குத் தெரியாது தவிக்கும் போது வழிகாட்டும் குருநாதன். விளையாட்டுத் தோழன். வள்ளல் பெருமான் கூறுவதுபோல்,''தந்தையும், தாயும், குருவும், நான் வணங்கும் சாமியும், பூமியும், பொருளும், சொந்தநல் வாழ்வும்,'' அவனே!

வாழ்க்கையிலே எத்தனை சோதனைகள், வேதனைகள்! சோதனையையும், வேதனையையும் வெல்லும் உபாயம் உன்னிடத்திலேதான் இருக்கிறது என்று காண்பித்து, ''இதயந்தனில் இருந்து கிருபை ஆகி இடர் சங்கைகள் கலங்க,'' அருள் புரிகிறான். பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால் பணிகின்றேன், ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால் உறங்குகின்றேன், ஆட்டுவித்தால் ஆடுகின்றேன். என்னால் ஆவது ஏதுமில்லை'' என்பதை உணரச்செய்தவன் அவனே.

கந்தரலங்காரம் நூறு பாடல்களையும் மனனம் செய்யவைத்து, திருப்புகழிலே திளைத்தாடச்
செய்து   முருக   பக்தியிலே   மூழ்கச் செய்த செய்திகளைப் பின்னர் பதிவு செய்வேன்.





4 comments:

  1. நானும் முறைக பக்தை தான் அம்மா :-) மிகவும் அருமையானப் பதிவு. எனக்கும் முருகனே அனைத்தும்.

    amas32

    ReplyDelete
  2. எல்லோருக்கும் துணைவன் அவன்.கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நண்றி.

    ReplyDelete
  3. Palani Andavan Muruga Perumman Arul Ellorukun Endrum Erukm Endra Pathivuku Nendri

    ReplyDelete
  4. கமலா அவர்களே
    உங்களுடைய தமிழ்க் கடவுளைப் பற்றிய கட்டுரை நன்றாக இருக்கு, அதே போலவே நானும் என்னுடைய தமிழ் வலையில்
    "முருகன் - 60 ருசிகரத் தகவல்கள்" ..என்ற தலைப்பில் எழுதியதை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
    இது என்னுடைய தமிழ் வலைப் பதிவு

    http://karaimodumalaigalmathangi.blogspot.in/2012/08/60.html

    ReplyDelete