2 Nov 2012

திருப்புகழ் -முத்தைத் தரு

முகுந்தன், ருத்ரன், கமலன் என்ற மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டவன் மு, ரு, க,  எனும் அழகன்.  அன்றாட வாழ்வின் அல்லல்களில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களுக்கு அருமருந்தானவன்.

நினைக்க  முக்தி தரும் திருஅண்ணாமலையில் அருணகிரிப் பெருந்தகையார் முன் காட்சி அளித்து,
''முத்தைத் தரு'' என்று அடியெடுத்துக் கொடுத்துப், பாடப் பணித்து மறைந்தார் முருகப் பெருமான்.

திசைகள் நான்கிலும் உள்ள அன்பர்கள் அற்புதம் அற்புதம் என்று ஆனந்திக்கும்,  சித்திர கவித்துவ சத்த மிகுத்து அருளாலும், பொருளாலும், சந்தத்தாலும், ஓசையாலும் உயர்ந்தது திருப்புகழ்.

எல்லாம் வல்ல முருகப்பெருமானின் திருவருளினால் இந்தத் திருப்புகழின் பொருள் விளக்கம் வேண்டுமென ஒருவர் கேட்க அதை எழுதப் புகுந்தேன். முதலில் பாடல்.

                                                          நூல்

ராகம்: ஷண்முகப்ரியா                                                            தாளம்: த்ரிபுடை


                          முத்தைத்தரு பத்தித் திருநகை
                                 அத்திக்கிறை சத்திச் சரவண
                                 முத்திக்கொரு வித்துக் குருபர                        எனவோதும்-

                          முக்கட்பர மற்குச் சுருதியின்
                                  முற்பட்டது கற்பித் திருவரு
                                  முப்பத்துமு வர்க்கத் தமரரு                             மடிபேணப்;

                          பத்துத்தலை தத்தக் கணைதொடு
                                  ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
                                   பட்டப்பகல் வட்டத் திகிரியி                          லிரவாகப் -

                          பத்தற்கிர தத்தைக் கடவிய
                                 பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
                                 பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது                         மொருநாளே;

                          தித்தித்தெய வொத்தப் பரிபுர
                                   நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
                                   திக்கொட்கந டிக்கக் கழுகொடு                  கழுதாடக்-

                          திக்குப்பரி யட்டப் பயிரவர்
                                  தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
                                  சித்ரப்பவுரிக்குத்  த்ரிகடக                             எனவோதக்;

                          கொத்துப்பறை  கொட்டக் களமிசை
                                   குக்குக்குகு குக்குக் குகுகுகு
                                   குத்திப்புதை புக்குப் பிடியென                      முதுகூகை

                          கொட்புற்றெழ நட்பற் றவுணரை
                                    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
                                    குத்துப்பட வொத்துப் பொரவல                   பெருமாளே.


முத்தைத் தரு பத்தித் திருநகை-
பத்தியென்றால் வரிசை. முத்துப் போன்ற பல்வரிசை தெரியுமாறு புன்னகை பூக்கிறான் முருகன். அது முருகப் பெருமானுடைய முகத்தில் -'திருநகை'-முத்தால் ஆன ஆபரணம் போல-ஒளி வீசுகிறது. அது பக்தர்களுக்கு 'திரு'வைக் கொடுக்கிறது. திரு என்றால் செல்வம். என்ன செல்வத்தைக்  கொடுக்கிறது? பக்தியைக் கொடுத்து, மோட்ச சாம்ராஜ்யமாகிய அழியாத செல்வத்தைக் கொடுக்கிறது.

அத்திக்கிறை-
அத்தி-தெய்வானை. தெய்வானை முத்தின் தலைவனை

சத்திச் சரவண
மலைமுத்தான உமையம்மையின் புதல்வன், சரவணப் பொய்கையில் தோன்றியவன். எனவே 'சத்திச் சரவணன்.'அன்னையிடம் இருந்து சக்தி மிக்க வேலாயுதத்தைப் பெற்றவன்.

முத்திக்கொரு வித்து
முக்தி அடைய விரும்புபவர்கள் முருகவேளுடைய திருவடிகளிலே கருத்தைச் செலுத்தி பக்தி எனும் விதையை இதயத்தில்  நடவேண்டும்.

குருபரன்
கு - அந்தகாரம் அல்லது இருள்
ரு -   நீக்குபவர். ஆணவ இருளை நீக்குபவர்
பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு குருவடிவாய் வந்து அருள் புரிபவர் குருபரன்.

எனவோதும்
என்று போற்றிய

முக்கட் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து
மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்கு, நான்கு வேதங்களிலும் முதன்மையான 'ஓம்'என்ற பிரணவ மந்திரப் பொருளை உபதேசித்து

இருவரும் முப்பத்து முவர்க்கத்து அமரரும் அடிபேண
பிரமனும், திருமாலும், முப்பத்து முக்கோடி தேவர்களும் திருவடிகளிலே வணங்கப் பெரும் பெருமை உடையவன்,

பத்துத்தலை தத்தக் கணைதொடு
இராமாவதாரத்தில் இலங்காபுரி அரசனான இராவணனின் பத்துத் தலைகளும் வீழுமாறு அம்பு தொடுத்த வீரனும்

ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்தரமலையை மத்தாக்க, அதைத் தாங்கும் பொருட்டு கூர்மாவதாரம் எடுத்தவனும்

பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் 
மகாபாரதப் போரில், கண்ணனாய், பட்டப்பகலில் சூரியன் மறைந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி  ஜெயத்ரதன்  மாளும்படிச் செய்தவனும்

பத்தற்கு இரதத்தைக் கடவிய
தன் நண்பனும், பக்தனுமான அர்ச்சுனனுக்குத்  தேரோட்டியாய் இருந்து அருள் புரிந்தவனும் ஆகிய

பச்சைப்புயல் மெச்சத் தகு பொருள்
நீலமேக வண்ணனான திருமாலும்லும்  பாராட்டப் பெற்ற பெருமை உடைய முருகப்  பெருமானே.

பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது  ஒரு நாளே
பரிவோடு  என்னைக்  காத்து  அருள் புரிதல் வேண்டும்.

தித்தித்தெய வொத்தப் பரிபுர           

கால்களில் அணிந்த சிலம்புகள் தித்தித்தோம் என ஒத்து ஒலிக்கவும்

நிர்த்தப்பதம்  வைத்துப் பயிரவி
காளியானவள் நடனமிட

திக்கொட்க நடிக்கக் கழுகொடு-  கழுதாட
திசைதொறும்  ஒலிக்குமாறு ஆட, உடன் கழுகுகளும் பேய்களும் ஆடுகின்றன.

திக்குப்பரி யட்டப் பயிரவர்
எட்டுத் திக்குகளையும் காக்கும் அஷ்ட பயிரவர்களும்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
தொ..க்..குத்.... தொ....கு... என

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக - எனவோதக்
அழகிய வாத்ய ஒலிக்கு ஏற்றவாறு கூத்தாட

கொத்துப்பறை கொட்டக் களமிசை
பல பறைகள் முழங்க, போர்க்களத்தில்

குக்குக்குகு குக்குக் குகு
குத்திப்புதை புக்குப் பிடியென  - முதுகூகை
குத்து, வெட்டு, பிடியென கிழக்கோட்டான்கள்  சுழன்று ஆட,

கொட்புற்றெழ நட்பற்ற அவுணரை
சுழன்றாடும்  எதிரிகளாகிய அசுரர்களை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
கொன்று குவித்து கிரவுஞ்சமலையை வேலால் துளைத்து

குத்துப்பட ஒத்துப் பொரவல - பெருமாளே.
பொடிப்பொடியாக்கி  வெற்றிவாகை சூடிய முருகப்பெருமானே.
என்னையும் கருணையுடன் காத்து அருள் புரிவீராக.

குறிப்பு;
குலகிரியான  பொன்னிறமான கிரவுஞ்சமலை மாயைக்கு எடுத்துக்காட்டு. தாரகாசுரன் அரசு புரிந்த மாயமாபுரியில் கிரவுஞ்சன் என்ற ஓர் அரக்கன் இருந்தான். இவன் முனிவர்கள் செல்லும் வழியில் மாயையின் ஆற்றலினால் மலைவடிவாக நின்று, மலைக்குள் வழியிருப்பது போலக் காட்டி, உள்ளே நுழையும்  முனிவர்களை மயக்கிக் கொன்று தின்பான்.

அகத்திய முனிவர் மேருமலையிலிருந்து  தென்திசையில் உள்ள பொதியமலைக்கு வந்தார். அவர் வரும் வழியில் பெருமலை உருவாக நின்று அதற்குள் வழியிருப்பது போல் காட்ட, அவரும் உள் நுழைந்து வெகு தூரம் போய் வழிகாணாமல், அறிவுக் கண்ணால் அசுர மாயையை அறிந்து, வெளி வந்து ''அறுமுகப் பெருமான் அயில் வேலால் அழியக் கடவாய்" எனச் சபித்தார். சூரனுடன் போர் புரிந்த போது  கிரவுஞ்சன் மலைவடிவாய் நின்று வீரவாகுத் தேவர் முதலியோரை மலைக்குள் புகுமாறு செய்து மயக்கினான். கந்தவேள் கிரவுஞ்சத்தைப் அழித்தார்.

மந்தர மலை பீகார் மாகாணத்தில் உள்ள பாகல்பூருக்குத் தெற்கே 50 கி.மீ. தொலைவிலுள்ள மலை எனக் கருதப்படுகிறது. Ref.A concise Encyclopedia of Hinduism, Vol 2.

எட்டு குலகிரிகள்-கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதனம்.


                     
                           
                           
                   .
                                                      -----------------
















2 comments:

  1. எத்தனை அழகாக எழுதியுள்ளீர்கள். படித்து மனம் நிறைந்தது.

    ReplyDelete
  2. அழகான தமிழ் மட்டுமல்ல. ஆழமான விஷயங்களும் உள்ளன, உங்கள் பதிவில். முருகு என்றால் அழகு என்ற பதம் மட்டும்தான் தெரியும். 'முகுந்தன், ருத்ரன், கமலன் என்ற மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டவன் மு, ரு, க, எனும் அழகன்.' என்பது தற்போது அறிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete