9 Nov 2012

சாபம்


பாருக்குள்ளே நல்ல நாடென்று
மீசை முறுக்கி நெஞ்சை நிமிர்த்தி
பாரதி பாடிய பாரத நாட்டை,
பஞ்சவர் தேவியின்  மானத்தைக் 
காத்த மாயவனை ராதை நாயகனை
தேடித் தருவீரா? தேடித்தருவீரா?

பச்சைக் குழந்தையை, பருவப் பெண்களை
நல்லவர் இவரென நம்பி வரும் பிற 
நாட்டுப் பெண்டிரை,
நாலுபேர் சேர்ந்து, நாணின்றித் 
தொட்டு, அடித்துச் சாய்த்தே,
மானத்தை அழிக்கிறார்- பாருக்குள்ளே...

பத்து பேர் இதனைப் பார்த்து மகிழ,
அடடா, எனச் சிலர் படம் பிடித்து
மார் தட்டிப் பிறர் காண நெஞ்சை
நிமிர்த்தி, நாய்களெனச் சுற்றி
நகைத்து நிற்பார்!-- பாருக்குள்ளே...

காட்டு மிராண்டியர், பேடியர்
எங்கள் பாரதத் தாயின் 
வயிற்றினில் பிறந்தவரோ?
பெற்றதாயினைக் கற்பழிப்பாரோ?
சொந்த சகோதரி எனின் பார்த்து
நிற்பாரோ? இவர் மானுடரோ?
இல்லைப் பேய் மக்களோ? -அட
ஒவ்வொரு பெண்ணும் தாயன்றோ?- பாருக்குள்ளே...

தாய்க்குல வயிற்றினில் வைத்திட்ட தீ
மானுடக் கூட்டத்தை அழிக்குமன்றோ?
அழுது தீர்ப்போமோ? ஆங்காரம் 
கொண்டு காளி அவதாரம் எடுப்போமோ?
நெருப்பினில் வீழ்வோமோ? அட
நஞ்சைக் குடிப்போமோ?
வயிற்றினில் வளரும் கருவைக் 
கலைப்போமோ? கயமையின் 
சின்னத்தைக் கட்டியணைத்தே
ஒரு முத்தம் கொடுப்போமோ? 
முலைப் பாலில் ஓர் துளி 
நஞ்சைக் கலப்போமோ? - பாருக்குள்ளே...

மெல்லப் பெண்ணினம் இனிச் 
சாகும், பிள்ளையைப் பெறும்
பாவம் போகும்!
பிள்ளையைப் பெறும் சாபம்
இங்.... கினிப்.....  போகும்.  சாபம் போகும்.......!
                                                    

1 comment:

  1. உங்கள் கவிதை நியாயமான கோபத்தின் வெளிப்பாடு. மிக அருமை.

    ReplyDelete