21 Nov 2012

மாகாளிக்கிழங்கு வைபவம்

சமீபத்தில மாகாளிக்கிழங்கு ஊறுகாய் எப்படிப் போடுவது என்று சமையல்கலை  வலைத் தளத்தில்  பார்த்தேன்.  சேலம் மாவட்டத்தில்  நவம்பர், டிசம்பர் மாத விடியற்காலைப் பொழுதுகளில்  'மாவாணிகெழங்கு' என்ற குரல் கேட்கும். இந்த மாதங்களில் தான் முற்றாத கிழங்குகள் கிடைக்கும் என்பதால்  இதனை அகழ்ந்தெடுத்து மூட்டைகளில் விற்பனைக்குக் கொண்டுவருவார்கள். கூடவே எலுமிச்சம் பழ மூட்டையும் இருக்கும்.

குரல் கேட்டவுடன் என் தந்தையார் கதவைத் திறந்துவிடுவார். பின் என்ன! குறைந்தது  அஞ்சு கிலோ+ கொசுரு, அந்தக்காலத்து அறுக்கஞ்சட்டியில் உட்காரும். தண்ணீர் ஊற்றப்பட்டு வீடே கமகமக்கும். என் அம்மாவின் தலை கிறுகிறுக்கும்! இன்னொறு முறத்தில் எலுமிச்சம் பழங்கள் பொன் போலத் தகதகக்கும். ஒன்றுமே பேசாமல் அம்மா வேலை பார்ப்பாள்............!

ஒரு சிலருக்கு இந்தக் கிழங்கு வாசனை பிடிக்காது. மூட்டைப் பூச்சி வாசனை அடிக்கிறது, பக்கத்திலேயே கொண்டுவராதே என்று ஓட்டம் பிடிப்பார்கள்!   நல்ல கெட்டியாக, தடித்த  தோலுடன் இருக்கும் இதன் தோலை முதலில் சுரண்டி, அடுத்த தண்ணீர்ப் பாத்திரத்தில் போடுவோம். ஒவ்வொறு கிழங்கையும் எடுக்கும்போதெல்லாம் அறுக்கஞ்சட்டியை இன்னும் எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்போம்! பார்த்தால் குறையுமா? அப்படியே மெதுவாக ஒரு மதியப் பொழுதுவரை தோல் சீவும் வைபவம் நடக்கும்.

அடுத்ததாக இதைப் பொடிப்பொடியாக அப்பா நறுக்குவார். நடுவிலே கெட்டியாக காம்பு இருக்கும். அதை எடுக்கவேண்டும். நறுக்கி முடிக்க சாயங்காலம் வரை ஆகிவிடும்.  இந்தக் கிழங்கில் காற்று பட்டால் கருத்து விடும் என்பதால் நறுக்கியதையும் தண்ணீரில்தான் போடுவோம். பெரிய ஜாடியை சுத்தம் செய்து வைத்திருப்பாள் அம்மா! அதில் நறுக்கிய கிழங்குகளை தண்ணீர் இல்லாமல் வடித்துப் போடவேண்டும். இந்தக் கிழங்கு உப்புப் போட்டாலும் தண்ணீர் விட்டுக் கொள்ளாது.

பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டுக் குலுக்கி, அது முங்கும்வரை எலுமிச்சம் பழச்சாற்றை அபிஷேகம் செய்ய வேண்டும். அப்பாடா என்று, போடுபவர்கள்  கையை உடைக்கும் கிழங்கு இது. நன்றாக ஊறியபின் ஒரு கரண்டி அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் இட்டு, அதில் தயிர் சேர்த்து தொட்டுக் கொள்ளலாம்.

இந்தக் கிழங்கு சூட்டை ஏற்படுத்தும் அதனால்தான் எலுமிச்சம் பழம் பிழிகிறோம். 
ஏற்கெனவே சூட்டைக் கிளப்புவது எனவே, கடுகு தேவையில்லை. என் தந்தையாருக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் இது. எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப் போகாது. நாளாக நாளாக சுவை கூடுமே தவிர குறையாது.

மாகாளிக் கிழங்கு ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்

1. மாகாளிக் கிழங்கு  2. மஞ்சள் தூள் 3.மிளகாய்த் தூள் 4.உப்பு 5. எலுமிச்சம் பழம்
மாகாளிக்கிழங்கை சுத்தம் செய்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். எலுமிச்சை சாற்றைப் பிழியவும்.

தாழ்வாரத்தில் 'அறுக்கஞ்சட்டி'யைச் சுற்றி உட்கார்ந்து எப்படி ஓடிப்போவது என்று தெரியாமல் கிழங்கு சீவிய நினைவுகள் ஓடாமல் இன்னும் சுற்றிவரும் வேடிக்கையை என்னென்பது!











2 comments:

  1. Any one can send some to me....? its yuum...

    ReplyDelete
  2. அருமையான நடையில் அழகாக எழுதி இருக்கிறீர்கள். படித்தேன் ரசித்தேன். நன்றி,.

    ReplyDelete