31 Jan 2013

உப்போ உப்பு

அப்பா அந்த கழுதைக் கதையைச் சொல்லுன்னு வந்தான் முருகன். 

ஒரு ஊரில ஒரு வியாபாரி இருந்தானாம். அவன் உப்பு வியாபாரம் செய்து வந்தானாம். அந்தக் காலத்தில எல்லாம் உப்ப வாங்கி மூட்டையில கட்டி, படியால அளந்துதான் உப்பு விப்பாங்க. உப்போ உப்புன்னு கூவுவாங்க. அந்த வியாபாரி பக்கத்து ஊருக்குப் போக ஒரு சின்ன ஆற்றுப் பாலத்துல நடக்கணும். ஒரு நாள் கழுதை கால் தடுமாறி தண்ணிக்கு உள்ள விழுந்திடுச்சாம். 
உப்பு என்ன ஆச்சு?
தண்ணில கரைஞ்சு போயிடுச்சாம். கழுதைக்கு ஒரே குஷி. அதுக்கு தெரிஞ்சிடுச்சு தண்ணில விழுந்தா உப்பு கரைஞ்சிடும்னு. அதுனால அடுத்த நாள் வேணுமின்னே விழுந்திச்சாம்.
வியாபாரிக்கு கழுதையோட குறும்பு புரிஞ்சிடுச்சாம்!
வீட்டுக்குப் போனா அவன் பொண்ணு சமையல் பண்ணி இருக்கல. அவனுக்கு கோவம் வந்திச்சாம்! பொண்ணுகிட்ட சொன்னான்,'' இதோ பாரு நீ செரியா சமைக்கலைனா இந்தக் கழுதைக்கு ஒன்னைய கட்டி வெச்சுடுவேன்,'' அப்பிடின்னானாம்.
கழுதைக்கு ஒரே குஷி. ஆகா இந்த அழகான பொண்ணு என்பொண்டாட்டியா வரணும்னா நாளையிலிருந்து ஒழுங்கா வேலை செஞ்சு நல்ல பேரு வாங்கோணும்னு சமத்தா மூட்டைய தூக்கிட்டுபோச்சாம்.
பொண்ணுக்கு பயம் வந்திடுச்சு! சின்னப் பொண்ணுதானே! இந்தக் கழுதைய கட்டிக்கிட்டு எப்படி வாழறதுன்னு நல்லா தினம் சமையல் செஞ்சுது! கழுத மட்டும் கனவு கண்டுட்டே இருந்தது!

முருகன் சிரித்துக் கொண்டே தூங்கிவிட்டான். தினமும் இந்தக் கதையைக் கேட்டால் தான் அவனுக்கு தூக்கம் வரும். காலைல எழுந்தா தினம் அப்பா அவனை உப்பு மூட்டை தூக்க வேண்டும். அதாங்க, முதுகில தூக்கி வெச்சுக்கிட்டா, கை இரண்டும் கழுத்தை வளைத்துக் கொள்ள, கால்களால் இடுப்பைச் சுற்றி வளைத்துக்  கொண்டு செல்லம் கொண்டாடுவான். அதிலதான் எத்தனை சந்தோஷம்!

உப்பு நம் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பொருள். உப்பில்லாமல் நாம் உணவுப் பொருள்களை சமைப்பதில்லையே! 
இவ்வளவு பிரபலமான உப்பைப் பற்றி தெரிஞ்சுக்க வேண்டாமா? 
கடல் உப்பு, கல்லுப்பு, சோடியம் குளோரைடு முதலிய செயற்கை உப்புகளையே நாம் உப்பு என்கிறோம்.

நல்ல ஆரோக்கியம் வேண்டுமென்றால் மூன்று வெள்ளைக்காரர்களை விரட்டி அடிக்கவேண்டுமாம். "ஆரோக்யத்துக்கும் வெள்ளைக்காரனுக்கும் என்னய்யா சம்பந்தம்" என்கிறீர்களா?

வெள்ளையா இருக்கிற மனுஷனைச் சொல்லவில்லை! உணவு! நம் உணவிலிருந்து விரட்ட வேண்டிய முதல் வெள்ளைக்காரன் உப்பு. 
அடடா, '' உப்பில்லாத பண்டம் குப்பையிலே'' என்ற பழமொழி என்னாவது?  
பழமொழி கிடக்கட்டும், உடம்பு சீராக இருக்க  உப்பைக் குறைக்க வேண்டும். 

அப்படின்னா, யாராவது உப்பு போட்டு சாப்பிடுவது இல்லையா, அப்பதானே வெக்கம், மானம், சூடு, சொரணை இருக்கும்னு சொன்னா என்னசெய்வது?

கேட்கிறவனைப் பார்த்து நீ சிரி. உப்பினால் உடம்பு உப்பும், தெரியுமா? இரத்த அழுத்தம் வரும். சிறுநீரகம், இருதயம், இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படும். உப்பில் மனித உடம்புக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் இல்லை. காய்கறிகளிலும், கீரைகளிலும் உள்ள இயற்கையான உப்புச் சத்தே நம் உடலுக்குப் போதுமானது. அதனால்தான்  இலை தழைகளைத் தின்னும் மிருகங்கள்  ஆரோக்யமாக இருக்கின்றன.

உப்பு அதிகமானால் அது உணவுப் பொருள் அல்ல என புழு, பூச்சிகளுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் உப்புப் போட்டு ஊற வைத்த ஊறுகாய்களை அவை சாப்பிடுவதில்லை.
நம் உடலில் உள்ள தண்ணீரை தேவைப் படும் போது உபயோகிக்க முடியாமல் தடையாக இருப்பது உப்புதான். உடலில் உள்ள கால்சியம் சத்தைத் திருடி, பற்களையும், எலும்புகளையும் சக்தி இழக்கச் செய்வது உப்புதான்.

''உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்,'' என்பது பழமொழி. உப்பு எந்த அளவு கூடுதலாக உள்ளதோ அந்த அளவு தண்ணீரையும் கூடுதலாக உட்கொள்ள வேண்டும். அதனால் சிறு நீரகங்களின் வேலையும் கூடுதலாகிறது.

துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என்பன அறுசுவைகள். அறுசுவை உணவை உண்ண வேண்டும் எனப் பழங்காலச் சித்தர்கள் கூறியுள்ளனர். அவர்கள் சொல்லியுள்ள உப்புச்சத்துக்கள்  காய்கள், பழங்கள் ஆகியவற்றில் இயற்கையாக  உள்ளனவாகும்.

என்னுடன் பணியாற்றிய பாலா திரிபுரசுந்தரி வீட்டிற்கு அழைப்பின் அன்பிற்காக சென்றிருந்தோம். வடை, பொங்கல் கொடுத்து உபசரித்தார்கள். வடையை வாயில் வைத்ததும் முகம் அஷ்டகோணல் ஆயிற்று! உப்பு, உப்பு, உப்பு! பாலா சிரித்தார்? என் கணவருக்கு உப்பு தூக்கலாக இருந்தால்தான் பிடிக்கும் என்றார். மிக அதிகமோ என்றார்! தெரியாமல் அதிகம் போட்டாரா அல்லது நிஜமாகவே அவங்க வீட்டுக்காரருக்கு உப்பு அதிகம் வேண்டுமோ நானறியேன்! "உப்பிட்டவனை உள்ளளவும் நினை,'' என்பது இன்னொறு பழமொழி. இன்றுவரை வடையைப் பார்த்தால் பாலா ஞாபகம்தான் வருகிறது! 
(Fewer Englishmen adding salt at the table
The number of people in England adding salt to food at the table fell by more than a quarter in the five years following a national campaign, according to research published in the British Journal of Nutrition.
The Hindu, 31.1.2013)







No comments:

Post a Comment