22 Oct 2012

கரும்பலகை!


என்ன வேலை கரி அடுப்பு ரூமுக்குள்ளே, என்று சத்தம் போடுகிறாள் அம்மா. இந்த அம்மாவுக்கு எப்படிதான்  தெரிகிறதோ,  பூனை மாதிரி அடிமேல் அடி வைத்துதான் நான் இங்கே வந்தேன். ஒன்னும் இல்லைம்மா, சும்மாதான் என்கிறேன். நெய்வேலி நிலக்கரி மூட்டையையும், மரக்கரி அடுப்பையும் நோட்டம் விட்டுவிட்டு, நான்கு பெரிய மரக்கரி உருண்டைகளை  பழைய     பேப்பரில்  பொட்டலம்      மடித்து  பாவாடைக்குள் மறைத்துக் கொண்டு  தோட்டத்திற்கு ஓடினேன்.

நல்லவேளை அம்மா பக்கத்துவீட்டுப் பாட்டியம்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள். ஆயிற்று, அடுத்தாற்போல் அந்தக் காய் காய்க்கும் குப்பைமேனிச் செடியைக் கண்டு பிடித்து இலையையும், காயையும் பறித்துக் கொள்ளவேண்டும். தெரு ஓரங்களிலே சர்வ சாதாரணமாகக் காணப்படும் செடிதான்!

செடியிலிருந்து இலைகளையும், காயையும் பறித்தாகிவிட்டது. அதையும் கையோடு கொண்டுவந்த பேப்பரில் சுற்றி, தோட்டத்துக் கரிப் பொட்டலத்தோடு சேர்த்து வைத்தேன். இப்போது ஏதாவது செய்தால் அடி விழும், பக்கவாத்யமாகத் திட்டும் கிடைக்கும். கொஞ்சம் பழைய கிழிசல் துணி பைக்கடியில் ஒளிந்து கொண்டது. அம்மாவுக்கு சந்தேகம், என்ன, சுத்தி சுத்தி வரே? ம், என்ன என்கிறாள்.

அம்மா, உனக்குப் பிடித்த பாட்டுப் பாடட்டுமா? நீ சொல்லிக் கொடுத்த தேவாரம்  மனப்பாடமாகிவிட்டது. அம்மா சந்தோஷமாகக் கேட்கிறாள்.
காலையில் வெகு வேகமாக ஸ்கூலுக்கு கிளம்பி ஓடிவிட்டேன். வகுப்பறை திறந்துதான் இருந்தது. இன்னும் யாரும் வரவில்லை. கொண்டுவந்த கரி, இலைகளை எடுத்துக்கொண்டு பள்ளித் தோட்டத்தில் உள்ள கருங்கல்லில் கரி, இலைகளைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கல்லால் அழுத்திப் பொடித்துக் கூழாக்கி, பேப்பரில் போட்டு எடுத்துக் கொண்டு   வெளுத்துக் கிடந்த கரும்பலகையை தண்ணீரால் துடைத்துவிட்டு கரி இலைச்சாறை கரும்பலகையில் அழுத்தித் தேய்த்து, காய்ந்தவுடன் திரும்ப ஒரு தடவை! மற்றும் சில மாணவியரும் கூடச் சேர்ந்து கொள்கிறார்கள். அற்புதமான அந்தக் கருத்த கரும்பலகையைப்பார்த்த போது என்ன திருப்தி, சந்தோஷம்.

தரையைப் பாழ்செய்து விழுந்திருந்த கரித்தூள்களை எடுத்து எறிந்து, தண்ணீரால் துடைத்து முடிவதற்குள் பெல் அடித்து விட்டது. தோட்டத்துக்கு ஓடிப் போய் கையைக் கழுவினால் கரிக் கருப்பு போனால்தானே? கை நகமெல்லாம் கருப்பு! அப்படியே பாவாடையில் துடைத்தேனா, பாவாடையெல்லாம் கருப்பு.வீட்டுக்குப் போனவுடன் இருக்கிறது மண்டகப்படி!

வகுப்புக்குள் நுழைகின்றார்  கணக்கு டீச்சர். கன்னங்கரேல் என்ற கரும்பலகையைப்  பார்த்தவுடன்   அவருக்கு ஒரே சந்தோஷம். எப்படியாவது அம்மாவை சரிக்கட்டி ஒரு 'டஸ்டர்' தைத்து விடவேண்டும் என்று தீர்மானித்துக் கொள்கிறேன்.  பாவாடை அழுக்கும், கைக்கரியும் மறந்தே போய் விட்டது!

(அப்போதெல்லாம் வகுப்பு லீடர் கிடையாது. எல்லோருக்கும் வகுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு உண்டு. சாதி, மதம் என்பது தெரியாமல் பள்ளியில் படித்த அந்த நாட்களின் நினைவுக் குவியலிலிருந்து  ஒரு துளி)

 




5 comments:

  1. உங்கள் பகிர்வுகள் அருமையாக உள்ளன :-) மிகவும் ரசித்துப் படிக்கிறேன், நன்றி :-)
    Many of us do not know of these things that you share with us :-)
    amas32

    ReplyDelete
    Replies
    1. Thank you Sushima,very many thanks for your encouragement.

      Delete
  2. Nicely written and I have learnt something new.

    ReplyDelete
  3. Thank god. In those days nobody ever spoke of religion or caste in the School and the Media did not have TRP ratings. Today, thanks to the media!!! Almost all children know his or her caste and religion.The media has shed its constructive image to a great deal and is focussed on market profits.The loss is for the future generations.

    ReplyDelete
  4. ஆம்பள பசங்க செய்யற குறும்பு வேற மாதிரி இருக்கும். எளிய நடை. நன்றி.

    ReplyDelete