14 Oct 2012

மரமல்லி நினைவுகள்

மல்லிகைப் பூக்களிலே பல வகைகள். குண்டு மல்லி, ஜாதி, முல்லை, பிச்சி, ராமபாணப்பூ என வடிவத்திற்கும், மணத்திற்கும் தக்கவாறு பெயர்கள் மாறும். இவை எல்லாமே கொடியில் பூப்பவை. மர மல்லிக்குப் பெயர்க் காரணமே சொல்லத் தேவையில்லை. நெடிதுயர்ந்து நிற்கின்ற மரம், அதிலே நீண்ட காம்புடன் கூடிய  மூன்று தனி இதழ்களும், சற்றே நடுவில் பிளவுபட்டுக் காணும் ஓரிதழுமாய்,கொத்துக் கொத்தாய்ப் பூத்து மணம் பரப்பும். இந்த மலருக்கு புதுச்சேரி அன்னை திருவுருமாற்றம் எனப்பெயர் சூட்டினார். இதன் தாவரப் பெயர் Millingtonia hortensis என்பதாகும். இதன் ஆங்கிலப் பெயர் Indian cork Tree, Tree Jasmine என்பதாகும். மனித மனத்தைத் தாழ்ந்த நிலையிலிருந்து உயரிய நிலைக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் இருப்பதால்தான் அன்னை இம்மலரை திருவுருமாற்றம்  என அழைத்தார்.

முதன் முதலில் என் தந்தையார் என்னைச் சேர்த்த பள்ளி சேலம் நகரிலே புகழ் பெற்ற, செயிண்ட் மேரீஸ் உயர்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியின் நடுவே அணிவகுத்து நிற்கும் வீரர்களைப் போல   இருபுறமும் வானளாவி வளர்ந்து, நறுமணம் பரப்பி, மலர்க் கம்பள வரவேற்பு நல்கும் மரமல்லி மரங்கள். பள்ளியின் உள்ளே நுழைந்தால் வகுப்பறையுள், புத்தகப் பையை வீசிவிட்டு மரமல்லி மலர்களைச் சேகரித்து, நீண்ட காம்புகளைப் பின்னி, மாலையாக்கி, ஓடிச்சென்று நிற்பது அன்னை மேரியின் மலைக் கோவில் முன்னே.

அன்றைக்குப் போலவே 58 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும், சுற்றுப் புறச்சூழல்களால் பாதிக்கப்படாத, பிரார்த்தனை அலைகளால் நிரப்பப்பட்ட, நிர்மலமான நீலவானம் சாட்சியாக நிற்கும் அக்கோவிலின் முன் கருணைவடியும் திருமுகத்தில் புன்னகையோடு அன்னையை தரிசித்த போது என் மனம் அமைதியில் ஆழ்ந்தது.

அன்று இருந்த கூரைக்கொட்டகை வகுப்பறைகள் எல்லாம் செங்கற்கட்டிடங்களாகக் காட்சியளிக்க
வகுப்பறைகளின் வாசலிலே அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவியரிலே என்னையே மீண்டும் கண்டேன்.

என்னுடன் படித்த செபாஸ்டியானா என்ற மாணவி இறைப் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சிஸ்டர், உடன் உயிர்த் தோழி வசந்தா. இன்றைக்கு உறவுகளைவிட, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, நட்பு வாழ்க்கையை உயிர்ப்பிக்கிறது. என்னுடைய சேலம் பயணம் என்னை  மீண்டும் ஓர் சிறுமியாக்கிய அற்புதத்தைச் செய்தது.

திருவுருமாற்றம் செய்யும் மரமல்லி மலர் எனக்கு மிகவும் பிரியமானது. நினைவுகளோடு இரண்டறக்கலந்தது. களிமண்ணைப் பிசைந்து, குயவன் பானைகளும், பிற மட்பாண்டங்களும்  செய்வது போல் கள்ளமற்ற குழந்தை மனங்களை தன்னம்பிக்கையுடன் கூடிய அறிவு ஜீவிகளாக்கும் பள்ளிக் கூடங்களின் பணி மகத்தானதாகும்.



இப்பணியை கடந்த அறுபது ஆண்டுகளாகச் செய்து வரும் செயிண்ட் மேரி பள்ளிக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.


1 comment:

  1. அருமையான மலரும் நினைவுகள் :-) மலரை பற்றியே எழுதிய மலரும் நினைவுகள்! :-)சிச்டருடன் இருக்கும் உங்கள் புகைப்படம் நன்றாக உள்ளது. நான் படித்ததும் பாத்திம்மா கான்வென்ட் என்னும் பள்ளிக்கூடத்தில் தான். So I can relate to what you say.

    amas32

    ReplyDelete