15 Oct 2012

நவராத்திரி

                         இன்று மஹாளய அமாவாசை. நவராத்திரி, தசரா என்றும், பொம்மைக்கொலுப் பண்டிகை என்றும் காலம் காலமாகக் கொண்டாடப்படும் சக்திவழிபாடு தொடங்குவதற்கு ஆயத்தம் செய்யும் நாள். வீடுகளிலே பரம்பரையாக வைக்கப்படும் கொலுப் பொம்மைகளை ஐந்து, ஏழு எனப்படிகள் அமைத்து வைத்து துர்கை, இலக்குமி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியரை வழிபடும் காலம்.

என்னங்க, அட்டத்தில இருக்கிற கொலுப் பெட்டிய எல்லாம் கீழே எறக்கிவச்சுட்டு ஆபீசுக்குப் போவீங்களாம், சரியா?
சரி, சரி அந்தச் சின்ன மர ஏணியைக் கொண்டா என்கிறார் சிவன். அவருடைய இரண்டு குழந்தைகளும் உதவி செய்ய ஆஜர். ஒரு பெரிய இரும்புப் பெட்டி, இரண்டு அட்டைப் பெட்டிகள், ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பா. அம்புட்டுதான்.

அம்மா, நாந்தான் பார்க், மலை, கிராமம் எல்லாம் செய்வேன் என்கிறான் பிள்ளை.
நாந்தான் கிருஷ்ணருக்கு அலங்காரம் செய்வேன், இந்தவாட்டி வயல், மரம் வைத்து 'க்ரீன் ப்ளேனட்' செய்வேன், அவன் என்னோட சண்டை போடக்கூடாது, இது பெண்.

என்ன சொன்னேன் நான்? சண்டை போடாம ரெண்டுபேரும் என்ன வேணுமினா செய்யலாம்! ஓ.கே?
இன்னிக்கு படி கட்டப் போறோம், அதனால சீக்கிறமா குளிச்சுட்டு வருவீங்களாம், சரியா?........

அரிசி, பருப்பு வகைகள் என வருடசாமான்கள் உள்ள பெரிய டின்களிலிருந்து பத்து நாட்களுக்கு வேண்டியவற்றை சின்ன டப்பாக்களுக்கு மாற்றி, டின்கள் எல்லாம் வாசல் ரூமில். மரப்பலகைகள், பழைய தினசரித்தாள்கள், பழைய வேஷ்டிகள், பட்டுப் புடவை என எல்லாம் ரெடி!

சுத்தமாக ஒட்டடை அடித்து, துடைத்த இடத்தில் கிழக்கு மேற்காக டின்களை அடுக்கி,மேலே பலகைகள்! அதன் மேலே தினசரித் தாள்கள், கீழே விழாமல், மடித்து ஒட்டி, அதன் மேல் பழைய வேஷ்டிகள். பக்கவாட்டில் டின்கள் தெரியாமல் மறைத்துக் கட்டி, படிகள் மேல் பட்டுப் புடவை சரிகை பார்டர் தெரியுமாறு செய்து, ஆங்காங்கே காயிதப் பூக்களை ஒட்டியாயிற்று.

பித்தளைச் செம்பு பளபளக்க, மஞ்சள் குங்குமம் வைத்து, ஏலம், பச்சைக்கற்பூரம் உள்ளே இடப்பட்டு, தண்ணீர் நிரப்பி, மாவிலைக் கொத்தை வைத்து அதன் மேல் மஞ்சள்குங்குமம் பூசிய அழகிய தேங்காயைக், குடுமி மேலே தெரியுமாறு வைத்து, பொன்னாபரணம் சூட்டி மேல்படியில், நடுவே வைத்து அம்மனை கலசத்தில் ஆவாகனம் செய்தாயிற்று.

அம்மா முதலிலே விநாயகர் தானே?யானை சாமி!
பார்த்தாயா, யானை வலிமை உடையது. கூடி வாழும் இயல்புடையது. அது போல நமக்கு எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதிர்த்து நின்று வெற்றி பெற சக்தியைக் கொடு, கூடிவாழும் நல்ல மனதைக் கொடு என்று கேட்பதற்காக முதலில் விநாயகர்.  அடுத்தது வள்ளி தெய்வானையோடு முருகன்!

ராமர் சாமி அவங்க அப்பா காட்டுக்கு, போ அப்பிடின்னு சொன்னதும் எதித்துப் பேசாம சரின்னு சொல்லிட்டார் இல்லியாம்மா? சீதாம்மா பொறுமையோட எந்தக் கஷ்டம் வந்தாலும் சரின்னு கூடப் போனாங்க. அனுமார்னா பக்தி, சரியாம்மா?
தசாவதாரங்கள்! பரிணாம வளர்ச்சிக்கு சாட்சியாய், ஒவ்வொரு அவதாரத்தையும் ஒரு கற்பனைக் கதையாய், சொல்லியுள்ள திறமை வியப்புக்குரியது!
ஒவ்வொரு பொம்மையிலும் ஒரு புராணக் கதை மாதிரி, ஒவ்வொன்றையும் வாங்கிய இடம் வருடம் எனக்
கதை சொல்லும் பொம்மைகளை எல்லாம் வைத்து, செட்டியார் கடையும் வைத்தாகிவிட்டது. கொலு ரெடி! வண்ணவிளக்கு அலங்காரமும் முடிந்தது.

குழந்தைகள் இருவரும் மணலைக் கொண்டு வந்து கொட்டி, பூங்கா, மலைக் கோவில், மிருகக்காட்சி சாலை, கிராமம் என நினைத்து நினைத்து ஒவ்வொன்றாகச் செய்து குச்சிகளால் வேலி கட்டினார்கள்.

வண்ண நிறப்பொடிகளால் கோலம் வாசலையும், கொலுவையும் அலங்கரிக்க,மாவிலைத் தோரணங்களால் விழாக்காலம் பூண்ட வீடு!

அம்மா நான்தான்  எல்லோருக்கும் வெற்றிலை, பாக்கு கொடுப்பேன். அண்ணா பிரசாதம் கொடுப்பான், நீ சந்தனம், குங்குமம் கொடு.

பத்து நாட்களும் காலையில் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, மாலையில் சவுந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, பிற ஸ்துதிகள்! குழந்தைகளின் சங்கீதாஞ்சலி, பாயச, சுண்டல் பிரசாதங்கள். உறவினர், நண்பர்கள் என ஒருவறை ஒருவர் சந்தித்து, செய்திப் பரிமாற்றங்கள் செய்து மகிழ்ந்து, போவது தெரியாமல் பறக்கச் செய்யும் பண்டிகை.

மனம் லேசாகும், ஒரு நிம்மதி, சந்தோஷம், எனக் குடும்பம் முழுதும் ஆனந்திக்கும்! இதுதான் தசரா கொண்டாடுவதின் அடிப்படை நோக்கம். வழிபாட்டிற்காக பத்து நாட்கள்! முழு மனதோடு செய்தால் வருடம் முழுவதும் சந்தோஷம் கிடைக்கும்.

பிரபஞ்சம் முழுவதும் அவளுடைய சன்னிதி, சூரிய, சந்திரர்கள் தீபங்கள். வான விதானத்தின் கீழே அமர்ந்து, வாயு சாமரம் வீச, ஆர்ப்பரிக்கும் கடலலைகளின் நடனத்தைக் கண்டு, ஆணந்திக்கிறாள் அன்னை பராசக்தி!
அம்மா, அம்மா என்று உன்னைத் தேடி, இந்த  உடற்சிறையிலிருக்கும் உயிர்க் கிளியானது உள்ளம் நொந்து குழைகின்றது அம்மா!
மழைக்கு நடுங்கும் சிறுகுயில் போல, இந்த வாழ்க்கையின் இன்பம், துன்பம் என்ற உணர்வுகளில்   உழன்று   உன்னை அழைக்கின்றேன் அம்மா!
அறியாச் சிறுமியாம் எனக்கு உன் அருளைத்தர வருவாய்.
அம்மா, செந்தமிழ்த் தேன் பொழியும் நாவு வேண்டும்.
யார் வந்து கேட்டாலும் இல்லை எனச் சொல்லாமல் செல்வம் பொழியும் கைகள் வேண்டும்.
துன்பப் படும் மாந்தரைச் சாய்த்துக் கொள்ளும் வலிமை மிக்க தோள்கள் வேண்டும்.
பந்தங்கள் இல்லாத மனம் வேண்டும்!
உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன் அன்னையே!
என் வாழ்க்கையை உன் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன் அன்னையே, அருள் மழை பொழிவாய்!












2 comments: