27 Sept 2012

அம்மா, தாயே!

'மாதம்தோறும் கணவன்மார்கள் தங்கள் வருமானத்தில் ஒரு தொகையை இல்லத்தரசிகளுக்கு சம்பளமாகத் தர வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒரு யோசனையைத் தெரிவித்து இருக்கிறது.' இது செய்தி!

நல்ல யோசனை- மொத்த சம்பளமும் எங்க கைக்கே வந்தா பரவாயில்ல; முதல் மாச சம்பளத்த அம்மாக்காரி கையில கொடுக்கலாம்னா, அடுத்த மாதத்தில இருந்து பெண்டாட்டி கையில கொடுத்தா என்ன தப்பு? என்று மாமியார் எதிரிக் கட்சியிலிருந்து ஒரு மருமகப் பொண் எழுதி இருக்கு.

அடிப்படை சம்பளம், தன்பிறந்த வீட்டிலிருந்து இடம் பெயர்ந்து வந்ததற்கான இழப்பீட்டுத் தொகை, தான் கொண்டுவந்த வெள்ளி, தங்கத்துக்கான  வட்டி, படித்ததற்கான செலவில் ஒரு சதவிகிதம், ஒரு தாயாக, மனைவியாக, சமையல் மற்றும் பிற வீட்டு நிர்வாகம் செய்வதற்கான   ஊதியம்   இதையெல்லாம்  இல்லத்தரசி   கேட்கலாம்.   என்ன   பேராசை!

சரிதான் மனைவியும் நல்ல சம்பளம் வாங்குபவராக இருந்தால் கணவன், வீட்டு வாடகை, வீட்டுச் செலவில் பாதி, இவற்றைக் கேட்டு வாங்கலாம். [கொடுத்தால்]

அட, புருஷன் கிட்ட சம்பளம் வாங்க பெண்டாட்டி என்ன வேலைக்காரியா, விபச்சாரியா?
ஒரு மனைவியாக, தாயாக இருக்க சம்பளமா? 
ஆமாங்க, மாங்கு மாங்குன்னு காத்தால இருந்து, ராத்திரி படுக்கற வரை உழைச்சாலும் என்ன லாபம்? 
ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு மூவாயிரம் ரூபாயை, மாதம்தோறும் கொடுக்க முடியுமானால் மனைவிக்கு சம்பளம் கொடுப்பதில் என்ன தப்பு? என்று கேட்கிறது ஒரு இளம் மனைவியர் கூட்டணி!

Are you a Housewife? என்ற கேள்வி சர்வ சாதாரணமாகக் கேட்கப்படுவதுதான். அது என்ன House wife, office wife? அப்பிடீன்னு இருக்கா என்ன? I am a Home maker, னு  சொன்னேன் என்றாள் செல்வி.
இது ஆங்கில மோகத்தால் வந்தது. தமிழ் மொழியைப் பாருங்கள்! வாழ்க்கைத் துணை நலம், இல்லாள், இல்லத்தரசி என்று ஒரே அடியாக பெண்களைப் பெருமைப் படுத்துகிறது.

இன்றைக்கு வாழ்க்கைத் துணை நலமாயிருப்பவர்களை விட, இல்லத்தரசிகள் தான் அதிகம். என்றைக்கு பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றார்களோ அன்றிலிருந்து நம்முடைய கலாச்சாரம் மாறிக்கொண்டு வருகிறது. 

பாருங்களேன், காஷ்மீரிலிருந்து, கன்யாகுமரிவரை யார் நாட்டை ஆள்கிறார்கள்? என்னதான் ஆண்மகனானாலும் ஒரு கேலிச் சித்திரமாவது பயப்படாமல் வரைய முடியுமா? தைரியமாகப் பேச முடியுமா?

'மூன்று முடிச்சு' போட்டாலும், 'இரு கோடுகளும்' ஒன்றுக்கொன்று மதிப்பும் மரியாதையும் கொடுத்து, இணைகோடுகளாய் இருந்தால்தான் 'வாழ்க்கை', 'கல்யாணப்பரிசாக', 'அன்னை'யென்னும் 'தங்கப்பதக்கத்தைக்' கொடுத்து, வாழ்த்தும்.

 உருப்படியில்லாத யோசனைகளைத் தெரிவிக்காமல் புத்திசாலித்தனமான, ஆக்கபூர்வமான யோசனைகளை அமைச்சகங்கள் தெரிவிக்க வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

ஆ, ஒரு விண்ணப்பம்! பேசாமல் அரசாங்கமே எல்லா இல்லத்தரசிகளுக்கும் சம்பளம் கொடுத்தா என்ன? 




1 comment:

  1. அரசாங்கத்திற்கு கொடுக்க தெரியாது எடுக்கதான் அல்லது கொள்ளை அடிக்கதான் தெரியும்

    ReplyDelete