20 Oct 2012

கூட வந்த அனுமார்

இன்றைக்குக் காலையிலே திடீரென்று ஒரு ஆசை வந்து விட்டது! பெங்களூர், வசந்தநகர் அனுமார் கோவிலுக்குப் போகவேண்டும் என்பது தான் அது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் கோவிலுக்குப் பக்கத்தில் குடியிருந்தோம். சிறிய கோவில், சுற்றிலும் மரங்களோடு அமைதியாய் இருக்கும் சூழ்நிலை, ராமநாமம் எப்போதும் ஒலிக்க, ஆரத்தி நேரம் சிலிர்க்க வைக்கும். மாலையில் வசந்தநகர் சென்று, காய்கறிகள் வாங்கிக்கொண்டு சரியாக ஏழு மணிக்கு உள்ளே சென்றுவிடுவோம்.பிரசாதம் பெற்றுக் கொண்டு வரும் வழியில், தெரு முனையில் இருக்கும் தொலை பேசியையும் உபயோகப் படுத்திய பின் வீடு திரும்பிய நாட்களை மனம் எண்ணிப் பார்க்கிறது.

காலையில் போக முடியவில்லை! மாலை 5 மணிக்கு ஆட்டோவில் ஏறினோம். என்ன போக்குவரத்து!
அப்பாடா,வெகு வேகமாய்ப் போய் சிக்னலில், நகராத நெரிசலில், டீசல், பெட்ரோல் புகை நடுவில்!
பேருந்துகள் புகமுடியாத இடைவெளிகளில் புகும் மோட்டார் வாகனங்கள், இடையே நுழையும் சிறு கார்கள், குறுக்கும் நெடுக்குமாய், சுற்றிவளைத்துப் புகுந்து போகும் இரு சக்கர வாகனங்கள்! இவற்றுக்கு இடையே 10, 12 வயது பையன்கள் இருவர் சைக்கிளில் புகுந்து புகுந்து சிரிப்பும், உல்லாசமுமாய்  என்னை பயமுறுத்தினார்கள். இளங்கன்று பயமறியாது.  நிஜமாகவே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் போனோம். ஆட்டோக்காரர் கன்னாபின்னா என்று ஓட்டி, பத்திரமாகப் போய்ச் சேர்ந்தால்  போதும் என்று செய்துவிட்டார்.

ஆறேகால் மணிக்கு கோவிலை அடைந்தோம். எப்போதும் போல் ஆஞ்சனேயர் ஆனந்தமாய் தரிசனம் கொடுத்துக் கொண்டு இருந்தார். அவரிடம் கொஞ்சம் பேசிவிட்டு, வலம் வந்து பிரசாதத்தோடு ஏழரை மணிக்கு வந்து சேர்ந்தோம்.
என் கணவர் சொல்வார், 'ஏம்மா, பக்கத்தில இருக்கிற முருகன் கோவிலுக்கு வேண்டிக் கொள்ளக் கூடாதா. அது என்ன திருச்செந்தூர், எப்போதும்'?
நான் சொல்வேன், வைத்யநாதன் என்றபெயரில் ஊர் உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
ஆனால் பிறந்ததில் இருந்து முகம் பார்த்துச் சிரித்து, உரிமையோடு என்னை வளர்த்து ஆளாக்கிய என் தந்தையைத் தான் ஏதாவது வேண்டுமானால் கேட்கமுடியும். பக்கத்துத் தெருவில் அதே பெயருடைய வைத்திய நாதன் என்பவரைக் கேட்க முடியுமா? 

அது போலதான் எனக்குப் பிடித்தவன், என்மனத்தைத் திறந்து பேசவைப்பவன், என்னை நெகிழச் செய்பவன் அந்தச் செந்தில்நாதன்தான்! வருடத்துக்கு ஒரு முறையாவது அவனைப் பார்க்க வேண்டாமா? என்பேன்.
அதையேதான் இப்போதும் சொல்கிறேன். பக்கத்திலேயே இருக்கும் அனுமார் கோயிலுக்கு எல்லோரும் வர, போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும் நேரத்தில்  எதற்கு வசந்தநகர் போகவேண்டும்? என் உள்ளம் கவர்ந்தவர் வசந்தநகர் அனுமன்தான். நான் என்ன செய்யட்டும்? சொல்லுங்கள்!

திரும்ப வரும்போதும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு, ஆட்டோக்காரர் அசுர வேகத்தில் வண்டியை ஓட்ட,   பயந்து  நடுங்கிக் கொண்டு முன்னே பார்த்தால்.......

 ஆட்டோவில் அனுமன் கையில் கதையோடும், சஞ்சீவி மலையோடும், கயிற்றில் தொங்கிக் கொண்டு வந்தார்! பத்திரமாக எங்களை வீட்டில் விட்டார். உண்மைதாங்க!இது வரையிலும் நிறைய ஆட்டோக்களில் பயணித்திருக்கிறேன், எந்த ஆட்டோவிலும் பொம்மைகளைப்  பார்த்ததில்லை. மியூசிக் சிஸ்டம்தான் இருக்கும். நீங்கள் என்றாவது இந்த ஆட்டோவில் பயணிக்க நேர்ந்தால் மீண்டும் இந்த வலைப் பதிவைப் படியுங்கள்!

ஶ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம்!


1 comment:

  1. "வைத்யநாதன் என்றபெயரில் ஊர் உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் பிறந்ததில் இருந்து முகம் பார்த்துச் சிரித்து, உரிமையோடு என்னை வளர்த்து ஆளாக்கிய என் தந்தையைத் தான் ஏதாவது வேண்டுமானால் கேட்கமுடியும். பக்கத்துத் தெருவில் அதே பெயருடைய வைத்திய நாதன் என்பவரைக் கேட்க முடியுமா?" - அசத்தலான வாதம்.

    ReplyDelete