16 Jul 2017

ஶ்ரீஅரவிந்தர் -12
 இதுவரை ஶ்ரீ அரவிந்தர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்  உணர்ச்சியூட்டும் எழுத்துக்களால் கொண்டுவந்த தேசியவாதம், சுதேசி இயக்கம், பூரணசுதந்திரக் கொள்கை ஆகியவற்றைப் பார்த்தோம்

இனி அரவிந்தரின் மறுபக்கத்தைப் பார்ப்பது இங்கே அவசியமாகிறது. இவ்வளவு தீவிரமாக இந்திய தேசமே தன் தாய், தேசிய விடுதலையே தன் உயிர் மூச்சு, தனக்கென்று தனிப்பட்ட உலக வாழ்வே இல்லையென்று வாழ்ந்த அரவிந்தர் ஏன் சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து திடீரென விலகினார்? ஏன் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரிக்குத் தலைமறைவாகச் சென்றார்
அலிப்பூர் சதி வழக்கில் அரவிந்தரின் பங்கு என்ன? இவற்றை அறிந்து கொள்ளுமுன் 
நாம் மீண்டும் அவரது ஆன்மிக வாழ்வின் பல்வேறு நிலைகளைப் பார்ப்போம்

1872 ல் பிறந்த அரவிந்தர் 1877 ஆம் ஆண்டு  பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டார். 1893ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார். பம்பாய்த் துறைமுகத்தில் இறங்கிய அவர் உள்ளத்தில் அதுவரை இருந்த இருள்நீங்கி, பரிபூரண அமைதி நிலவிற்று. ஒரு தாயின் அன்பு நிறைந்த அணைப்பின் ஆனந்தமும், அமைதியும் அவரை ஆட்கொண்டன.

தெய்விக அனுபவங்கள் அவர் வாழ்வின் ஒரு பகுதியாயிற்று.
"தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவனின் வாழ்வில் தெய்வம் ஒரு பகுதியாகி, அவனை வழி நடத்துகிறது. " 

பரோடா வந்த அரவிந்தரும் இந்திய அரசியல், மற்றும் சமூக வாழ்வினை நன்கு புரிந்து கொண்டார். ஆகவே இரண்டு அம்சங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதது என உணர்ந்தார்ஒன்று தாய் நாட்டின் சுதந்திரம். இரண்டு மனித வாழ்வை பக்குவமாக்க, யோக வாழ்வை சரியான நேரத்தில் ஆரம்பித்து அதில் வெற்றியடைதல்.

முதலில் யோகா என்றால் என்ன என்பதை அறியலாம்.  'யுஜ்' என்னும் சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து தோன்றியது 'யோகா' என்ற சொல். ஒவ்வொரு தனி மனிதனின் ஆன்மா, பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றிணைதல்  யோகம்சுமார் ஐயாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவே 'யோகா'. தன்னுள் எப்படி எத்தகைய  நல் ஒழுக்கங்களைக் கடைப் பிடித்தால் பிரபஞ்ச சக்தியை அறியலாம் என்பதைக் கற்றுத் தருவத்தே யோகா

உலகம் தோன்றிய நாளிலிருந்து தன்னுடையபிறப்பையும்அதன் காரணத்தையும் அறிய முயலுகிறது மானுடம். அந்த ஆராய்ச்சியின் பயனாகத் தோன்றியதே யோகா. ஆசனங்கள் செய்வதோ, மூச்சுப் பயிற்சி செய்வதோ யோகா அன்று. அவை யோக வாழ்வின் முதல் இரண்டு படிகள் மட்டுமே

சிக்கல்கள் நிறைந்த அற்புத இயந்திரமே மனித உடல். அந்த உடலை ஆள்வது மனம். உட்சக்தியாக மறைந்து விளங்குவது ஆன்மா. ஐம்புலன்களாகிய யானையை மனமெனும் அங்குசத்தால் அடக்கி, தன்னை அறிய முயல்வதே ஆன்ம தரிசனம். அதுவே மனிதப்பிறவியின் நோக்கம்!

பரோடா சமஸ்தானத்தில் வேலைக்கு சேர்ந்த அரவிந்தருக்கு குதிரைகள் பூட்டிய வண்டி ஒன்று பயணம் செய்யக் கொடுக்கப்பட்டிருந்தது
ஒரு நாள்........
அவர் பயணம் செய்த வண்டிக்கு விபத்து நேர இருந்தது. ஆனால் அது தடுக்கப்பட்டது. எப்படியென்பதையும் தன் அனுபவத்தையும் ஒரு கவிதையில் பதிவு செய்துள்ளார் ஶ்ரீஅரவிந்தர்

"நடனமிடுவதைப்போல குதிரைகள் குளம்படிச் சப்தம் எழுப்ப
கூச்சல் நிறைந்த சாலையைத் தாண்டி,
நான் பயணித்த வண்டி ஆபத்தை எதிர் நோக்கியது.
குளிர்ச்சி பொருந்திய சோலையுள் நுழைந்தார்போலும் 
என்னைத் தழுவி அணைத்துக் கொண்டது இறைவனுடைய உடல்.

என் தலைக்குமேல் சக்தி வாய்ந்த அமைதி நிறைந்த முகம் கண்டேன்
எல்லையற்ற பெரு வெளியில் அமரத்துவம் திகழும் 
அந்த ஊடுருவும் பார்வையின் மேன்மையை உணர்ந்தேன்.

சூரிய ஒளியாய் மின்னும் குழற்கற்றைகள் மென் காற்றோடு அசைய
உலகத்தையே தன் இதயத்தில் தாங்கியவனாய் இருந்த அவனே நானாகக் கண்டேன்
அழிவற்ற தேவனின் சக்தியை
என்றென்றும் நிலைத்து நிற்கும் பூரண அமைதியை 
என் இதயக் கோயிலில் குடிவைத்தேன்.

கண நேரத்தில் எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பின.
அந்தக் கணத்தின் நினைவுகள் மட்டும் 
அழியாமல் என்னுள்ளே நிலைத்து நிற்கிறது."

இந்த நிகழ்ச்சி நடந்த போது  கடவுள் என்றால் யார்தெய்விக சக்தி என்றால் என்ன என்பதையெல்லாம் நான் அறியவில்லை. தேஷ்பாண்டே என்பவர் அந்த நாட்களில் யோகாசனங்களும், மற்றும் பல யோக சாதனைகளும் செய்து வந்தார். என்னையும் ஈடுபடச் செய்ய வேண்டும் என்று விரும்பினார், ஆனால் உலகைத் துறக்கும் யோக சாதனைகளை நான் விரும்பவில்லைஎன்னுடைய நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்ற தாகமே என் வாழ்வின் ஒரே நோக்கமாக இருந்தது.

ஆனால் இதே யோக சாதனைகள் ஒருவனின் உடலுக்கு வலிமையையும், மனதுக்கு அளப்பரிய ஆற்றல்களையும் வழங்க வல்லதென்று நான் அறிந்து கொண்ட போது
அந்த யோக சக்தியை என் நாட்டின் விடுதலைக்கு வழி வகுக்கும் கருவியாக ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது  என்று எண்ணினேன்.

ஏதோ ஒரு சக்தி என்னை யோக வாழ்வில் ஈடுபடும்படிச் செய்தது.

யோக வாழ்வில் அரவிந்தரை ஈடுபடச் செய்த நிகழ்வுகளை அடுத்த பதிவில் காணலாம்.

(ஶ்ரீஅரவிந்தர், யோகா,பெயர்க் காரணம், பரோடா அனுபவம், அறிமுகம்...)






No comments:

Post a Comment