31 Dec 2013

கூவம் நதிக் கரையினிலே..............

எங்கள் அண்ணாநகர் இல்லம் - அன்னை L7/2
மெரினாவின்  இனிய காற்று வீசும் மாலைப் பொழுது! உனக்காக கூவம் நதிக்கரையில் ஒரு மாளிகை வாங்கியிருக்கிறேன் என்று சொல்லியபடி வந்தார் மகாராஜா! ஆகா அங்கே கூவத்தில்  படகில் போக முடியுமா என்றேன்! ஹி...ஹி.. ஹி..ஹி..ஹி..............!ஆகா அது உன்னுடைய தாங்கும் சக்தியைப் பொறுத்தது என்றார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரின் படகு வீட்டில் குழந்தைகளோடு சென்று குதூகலித்தோம். பம்பாயில், அந்தமானில் என்று படகுப் பயணங்கள் நிறையவே  செய்து என் ஆசை பூர்த்தியானது!

பாண்டிச் சேரியில் இருக்கிறது 'ஆரோவில்'. ஆனால் கூவம் நதிக்கரையில் பல ஆண்டுகளுக்கு முன் என் கணவரால் பெயர் சூட்டப்பட்ட 'ஆரோவில் குடியிருப்பு'களில் சுமார் 10 வீட்டுவரிசைகள், 40 குடியிருப்புகள். கூவம் நதியிலிருந்து சுமார் நூறடி தூரத்தில்! அதிலே ஒன்று தான் எங்களுடைய மாளிகை. குறைந்த வருமானக் குடியிருப்பு வீடு.

திருவல்லிக்கேணி ஒண்டுக் குடித்தனத்தில் குப்பை கொட்டியவர்களுக்குதான் தெரியும் இந்த ஒற்றைப் படுக்கையறை வீடு பிரிட்டிஷ் மஹாராணியின் மாளிகைக்கு சமம் என்று. நல்ல காற்று, வெளிச்சம், முன்னும் பின்னும் நடமாட இடம்! இரவில் ஓயாமல்  தவளைகளின் இன்னிசை, இலவசமாக!

எங்கேயோ தொலைவில் இருக்கிறது , தெற்குப் பார்த்த வீடு  என்றெல்லாம் போகிற போக்கில் உறவுகளின் புகார்கள். போக்குவரத்து வசதிகள் அதிகம் கிடையாது. மாலை ஆறு மணிக்கு மேல் வெளியே போக முடியாது, தெரு விளக்குகள் அற்ற சாலைகள். அவ்வப்போது கூவம் மணம் வீசும்! கூவத்தின் மறுகரையிலிருந்து சுடுகாட்டு நாற்றம் மூக்கைத் துளைக்கும். 

பதினேழாம் நூற்றாண்டின் புனித நதி கூவம்.  அதன் கரைகளிலே மூன்று சிவன் கோயில்கள் இருந்ததாகவும், கூவத்தில் நீராடி வழிபாடு செய்தார்கள் அன்றைய தமிழர்கள் என்றும் கூகுள் செய்தி கூறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி, பூந்தமல்லி வழியே அரும்பாக்கத்தில் உள் நுழைந்து வங்காள விரிகுடாவில் சென்று சேர்கிற கூவம் இருபதாம் நூற்றாண்டில் அதில் இணைக்கப்பட்ட கழிவு நீர்களால் புனிதம் இழந்து, மக்களால் வெறுக்கப்படும் நிலையில் சீரழிந்து போனது. 

ஒரு நதியை உருவாக்க முடியாவிடினும் எப்பாடுபட்டாவது அழிப்பதிலே வல்லதாயிருக்கும் மானிடம்!

பூந்தமல்லி நெடுஞ்சாலையை அண்ணாநகரிலிருந்து பிரிக்கிறது நடுவே ஓடும் கூவம். இணைப்பது தாழ்ந்த பாலம். பெருமழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் நிதானமாக சங்கிலி போல் கை கோர்த்துக் கொண்டு எல்லோரும் பாலத்தைக் கடந்து செல்வோம்.

ஒரு முறை பெரு மழையால்   தன்னைப் பார்த்து ஓடும் எங்களை விடாமல் துரத்தி, வீட்டுக்குள் அழையாத விருந்தாளியாய் சர்வ சுதந்திரத்தோடு நுழைந்து, தன்னுடைய அழுக்குகளைப் பரிசளித்து ஒரு நாள் முழுதும் சுத்தம் செய்யும் உபகாரத்தைச் செய்தது! குழந்தைகளை மாடி வீட்டுக்கு அனுப்பிவிட்டு கட்டில் மேல் நாற்கலிகளைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். தண்ணீரில் நெளிந்து வந்த பாம்புகள் பயமுறுத்த, தண்ணீர்ப் பெருக்கு அதிகமானால் என்ன செய்வது என்ற கிலியுடன் விடியலை நோக்கிக் காத்திருந்த தருணங்கள்!

பாரதியார் பாடியது போல பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் இல்லாவிட்டாலும் மூன்று தென்னை மரங்கள் வீட்டு வாசலில். மருதாணி, கொய்யா, பவழமல்லிச் செடிகள்! அடுக்குச் செம்பருத்தி சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும், நீல, வெள்ளை சங்கு புஷ்பங்கள் வேலி நிறைய அழகு செய்யும். மாடி வீட்டுத் தென்னை மரங்கள்,  பூந்தோட்டம் பக்கவாட்டில்.  கோடை காலத்திலும் வெயில் தெரியாமல் செய்யும் தென்னங் கீற்று நிழல்.

வெளியிலே ஒரு உலகம் இருப்பதே தெரியாமல் அண்ணாநகரில் வாழ்ந்து வந்தோம்! எங்கள் வாழ்க்கையின் மிக முக்கிய காலகட்டம் அது. அலுவலகப் பணி காரணமாக நாங்கள் சென்னையிலிருந்து இடம் பெயர வேண்டியிருந்தது. ஆனாலும் 19 ஆண்டுகளின் கதைகளை தன்னுள் புதைத்துக் கொண்டு வேறொருவர் வீடாக அது இன்னும் இருக்கிறது. தென்னை மரங்கள்தான் இல்லை! 

சாதாரணமாக கடந்த காலத்தை நான் நினைப்பதில்லை. அந்த நேரத்தில் வாழ்க்கை எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்து விட்டது! நடந்ததை மாற்றியிருக்க முடியுமா? வரப் போவதைத் தடுக்க முடியுமா? இதோ நேற்றுக் காலையில் எங்கள் குடும்பத்தில் ஒருவரின் இதயம் நின்று போனது! யாரால் என்ன செய்ய முடிந்தது? மாறுதல்கள்தான் வாழ்க்கை!

இப்போது என்ன திடீர் ஞாபகங்கள் என்கிறீர்களா?  

 நான் பத்தொன்பது ஆண்டுகள் ஒரு ஆசிரியையாக ஓடிக்  கொண்டிருந்த காலகட்டம் அது. அதிகமாக எல்லோருடனும் பேசி மகிழவோ, மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ நேரமிருக்காது.

எங்கள் மாடி வீட்டின் சொந்தக்காரர்கள்தான் திருமதி. மல்லிகா, சபாநடேசன் தம்பதியர். இவர் நடராஜர், கீழே பக்கத்து வீட்டில் சண்முகம்! திருமதி. மல்லிகா - நல்ல உயரம். எப்போதும் சுங்கடி சேலைதான் உடுத்துவார். முருக பக்தை. அவர்தான் செந்தில் முருகனை எனக்கு அறிமுகப்படுத்தியவர். வெஜிடபிள் பிரியாணி, ஆம்லெட், இடியாப்பம், கோதுமை ஹல்வா என எனக்கு அவர் சொல்லித் தந்த சமையல் மெனுக்கள் நிறைய! தோட்டம் போடுவதில் அவர்களுக்கும் ஆர்வம் அதிகம்.நவராத்திரி நாட்களில் பொம்மைக்கொலு அருமையாக வைப்பார்கள்.

பெரும்பாலும் ஜன்னல் வழியேதான் பேச்சு நடக்கும். அவர்களுடைய சகோதரர்  டாக்டர். என் மகனுக்கு மருத்துவம் பார்த்தவர்.

எங்கள் நட்பு வட்டம் பெரியது.   திருமதிகள். ஹேமா, பாப்பா, ஜெயா, ராதா,  சாந்தா, ஜூலா எல்லோர் வீட்டிலும் பண்டிகைகள் சமயத்தில் ஒன்று சேர்வோம். இன்னும் அங்கேயே 43 ஆண்டுகளாக வசிக்கும் இவர்களால் எங்கள் நட்பு இன்னும் தொடர்கிறது என்பது சந்தோஷம் தருகிறது.

ஆறு மாதங்களுக்குமுன் ஒரு நாள் சகோதரி மல்லிகா என்னை அலை பேசியில் அழைத்தார். இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ஒருவருடன் ஒருவர் மீண்டும் பேசிய அந்தக் கணம் தந்த சந்தோஷத்தை எழுத்துக்களால் வர்ணிக்கவும் முடியுமோ? நல்ல நண்பர்கள் கடவுள் மாதிரி! எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, அன்பை மட்டுமே நாடி நிற்கும்  பேச்சுத் துணைவர்கள். மூச்சு நிற்கும் மட்டும் எங்கள் நட்பு தொடர்வதாக!

பூந்தமல்லி நெடுஞ்சாலையை அண்ணாநகருடன்  இணைத்த பாலம் உயரமாகக் கட்டப்பட்டு விட்டது.
ஆனால் கூவம் நதி மட்டும் சாக்கடை நாற்றம் வீசும்,  கழிவுகளின் மையமாய், கொசுக்களின் உற்பத்தித் தலமாய் அமைதியாய் தன்பாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சிவனே என்று நடை பயில்கிறது! அதற்கு ஏது விமோசனம்?

எது எப்படியோ, கூவமும் கூவம் நதிக்கரையும் அப்படியே இருந்தாலும் எங்கள் வீடுகள் இரண்டும் இணைக்கப்பட்டு ஒரே வீடாக மாறிவிட்டது. ஆம், புதிதாக அந்த வீட்டை வாங்கியவர் கீழ்,மேல் என இரண்டையும் வாங்கி ஒன்றாக்கி விட்டார். எங்களுடைய நட்பும் புதிப்பிக்கப் பட்டு இடையே நடந்த கதைகளை இன்று பேசிவருகிறோம்.

என்றென்றும் மறக்க முடியாத கூவம் (நதிக்கரை)!............................. அண்ணாநகர்!எங்களுடைய வரலாற்றின் ஒரு பக்கம்!

அனைவருக்கும் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். 2014 ஆம் ஆண்டில் நோய் நொடியற்று, ஆரோக்யமாக அனைவரும் அனைத்தின்பங்களும் பெற்று இன்புறுவார்களாக!






6 comments:

  1. நீங்கள் கட்டாயம் ஒரு புத்தகம் வெளியிட வேண்டும். இதை என் அன்புக் கட்டளையாகவும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பொக்கிஷ நினைவலைகள் படிப்பவர்கள் மீது நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சூப்பர் போஸ்ட் :-)

    amas32

    ReplyDelete
  2. Thank you Sushima. No one wants to buy books nowadays.

    ReplyDelete
  3. Madam, very beautifully written.

    ReplyDelete
  4. What a wonderful house and the path you come across. surprise to know how a river is badly converted to dirty river. Very nice! very nice! you take me to your old house.
    RAVICHANDRAN

    ReplyDelete
  5. Thank you Ravi. Keep reading.All I want is your encouragement.

    ReplyDelete