23 Dec 2013

திருப்பாவை - ஆண்டாள்

மார்கழி மாதம் என்றாலே நினைவுக்கு வருவது திருப்பாவை. விடியலின் பஜனைப் பாட்டு, வாசல்கள்தோறும் அலங்கரிக்கும் அழகிய பெரிய கோலங்கள். கோயில்களில் கிடைக்கும் சூடான பொங்கல்!
தனுர் மாதம் எனப் போற்றப்படும் மார்கழி - மார்கசீர்ஷம் என்ற பெயரும் பெற்றுள்ளது. (மார்கம் - வழி, சீர்ஷம் - முதன்மையான) இவ்வுலகில் பிறந்த எல்லோருமே ஏதாவது ஒரு தருணத்தில் எல்லாவற்றுக்கும் மேலான, எவராலும் அறிய முடியாத இறைவனை அறிந்து கொள்ள முயல்கிறோம். அவசர உலகில் அல்லல் படும் அனைவரும் பின்பற்றி அடையக் கூடிய மிக எளிய வழியை நமக்குக் காட்டுகிற மாதம்  மார்கழி.
பலவிதமான யோகங்கள், பக்தி மார்க்கங்கள், அறிவியல் ஆராய்ச்சிகள் பரம் பொருளைப் பற்றிப் பேசுகின்றன. இறைவனுடை நாமத்தைச் சொல்லுதல், மலரிட்டு வணங்குதல், முழுமையான நம்பிக்கையை அவனிடம் வைத்தல் அடங்கிய பக்தி மார்க்கமே அந்த எளிய வழி என்கிறது  முப்பது பாசுரங்கள் அடங்கிய திருப்பாவை. இசையோடு
இயைந்த செந்தமிழ். திருமாலின் திருநாமங்கள்! மாயக்கண்ணனின் விளையாட்டு லீலைகள். ஒருஅழகிய நாடகத்தை அற்புதமாகப் பாடி அரங்கேற்றுகிறாள் கோதை நாச்சியார். ஆயர்பாடியில் தன்னோடு சேர்ந்து பாசுரம் பாட வைக்கிறாள். இந்திய பக்தி வானிலே ஒளிரும் நட்சத்திரங்களாக பெயரும் புகழும் பெற்ற பெண்டிர் இருவர். வட நாட்டில்  கண்ணனையே காதலித்து, மேவார் மன்னனின் பட்ட மகிஷியான பின்பும் சுக போகங்களில் திளைக்காமல், இசையால் கிரிதரகோபாலனைக் கட்டுவித்து அவனுடன் ஒன்றிய பக்த மீராபாய் முதல்வர். மீரா பஜனைப் பாடல்கள் இன்றும் வடநாட்டினரால் போற்றப்படுகின்றன.
 இரண்டாவதாக, கருவிலே தோன்றாமல், விஷ்ணு சித்தரின் துளசி வனத்தில் தோன்றி, அவருடைய செல்லப் பெண்ணாய் வளர்ந்த சூடிக் கொடுத்த சுடர்க் கொடி, திருவரங்கத்து திரு அரங்க நாதனின் இதயத்தையும், நம்முடைய மனதையும் ஆள்பவள் ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியார். கோதை நாச்சியார் கண்ணனிடம் கொண்ட காதல் நினைந்து நினைந்து இன்புறத்தக்கதாகும்.
கோதை யார்? திருமாலின் பத்து அவதாரங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது  வராக அவதாரம்.  ஹிரண்யாட்சன் என்ற அரக்கனிடமிருந்து ஆழ்கடலில் ஒளித்து வைக்கப்பட்ட பூமியை திருமால் மீட்டெடுத்தான். வராஹத்தின் மூக்கிலே ஒட்டிக் கொண்ட பூமி தேவி அழ, காரணம் கேட்கிறார் வராஹமூர்த்தி. தன்னைக் காப்பாற்றியதுபோல் அவஸ்தைப்படும் மற்றவர்களும் அழைத்தால் நீ சென்று காப்பாற்றுவாயா?  என்று கேட்கிறாள் பூமித்தாய். என்னை வழிபட்டு, என்னை அழைத்தால் காப்பாற்றுவேன் என்கிறான் திருமால். 
அது சரி. உன்னை வழிபட எளிதாக எல்லோராலும் பின்பற்றமுடிந்த வழியைச் சொல் என்கிறாளாம் அன்னை.
என்னை வழிபட என்ன செய்ய வேண்டும்? என்னைக் கூப்பிட வேண்டும், மலரிட்டு என்னை வணங்க வேண்டும், சரணாகதி பண்ண வேண்டும். அவ்வளவுதான். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம் என்கிறான் திருமால்.
பெரிய மனிதர்களைச் சந்திக்கச் சென்றால் மிகவும் மரியாதையாக அவர் பெயரைச் சொல்கிறோம்; பூச்செண்டு கொண்டு போகிறோம். உங்களை விட்டால் யாரால் செய்ய முடியும் என்று சொல்கிறோம்.அது போலதான் இதுவும்.

எல்லா அவதாரங்களும்  முடிந்தபின் வைகுந்தத்தில் பள்ளிகொண்டிருந்த பரந்தாமன் தான் உபதேசித்த 'கீதா' சாரத்தினால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்று எண்ணுகிறான். மஹாலட்சுமியை மீண்டும் அவதாரம் செய்யச் சொல்கிறானாம். அவள் மறுக்க பூமாதேவி அவதரிக்க ஒப்புக் கொண்டு கலி 98, நளவருடம், ஆடிமாதம், சுக்கில பட்ச சதுர்த்தசி, செவ்வாய்க் கிழமை, பூர நட்சத்திரத் திரு நாளில் ஶ்ரீ வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தரின் மகளாய் அவதரித்தாள். அவள்தான் கோதா என்ற கோதை. கோதா என்றால் நல்ல வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடி! ஸ்ரீ ரங்கனை ஆண்டாள்!

கோதையால் புகழ் பெற்ற ஊர் ஸ்ரிவில்லிபுத்தூர்.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர்
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர்
நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லி புத்தூர் வேதக் கோனூர்.

கோதையின் தமிழ்ப்பாசுரம் எப்படியானது? 'பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும், வேதமனைத்துக்கும் வித்தாகும்.' இதை அறியாதவர்கள் பூமியில் இருக்கவே லாயக்கற்றவர்களாம்! 'கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும்
அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு.'

கோதை இருவிதமான மாலைகளைக் கட்டினாள். ஒன்று பூக்களால் ஆன மாலை. அந்த மாலையின் பூக்களே அவளுடைய தூதுவர்கள் ஆயின. மற்றொன்று பாமாலை! திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற பெயரில் விளங்கும் கொஞ்சும் தமிழ்ப் பாடல்கள்.

வேதங்களின் சாரத்தைத் தன்னுள் அடக்கிய பாடல்கள் திருப்பாவை என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர்.
திருப்பாவை காட்டும் பாவை நோன்பு, ஆத்ம சமர்ப்பணம் செய்தல் என்ற உயரிய வழியைக் காட்டுகிறது.
திருப்பாவையை ஓதுவது மஹா யாகம் செய்வதற்கு ஒப்பாகும்.


''திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே''

                                                          -------------------------------














1 comment:

  1. you have actually taken me SRIVILLIPUTHUR ANDAL TEMPLE

    .GEETHA RAVICHANDRAN

    ReplyDelete