3 Jan 2017

காது காது என்றால் ..........!

அந்த ஊரின் மிகப்பெரிய மளிகைக்கடை அது. அங்கு கிடைக்காத
பொருளே இல்லை எனலாம். ஒரு மாலைப் பொழுதில் வியாபாரம் கனஜோராக நடந்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில் விஜயா அந்தக் கடையில் நுழைந்தார்.
ஊருக்குப் புதிதாக வேலை நிமித்தம் வந்தவர் அவர்.

சாமான்கள்  பட்டியலைக் கொடுத்துவிட்டுக் கடை ஊழியரிடம் பேசிக்கொண்டிருந்தார். பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டே பதிலளித்த
ஊழியர் அவரிடம், 'இரண்டு வாரத்துக்கு முன்னால வந்ததுங்க. அப்புறமா காணும். இனிமே அடுத்த வருடம் வந்தாதான் உண்டு' என்றான்.

கடை முதலாளியின் காதில் பணியாள் சொன்னது விழுந்தது. அடடா,இந்தப் பையனுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா! ஒரு சாமான் கேட்டால், இல்லையென்று சொன்னால் இந்தக்கடையைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அடுத்த கடைக்குப் போய்விடுவார்கள். நம் வியாபாரம் அல்லவா படுத்துவிடும் என்று பதறினார். உடனே
எழுந்து விறுவிறுவென்று விஜயாவிடம் போய்,' அம்மா,நீங்க கேட்ட பொருள் வேகமாக விற்பனையாகிற ஒன்று.அதனால் விற்றுத் தீர்ந்துவிட்டது. இன்னும் இரண்டு மூன்று நாளில் வந்துவிடும்.நீங்கள் உங்கள் செல் பேசி எண்ணை கொடுத்துவிட்டுப் போங்கள். வந்ததும் சொல்கிறேன் என்றார்.

விஜயாவுக்கு சிரிப்பு தாங்கவில்லை. ஆனாலும் சாமான்களை வாங்கிக் கொண்டு முதலாளியை முறைத்துப் பார்த்துவிட்டுப் போனார்.

கடை முதலாளி ஊழியரிடம்,' நீ பேசினது போலப் பேசினால் இந்தக்கடையை இழுத்து மூடிவிட்டுப் போய்விட வேண்டியதுதான். யார் என்ன பொருள் கேட்டலும் இல்லையென்று சொல்லக்கூடாது..நான் பார் எப்படிப் பேசினேன். அதேமாதிரி  சாமர்த்யமாகப் பேசணும்,தெரிந்ததா?
அந்த அம்மா என்ன கேட்டாங்க, எந்த சாமான்  அடுத்தவருடம்தான் வரும் என்றாய்?,' என்றார்.
ஊழியர் சொன்னார்,' ஐயா அவங்க இந்த ஊருக்கு புதுசு போல! மழையெல்லாம் நல்லா பெய்யுதான்னு கேட்டாங்க! நான் அடுத்தவருடம்தான் இனிமே,என்று சொன்னேன். அவ்வளவுதான்,' என்றார்.😂

இது மாதிரிதான்  சிலபல சமயங்களில் நாம் சொல்வது பிறருக்குப் புரிவதில்லை. நமக்கும்தான், பிறர் சொல்வதன் பொருள் புரிவதில்லை. 😇

No comments:

Post a Comment