23 Nov 2013

இன்றைக்கு - 23.11. 13

இன்றைக்கு எங்கும் போக வேண்டாம் என்று சோம்பேறியாய் உட்கார்ந்த போது  அலைபேசி அழைப்பு! கொஞ்சம் வந்து போங்கள் என்றது குரல்..
கார் சாரதி இல்லை, ஆகவே ஆட்டோ பயணம்தான்! ராகவேந்திரா மடம் சிக்னலில் செம போக்குவரத்து நெரிசல்! சுமார் ஆறு பேருந்துகள், லாரி, ஆட்டோ, கார்களின் அணிவகுப்பு, இடையே புகுந்து தைரியமாக நிற்கும் இருசக்கர வாகனங்கள்!  சாலையின் இரு புறமும் மருத்துவமனை!
இடது புற நடைபாதையில் இத்தனை சப்தங்களுக்கும் இடையே கண்பார்வையற்ற ஓர் இளைஞன்!
கையில் அவனுடைய நண்பனாய் வழிகாட்டியாய் இருக்கக்கூடிய, நான்காய் மடித்துக் கையில் வைத்துக் கொள்ளும் அமைப்புடைய அலுமினியக் கோல்! தனக்குத் தானே ஏதோ பேசிக் கொள்கிறான் அவ்விளைஞன். அவன் என்ன சொல்லிக் கொள்கிறான்? எப்படி சாலையைக் கடப்பான், அவன் போக வேண்டிய இடம் எதுவாயிருக்கும், என்ற பலத்த சிந்தனையில் கண்களை மூடிக் கொண்டேன்.
பார்வையற்ற அவனைப் பற்றிய சிந்தனையில் என் உள்ளம் நெகிழ்ந்தது. உடனே பார்வையிழந்த ஹெலன் கெல்லர் என்ற பெண்மணியின் வாழ்வு நினைவுக்கு வந்தது.  ஸ்ரீ. ரமணமகரிஷி பார்வை இழந்தோர் தொண்டு நிலையம் ஜே. பி. நகரில் உள்ளது. அங்கு இருமுறை சென்றுள்ளேன். இனி பார்வையை மீட்கவே முடியாது என்ற நிலையில் அதைப் பற்றி எதுவும் அறியாத அந்தக் குழந்தைகளைப் பார்க்கப் பார்க்க மனம் வலித்தது. இது என்ன விளையாட்டோ ஆண்டவனுக்கு?

திரும்பி வரும்போது இந்திரா காந்தி சர்க்கிள், 'சாரக்கி' மெயின் சாலையில் போக்கு வரத்து டக்கென்று ஆமை வேகத்தில்! எல்லோருடைய கண்களும் திரும்புகிற பக்கத்துச் சாலையில்!
ஸ்கூட்டியில் உட்கார்ந்திருக்கும் ஒரு பெண், கல்லூரி மாணவி போல! அவளைக் காதில் கடுக்கன் அணிந்த நடுத்தர வயது வாலிபன் தலையில் அடிக்கிறான். அதுதான் 'டிராபிக் ஜாம்'.எல்லோருக்கும் இலவச நிஜமான சினிமா! என்னுடைய ஆட்டோ சரியான அந்த சந்திப்பில் ஒரு கணம்  நின்ற   போது go,go-என்று சொல்லிக் கொண்டே பைக்கில் பறந்துவிட்டான். அந்தப் பெண் தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு!  ஆட்டோவிலிருந்து இறங்க இருந்த என்னை ஆட்டோ டிரைவர் ''பேடா அம்மா அவரே" என்று சொல்லிக் கொண்டே வேகமாக வண்டியை விட்டார். என் மனம் பதறித் துடித்தது. 'யாராவது உதவி செய்வாங்க, உங்களை ஏதாச்சும் செஞ்சா என்னம்மா செய்யறது, கடவுள் காப்பாத்துவார்' என்றார் ஆட்டோக்காரர். கண்மூடித் திறக்கும் நேரத்தில், இன்னது நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாத பொழுதில்..... இன்னும் என்னுடைய பதற்றம் நீங்கவில்லை. 

கண்ணற்ற ஒருவன்! கண்களிருந்தும் சக ஜீவனை அடித்துத் துன்புறுத்தி ஆனந்தம் காணும் கயவன்! கண்டும் சும்மா இருக்கும் கண்ணிருக்கும் குருடர்கள் பலர். 
என்ன வேடிக்கை?!................. 











No comments:

Post a Comment