25 May 2013

கமொலா எர்கஷெவா! (Kamola Ergasheva)

திருப்பரங்குன்றத் திருப்புகழில் அருணகிரிநாதர்,
''எண்திசை புகழும் புகழ் கொண்டவன் வண்டமிழ்
பயில்வோர்பின் திரிகின்றவன்,''
எனத் திருமாலைப் போற்றுகிறார். எட்டுத்திசையிலும் புகழ் பெற்ற திருமால் தெளிவுடைய செந்தமிழைப்  பயில்வாரது பின்னே அவர் பாடும் பாடலைக் கேட்கும் பொருட்டுத் திரிகிறாராம். தமிழின் பெருமையைப் பாருங்கள்! இத்தனிச் சிறப்பு எம்மொழிக்கு இருக்கிறது?

எட்டுத் திசையிலும் புகழ் மணக்கும் தமிழ் மொழி என்பது எத்துணை பொருத்தமானது என்பதை செய்தித்தாள் செய்தியொன்று எடுத்துச் சொன்னது!

 இந்தியாவிலிருந்து ரஷ்யாவின் ஒரு பகுதியான உஸ்பெகிஸ்தானுக்கு இந்தியக் குழு ஒன்று சென்றது. விமானத்திலிருந்து இறங்கியவுடன் வணக்கம் என்று தேனினும் இனிய தமிழ்ச் சொல்லால் வரவேற்றார் உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண்மணி கமொலா எர்கஷெவா! தமிழ் மொழியின் விசிறி! தமிழ் இலக்கண ஆராய்ச்சிசெய்கிறார். இவர் மூன்றாண்டுகள் முதுகலைப் படிப்பில்  தமிழ் இலக்கணம் பயின்றிருக்கிறார். இன்னும் ஓராண்டில் தமிழ் முனைவர் பட்டம் பெற இருக்கிறார்.

தாஷ்கண்ட் மாநில கீழ்த்திசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகத்தில் மிகப் பெரிய நூலகம் அமைந்துள்ளது.  இந்நூலகத்திற்குச் சென்ற கமொலா அங்கிருந்த    500 க்கும் மேற்பட்ட தமிழ்ப் புத்தகங்களயும், அகராதிகளையும் பார்த்து ஆச்சரியத்திற்கு உள்ளானார். அவற்றைப் படிக்க ஆர்வமுற்ற அவர் அமுதத் தமிழைக் கற்க ஆரம்பித்தார். 

இவர் மாத்திரம் அல்ல! விரைவில் முனைவர் பட்டம் பெற இருக்கும் ''லோல மக்துப'' என்ற ஆராய்ச்சிக் கழக மாணவி 'திரு. சின்னப்ப பாரதி'யின் நாவல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார். ஒரு நாவலை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். மேலும், இவர் சுத்தமான ஹிந்தி மொழியில் பேசி  ஆச்சரியப்படுத்தினார். இவருடைய ஆசிரியர் இவருக்குள்ள மொழி பயிலும் திறமையை உணர்ந்து முதலில் ஹிந்தியும், பின்னர் தமிழும் கற்க ஊக்கப்படுத்தினாராம். தமிழ் கற்ற இவர் பிற மாணவர்களுக்கும் கற்பிக்க, இவரின் முதல்மாணவி கமொலா. 

இங்குள்ள ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் பன்மொழியாளர் 'அசாத் என் ஷாமடொவ்'.  சுமார்  எண்பது மாணவர்கள் ஹிந்தி, உருது, தமிழ், பெங்காலி, பஞ்சாபி ஆகிய இந்திய மொழிகளைப் பயில்வதாகத் தெரிவித்தார். தென் ஆசிய மொழித்துறைத் தலைவர் சிராஜுதின் நர்மோதேவ்  நிறைய மாணவர்களைத் தமிழ்,  ஹிந்தி மொழிகளைப் படிக்க ஊக்குவிக்கிறார்.
{நன்றி - The Hindu, 24th May, Puduchery edition}

குறிப்பு: திரு. சின்னப்ப பாரதி சேலம் மாவட்டம் நாமக்கல்லைச் சார்ந்த பரமத்தி ஊர்க்காரர்.
இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல்வாதி, பிரபல இலக்கியவாதி.
இவருடைய 'சங்கம்' என்ற நாவல் பிரெஞ்சு, ஆங்கிலம், இந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
1986 ஆம் ஆண்டின் இலக்கியச் சிந்தனை விருது பெற்றது.
'சுரங்கம்' என்ற புதினம் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றது. இந்நாவலை 'உபாலி நாணயக்காரா' சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
தாகம், சர்க்கரை, பவளாயி-  நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கெளரவம், தெய்வமாய் நின்றாள்- இரண்டும் சிறுகதை தொகுப்புகள்.

பிறநாட்டினர் தமிழ் மொழியை ஆர்வத்துடன்  கற்றுக் கொள்கின்றனர் என்று கேள்விப்படும் போது ஆனந்தமாயிருக்கிறது. ஒரு மொழிக்காக தமிழ் பயிலும் கமொலா எர்கஷெவா அவர்களுக்கும், லோலமக்துப அவர்களுக்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்! வாழிய செந்தமிழ்!

                                                          









2 comments: