22 Mar 2013

ஆசையில் ஓர் கடிதம்



22 March 2013
Bangalore - 85



அன்புள்ள என் வலைப்பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம்.
                                                                                                                

 நலம் நலமறிய ஆவல். என்ன ஆச்சு உங்களுக்குன்னு கேட்டீங்கன்னா, ரொம்ப நாள் ஆச்சுங்க கடிதம் எழுதி. பழக்கம் விட்டுப் போகக் கூடாதுன்னு, யாருக்கு எழுதலாம்னு பாத்தா, ம் -  யோசிச்சு கொழப்பம் ஆயிடிச்சு. இந்தக் காலத்திலே யாரும் கடிதம் எழுதுவதும் இல்லை. அப்பிடியே யாராவது மெனக்கெட்டு எழுதினாலும் படிக்கிற பொறுமை துளிக்கூட இல்லை. அலைபேசியில் பேசினா யாரானாலும் குதிரை ஓட்டற மாதிரி ''ஹை''ன்னு ஒரு அசட்டுச் சிரிப்பு, கேட்டதுக்காக  ''Fine'' தேங்க் யூ!

என்னப்பா எழுதின லெட்டர படிச்சியான்னு கேட்டா நிதானமா ரசிச்சுப் படிக்க பத்திரமா வெச்சுருக்கேன்னு பதில் வருது.
அந்தக் காலத்தில் என்னுடைய பாட்டிக்கு ஆஸ்தான லெட்டர் ரைட்டராக, ஒரு போஸ்ட் கார்ட் எழுத நாலணா சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன்! என் தந்தையார் அரசாங்கப் பணியில்  இருந்து, அடிக்கடி இடம் பெயர வேண்டி இருந்ததால் தோழிகளுடன் கடிதப்போக்குவரத்து நிறைய உண்டு. ஹாஸ்டலில் தங்கி படிக்கும்போது, வாரம் ஒரு கடிதம் எழுதாவிட்டால் அப்பா கோபித்துக் கொள்வார். இப்படியாக என் கடிதம் எழுதும்  திறமை வளர்ந்து வந்தது.

கல்லூரி நாட்கள் கலகலப்பாக போய்க் கொண்டிருந்த வேளையில் என் மூத்த அண்ணனுக்கு கல்யாணம். எனக்கு நான்கு சித்தப்பாக்கள், ஒரு அத்தை. என் தந்தையார்தான் மூத்தவர். கல்யாணம் முடிந்து ஊருக்குப் போய் சேர்ந்தவர்களிடமிருந்து கடிதங்கள் வந்தன. அப்போதெல்லாம் காலை ஒன்பது மணிக்கு தபால்காரர் வந்துவிடுவார்.

அன்றும் வந்தார். பலகடிதங்களில் ஒன்று என் பெயருக்கு. அவசரமாக அந்தக் கடிதத்தை எகனாமிக்ஸ் புத்தகத்துக்குள் நுழைத்துக் கொண்டு, மற்ற கடிதங்களை அம்மாவிடம்  கொடுத்து விட்டு கல்லூரிக்குப் போனேன். அன்று எங்கள் வகுப்பு கலகலத்து, பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையே சிரிப்பலைகள். என்ன, என் அத்தைமகன் எழுதிய  காதல் கடிதம் தோழிகள் கையில்! ஆளாளுக்கு,''அத்தான் என் அத்தான், அத்தைமகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா,'' என்றெல்லாம் அவரவர் அத்தைபிள்ளைகளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்! பெரிசா ஒன்னும் இல்லை அந்தக் கடிதத்தில்! ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, எனக்கு உன்னைப் பிடிக்கும், உனக்கு? என்ற கேள்விக்குறிதான்!

கடிதம் அம்மாவழியாக அப்பாவுக்குப் போய், முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. என்னைப் பொறுத்த வரையில் அது ஒரு கடிதம்.'' டிமாண்ட், சப்ளை என்று ஒன்றும் புரியாத பொருளாதாரம், சரித்திரம், அரசியல்'' என மூன்று பாடங்களுடன் அதுவும் ஆங்கிலத்தில் (பத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியம்) மல்லுக்கட்டிக் கொண்டிருந்த நேரம் அது. கல்யாணத்துக்கு பயந்து, சண்டை போட்டு கல்லூரியில் சேர்ந்திருந்தேன். கடிதம் எழுத நேரமில்லை. காதல் பற்றி நான் சிந்திக்கவும் இல்லை.

 என் தந்தை மிகச் சிறந்த ஆங்கிலப்புலமை பெற்றவர். கணவர் தமிழிலும் சொல்வன்மை உடையவர். இருவரும் எழுதிக் கொள்ளும் கடிதங்கள் சுவாரஸ்யமானவை. என் தந்தை என் திருமணம் ஆனதிலிருந்து இறைவனடி சேர்வதற்கு முதல் நாள் எழுதிய கடிதம் வரை சுமார் 25 கடிதங்கள் இன்றும் என்னிடம் இருக்கிறது.

என் தந்தையார் என்னிடம் வைத்திருந்த அன்பு, பாசம், அவருடைய அறிவுரைகள், ஆதங்கங்கள், கவலைகள், எனப் பல செய்திகளைக் கொண்ட அக்கடிதங்களைப் படிக்கும் போது இன்றைக்கும் நேரில் பேசுவது போல அவருடைய குரல் கேட்கிறது.

என் கணவரின் இரண்டாவது தம்பி எதிர்பாராதவிதமாக விபத்தில் காலமானபோது, என் தந்தையார் எழுதிய கடிதத்திலிருந்து சில வரிகள்,''In this world of "Maya"it is found impossible to believe that such a thing could happen or happened to us. We are prone to think that, had this thing happened or not happened, the course of life could have been changed and everything could have been alright as we want them to be.  Such ideas are wasteful thinking, as when a child is born, it is written on its head that it would live up to a certain age and no more.
''There is a Divinity that shapes our ends
  Rough hew them as we will
  Not a sparrow falls without HIS knowledge
  If death is not now, it will be afterwards,
  If it is not afterwards, it will be now
  The READINESS is all.''
These are lines from Shakespear 's Hamlet and it is true to life.
Philosophy apart, separation is a thing grievous in nature and unendurable.''......................

எத்தனையோ  சந்தர்ப்பங்களில் இக்கடிதம் ஆறுதல் அளித்திருக்கிறது!

என் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குப்பின் என் தந்தை சென்னையிலிருந்து என்னை அழைத்துக் கொண்டு சேலம் சென்றார். அம்மாவுடன் சுவாரஸ்யமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்த வேளையில் ''அக்கா உனக்கு லெட்டர்,'' என்றாள் தங்கை. அட, நேற்று சாயங்காலம்தானே வந்தோம் அதற்குள் யார் என்று கடிதத்தைப் பிரித்தால் ........!எங்க வூட்டுக்காரர், எப்போ திரும்பிவருவே, ல ..ல..ல......!
அதற்குள் என்ன என்ன என்று கேள்விகள் வேறு...!

மெரினா பீச்சில் ''நடமாடும் தபாலாபீஸ்,'' ஹம்சா'' வில் மாலை போஸ்ட் செய்தால் காலையில் கடிதம் கையில். அக்கா டிரெயினில் ஏறினவுடனேயே அங்கே வீட்டுக்காரர் லெட்டர் எழுதிடுவார் என்று எல்லோரும் கேலி செய்வார்கள்.
பதில் எழுதாவிட்டால் கோபம் வந்துவிடும். அடடா, இந்தக் கடிதத் தொல்லை தாங்கமுடியாது. ஆனால் இதயத்தின் ஆழத்திலிருந்து எடுத்த சொல் முத்துக்களால் கோர்க்கப்பட்ட அந்தக் காதல் கடிதங்கள் ...
பார்த்தீர்களா இன்றைக்கு விலைமதிக்க முடியாத பொக்கிஷமாய், ஆறுதலாய்..

என் தோழி வசந்தாவிற்கு நான்கு வெள்ளை முழுத் தாள்களுக்கு குறைவாகக் கடிதம் எழுதத் தெரியாது. அப்படி என்னதான் இருக்கிறது எழுத என அலுத்துக்கொள்வாள் அம்மா.
எழுதாவிட்டால் கோபித்துக் கொள்கிறார்களே என்று ஒரு ''இன்லண்ட்'' முழுதும் தட்ப வெப்ப நிலை, அரசியல் செய்திகளை நிரப்பி நலம் விசாரிக்கும் பிரகஸ்பதிகளும் உண்டு.

பத்து நாட்களுக்கு ஒரு முறை குடும்பச் செய்திகள், ஊர் வம்பு, என நுணுக்கி, நுணுக்கி  மனம் விட்டுக்  கடிதம் எழுதுவது கவலைகளை நீக்கும், நேரில் பேச முடியாத கருத்துகளை மனம் விட்டு பிறருடன் பகிர்ந்து கொள்ள உதவும்.

கடித உலகில் அலுவலக லீவு லெட்டர்களுக்குதான் முதல் பரிசு. முல்லா நஸ்ருதீன் அழுது கொண்டு இருந்தாராம். ஏன் அழுகிறாய் என்றதற்கு பாட்டி செத்ததுக்கு லீவு கேட்க முடியாம எல்லா பாட்டியும் செத்துட்டாங்க, இனிமே எப்பிடி லீவு கேட்பேன்னு அழுவறேன்னு சொன்னாராம்.

இந்தக் காலத்தில் ஒரு நொடியில் பிறப்பு, மரணம், காது குத்தல், கல்யாணச் செய்திகள் தெரிவிக்கப்பட்டு விடுகின்றன. பெரும்பாலும் டெலிபோன் பில்லும், அழைப்பிதழ்களும்தான் தபாலில்!
மொத்தத்தில் கடிதம் எழுதுவதை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 பாரதத்தின்   மானசரோவரில்  மலர்ந்த வெண்தாமரை மகான்  ஶ்ரீ அரவிந்தர் தன் மனைவி மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதங்கள் மனதை உருக்கும். அவர் எழுதுகிறார்,''மூன்று விஷயங்களில்  எனக்குப் பைத்தியம். 
1.தேவைக்கு அதிகமாக எனக்கென செலவிடுவதை நான் விரும்பவில்லை. இந்த நாட்டிலுள்ள கோடிக்கணக்கான ஏழைகளுக்கும், பசியால் துடிப்பவர்களுக்கும் செலவிடவே நான் விரும்புகிறேன். நீயும் இதில் பங்கு கொள்ள வேண்டும். 
2. கடவுளைக் காணும் முயற்சியில் நான் இறங்கியுள்ளேன். அதிலிருந்து என்னை விலக்கிக்கொள்ளமுடியாது.
3. நம்முடைய தாய்த் திருநாட்டை எல்லோரும் வெறும் மண்ணாகவும், காடாகவும், வயலாகவும், ஒரு ஜடப்பொருளாகவும் பார்க்கலாம். என்னைப் பொறுத்தவரை இந்த நாடு என் உயிருள்ள தாய். என் தாயின் ரத்தத்தை உறிஞ்சுபவனைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க முடியாது. என் தாய் நாட்டை விடுதலை அடையச் செய்வதே என் ஒரே லட்சியம்.'' SriAurobindo - His Life Unique


அப்புறம் என்ன? எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். மழைபொழிய வேண்டும். தண்ணீர் கஷ்டம் நீங்க வேண்டும். நோய் நொடி இல்லாமல் ஆரோக்யமாக வாழ்வீர்களாக என்று வாழ்த்தி விடை பெறுகிறேன். 
வணக்கம்.

அன்புடன், கமலா                  
பெங்களூரு





                                                என் தந்தையார் அளித்த செல்வம்.  


                           திரு.சொக்கன், திரு ஜி. ராகவன்,திரு. மோஹன கிருஷ்ணன் மூவரும்
                          இணைந்து எழுதும் 4 வரி நோட்டு வலைப்  பதிவைப்  படித்துப்   படித்து
                           என்ன   எழுதினாலும்     திரைப் படப் பாடலை மனம் தேடுகிறது. இதோ
                           கடிதம் வரும் பாடல்.
                                       
                                           படம்: குழந்தையும் தெய்வமும்
                                           பாடல்: கண்ணதாசன்
                                           குரல்: டி.எம். எஸ், சுசிலா
                                           இசை:எம்.எஸ்.வி
                                           நடிப்பு: ஜமுனா, ஜெய்சங்கர்



















3 comments:

  1. உங்கள் கடிதத்தைப் படித்துவிட்டு கண்களில் நீர் மல்க இந்த பின்னூட்டத்தை எழுதுகிறேன். எவ்வளவு அழகாக எழுதியுள்ளீர்கள்!உறவுகளும் பிரிவுகளும், அதன் தாக்கங்களும், வாழ்ந்த வாழ்க்கையும், அனைத்தும் ஒரே மடலில் தொகுத்து வழங்கிவிட்டீர்கள்.

    amas32

    ReplyDelete
  2. Thank youmaa. Writing helps me to let go of the past and go forward with more strength.

    ReplyDelete
  3. amas அவர்கள் சொன்னது போல ஒரே மடலில் அனைத்தையும் தொகுத்து விட்டீர்கள்! ஆம் கடிதம் எழுதவது முற்றிலும் இல்லாமல் போய்விட்டது என்று தான் சொல்லவேண்டும்.... யோசித்து பார்கின்றேன், நான் கடந்த 25 வருடங்களில் உறவுகளுக்கோ, நண்பர்களுக்கோ ஒரு கடிதம் கூட எழுதியதில்லை.


    ஒரே ஒரு சந்தோசம், முதல் வகுப்ப்பு போகும் எனது மகள், இரண்டு தெரு தள்ளி இருக்கும் தனது வகுப்பு தோழிக்கு வாரம் ஒரு கடிதம் எழுதிவிடுவார். சில சமயம் போஸ்டல் சர்வீஸ் மூலம் அனுப்பப்படும், பெர்ம்பாலும் நேரடியாக சேர்க்கப்படும் :)))......விஷயம் வேறு ஒன்றும் இருக்காது....lets have a playdate this weekend. Please check with your mom.....இப்படிதான் கடிதம் போகும் :))...... ஒரு hobbyயாக இது தொடர்வது மனதுக்கு ஒரு ஆறுதல், நானும் அதை பெரிதும் ஊக்கபடுத்தி வருகின்றேன்.


    எனது சொந்த ஊர் சேலம் தான். நீங்கள் சேலத்தில் இருந்தீர்கள் எனபது கூடதல் மகிழ்ச்சி.

    ReplyDelete