17 Mar 2013

சதுரகிரியில் கோரக்க சித்தர்


( படித்ததில் பிடித்தது )


சமீபத்தில் என் சகோதரியும் மற்றும் குடும்பத்தினரும் சேர்ந்து சதுரகிரி சென்று வந்தனர்.   அவர்களுடைய அநுபவங்களைக் கேட்டபோது நேரில் போக முடியாத குறையை நீக்கிக் கொள்ளும் பொருட்டு  அவளிடமிருந்து நான் பெற்ற புத்தகம் :

சதுரகிரியில் கோரக்க சித்தர்
ஆசிரியர்: பா. கமலக்கண்ணன்
பக்கங்கள்:268
வானதி பதிப்பகம்
விலை:  ரூ. 100 .00

ஆயிரக்கணக்கான சித்தர்கள் தவத்தில் ஆழ்ந்திருக்கும் இடம் சதுரகிரி.
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் அன்னை அநுசுயாதேவி குழந்தைகளாக சபித்த இடம் சதுரகிரி.
அத்திரி மகரிஷியும் அநுசுயாதேவியும் மார்க்கண்டேயரைப் பெற்றதலம் சதுரகிரி.
அகத்திய மாமுனிவர் சிவலிங்க பூசை செய்து ஈசனைத் திருமணக் கோலத்தில் தரிசித்த இடம் சதுரகிரி.
உலக அன்னை உமாதேவியார் கடுந்தவம் புரிந்தும், சிவலிங்க பூசை செய்தும் ''அர்த்த நாரீஸ்வர'' நிலையை அடைந்த இடம் சதுரகிரி.
இராம- இராவண யுத்தத்தின் போது, அநுமார் எடுத்துச் சென்ற, இறந்தோரை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மூலிகைச் செடிகள் வீழ்ந்த இடம் சதுரகிரி.
பல்லாயிரம் ஆண்டுகளாக சித்தர்கள் நம் கண்களுக்குத் தெரியாமல் வாழ்ந்து வரும் இவ்விடத்தை தாணிப்பாறை என்ற கிராமத்தின் மூலிகை வனம் என்ற வளைவு உள்ளே நுழைந்து 14 கிலோமீட்டர் கரடுமுரடான பாதையில் நடந்தால் அடையலாம். இரண்டு நாய்கள் பயணிகளுக்கு வழி காட்டுகின்றன.

சமதரையான, சுமார் 64 ஏக்கர் பரப்பில் நான்கு பக்கங்களிலும் நான்கு நான்கு மலைகளால் சூழப் பெற்றிருப்பதால் சதுரகிரி என சித்தர்களால் பெயரிடப்பட்டது.

கோரக்க சித்தர் சதுரகிரி மலையை அடையும் வழிகளைக்கூறியுள்ளதாக ஆசிரியர் கூறுகிறார்.
தாணிப் பாறையிலிருந்து  அம்புவிடு தூரத்தில்(ஒரு கிலோமீட்டர்) கறுப்பண்ண சாமி கோயிலும், ஒரு கிலோ மீட்டரில் அத்தி, மாமரச் சோலையும், இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அத்தி ஊற்றும், அங்கிருந்து 2 கிலோமீட்டரில் பசுமிதிப் பாறையும், பின் கோரக்கர் குகையும், ஆலிலை வடிவ குண்டாவையும் காணலாம். இதன் ஆசிரியர் யோகப் பயிற்சியுடையவராதலால் பல சித்த புருஷர்களின் தரிசனம் பெற்றதாகவும், அற்புதக் காட்சிகளைக் கண்டதாகவும் கூறுகிறார். 

இங்கு இரட்டை மகாலிங்கம், வனதுர்கை, கறுப்பண்ணச்சாமி, சுந்தரமூர்த்தி ஆலயம், சுந்தர மகாலிங்கர், சந்தன மகாலிங்கர் ஆகியோரை தரிசிக்கலாம்.

இங்கே மின்சார வசதியோ, உணவு வசதியோ, தண்ணீர் வசதியோ கிடையாது எனவே நாம்தான் எடுத்துச் செல்ல வேண்டும்.

வேதங்கள், உபநிஷத்துகள், பைபிள், குரான் ஆகிய எல்லா மத நூல்களையும் படைத்தவன் ஒரே இறைவன்தான். தவம் செய்து  சீவனை தரிசித்து, அதோடு தமது சூக்கும சரீரத்தை ஐக்கியப் படுத்தி பேரின்ப நிலையை அடைய சித்தர்கள் கூறிய செயல் முறை விளக்கமே சித்தாந்தம்.

தென் தமிழ் நாட்டில்தான் சுமார் 179 சித்தர்கள் தவச்சாலைகள் அமைத்து மூலிகைகளிலிருந்து காயகல்பம் தயாரித்து மரணமில்லாப் பெரு வாழ்வு  வாழ்ந்தனர் எனவும், சஞ்சீவி மூலிகையை தெரிந்து வைத்திருந்தனர் எனவும் தெரிகிறது. 

அநுமான் சஞ்சீவி மலையை திருப்பி எடுத்துக் கொண்டு போகும் போது, சித்தர்கள் அதன் ஆற்றலை உணர்ந்து ஒரு பகுதி சதுரகிரியில் விழ வேண்டுமென நினைத்தனர் என்றும், அவ்வாறே பெருங்காற்று எழுந்து சஞ்சீவி மலையின் சிறுபகுதி இங்கே வீழ்ந்தது எனவும் சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.

சித்தர்கள் கூடுவிட்டுக் கூடு பாயும் கலை, யார் கண்ணிலும் புலப்படாமல் விண்வெளிப்பயணம் செய்யும் கலை அறிந்தவர் எனவும், பல மூலிகைகளையும் பயன்பாடுகளையும் அறிந்தவர் எனவும் ஆசிரியர் கூறியுள்ளார்.

கோரக்கசித்தரின் வாழ்க்கை வரலாறு, அவருடைய பாடல்கள் சொல்லும் ஞானமார்க்கம், ''கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி'' என்ற குறுந்தொகைப் பாடலின் விளக்கம் சிந்தனைக்குரியது. அண்ணாமலை தீபத்தை தரிசிக்க வேண்டியது மனித உடம்பிலாகும் என்று கூறி  திருமந்திரம், பெரிய புராணம், அப்பர் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா பாடல்களை உதாரணம் காட்டி விளக்கியுள்ளமை படித்து இன்புறத்தக்கதாகும்.

கலியுகத்தில் நாட்டு நடப்பு பற்றி கோரக்கர் சொல்லும் செய்திகளுக்காக 16 பக்கங்கள் ஒதுக்கியுள்ளார் ஆசிரியர்.

ஆசிரியரின் மூன்றாண்டுகால விடா முயற்சியின் பயனாக வெளிவந்துள்ள இந்நூலில் சித்தர்களைப் பற்றிய பல உண்மைகள் தெளிவாகப்  புலப்படுகின்றன.
கோரக்க சித்தர் இன்றும் சதுரகிரியில் தவம் செய்து வருவதாகக் கூறும் ஆசிரியர் அவருடைய உருவப்படத்தையே புத்தக  முகப்பிலும் அமைத்துள்ளார்.

''யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
  யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
  யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
  யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே - திருமந்திரம்252 

பொதுவில் இந்த நூலைப் படிக்கும்போதே சதுரகிரிக்கு நேரில்போன அநுபவம் ஏற்பட்டது. மேலும் சித்தர்களையும் இந்த எழுத்துகள் மூலம் தரிசித்த மனநிறைவு  உண்டாயிற்று என்பதையும் மறுக்க முடியாது. பல புதிய செய்திகளை நமக்கு விளக்கிச் சொல்லும் இந்த புத்தகம் ஒரு பொக்கிஷமாகும்.















No comments:

Post a Comment