18 Jan 2012

மீண்டும் தாய் மடியில், சேலம்.

                                                          சேலம் -சாரதா கல்லூரி.             
                             
                                                     சிவகாமி, சரோஜினியுடன் நான்.
                        
நான்கு ஆண்டுகளுக்குப் பின் பார்த்தபோது சேலம் வீடு மிகவும் அழகாக இருந்தது. மரங்களெல்லாம் வளர்ந்திருந்தன. ஒரு இனிய சங்கீதத்தை அனுபவிப்பதைப் போல்  மொட்டை மாடியும், தோட்டமும், பூக்களும்  என் இதயத்தைக் கொள்ளை கொண்டன. பூக்களுக்கு தான் எத்தனை சக்தி? வார்த்தைகளே இல்லாமல் பேசும் திறமையை அவற்றுக்கு யார் கொடுத்தார்கள்?

கடலூர், பெட்டி வீட்டில் அடைபட்டுக்கிடந்தபின், தோட்டமும் மொட்டை மாடியும், பெரிய வீடும் சந்தோஷத்தை தந்ததில் வியப்பில்லை அல்லவா?அதுவும் ஓராண்டு விடுதி வாழ்க்கைக்குப்பிறகு ....அட, எதுவும் ஸ்திரமானது அல்ல, வாழ்வு குறுகிய வட்டத்துள் வீழ்ந்து கிடப்பது அன்று என்பது ஒவ்வொறு கட்டமாகத்தானே மனிதனுக்குப் புரிகிறது!  ஆம், பிறந்ததிலிருந்து மெதுவாக வாழ்வைப் புரிந்து கொள்வதற்குள் முதுமை வந்துவிடும். மீண்டும் பழைய இடத்திற்கே குறுகிய கட்டத்திற்குள் பரமபத விளையாட்டுப் போல திரும்பி விடுவோம். அது போல நான்கு ஆண்டுகளில் மூன்று இடங்களைப் பார்த்தாகிவிட்டது! மீண்டும் யதாஸ்தானம். வாழ்க்கை ஒரு நதியைப்போன்றதுதானே. நான் ஶ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் பொருளாதாரம் முதல் ஆண்டில் சேர்ந்தேன். தம்பியர் இருவரும் லிட்டில் ஃப்ளவர் பள்ளியிலும், தங்கை கலைமகள் பள்ளியிலும் சேர்ந்தனர். அப்பா சென்னையில் வேலைக்கு சேர்ந்தார். அவ்வப்போது லீவுக்கு வருவார்.

சாரதா கல்லூரி முதலில் பள்ளியின் ஒரு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. நான் இரண்டாவது பேட்ச். நாற்பத்து ஐந்து பேர் எங்கள் வகுப்பில். இந்தப் பொருளாதாரம் பாடம் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது முதலில். ஷேக்ஸ்பியர் வகுப்பு பிரின்சிபால். மதிய உணவை வீட்டிற்குப்போய் சாப்பிட்டு வந்தவுடன் அவர்களுக்கு தூக்கமாக வரும். தூங்கிக் கொண்டே பாடம் நடத்துவார். பொங்கிவரும் சிரிப்பை அடக்கமுடியாமல் நாங்கள் பேப்்பர் காமெண்டரி நடத்துவோம். லலிதா அவர்கள் சரித்திரம், காவேரி மிஸ் வகுப்புகள் நன்றாகவே இருக்கும். தங்கம் சேஷனின் ஒவ்வொரு விரலிலிருந்தும் ஒவ்வொரு முக்கியமான குறிப்பு விழும். அவர்கள் வகுப்பு எடுப்பதே ஒரு அழகு! ஆழ்ந்த கவனத்துடன், தன்னம்பிக்கை துணைவர எடுத்த பாடத்தலைப்பில் யாருக்கும் எந்த சந்தேகம் வந்தாலும் தீர்க்கக்கூடிய அறிவு மிக்கவர்கள் என்று சொன்னால் மிகையாகாது.

இது தவிர தமிழ், ஆங்கில ஆசிரியைகள் நன்றாக எடுப்பார்கள். பேட்மிண்டன் விளையாட்டுப் பயிற்சி மாலை வேளைகளில் நடக்கும். ஆசிரியைகளுக்கு எதிராக விளையாடுவோம். தவிர கலைநிகழ்ச்சிகள் வேறு!

ஆனால் அடிக்கடி ராமகிருஷ்ணா மடத்தினரின் பிரசங்கங்கள் வைத்துவிடுவார்கள். ரொம்பவும் சலிப்புத்தட்டிவிடும். சில சமயங்களில் நானும் பிரேமாவும் டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடியிருக்கிறோம். இந்தப் பிரசங்கங்கள் பயன் மிக்கவைதான், ஆனால் அந்த வயதுக்கு அதைக் கேட்கப் பொறுமை இல்லைதான்.

கேட்கப் பொறுமை இல்லையே தவிர, ஶ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சரின் வாழ்க்கை வரலாறும், ஶ்ரீ சாரதாமணி தேவியாரின் வரலாற்றையும் படித்திருக்கிறேன். அன்னையுடைய பதி பக்தியும், பரமஹம்சரின், காளியின் மீதான அளப்பரிய சரணாகதியும், உலகம் அனைத்தையும் அன்னை வடிவாகக் கண்ட அவருடைய தெய்வீகமும் என்னை மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றன. கல்கத்தா சென்று அன்னை காளியின் தரிசனமும் பரமஹம்சர் தோற்றுவித்த பஞ்சவடியையும் தரிசிக்க வேண்டும் என்ற என் ஆசை இது வரை நிறைவேற வில்லை. எத்துணை முறை படித்தாலும் திகட்டாத வாழ்க்கை வரலாறு பரமஹம்சருடையது. ஆன்மீக மணம் கமழ்ந்த ஶ்ரீ சாரதா கல்லூரியின் மாணவி என்பதில் இன்றும் நான் பெருமை கொள்கிறேன்.

வடலூர், நெய்வேலி, திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு மாணவியர் அனைவரும் சுற்றுலா சென்று வந்ததும், கல்லூரிகளுக்கு இடையேயான பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொள்ள கும்பகோணம், கோயமுத்தூரிலுள்ள பீளைமேடு சென்று வந்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள்.

மூன்று ஆண்டுகள் கல்லூரி வாழ்க்கையில் என் நெருங்கிய தோழிகள் சிலருடன் இன்றும் தொடர்பு இருந்தாலும், எல்லோரையும் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வாழ்க்கைப் பயணத்தில் தான் எத்தனை மேடு பள்ளங்கள், நெளிவு, சுளிவுகள், காதலும், கண்ணீரும், ஆசாபாசங்களும் ஏற்படுத்தும் சுழல்கள்! இந்த அனுபவங்கள் அனைத்துமே ஒரு மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்வதற்கான படிகள் என்கிறது ஆன்மிகம். விடை தெரியாத கேள்விகள் மனிதனிடம் நிறையவே இருக்கின்றன!


குடும்ப வாழ்க்கையில் என் சகோதரன் பாலன், நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது வரங்காவ் என்ற மத்தியப்பிரதேசத்திலுள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றான். பெரிய அண்ணாவுக்கு திருவனந்தபுரத்தில் கல்யாணமும் சென்னை ஏ.ஜி.எஸ்.ஆபீஸுக்கு மாற்றலும் ஆயிற்று. மூன்றாம் ஆண்டு படிக்கும் போது என் தந்தையார் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சேலம் வந்து தனிப்பட்ட முறையில் வணிகர்களுக்கான வழக்குகளை நடத்தும் தொழிலை செய்யலானார். பல சமயங்களிலும் எனக்கு சில வேலைகளைத் தருவார். அப்பாவுடன் சேர்ந்து நானும் அந்தத் துறையில் தேர்ச்சி பெறவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. ஏனோ அப்பாவும் அதைப் பற்றி எண்ணவில்லை. வேலைக்கு அனுப்பும் எண்ணமும் அவருக்கு இருந்ததில்லை!

நான் சாரதா கல்லூரியில் படித்த காலத்தில் தான் பண்டிட் ஜவஹர்லால் நேரு காலமானார். ஓராண்டு காலம் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரோஜா மலர்களை தலையில் சூட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறேன். பைத்தியக்காரத்தனமோ?

இது மட்டுமா? தேசிய கீதம் ரேடியோவில் ஒலித்தாலும் எழுந்து நிற்கும் பழக்கம் எனக்கு இருந்தது. தேசிய கீதத்தைப் பாடினாலே உணர்ச்சி வசப்படுவேன். என் தொண்டை தழு தழுக்க கண்களில் நீர் கசியும்! போன ஜன்மத்தில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பேனோ என்று நானே வியந்ததுண்டு!

1963, 64 ஆண்டுகளில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பித்த காலகட்டம்!கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுத்து விட்டார்கள். தமிழகமெங்கும் ஹிந்தி பாஷையை கற்றுக் கொள்ள கடும் எதிர்ப்பு. அதனால் தானோ என்னவோ நானும் சரி என் குழந்தைகளும் சரி ஹிந்தி கற்றுக் கொள்ளவில்லை. அதனால் பிற்காலத்தில் கஷ்டப்பட்டிருக்கிறோம்.

பசுமையான வயல் வெளிக்கு நடுவே அமைந்த ஒற்றையடிப் பாதையில் சுகமான தென்றல் காற்றை அனுபவித்தபடி, தோழிகளுடன் சிரித்துப் பேசியவாறு கல்லூரிக்குச் சென்று வந்த மூன்றாண்டுகள் முடிய ஒரு பட்டதாரியானேன். பெற்றோர்களுக்கு ஒரே சந்தோஷம். எனக்கும் பெருமையாகதான் இருந்தது.

No comments:

Post a Comment