24 Aug 2014

யார் மைந்தன், யார் மகன்?( திருப்புகழ்)

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் உள்ள சிற்றூர் திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனுக்கு திருப்பெரு வடிவம்
காட்டி  ஆட்கொண்டு, கோயில் கொண்ட திருத்தலம்.

தமிழ் மறையாம் திருப்புகழைப் பாடிய அருணகிரிநாதர் திருச்செந்தூருக்குச் சென்ற போது, முருகப் பெருமானின் திருநடனம் காணவிரும்பி வேண்ட, பெருமானும் திருநடனம் புரிந்து அருள்செய்தார்.
''கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சி நடனங்கொளும் கந்தவேளே''என்று
அதனைத் திருப்புகழில் ஏற்றிப் பாடுகின்றார் அருணகிரி.

திருப்புகழில் இல்லாதது எதுவுமில்லை!  வரலாறுகளை, வாழ்க்கை நிகழ்வுகளை, உறவுகளை, காதலை, காமத்தை, மனிதர்களுடைய பல மனப் பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது திருப்புகழ்.

இன்றைய முதியோர்களைப் பார்க்கும் போது திருப்புகழ் நினைவுக்கு வருகிறது. முதுமையின் துன்பங்களை அவர்தான் எப்படியெல்லாம் எடுத்துச் சொல்கிறார்!  முதுமை வருகிறது.  கூடவே வயிறு பெருத்து, முன்னே தள்ளுகிறது. தலைமுடி வெளுத்து, வாய்ப்பல் உதிர்கிறது! முதுகு வளைய, உதடுகள் தொங்குகின்றன. மூன்றாவது காலாய் ஊன்றுகோல் முன்னேவர, இருமல் கிண்கிண் என ஒலிக்கிறதாம்.
பேசுவது யாருக்கும் புரியாதவாறு வாய் குழறுகிறது. ஒளி பொருந்திய கண்கள் தூங்குவது போலக் காணப்படுகிறது. காது கேட்கும் சக்தியை இழந்துவிடுகிறது. போதாத குறைக்கு நோய்கள், அதனால் வரும் துன்பங்கள்!
நோயைக் குணப்படுத்துகிறேன் என வரும்  வைத்தியனால் படும் துன்பம்!

ஆக இந்த துன்பங்களுக்கு சிகரம் வைத்தார் போலும், பிள்ளை என்ன செய்கிறான்! அப்பா அப்பா எவ்வளவு சொத்து வைத்திருக்கிறாய்? கடன் எவ்வளவு? மிச்சம் மீதி தேறுமா? என்றெல்லாம் கேட்கும் போது அன்பு காட்டி ஆறுதல் சொல்லாமல் சேர்த்து  வைத்திருக்கும் காசைப் பற்றிக் கவலைப்படும் மகனால் ஏற்படும் துன்பம்!
போனால் போகட்டும்!மரணம் எல்லோரையும் தழுவுவதுதானே! யமராசன் வந்து, பாசக்கயிற்றால் கட்டியிழுக்கும் வேளை! மலமொழுக, ஆவி மயங்குகிறது! அப்போது யார் துணை?

முருகப் பெருமானே, சூலாயுதம் கொண்டு எம தூதர்கள் எனைச் சூழும் போது வேலாயுதத்துடன் வேகமாக மயில்மீது அமர்ந்து வந்து என்னைக் காத்து அருள்புரிய வேண்டும்!

அது யார் மயில் மீது வந்து காப்பவன்? முருகனா? இதுவரை கேள்விப்பட்டதில்லையே! அவனைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

அட இது கூடத் தெரியாதா?
கங்கை நதியையும், பிறைச் சந்திரனையும் சடாமுடியிலே தரித்திருக்கும் சிவபெருமானின் மைந்தன்!
கடலலைகள் முத்தமிடும் செந்திலம்பதியின் அதிபன் சண்முகன்!
அழகன் முருகன், வள்ளியம்மையின் மணவாளன்!
சூரபத்மனால் சிறைவைக்கப்பட்ட தேவர்களைப் போரிலே வென்று வெற்றிவாகை சூடியவன்!
அட இன்னும் தெரியவில்லையா?

இப்போது இன்னும் ஓர் அடையாளம் சொல்கிறேன்.
அதோ அயோத்யை மாநகரம்! தசரத மகாராஜாவின் அந்தப்புரத்திலே கோசலை தேவியார் குழந்தை ஸ்ரீராமனை அழைக்கும் குரல் கேட்கிறதா? என் அப்பனே வருக, ரகுநாயக வருக, மைந்தனே வருக, மகனே வருக, என் கண்ணே, ஆருயிரே, என்று கொஞ்சி, என் அரசே கொஞ்சம் பாலருந்த வருக, மலர்களை சூடிக்கொள்ள வருக என்றெல்லாம் அழைக்கிறாள், கேட்கிறதா?

மகாவிஷ்ணுவாகிய திருமால் ராமனாக அவதாரம் செய்த பொழுது கோசலை ராமபிரானை இவ்வாறெல்லம் அழைக்கும் பேறு பெற்றாள். அவளுக்கு அந்தப் பேற்றை வழங்கிய திருமாலின்
மருகன் முருகன். ஆம் உமையம்மையின் சகோதரன் அல்லவா இந்தத் திருமால்!

அந்தகன் வரும் போது அவனியில் உற்ற துணை முருகப் பெருமானைத் தவிர யாராக இருக்க முடியும்?
முருகப் பெருமானே உயிர் பிரியுங்காலத்தில் வந்து என்னைக் காத்து அருள் புரிவீர்!

உறவுமுறைகளை மிக மிக அழகாக சொல்வதிலே வல்லவர் அருணகிரியார். மாமன் மருகன் உறவு முறைகளைச் சொல்லியே ராமாயணக் கதையை திருப்புகழிலே இழைத்திருக்கிறார்!

திருமுருக கிருபானந்த வாரியாரின் திருப்புகழ் விளக்க உரை திருப்புகழ் கற்போருக்கு வரப் பிரசாதமாகும். ''தொந்திசரிய ''எனத் தொடங்கும் இப்பாடலில் ராமபிரானை கோசலை,'மைந்த வருக மகனே வருக ' என அழைக்கிறாள். அதற்கு வாரியார் அவர்களின் விளக்கத்தைப் பார்ப்போம்.

''மைந்தன், மகன்  என்ற இரு சொற்களும் ஒரே பொருளைக் கொடுப்பன அல்ல.

1. உரிய வயது வந்தும் தாய் தந்தையர் பாதுகாப்பிலேயே இருப்பவன் -  பாலன்.

2. வயது முதிர்ந்த தந்தை வேலை செய்ய தானும் உதவி செய்யாமல் செலவு செய்பவன்- பிள்ளை.

3. தந்தைக்கு ஞானம் உரைக்கும் அளவுக்கு உயர்ந்த அறிவு பெற்றவன் - குமாரன்.

4. தந்தைக்கு நற்கதி தருகின்றவன் - புத்திரன்.

5. தந்தைக்கு நன்மையைச் செய்கின்றவன் - புதல்வன்.

6. தான் பிறந்த குடும்பத்தைக் காத்து ஆலமரத்தின் விழுது மரத்தைத் தாங்குவது போல் நிற்பவன் - மகன்.

7. தந்தையின் குடும்பம், தாயின் குடும்பம், குருவின் குடும்பம், நண்பரின் குடும்பம் என எல்லோருடைய          குடும்பங்களைக்  காப்பாற்றுபவன் - மைந்தன்.

இராமர் ,  தன் குடும்பம், குகனுடைய குடும்பம், சுக்ரீவன், விபீஷணன், ஆகியோருடைய குடும்பங்களைக் காத்தலினால், மைந்தன் என்றும், தான் பிறந்த குடும்பத்தையும் காத்தலினால் மகன் என்றும் அழைக்கப் பெற்றார். 

எத்தனை அழகான விளக்கம் பாருங்கள். திருப்புகழ் கடலில் குதித்துக் குளித்துக் களித்து முத்தெடுங்கள்!
திருச்செந்தூர் கோயில் கோபுரம்.









நாழிக் கிணறு - திருச்செந்தூர்.











24 Jul 2014

Dish Washer!

இந்த வேலம்மா வருகிற வழியைப் பார்த்து கண்ணே வலி எடுத்துவிட்டது பர்வதத்துக்கு. ஆயிற்று மணி பதினொன்று! இனிமேல் இவள் வந்து பாத்திரம் தேய்த்து மிச்ச வேலையெல்லாம் முடிக்க ஒரு மணி ஆகிவிடும். வரவில்லையென்றால் இருக்கிறது  தேய்க்கக் கையும், வலிக்க முதுகும், பிறகு மாத்திரையும், புலம்பல்களும்!   ஒரு வண்டிப் பாத்திரங்கள்! 

சாதாரணமாக பத்து மணிக்கு வந்துவிடுவாள் வேலம்மா. வரமாட்டா போல என கன்னத்தில் கையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் காதில் வாசல் கேட் திறக்கும் சப்தம் இனிமையாகக் கேட்டது. வேலம்மாதான்! அம்மா உடம்பு முடியல,ஜொரம். அதுதான் ஏதாவது மாத்திரை இருந்தால் வாங்கிட்டு, சொல்லிட்டு போவலாம்னு வந்தேன்.

சூடா காப்பியும், மாத்திரையும் தரேன். பாத்திரம் மட்டும் செஞ்சுடும்மா, என்றாள் பர்வதம்.
சரிம்மா, நாளைக்கு முடிஞ்சாதான் வருவேன்.

இரவு எல்லாரும் சாப்பிட்டபின் பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தவளை,
''சீக்கிரம் வா. உன்னோட சீரியல் ஆரம்பம். என்ன செய்யறே," என்று கேட்ட துரையை முறைத்தாள் பர்வதம். "ஏம்மா  நாளை வேலம்மா வரமாட்டாளா?" என்று கரிசனத்தோடு கேட்டார் அவர்.

ஆமாம், அவளுக்கு உடம்பு சரியில்லே. நாளைக்கு வரமாட்டேன்னா. இந்த வாரம் பூரா மட்டம்னுதான் நினைக்கிறேன்..........................
என்னங்க, நான் சொன்னா காதிலயே போட்டுக்க மாட்டீங்க. போனவாரம் சரோஜா வீட்டில பாத்திரம் தேய்க்கிற ''டிஷ் வாஷர்'' வாங்கியிருக்காங்க. நான் பாத்தேன். எவ்வளவு நல்லா பாத்திரம் எல்லாம் பள பளன்னு புதுசு கணக்கா ஆயிடிச்சு தெரியுமா! வாங்கிக் குடுத்தா என்னவாம்?

"அது என்ன வெலை தெரியுமா உனக்கு? ரொம்ப சுலபமா சொல்லிட்டே! 47,000 ரூபாயாம். சரோஜா புருஷன் சொன்னார். மாசம் வேலம்மாக்கு 500 ரூபாய் சம்பளம். வருஷத்துக்கு 6000/-  மிஷினுக்கு?........மிஷின் வேஸ்ட்." என்றார் துரை.  இந்த மிஷின் எத்தனை நாள் உழைக்குமோ, எத்தனை ரிப்பேர் வருமோ? ரிப்பேர் செய்யற ஆளுக்கு 'போன்'போட்டே என் உயிர் போயிடுமில்ல!  

இதோ பாரம்மா, தள்ளி நில்லு, நான் வேணா நாலு நாள் லீவு போட்டுட்டு பாத்திரம் கழுவறேன் என்றார்.

"இதுல ஒன்னும் கொறச்சல் இல்ல, எதுக்கெடுத்தாலும் கணக்கு," என்று முகம் திருப்பினாள் பர்வதம்.

வேலம்மாக்கு 'டெங்கு' காச்சல், வரமுடியல. வேற ஆளுங்களும்  சரிப்பட்டுவரல! ஒன்னா நேரம், இல்ல சம்பளம், என்னதான் செய்யமுடியும்?

 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பதற்கேற்ப துரையும் விட்டுக் கொடுத்தார். 
அடுத்ததாக கடைகளுக்குப் படையெடுப்பு நடந்து விலை, உயரம், அகலம் இத்யாதி விவரங்கள் எல்லாம் கேட்டு வாங்கி, அலசி ஒருவழியாக ஒரு மிஷினைத் தேர்ந்தெடுத்தார்கள். 

பர்வதத்திற்கு மகாசந்தோஷம். அப்பாடா இனிமேல் வேலம்மாவைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். இரவு சாப்பாடு ஆனால் எல்லா பாத்திரங்களையும் மிஷினுக்குள்ளே அடுக்கி விட்டால் அது பாட்டுக்குத் தேய்த்துவிடும். 
ஆக, ஒரு சுபயோக சுபதினத்தில் ஜாம்ஜாமென்று வந்து இறங்கியது ''டிஷ் வாஷர்.'' கூடவே தேய்க்க  உப்பு, பொடி, லிக்விட்........! சமையலறையில் பிரதான இடத்தில் அதை பிரதிஷ்டை செய்தார்கள். ஆரத்தி எடுக்காத குறைதான் போங்கள்! வந்த அன்று பாத்திரங்கள் அப்படி இப்படி என்று  எப்படியோ அடுக்கப்பட்டு பர்வதத்தால் "ஸ்விட்ச் ஆன்" செய்யப்பட்டது. அடடா பாத்திரங்கள் எல்லாம் பளபளக்கின்றன என்று எல்லோரும் வாய் பிளந்தார்கள்!

ஒரு வாரம் ஆயிற்று! என்னம்மா சந்தோஷமா? மிஷின் நல்லா வேலை செய்யுதா? என்றார் துரை. 
ம்..ம்.. என்றாள் பர்வதம். அவர் போனவுடன், என்ன மிஷினோ என்று முணுமுணுத்துக் கொண்டாள். 

பாத்திரங்களை எல்லாம் அப்படியே உள்ளே வைக்க முடிவதில்லை. அடி பிடித்தவை, பால் பாத்திரங்களின் ஆடைகள், எல்லாவற்றையும் நன்றாக சுத்தம் செய்து போட வேண்டியிருக்கிறது. சுத்தம் செய்தாலே பாதி தேய்த்தாகி விடுகிறது. அதற்கு மேலே சும்மா மிஷின் இருக்கிறதே என்று போட வேண்டியிருக்கிறது.  பாத்திரங்களை எல்லாம் ஊற வைத்து, ஒருமுறை கழுவி மிஷினுக்குள் போடுவதற்கு பதில் நாமே தேய்த்துக் கொண்டிருக்கலாம்! என்ன செய்வது ? சரோஜா இந்த விஷயத்தை எல்லாம் சொல்லவே இல்லையே!இதை வீட்டுகாரர் கிட்ட சொன்னா என்ன ஆகும்? சும்மா இருப்பதே சுகம் என்று பேசாமல் ஆகிவிட்டாள் பர்வதம்.

அழைப்பு மணி அடிக்கிறது. அவள் சினேகிதிதான். வா பங்கஜம், வாங்க ரத்னம்மா, என்று வரவேற்றாள் பர்வதம். நீயும் என்னவோ பாத்திரம் தேய்க்கிற மிஷின் வாங்கிட்டியாமே? சரோஜா சொன்னாங்க! நல்லா இருக்கா? எத்தனை பாத்திரம் வைக்கலாம்? குக்கர் தேய்க்க முடியுமா? எங்க வீட்டிலும் இந்த முனியம்மா சரியாவே வரதில்ல. ஒரு மிஷின் வாங்கிக் குடுங்கன்னு சொல்லியிருக்கேன். அதுதான் விஷயம் தெரிஞ்சுகிட்டுப் போகலாம்னு வந்தேன் என்றாள் பங்கஜம்.

ஆமாங்க மிஷின் வாங்கிட்டேன். சூப்பரா இருக்கு. நல்லா எல்லா பாத்திரமும் பள பளன்னு மின்னுது.
வேலை மிச்சம். தேய்ச்ச பாத்திரத்தையெல்லாம் துடைக்க வேண்டாம். அதுவே சுடசுட காய வெச்சு குடுத்துடுது. ரொம்ப நல்லாருக்கு என்றாள் பர்வதம் மனதுக்குள் சிரித்துக் கொண்டே!பிரச்னைகளைச் சொன்னால், 'பாத்தியா நாம்பளும் வாங்கிடுவோம்னு பொறாமைக்காக பொய் சொல்கிறாள்'  என்று நினைப்பார்கள். 

வாங்கிவிட்டால் அவர்களும் கெளரவமாக எங்க வீட்டில 'டிஷ் வாஷர் ' இருக்கிறது என்று பெருமைப் பட்டுக் கொள்வார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!




























6 Jul 2014

உறவுகள்-1

விடியற்காலையில் எழுந்திருக்கும் கெட்ட பழக்கம் போய் நாட்கள் பல ஆயின! இரவின்  அமைதியில்  தடைகள் இல்லாமல் புத்தகங்கள் வாசிப்பதும், பகலில் தூங்குவதும் காலையில் எழுவதற்குப் பகை.
இதற்குப் பரிகாரம் தேட முடியாது, வேலைக்கா போகிறோம் என்று வாழ்க்கையை சித்தம் போக்கு சிவன் போக்கு என்று விட்டாயிற்று! சுதந்திரப் பறவைக்கு எதுக்கு இந்தப் புலம்பல் என்கிறீர்களா? என் இனிய காலைத் தூக்கம் கெட்டுப் போச்சுங்க!

காலை ஏழுமணி!

ஒரே கூச்சல் சப்தம் கேட்கிறது. பக்கத்து வீட்டுப் பெரியவர்தான் சத்தம் போடுகிறார். நீ நாசமாப் போ, என்று பெற்றபிள்ளையை ஊரெல்லாம் கேட்க சபிக்கிறார். பையன் பதிலுக்குக் கத்த, இவர் மீண்டும் ஓலமிட இடையே மருமகளின் குரல் கேட்கிறது. என்னவோ ஏதோ என்று அவர்கள் வீட்டு நாய் கூட்டணியில் சேர்ந்து தன் மொத்த சக்தியுடன் 'லொள்ள', அலறி அடித்துக் கொண்டு எழுந்தேன். சூழ்நிலை புரிய சிறிது நேரமானது. இனிமேல் தூங்க முடியாது! காது கொடுக்காவிட்டாலும் சத்தம் கேட்கத்தான் செய்யும்.
நல்ல விடியல் போங்கள்!
பெரியவருக்கு சுமார் 70 வயது இருக்கும்.  தினந்தோறும் மாலையில் கொஞ்சம் தண்ணி போட்டுவிட்டு,
பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு வருவதை வாழ்க்கையின்  முக்கியமான கடமையாகக் கொண்டிருந்தார்! மனைவி பரலோகம் போய் பத்து வருடம் இருக்கும். சொந்த வீடு. ஒற்றைக்கு ஒரு பிள்ளை. அவனுக்கும் கல்யாணம் ஆகி 7 வயது மகன் இருக்கிறான். மருமகள் வீட்டைப் பார்த்துக் கொள்ள வேலையை விட்டுவிட்டு குடும்பத்தலைவி ஆகிவிட்டார்! பிறகென்ன கவலை?

மனிதர்களுக்கு ஆண்டவன் எல்லாவற்றையும் கொடுக்கத்தான் செய்கிறான். ஆனால் சந்தோஷமாக வாழத் தெரியாதவர்களை யார் என்ன செய்ய முடியும்?

பெரியவரின் பையன் பெயர் ராமன். மனைவி கல்யாணி. ராமனுக்கு  மாலை நான்கு மணிமுதல் இரவு 2 மணி வரை வேலை. வேறே வேலை கிடைத்தால்தானே?

ஒருநாள் இரவு குடி போதையில் பெரியவர் ராமனின் படுக்கை அறைக் கதவைத் தட்டி கலாட்டா செய்துவிட்டார். வரவேற்பறை முழுதும் வாந்தி, நாற்றம்! சிவந்த கண்களும், பிதற்றலும், அரைகுறை ஆடையும் கல்யாணிக்கு ஒரே அதிர்ச்சி. இனிமேல் இங்கே இருக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.

கடைசிவரை பெரியவர் தான் அப்படி செய்ததாக ஒத்துக் கொள்ளவே இல்லை. பதிலுக்கு............
"நான் ஒன்றும் அப்படி செய்யவில்லை, வெட்கம் மானம் இல்லாதவனா நான்? எவ்வளவு பொய் சொல்றீங்க. இனிமேல் கல்யாணி சமைத்த உணவைக் கூட சாப்பிட மாட்டேன். நானே எனக்கு வேண்டியதை சமைத்துக் கொள்வேன். யாரை நம்பியும் நான் இல்லை. உங்களுக்கு இங்கே இருக்க இஷ்டமில்லையென்றால் 'கெட் அவுட்'.  இது என் வீடு, போடா" என்று சொல்லிவிட்டார் பெரியவர்.
அன்றிலிருந்து மருமகளுக்கும், மாமனுக்கும் பேச்சு வார்த்தை கிடையாது.

தனியே போக ராமனுக்கும் ஆசைதான். ஆனால் ஒரு கோடி பெருமானமுள்ள வீடு? அப்பா அதை விற்றுவிட்டால், அடமானம் வைத்துவிட்டால்! இன்னொரு  வீடு வாங்கவாமுடியும்? வீட்டு உரிமைப் பத்திரங்கள் எல்லாம் அப்பாவிடம்! என்ன செய்வது?
பொறுத்தார் வீடு ஆள்வார்! 

இடையில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். பிரசவத்துக்குப் போன கல்யாணி மூன்று வருடங்கள் தாய் வீட்டிலேயே தங்கிவிட்டாள். ராமனுக்கு சாப்பாடும் அங்குதான்.
மூன்று வயது பையனை பள்ளியில் சேர்த்த போது மீண்டும் புகுந்த வீடு வந்த கல்யாணியிடம் ராமன் சொன்னார், ''இதோ பாரும்மா, காலையில் எட்டு மணிக்குள் நமக்குத் தேவையான சமையலை செய்துவிடு. எட்டு மணிக்கு மேல் அப்பா அவருக்கு வேண்டியதை செய்து கொள்ளட்டும். இன்னும் இந்தக் கிழம் மரத்திலிருந்து இறங்கல. வயதாகிவிட்டது, இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறார்? அட்ஜஸ்ட் பண்ணிக்க.  குழந்தையை ஸ்கூலில் விட்டுவிட்டு அம்மா வீட்டுக்குப் போ. திரும்ப நாலு மணிக்கு குழந்தையோடு இங்கே வா. எனக்கு வேண்டியதை செய்து கொடு. இரவு நான் வந்து விடுவேன். ப்ளீஸ்......." என்றான்!
முதியோர் இல்லத்தில் பெரியவரை கட்டாயப்படுத்தி சேர்க்கலாம்தான். காசு யார் கொடுப்பது? இன்றைய முதியோர் இல்லங்களிலும் வீட்டு வாடகை மாதிரி மாதம் பத்தாயிரம் பணம் இல்லாவிட்டால் முடியாதே!?

வேலைக்கார அம்மா மாலை வந்து பாத்திரம் கழுவி தனித்தனியே வைத்துவிடுவார். 

ஒரே சமையலறையில் இருவர் தனித்தனி சமையல். கல்யாணி இரவு உணவை அம்மாவீட்டிலிருந்து கொண்டு வந்து விடுவாள். ஏதோ ஒரு நாள் தெரியாத்தனமாக பெரியவர் சமையலறையில் காலை எட்டு மணிக்கு முன் புகுந்து விட்டால் வீடு ரெண்டுபடும்.

எத்தனை நாள் தான் அம்மாவீட்டில் எட்டு மணி நேரம், புருஷன் வீட்டில் மிச்ச நேரம் என்று கழிப்பது?கல்யாணிக்கு பிரமாதமான ஒரு ஐடியா வந்தது.
"இதோ பாருங்க, அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க, ஏன் உங்கள பகல் நேரத்தில பாக்க முடியறது இல்லன்னு கேட்கறாங்க. எத்தனை நாள்தான் உங்க அப்பாவுக்கு பயந்துகிட்டு என்னை அம்மாவீட்டுக்கு அலைய விடுவீங்க? என்னாலும் முடியலைங்க. நான் இந்த வீட்டு மருமக இல்லையா?  பேசாம கொஞ்சம் லோன் போட்டு மாடியில வீடு கட்டுங்க. என்னப் பெத்தவங்களும் உதவி செய்வாங்க. பையனும் வளர்ந்துட்டான். அவனுக்குன்னு ஒரு ரூம் வேணும்.  நானும் இங்கேயே இருந்துடுவேன். எங்க அம்மா அப்பாவும்  பொண்ணுக்கு விடிவு காலம் வந்துச்சுன்னு சந்தோஷப் படுவாங்க." என்றாள்

ராமனுக்கும் அது நல்லதாகப் பட்டது. முதலில் மறுத்த பெரியவரிடம், கட்டி வாடகைக்கு விட்டால் மாதம் பத்தாயிரம் வாடகை கிடைக்கும், செலவுக்கு ஆகும் என்று சொன்னதால் சரின்னுட்டார். ரகசியம் என்னவென்றால் பெரியவரிடம் ஒன்றும் அத்தனை பணம் கிடையாது. அவ்வப்போது  ராமனிடம்தான் வாங்கிக் கொள்வார்.
 வீட்டுப் பத்திரத்தைக் காட்டி 'வங்கி' லோனும் வாங்கியாயிற்று. மாடியில் இரண்டு அறைகள், வரவேற்பறை, சமையலறை. அழகான சிறுவீடு!
புதுமனை புகு விழாவன்று பெரியவர் திருப்பதியில்!வந்தவர்கள் குடிப்பழக்கத்தைப் பற்றிக் கேட்டுவிட்டால் என்ன செய்வது? முதல் நாளே போய் விட்டார். திரும்ப வந்து நான்கு நாட்களில் மகன் மாடிக்கு குடித்தனம்  போனதும் பெரியவருக்கு கோபம் வந்திருக்க வேணும். வாடகையும் வராது, வீட்டுப் பத்திரமும்  கை மாறிவிட்டது!அதுதான் காலை சுப்ரபாதம்.

வயதான காலத்தில் பெரியவர் பிள்ளை, மருமகள், பேரன் என்று சந்தோஷமாக இருக்கக்கூடாதா?
குடிப்பழக்கம் எதற்கு?
பிள்ளை ராமன்தான் அப்பாவிடம் நல்லதனமாக நாலுவார்த்தை பேசக் கூடாதா?
மருமகள் பெற்ற தகப்பனைப் போல நினைத்து மரியாதையாக நடத்தக்கூடாதா?
முதுமையில் தனிமை கொடுமை!

இப்போதெல்லம் பேரன் அடிக்கடி சத்தம் போட்டுக் கத்துகிறான். அம்மாவிடம் வாதாடுகிறான்.  எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இக்குடும்பம் ஒரு முன்னுதாரணம். பல குடும்பங்களில் மாமியார் இல்லையென்றால் நல்லதாயிற்று என்று கல்யாணம் செய்துவிடுகிறார்கள்! அங்கும் ப்ரச்சினைகள்தான்.

ஒரு வாரமாக வீடு அமைதியாக இருந்தது. முக்கியமாக என் காலைத் தூக்கம் கெடவில்லை.

இன்று காலை ஒரு பத்து மணி இருக்கும். இரண்டு டாக்சிகள் வாசலில் வந்து நிற்கும் சப்தம்! யார் வருகிறார்கள் நம் வீட்டிற்கு என்று வாசலுக்குப் போனேன். இடது பக்கமாக இறங்கிய பெரியவர் வலது பக்கம் வந்து பின் கதவைத் திறந்தார். மெதுவாக இறங்கினார் ஒரு மூதாட்டி. வயது சுமார் அறுபது இருந்தாலும் ஆரோக்யமாகத்தான் தெரிந்தார். புதுச் சேலை, கழுத்தில் கருமணிச் சரம், தலையில் பூ, நெற்றியில் பொட்டு! டிரைவர் ஒரு பெட்டியை இறக்கி கீழே வைத்தார். இன்னொரு டாக்சியில் நண்பர்கள் போலும்!  அப்போ நாங்க வருகிறோம் என்று விடை பெற்றுக் கொண்டனர்.

பெரியவர் முகத்தில் புன்னகை. வீட்டு சாவி ஒருகையிலும், பெட்டி மறு கையிலும்!
தயங்கித் தயங்கி உள்ளே வந்த அந்த அம்மாள் திகைத்து நிற்கும் ராமனையும், கல்யாணியையும் பார்த்து கை குவிக்கிறார்.
இனிமேலாவது குடிக்காமல் இருந்தால் சரி!
இந்த வயதில் என்ன வேண்டிக்கிடக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்! பாவம் அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து சொல்வதைக் கேட்கவாவது துணை வேண்டும் என்று தோன்றியிருக்கும் போல!

நாளைக் காலை அகர்பத்தி வாசனையோடு  வெங்கடேச சுப்ரபாதம் கேட்கும் என்று நம்புகிறேன்!


Courtesy: Google images


















30 May 2014

அலையின் அலைகள்

வழக்கம்போல பூங்காவிலிருந்து திரும்பி வரும்போது  இயற்கை உணவுப் பொருட்கள் விற்கும் கடைக்குள் நுழைந்தேன்.  அங்கே காய்கறிகளை நோட்டம்விட்டபோது அலைபேசி அடிக்கவும் அதை எடுத்துப் பேசினேன். முடித்தவுடன் அந்தக் கடையில் பகுதி நேர வேலை செய்யும் வாலிபர்,''அட நீங்க கூட Android phone எல்லாம் வெச்சிருக்கீங்களே! பரவாயில்ல, என் பாட்டிகிட்ட அலைபேசியக் கொடுத்தா தள்ளிவிடறாங்க. போடா, எனக்கு இதெல்லாம் வேண்டாம், யாரு இதயெல்லாம் கத்துப்பாங்க? அப்படீங்கறாங்க,' என்றார்.

அதுக்கு என்னப்பா செய்யறது? ஒவ்வொருத்தருக்கு ஒன்னொன்னு பிடிக்கும் என்றேன்.
ஆமாங்க, இன்னி தேதிக்கு செல் போனும், லேப்டாப்பும் உபயோகப் படுத்தாதவங்க ரொம்ப கம்மி. அதனால எத்தனை சீக்கிரமா எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்க முடியுது என்றான்.
சரிதான் என்று சிரித்தேன்.

உண்மையைச் சொல்லப் போனால் இடுப்பிலே குழந்தையையும், தலையில் அன்று சமைக்க வேண்டியு உணவுப் பொருளையும் சுமந்து கொண்டு நாள்முழுதும் உழைத்த உழைப்பின் துன்பத்தையெல்லாம் மறந்து, தலயை ஆட்டி ஆட்டி, அலை பேசியில் சிரிக்க சிரிக்க  எந்த உறவுடனோ பேசிச் செல்லும் ஏழை எளிய மக்களைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இங்கே மரத்தடியில் ஒரு வயதான அனாதைத் தாய் அமர்ந்திருப்பார். கையில் அலை பேசி.பேசும் போது பொங்கி வழியும் ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே! அலை பேசி நம் சமுதாயத்திற்கு மிகப் பெரிய நன்மையைதான் செய்துள்ளது. பயன் படுத்தத் தெரிந்த சந்தோஷம். அன்பு மிக்கவர்களின் குரலைக் கேட்பதில் ஆனந்தம்.

என்னுடைய தோழியர் வட்டத்தைப் பார்த்தால் நிறைய பேர்,'' அட போப்பா, இந்த 'டச் போன் தலைவலியெல்லாம் நமக்கு எதுக்குன்னு நான் அந்தப் பக்கமே போவதில்லை. பேரன் பேத்திகிட்ட கேட்டா கூட சொல்லித்தரமாட்டேங்குதுங்க. தப்பா எதாச்சும் செஞ்சா திருதிருன்னு முழிக்க வேண்டி இல்ல இருக்கு? கரண்ட் இல்லைன்னா 'நெட்' இல்ல! இருந்தா அத்தன பேரும் 'செல்ல' சார்ஜ் பண்ண போட்டியே நடக்குது.  எல்லாம் இருந்தா நேரம் இல்ல! டீ. வி. சீரியல் பார்த்தாலே பொழுது போயிடும் என்கிறார்கள்.

என்ன செய்வது? எனக்குக் கூட எதுவும் தெரியாமல்தான் இருந்தது! இப்போ மட்டும் என்ன ரொம்ப தெரியுமா? காலத்தின் கட்டாயம், வேற வழியில்ல பொழுதுபோக்க! கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன், அவ்ளவுதான்!

வாழ்க்கையின் திருப்பு முனையில், திகைத்து நின்ற கால கட்டத்தில் 'உனக்கு ஒரு துணை வேண்டும்' என்ற போது,''ஐயய்யோ, திரும்பவுமா'' என்றேன். அட பயப்படாதே!  மடிக் கணிணியும், அலைபேசியும்
உன்னை ஒன்றும் செய்யாது. சொன்னபடி கேட்கும். உலகம் சுற்றச் செய்யும்! நண்பர்களோடு மீண்டும் இணைக்கும். ஊர்வம்பு, உலக வம்புகள் உடனுக்குடன் உன்னை சிரிக்கச் செய்யும்!இங்கு நகைச்சுவையும் உண்டு சோகமும் உண்டு! இலக்கிய உலகில் உன் விருப்பப்படி படிக்கலாம், பாட்டுக்கேட்கலாம், எல்லாம் அடங்கிய சிறு பெட்டியம்மா இது. உன் வாழ்வை புதிப்பிக்கும் கற்கண்டுக் கட்டி என்றதும் பயமாகதான் இருந்தது. ஆம் என் கல்லூரித் தோழிக்ளைக் கண்டு பிடித்துத் தந்துள்ளது முக நூல். எத்தனை சந்தோஷம்! சொல்லி முடியாது!

தமிழ் தட்டச்சு, ட்விட்டர், முகநூல் எல்லா அறிமுகங்களும் கிடைத்தன. இன்றைக்கும் கூட ட்விட்டர், முக நூல் எல்லாவற்றிலும் நான் 'பெயில்'தான். இருபது வருடங்களுக்கு முன்னென்றால் நன்றாக இருந்திருக்கும். இப்போது இரண்டு வரி எழுத ஆயிரம்தடவை யோசிக்க வேண்டியிருக்கிறது. அதனாலென்ன? காதலும், பாடலும், இலக்கியமும், அரசியலும், சினிமாவும் கலந்து கட்டி நகைச்சுவை விருந்தளிக்கிறது ட்விட்டர். ஒரு பார்வையாளியாக சிரிக்கிறேன் ரசிக்கிறேன்.

சமூகவலைத் தளங்கள் நிச்சயமாக தன்னம்பிக்கையை வளர்க்கிறது. பலவற்றையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் உதவுகிறது. புதிய அறிமுகங்கள், புதிய நட்புகள்!
எத்தனையோ வலைப்பதிவாளர்களின் பதிவுகள் சிந்தனையைத் தூண்டிவிடுகின்றன.  பரந்து விரிந்த இந்த உலகின் பல்வேறு பரிமாணங்களைப் பார் என்கின்றன.

இராமாயண, மகாபாரத, புராண பழங்கதைகளைக் கேட்டு என்ன ஆகப் போகிறது? கற்றுக் கொள்ளப் போவது என்ன? நம்மால் பின்பற்றமுடியாத எந்த ஒரு அறிவுரையையும் விட்டுவிடுவது நல்லது அல்லவா?

நான்கு ஆண்டுகள்!நம்பதான் முடியவில்லை! ஆனால்,

இந்த நிமிடம் தரும் சந்தோஷம் மட்டுமே சத்தியம், நித்தியம்!
வாழ்க்கை கடந்த காலத்தில் இல்லை! இணைய தளத்தின் வலையில், பிரபஞ்ச அலைகளின் ஊடே நம்மை  நாமறியாமல் இணைக்கும் அலை பேசியின் ஒலியில்.................
தன்னைத்தானே உணர்ந்த, சுமைகளற்ற சுதந்திரப் பறவையாய்ப் பறப்பதில் ஒரு சுகம். அந்த சுகத்தின் அமைதியில், ஆனந்தத்தில், வானவெளியில், நீலவானத்தின் மடியில்,கடலலைகள் சாட்சியாக நான்..... !
















26 Apr 2014

காதல் பரிசு!

''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின் பாடல்.

காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல்' என்று பாடினான் பாரதி.
காதல் சாதி, மத, இனங்களுக்கு அப்பாற்பட்டது.  வாலிப வயதில் காதல்வருவது இயற்கை. வயதாகி திருமணம் முடித்து இரண்டு மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆனபின் வருவது காதலா, காமமா? 
   
வாசல் கேட் சத்தப்பட்டால் காலை மணி பத்து என்று கடிகாரத்தை சரி செய்து கொள்ளும் அளவுக்கு நேரம் தவறாதவள் கண்ணம்மா! அன்று... அம்மா..ஆ.. என்று சத்தம் போட்டபடி வந்து நின்றாள்.

என்னம்மா ஆயிற்று, என்று திடுக்கிட்டுப் போய் கதவைத் திறந்தோம். பாருங்கம்மா, காப்பி ஆச்சான்னு கேட்டதுக்குப் போய், பத்துப் பாத்திரம் தேய்க்கிற கழுதைக்கெல்லாம் பதில் சொல்லணுமோன்னு இந்தப் பெருமாள் கேலி செய்யறான். பத்துப் பாத்திரம் தேய்க்கிறவ குடுக்கற பணம் மட்டும் நல்லாயிருக்காமில்ல......கெட்ட வார்த்தைகளால் கொஞ்சம் அர்ச்சனை.... முணுமுணுப்பு..... கண்கசக்கல்..மூக்குசிந்தல்......!

    எங்கள் வீட்டில் பணி செய்யும் உதவியாளர் மிகவும் சுறு சுறுப்பானவர். கருப்பேயானாலும் முகத்தில் ஒரு களை! அழகு!கிராமத்தில் பிறந்து தினை,கம்பு, கேழ்வரகு சாப்பிட்ட வலிமையுள்ள உடற்கட்டு. ஒரு தடவை அழகு நிலையம் அழைத்துப் போய் வந்தபின், நல்ல பட்டுப் புடவை கட்டி, காதிலும், மூக்கிலும் வைரத்தைப் போட்டு விட்டால் அழகாகவே காட்சி அளிப்பார்! கடவுளுக்குதான் எத்தனை ஓர வஞ்சனை? ஏழைக்குடும்பத்தில் பிறக்க வைத்து, குடிகாரனுக்கு வாக்கப் பட வைத்து, காலை முதல் மாலை வரை சொந்தமில்லாத வீடுகளை சொந்தமானது போல் கூட்டி மெழுகி வாழ வேண்டிய கட்டாயம்.
      ஒரு தடவை சொன்னால் போதும் அந்த வேலையை சரியாக செய்து விடுவார். மாடியும் கீழுமாக தோட்டத்தோடு கூடிய வீடு எங்களுடையது.  எங்களுக்கு வலது, இடது கை எல்லாமே அவர்தான். திருமணமாகி வந்ததில் இருந்து பதினேழு ஆண்டுகளாக வேலை செய்கிறார். எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பதெல்லாம் அவருக்கு அத்துபடி. ஏதாவது காணோமென்றால் அவரைக் கேட்டால் போதும், சரியாகச் சொல்லிவிடுவார். அதாவது சமையல் தவிர மற்ற எல்லா வேலைகளும் கச்சிதமாக செய்வார். நாம் எதுவும் சொல்லவே வேண்டாம். அதற்குத் தகுந்தார் போல் சம்பளமும் அதிகம்தான். காலை பத்தரை மணிக்கு டிகிரி காப்பி. பன்னிரண்டரை மணிக்கு மதிய உணவு. ............ வீட்டில் அவரை வேலையாளாகக் கருதுவதில்லை.

 கண்ணம்மாவுக்கு மூன்று பையன்கள்.
பெரியவன் பி.யூ.சி முதல் வருடம் சிலகாலம் படித்து விட்டுவிட்டான். இரண்டாவது மகன் எட்டாம் வகுப்பிலேயே வேலைக்குப் போய் விட்டான். கடைசி மகன் படித்துவருகிறான். சின்ன சொந்த வீடு. வேலை செய்யும் வீடுகளில் கொடுக்கப்பட்ட கட்டில், மெத்தை இன்ன பிற சாமான்கள். நாங்கள் கொடுத்த டீ. வி, தானே வங்கிய கேஸ் அடுப்பு. சுமார் ஆறு வீடுகளில் வேலை செய்வதால் கிட்டத்தட்ட 10000 ரூபாய் சம்பாதிக்கிறார்.

புருஷன் வேலனுக்கு  இவள் இரண்டாவது பெண்டாட்டி. முதல் மனைவி கொஞ்சம் வசதியானவள்.  அவளுக்கு ஒரு பெண். பக்கத்து ஊரில் வசிக்கிறாள். வேலன் மொடாக் குடியன். வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பணம் அப்படியே குடிக்குப் போய் விடும். போதாக்குறைக்கு கண்ணம்மாவிடம்  பணம் பிடுங்கிக் கொண்டு போய் விடுவான். கொடுக்காவிட்டால் அடிஉதைதான்.  இவன் அடிக்கடி  முதல் மனைவியிடம் போய்  ஒரு சில நாட்கள் தங்குவதும், திரும்பி வரும் போது எங்க ஜெயந்தி போல வருமா என்று பெருமையடித்துக் கொள்வதையும்,  மூஞ்சியப் பாரு கருப்பி என்று இவளைத் திட்டுவதையும் கேட்டு அழுகையாக வரும் கண்ணம்மாவுக்கு. அவளுக்கு இலவச இணைப்பு அவனுடைய அம்மா!

அன்பு செலுத்தவும், அன்பைப் பெறவும் யாருமில்லாமல் தவித்தது கண்ணம்மாவின் மனம்.  அட, நல்ல புடவை கட்டி, தலையில் பூச்சூடி அலங்காரம் செய்து கொண்டு, ஆசையாய் ஒருநாள் ஹோட்டலுக்கு சேர்ந்து போய் பிடித்தமானதை சாப்பிட்டு, திரைப் படம் பார்த்துச் சிரித்து, இவையெல்லாம்  இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா? பிள்ளைகளோ சொன்ன பேச்சைக் கேட்பதில்லை. புருஷனும் சரியில்லை. இவ்வாறு இருந்த வாழ்க்கையில் அவள் கண்ணில் பட்ட மன்மதராஜாதான் பெருமாள்.

பெருமாள் ஒரு டிரைவர். கன்னங்கருப்பு! சிரித்தால் வெளுப்புப் பற்கள் அழகூட்டும். கையில் தங்கப் பட்டை வாட்ச் கருப்பில் மினுக்கும். ரொம்ப மென்மையாகப் பேசுவான்.  குடி, சிகரெட் கெட்ட பழக்கங்கள் அவனுக்குக் கிடையாது. நீலகிரியில் பிறந்தவன். பெங்களூரில் பல வேலைகளும் செய்ய வைத்து, கடைசியில் காரோட்டும் திறமையைக் கண்டறிந்த அவன் அண்ணன் அவனுக்கு லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தார்.

காரோட்டியாக அவனுடைய வாழ்வு நன்றாகவே நடந்தது. திருமணம், ஒரு பெண், ஒரு பையன் எனப் பெருகியது குடும்பம். இதற்கிடையில் விற்பனைக்கு அந்த வீடு ஒன்றை 'வங்கிக் கடன்' பெற்று வாங்கிக்
கொண்டான். பேராசையால் இரண்டாவதாக வீடு வாங்கிய போது கடனாளியானான்.அவனுக்கு ஒரே வருத்தம் கடன் வாங்க பிரம்மா 1000 கைகளை வைக்க மறந்துவிட்டாரே என்பதுதான். அவனுடைய முகராசியும், நடிப்பும் அவன் யாரிடம் கடன் கேட்டாலும் அவனுக்குக் கிடைத்தது.

ஆனால்  அவன் கேட்காமலே கிடைத்தது கண்ணம்மாவின் காதலும், கடனுக்குப் பணமும். விட்டுவிட மனம் வருமா? போகவர பேசுவது, 'செல்' பேச்சில் வளர்ந்து, 'பைக்கில்' பூங்காவுக்குப் போவது, எஜமானுடைய கார் கிடைக்கும் போது சொந்தக் கார்போல பெங்களூர் சாலைகளில் பவனி  வருவது மிக ரகசியமாகத் தொடர்ந்தது.
பெருமாளுக்குப் பணம் தேவைப் பட்டபோது சீட்டுப் பணத்திலிருந்தும், சேமிப்பிலிருந்தும் பணம் கொடுத்து உதவிய கண்ணம்மா அவனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சொல்ல ஆரம்பித்தாள்.  அவன் மனைவியிடம் கண்ணம்மாவே தங்கள் தொடர்பைச் சொல்ல வந்தது வினை. பெரியவர்கள் புத்தி சொல்ல ஆரம்பித்தார்கள்.

வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுத்த பெருமாள் சிறிது சிறிதாக அவளிடமிருந்து விலக ஆரம்பிக்கவே  கண்ணம்மா அவனை எஜமானிடம் காட்டிக்கொடுப்பேன் என்று பயமுறுத்த ஆரம்பித்தாள்.  எதையாவது சொன்னே கொலை பண்ணிடுவேன்னு மிரட்டினான் பெருமாள். காதல் போயிற்று  சண்டை தொடங்கியது.

 அன்று........அதுதான் 'அம்மா' என்று சத்தமிட்டு வந்த அன்று......சாயம் வெளுத்துப் போச்சு......

பெருமாள் தான் செய்த தவறை சொல்லி வேலையை விட்டு நின்றுவிடுகிறேன் என்று எஜமானர் காலில் விழுந்துவிட்டுச் சென்றான். மறுநாள் பெருமாள் வேலையை விட்டுவிட்டான் என்றதும் அவன் இல்லாத வீட்டில் நானும் வேலை செய்ய மாட்டேன் என்று கண்ணம்மாவும் வேலையை விட்டாள்.

இருவரும் வெவ்வேறு இடத்தில் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் எங்களால் இவர்களுடைய 'காதல் பரிசின் 'அதிர்ச்சியிலிருந்து வெளியே வரமுடியவில்லை. அது என்ன காதல் பரிசு எங்களுக்கு? அதுதாங்க இதுவரை எந்த வேலையானாலும் கவலையில்லாமல் இருந்த எங்களுக்கு ஞானோதயம் ஏற்படச் செய்து, யாரையும் நம்பாதே, பிறரைச் சார்ந்து இருக்காதே
என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்திய பரிசுதான்....!

பாத்திரம் தேய்க்கும் எந்திரமும் (Dishwasher) மந்திரம் போட்டதுபோல் வீடு துடைக்கும் கோலையும்
( Magic mop) வாங்கி விட்டோம். வீட்டு வேலைகள் பத்து மணிக்குள் முடிந்து விடுகிறது.
ஆனால்.......
எத்தனை நம்பிக்கை துரோகம்! வீட்டு மனுஷியாய் அவளுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் தீர்வு சொல்லி, வங்கிக் கணக்கு ஆரம்பித்துக் கொடுத்து, ஊரே பொறாமைப் படும்படி அவளைப் பெருமைப் படுத்தி....................! தான்செய்த தவறை ஒப்புக்கொண்ட போதும் சிறிது கூட எந்த உணர்வுமின்றி......அவள் போனாள்! எப்படி என்று ஆச்சர்யப் படுகிறது மனம்! காதலுக்கு கண் இல்லை என்பது உண்மைதான்! 
ஆனால் எங்களுக்கு...ஞானக்கண் திறந்தது!

காதலுக்கு கண் இல்லை, வயது இல்லை! உறவுகள் இல்லை!பிள்ளைக்குட்டிகள், பெண்டாட்டி புருஷன் தடையில்லை!?
யாரும் லட்சியமில்லை!

பெருமாளோ எல்லாம் அந்தக் கண்ணம்மா தப்புதான், நான் ரொம்ப நல்லவன் என்று தன் ஆண்பிள்ளைத் தனத்தை பெருமையுடன் சொல்லி விட்டுப் போனான். எங்களிடம் வாங்கிய கடன் இரண்டு லட்சம்..........?  \|/ ....

பெருமாளின் பெண்டாட்டி குழந்தைகளையும், கண்ணம்மாவின் மூன்று பிள்ளைகளையும் நினைத்தால்தான்  பாவமாயிருக்கிறது!

(இது ஒரு உண்மைக்கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)


















6 Apr 2014

சும்மா இருங்க?

பள்ளிக்கூடம்  என்றாலே மாணவர்களுக்கு நினைவு வருவது, 'சத்தம் போடாதீங்க! அமைதி! வாய்மேல விரல் வையுங்க,' என்று ஆசிரியர் அலறுவதுதான். மாணவர்கள் வாயிலோ துள்ளிக் கீழே விழத் தவிக்கும் வார்த்தைகள். எவ்வளவோ கஷ்டப்பட்டு சும்மா இருக்கிறார்கள். ஆசிரியர் முகத்தில் நட்பான ஒரு புன்னகை போதும், மீண்டும் நீர் வீழ்ச்சியாய் சளசளவென்று பேச்சு.
''சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றுமறிந்திலனே" என்கிறது கந்தரனுபூதி. மனிதனால சும்மா இருக்க முடியுமா? ஒன்று ஏதாவது வேலை செய்யணும், இல்லை யார்கிட்டயாவது பேசணும், சும்மா எப்படி இருப்பதாம்? எவ்வளவு படிச்சாலும், எழுதினாலும், பாட்டுக் கேட்டாலும், இறைவனை பிரார்த்தித்தாலும் கடைசியில் மனிதனுக்கு யாரிடமாவது பேசாமலிருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும்.
சமீபத்தில் ஒரு 'ஆஸ்கார் அவார்ட்' படம், சிறந்த நடிப்புக்குக் கொடுக்கப்பட்டது. கதாநாயகி பல இடங்களிலும் தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள். அவளுடன் பேச யாருமில்லை. எல்லோரும் அவளை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். மிகச்சிறப்பாக நடித்திருக்கும் 'நீல மல்லிகை' திரைப்பட கதாநாயகிக்குதான் சிறந்த நடிக்கைக்கான பரிசு.
எங்கள் வீட்டு ஜன்னலில் சதா புறாக்கள் தொந்தரவு. நானும் சில சமயங்களில் அவற்றுடன் பேசுவேன்! எங்க வீட்டுக்காரர் சிரிப்பார்.ஒரு'நெட்' போடுங்கன்னா, கேட்க மாட்டேன் என்று சும்மா இருக்கும் உங்களைத் திட்ட முடியுமா? அதுதான் புறாவிடம் சொல்கிறேன் என்று சிரிப்பேன். ஆம் தனக்குத் தானே பேசிக் கொள்வது குறித்துதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பேச்சு!
 எல்லாக் கடமைகளும் முடிந்து, பிள்ளைகள் கூட இல்லாமல்'தனிக்குடித்தனம்' இருந்தால் கேட்கவே வேண்டாம்! டெலிபோன் மணி அடித்தால் நிறையப் பேச ஆள் கிடைத்தது என்று சந்தோஷப்படும். நண்பர்களை வழியில் பார்த்தால் ஆனந்தப்படும். உறவுகள் வரும்படி அழைத்தால் உற்சாகப்படும்.
பூங்காவில் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே நடப்பவர்களைக் கண்டு பொறாமைப்படும்!
பேசுவது என்பது மூச்சுவிடுவது போல! இளமையில்  வேலைகள், குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் எனக் கவலைப்பட நேரமில்லாமல் போய்விடும்! முதுமையில் பேச ஏங்கும். உறவுகளைத் தேடும்!

 யாரிடமும் பேசாமல் இருப்பவர்களுக்கு உம்மணாமூஞ்சி என்று பெயர்! சிலர்  வாங்க என்று ஒரு புன்னகையோடு நிறுத்திக்கொள்வார்கள். 'வாயிலிருந்து முத்து உதிர்ந்துவிடும் போல,' பேசாமல் நம்மையும் பயமுறுத்தி எழுந்து போகவைத்துவிடுவார்கள்!
ஒரு சிலர் கேள்வியும் நானே பதிலும் நானே என்று திறந்த வாயை மூட மாட்டார்கள்.  சமீபத்தில் தெரிந்த சினேகிதியிடம் மாட்டிக் கொண்டேன். ரத்த அழுத்தம் இருக்கா? சர்க்கரை, கால்வலி,தொடங்கி எல்லா நோய்களும் இருக்கிறதா எனப் பட்டியல் இட்டார்! இந்த மாதிரி ஆட்களைப் பார்த்தால் மாயமாய் மறைந்து போகலாம்னு தோணும்.
கூட்டுக் குடும்பங்கள் இருந்த காலத்தில் வீடு எப்போதும் கலகலப்பாய் இருக்கும். தனித் தீவுகளாகிவிட்ட இன்றைய குடும்பங்களில் வீட்டுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வது அரிதாகிவிட்டது.
என் சகோதரர் மனைவியுடன் தங்கியிருக்கும் முதியோர் இல்லம் போயிருந்தேன். வயல் வெளிகளுக்கு
நடுவே ஊரிலிருந்து சற்றே தள்ளி, அமைதியின் மடியில், பறவைகளின் இசைத் தாலாட்டில், தென்றல்
கிசுகிசுக்கும்  சொல்லற்ற செய்திகளின் மறைவில் குடியிருப்புகள்! சவுகரியங்களின் தேவையை உணர்ந்து பக்காவாகக் கட்டப்பட்ட விடுதிகள்.
எல்லோராலும் கைவிடப்பட்டு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு - விட்டு விடுதலையாகித் தன்னந்தனியே எல்லோருடனும்  வாழும்  வாழ்க்கை! வேளாவேளைக்கு  சாப்பாடு! படிக்க ஆங்கில, தமிழ்  பத்திரிகைகள், மாத இதழ்கள், நாவல்கள் அடங்கிய நூலகம்!
பல்லாங்குழியிலிருந்து  விளையாட ஓர் அறை, நடை பழக  மைதானம்! ஆண்டவனைத் துதிக்கவோர் கோயில்! சகல வசதிகளும் செய்து கொடுத்து எல்லோருக்கும் உறவாக ஒற்றை மனிதர்!
ஒவ்வொருவரிடமும் ஒரு கதை. சம வயதுடையவருடன்  எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். ஓ நம்மைப் போல நிறையபேர் இருக்கிறார்கள் என்று ஒரு சமாதானம். இதுதான் நமக்கு என்று ஒரு ஆறுதல்! சில நாட்கள் இருந்தால் தனிமை பழகிவிடும்.
பேச்சுத் துணைக்கு நிறைய பேர். பேச ஆளில்லையே என்று கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் வாழ்நாளைக் கழிப்பவர்களுக்கு முதியோர் இல்லங்கள் ஒரு வரப்பிரசாதம்.
என்னதான் சொல்லுங்கள் கடைசியில் மனிதனுடைய வாழ்வு அவனுள் தோன்றி அவனுள் தனியே மறைந்துவிடுகிறது. தனியே பிறக்கும் மனிதன் தனித்தே வாழ்கிறான். மறைகிறான். அதுதான் உண்மை.

22 Mar 2014

An announcement

Please post this message in the known groups so that it gets circulated.

If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th std this year and scored more than 80% please ask them to contact the NGO - Prerana(Supported by Infosys foundation).

The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies.

Please ask the students to contact the people mentioned below to get the form:
580, Shubhakar, 44th cross, 1stA main road, Jayanagar, &th block, Bangalore.
Contact numbers:
MS.Saraswati 99009 06338
MR.Shivakumar  99866 30301
Ms.Bindu 9964534667

Please pass on this information, someone might be in need of this.Thank You.