4 Apr 2013

அக்ரீமெண்ட்

                    பத்து வருஷமா பொண்ணு தேடி கடைசியில கஸ்தூரியம்மா மகனுக்கு கல்யாணம்!  என்னத்தச் சொல்ல?  இந்தக் காலத்தில இப்பிடிதான்! பையனுக்கு கல்யாணம் செய்யணும்னா   என்ன விலை தெரியுமா?

அந்தக் கல்யாணமண்டபத்தில் முகூர்த்த நேரம்! சுற்றங்கள் எல்லாம் மேடையில் நிற்க, கெட்டிமேளம் என்று யாரோ கையை ஆட்ட, மேளக்காரர் பிளந்து கட்டுகிறார்!ஆனந்தம் ஆனந்தம் என்று நாதஸ்வரக்காரர் பின்னாலேயே! சங்கரன், சங்கரி கழுத்தில் டாலர் வைத்த சங்கிலியைப் போட, சங்கரி சங்கரன் கழுத்தில் டாலர் வைத்த சங்கிலியைப் பதிலுக்குப்  போட்டாள். ரெண்டுபேரும் தாலி செயின் போட்டுக்கிறதா தீர்மானம்,.... யாரு பொண்ணுதான்! மஞ்சக்கயிறு வேண்டாம்! நாலு நாளிலே கழட்டிப் போடுவதற்கு பதிலாக இருவரும் படித்து சமமான வேலை செய்வதால் செயின் 'எக்ஸ்சேஞ்'. கல்யாணம் முடிஞ்சு போச். மொத அக்ரீமெண்ட்!

பையனின் அம்மா, அதுதான் சங்கரனைப் பெற்றவள் சங்கரியின் பெற்றோரிடம் வந்தாள். கைகுலுக்கிக் கொண்டார்கள். என்  பையனை ரொம்ப செல்லமா வளர்த்துட்டேன். இனிமேல் நீங்கதான் எல்லாம்! பாத்திரம் தேய்க்க 'டிஷ் வாஷரும், துணி தோய்க்க வாஷிங் மிஷினும் சீரா வெச்சுட்டேன். அவனுக்கா வாங்கின அபார்ட்மெண்ட்டில சமையலறையில சகல சாமான்களும் இருக்குங்க. ஒரு மாசமா  ''கிட்சன் மாஸ்டர் தனுகிட்ட டிரெயினிங்'' முடிஞ்சு சர்டிபிகேட் வாங்கிட்டான். நல்லா சமைச்சுடுவான்! ரெண்டாவது அக்ரீ...........ட்!

சங்கரியின் அம்மா சொன்னாள்,''நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க.நாங்க பாத்துக்கறோம். ஆமா, நீங்க சொன்னீங்களே, என் பொண்ணுக்கு 50 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி, டவுரி தரேன்னு?(மூணாவது அக்ரீமெண்ட்)

ஆமாங்க, அதெல்லாம் இதோ இந்தப் பெட்டில இருக்கு! லாக்கர் சாவி இந்தாங்க! அதோட என் பையனோட பேங் பாஸ்புக், ATM கார்ட் எல்லாம் அவன்கிட்டதான் இருக்கு. தயவு செஞ்சு என் பையன மட்டும் கண்கலங்காம பாத்துக்குங்க. அப்பப்போ கொஞ்சம் தாராளமா பாக்கெட் மணி  குடுக்க மறந்துடாதீங்க!
சரிம்மா நாங்க பாத்துக்கிடரோம். வாசல்ல டாக்ஸி ரெடியா இருக்கு!

ஏண்டா, நான் போய்ட்டு வரேண்டா, மகராசியா நல்லா இரும்மா, என்ன?
சரிம்மா, முதியோர் இல்லத்துக்கு முடிஞ்சபோது வந்து உன்னைய பாக்கறேன். பை,பை!(அக்ரீ 4.)
                                       --------------------------------------------------
இந்த வலைப்பதிவு திரு கிரீஷ் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அவருடைய வலைப்பதிவின் தொடர்பு கீழே காண்க.

http://blog.gireesh.me/2013/04/a-scary-future-rain-drops.html

22 Mar 2013

ஆசையில் ஓர் கடிதம்



22 March 2013
Bangalore - 85



அன்புள்ள என் வலைப்பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் வணக்கம்.
                                                                                                                

 நலம் நலமறிய ஆவல். என்ன ஆச்சு உங்களுக்குன்னு கேட்டீங்கன்னா, ரொம்ப நாள் ஆச்சுங்க கடிதம் எழுதி. பழக்கம் விட்டுப் போகக் கூடாதுன்னு, யாருக்கு எழுதலாம்னு பாத்தா, ம் -  யோசிச்சு கொழப்பம் ஆயிடிச்சு. இந்தக் காலத்திலே யாரும் கடிதம் எழுதுவதும் இல்லை. அப்பிடியே யாராவது மெனக்கெட்டு எழுதினாலும் படிக்கிற பொறுமை துளிக்கூட இல்லை. அலைபேசியில் பேசினா யாரானாலும் குதிரை ஓட்டற மாதிரி ''ஹை''ன்னு ஒரு அசட்டுச் சிரிப்பு, கேட்டதுக்காக  ''Fine'' தேங்க் யூ!

என்னப்பா எழுதின லெட்டர படிச்சியான்னு கேட்டா நிதானமா ரசிச்சுப் படிக்க பத்திரமா வெச்சுருக்கேன்னு பதில் வருது.
அந்தக் காலத்தில் என்னுடைய பாட்டிக்கு ஆஸ்தான லெட்டர் ரைட்டராக, ஒரு போஸ்ட் கார்ட் எழுத நாலணா சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன்! என் தந்தையார் அரசாங்கப் பணியில்  இருந்து, அடிக்கடி இடம் பெயர வேண்டி இருந்ததால் தோழிகளுடன் கடிதப்போக்குவரத்து நிறைய உண்டு. ஹாஸ்டலில் தங்கி படிக்கும்போது, வாரம் ஒரு கடிதம் எழுதாவிட்டால் அப்பா கோபித்துக் கொள்வார். இப்படியாக என் கடிதம் எழுதும்  திறமை வளர்ந்து வந்தது.

கல்லூரி நாட்கள் கலகலப்பாக போய்க் கொண்டிருந்த வேளையில் என் மூத்த அண்ணனுக்கு கல்யாணம். எனக்கு நான்கு சித்தப்பாக்கள், ஒரு அத்தை. என் தந்தையார்தான் மூத்தவர். கல்யாணம் முடிந்து ஊருக்குப் போய் சேர்ந்தவர்களிடமிருந்து கடிதங்கள் வந்தன. அப்போதெல்லாம் காலை ஒன்பது மணிக்கு தபால்காரர் வந்துவிடுவார்.

அன்றும் வந்தார். பலகடிதங்களில் ஒன்று என் பெயருக்கு. அவசரமாக அந்தக் கடிதத்தை எகனாமிக்ஸ் புத்தகத்துக்குள் நுழைத்துக் கொண்டு, மற்ற கடிதங்களை அம்மாவிடம்  கொடுத்து விட்டு கல்லூரிக்குப் போனேன். அன்று எங்கள் வகுப்பு கலகலத்து, பூமிக்கும் ஆகாயத்துக்கும் இடையே சிரிப்பலைகள். என்ன, என் அத்தைமகன் எழுதிய  காதல் கடிதம் தோழிகள் கையில்! ஆளாளுக்கு,''அத்தான் என் அத்தான், அத்தைமகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா,'' என்றெல்லாம் அவரவர் அத்தைபிள்ளைகளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்! பெரிசா ஒன்னும் இல்லை அந்தக் கடிதத்தில்! ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, எனக்கு உன்னைப் பிடிக்கும், உனக்கு? என்ற கேள்விக்குறிதான்!

கடிதம் அம்மாவழியாக அப்பாவுக்குப் போய், முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. என்னைப் பொறுத்த வரையில் அது ஒரு கடிதம்.'' டிமாண்ட், சப்ளை என்று ஒன்றும் புரியாத பொருளாதாரம், சரித்திரம், அரசியல்'' என மூன்று பாடங்களுடன் அதுவும் ஆங்கிலத்தில் (பத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியம்) மல்லுக்கட்டிக் கொண்டிருந்த நேரம் அது. கல்யாணத்துக்கு பயந்து, சண்டை போட்டு கல்லூரியில் சேர்ந்திருந்தேன். கடிதம் எழுத நேரமில்லை. காதல் பற்றி நான் சிந்திக்கவும் இல்லை.

 என் தந்தை மிகச் சிறந்த ஆங்கிலப்புலமை பெற்றவர். கணவர் தமிழிலும் சொல்வன்மை உடையவர். இருவரும் எழுதிக் கொள்ளும் கடிதங்கள் சுவாரஸ்யமானவை. என் தந்தை என் திருமணம் ஆனதிலிருந்து இறைவனடி சேர்வதற்கு முதல் நாள் எழுதிய கடிதம் வரை சுமார் 25 கடிதங்கள் இன்றும் என்னிடம் இருக்கிறது.

என் தந்தையார் என்னிடம் வைத்திருந்த அன்பு, பாசம், அவருடைய அறிவுரைகள், ஆதங்கங்கள், கவலைகள், எனப் பல செய்திகளைக் கொண்ட அக்கடிதங்களைப் படிக்கும் போது இன்றைக்கும் நேரில் பேசுவது போல அவருடைய குரல் கேட்கிறது.

என் கணவரின் இரண்டாவது தம்பி எதிர்பாராதவிதமாக விபத்தில் காலமானபோது, என் தந்தையார் எழுதிய கடிதத்திலிருந்து சில வரிகள்,''In this world of "Maya"it is found impossible to believe that such a thing could happen or happened to us. We are prone to think that, had this thing happened or not happened, the course of life could have been changed and everything could have been alright as we want them to be.  Such ideas are wasteful thinking, as when a child is born, it is written on its head that it would live up to a certain age and no more.
''There is a Divinity that shapes our ends
  Rough hew them as we will
  Not a sparrow falls without HIS knowledge
  If death is not now, it will be afterwards,
  If it is not afterwards, it will be now
  The READINESS is all.''
These are lines from Shakespear 's Hamlet and it is true to life.
Philosophy apart, separation is a thing grievous in nature and unendurable.''......................

எத்தனையோ  சந்தர்ப்பங்களில் இக்கடிதம் ஆறுதல் அளித்திருக்கிறது!

என் திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குப்பின் என் தந்தை சென்னையிலிருந்து என்னை அழைத்துக் கொண்டு சேலம் சென்றார். அம்மாவுடன் சுவாரஸ்யமாக அரட்டை அடித்துக் கொண்டிருந்த வேளையில் ''அக்கா உனக்கு லெட்டர்,'' என்றாள் தங்கை. அட, நேற்று சாயங்காலம்தானே வந்தோம் அதற்குள் யார் என்று கடிதத்தைப் பிரித்தால் ........!எங்க வூட்டுக்காரர், எப்போ திரும்பிவருவே, ல ..ல..ல......!
அதற்குள் என்ன என்ன என்று கேள்விகள் வேறு...!

மெரினா பீச்சில் ''நடமாடும் தபாலாபீஸ்,'' ஹம்சா'' வில் மாலை போஸ்ட் செய்தால் காலையில் கடிதம் கையில். அக்கா டிரெயினில் ஏறினவுடனேயே அங்கே வீட்டுக்காரர் லெட்டர் எழுதிடுவார் என்று எல்லோரும் கேலி செய்வார்கள்.
பதில் எழுதாவிட்டால் கோபம் வந்துவிடும். அடடா, இந்தக் கடிதத் தொல்லை தாங்கமுடியாது. ஆனால் இதயத்தின் ஆழத்திலிருந்து எடுத்த சொல் முத்துக்களால் கோர்க்கப்பட்ட அந்தக் காதல் கடிதங்கள் ...
பார்த்தீர்களா இன்றைக்கு விலைமதிக்க முடியாத பொக்கிஷமாய், ஆறுதலாய்..

என் தோழி வசந்தாவிற்கு நான்கு வெள்ளை முழுத் தாள்களுக்கு குறைவாகக் கடிதம் எழுதத் தெரியாது. அப்படி என்னதான் இருக்கிறது எழுத என அலுத்துக்கொள்வாள் அம்மா.
எழுதாவிட்டால் கோபித்துக் கொள்கிறார்களே என்று ஒரு ''இன்லண்ட்'' முழுதும் தட்ப வெப்ப நிலை, அரசியல் செய்திகளை நிரப்பி நலம் விசாரிக்கும் பிரகஸ்பதிகளும் உண்டு.

பத்து நாட்களுக்கு ஒரு முறை குடும்பச் செய்திகள், ஊர் வம்பு, என நுணுக்கி, நுணுக்கி  மனம் விட்டுக்  கடிதம் எழுதுவது கவலைகளை நீக்கும், நேரில் பேச முடியாத கருத்துகளை மனம் விட்டு பிறருடன் பகிர்ந்து கொள்ள உதவும்.

கடித உலகில் அலுவலக லீவு லெட்டர்களுக்குதான் முதல் பரிசு. முல்லா நஸ்ருதீன் அழுது கொண்டு இருந்தாராம். ஏன் அழுகிறாய் என்றதற்கு பாட்டி செத்ததுக்கு லீவு கேட்க முடியாம எல்லா பாட்டியும் செத்துட்டாங்க, இனிமே எப்பிடி லீவு கேட்பேன்னு அழுவறேன்னு சொன்னாராம்.

இந்தக் காலத்தில் ஒரு நொடியில் பிறப்பு, மரணம், காது குத்தல், கல்யாணச் செய்திகள் தெரிவிக்கப்பட்டு விடுகின்றன. பெரும்பாலும் டெலிபோன் பில்லும், அழைப்பிதழ்களும்தான் தபாலில்!
மொத்தத்தில் கடிதம் எழுதுவதை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 பாரதத்தின்   மானசரோவரில்  மலர்ந்த வெண்தாமரை மகான்  ஶ்ரீ அரவிந்தர் தன் மனைவி மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதங்கள் மனதை உருக்கும். அவர் எழுதுகிறார்,''மூன்று விஷயங்களில்  எனக்குப் பைத்தியம். 
1.தேவைக்கு அதிகமாக எனக்கென செலவிடுவதை நான் விரும்பவில்லை. இந்த நாட்டிலுள்ள கோடிக்கணக்கான ஏழைகளுக்கும், பசியால் துடிப்பவர்களுக்கும் செலவிடவே நான் விரும்புகிறேன். நீயும் இதில் பங்கு கொள்ள வேண்டும். 
2. கடவுளைக் காணும் முயற்சியில் நான் இறங்கியுள்ளேன். அதிலிருந்து என்னை விலக்கிக்கொள்ளமுடியாது.
3. நம்முடைய தாய்த் திருநாட்டை எல்லோரும் வெறும் மண்ணாகவும், காடாகவும், வயலாகவும், ஒரு ஜடப்பொருளாகவும் பார்க்கலாம். என்னைப் பொறுத்தவரை இந்த நாடு என் உயிருள்ள தாய். என் தாயின் ரத்தத்தை உறிஞ்சுபவனைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க முடியாது. என் தாய் நாட்டை விடுதலை அடையச் செய்வதே என் ஒரே லட்சியம்.'' SriAurobindo - His Life Unique


அப்புறம் என்ன? எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். மழைபொழிய வேண்டும். தண்ணீர் கஷ்டம் நீங்க வேண்டும். நோய் நொடி இல்லாமல் ஆரோக்யமாக வாழ்வீர்களாக என்று வாழ்த்தி விடை பெறுகிறேன். 
வணக்கம்.

அன்புடன், கமலா                  
பெங்களூரு





                                                என் தந்தையார் அளித்த செல்வம்.  


                           திரு.சொக்கன், திரு ஜி. ராகவன்,திரு. மோஹன கிருஷ்ணன் மூவரும்
                          இணைந்து எழுதும் 4 வரி நோட்டு வலைப்  பதிவைப்  படித்துப்   படித்து
                           என்ன   எழுதினாலும்     திரைப் படப் பாடலை மனம் தேடுகிறது. இதோ
                           கடிதம் வரும் பாடல்.
                                       
                                           படம்: குழந்தையும் தெய்வமும்
                                           பாடல்: கண்ணதாசன்
                                           குரல்: டி.எம். எஸ், சுசிலா
                                           இசை:எம்.எஸ்.வி
                                           நடிப்பு: ஜமுனா, ஜெய்சங்கர்



















17 Mar 2013

சதுரகிரியில் கோரக்க சித்தர்


( படித்ததில் பிடித்தது )


சமீபத்தில் என் சகோதரியும் மற்றும் குடும்பத்தினரும் சேர்ந்து சதுரகிரி சென்று வந்தனர்.   அவர்களுடைய அநுபவங்களைக் கேட்டபோது நேரில் போக முடியாத குறையை நீக்கிக் கொள்ளும் பொருட்டு  அவளிடமிருந்து நான் பெற்ற புத்தகம் :

சதுரகிரியில் கோரக்க சித்தர்
ஆசிரியர்: பா. கமலக்கண்ணன்
பக்கங்கள்:268
வானதி பதிப்பகம்
விலை:  ரூ. 100 .00

ஆயிரக்கணக்கான சித்தர்கள் தவத்தில் ஆழ்ந்திருக்கும் இடம் சதுரகிரி.
சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் அன்னை அநுசுயாதேவி குழந்தைகளாக சபித்த இடம் சதுரகிரி.
அத்திரி மகரிஷியும் அநுசுயாதேவியும் மார்க்கண்டேயரைப் பெற்றதலம் சதுரகிரி.
அகத்திய மாமுனிவர் சிவலிங்க பூசை செய்து ஈசனைத் திருமணக் கோலத்தில் தரிசித்த இடம் சதுரகிரி.
உலக அன்னை உமாதேவியார் கடுந்தவம் புரிந்தும், சிவலிங்க பூசை செய்தும் ''அர்த்த நாரீஸ்வர'' நிலையை அடைந்த இடம் சதுரகிரி.
இராம- இராவண யுத்தத்தின் போது, அநுமார் எடுத்துச் சென்ற, இறந்தோரை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மூலிகைச் செடிகள் வீழ்ந்த இடம் சதுரகிரி.
பல்லாயிரம் ஆண்டுகளாக சித்தர்கள் நம் கண்களுக்குத் தெரியாமல் வாழ்ந்து வரும் இவ்விடத்தை தாணிப்பாறை என்ற கிராமத்தின் மூலிகை வனம் என்ற வளைவு உள்ளே நுழைந்து 14 கிலோமீட்டர் கரடுமுரடான பாதையில் நடந்தால் அடையலாம். இரண்டு நாய்கள் பயணிகளுக்கு வழி காட்டுகின்றன.

சமதரையான, சுமார் 64 ஏக்கர் பரப்பில் நான்கு பக்கங்களிலும் நான்கு நான்கு மலைகளால் சூழப் பெற்றிருப்பதால் சதுரகிரி என சித்தர்களால் பெயரிடப்பட்டது.

கோரக்க சித்தர் சதுரகிரி மலையை அடையும் வழிகளைக்கூறியுள்ளதாக ஆசிரியர் கூறுகிறார்.
தாணிப் பாறையிலிருந்து  அம்புவிடு தூரத்தில்(ஒரு கிலோமீட்டர்) கறுப்பண்ண சாமி கோயிலும், ஒரு கிலோ மீட்டரில் அத்தி, மாமரச் சோலையும், இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அத்தி ஊற்றும், அங்கிருந்து 2 கிலோமீட்டரில் பசுமிதிப் பாறையும், பின் கோரக்கர் குகையும், ஆலிலை வடிவ குண்டாவையும் காணலாம். இதன் ஆசிரியர் யோகப் பயிற்சியுடையவராதலால் பல சித்த புருஷர்களின் தரிசனம் பெற்றதாகவும், அற்புதக் காட்சிகளைக் கண்டதாகவும் கூறுகிறார். 

இங்கு இரட்டை மகாலிங்கம், வனதுர்கை, கறுப்பண்ணச்சாமி, சுந்தரமூர்த்தி ஆலயம், சுந்தர மகாலிங்கர், சந்தன மகாலிங்கர் ஆகியோரை தரிசிக்கலாம்.

இங்கே மின்சார வசதியோ, உணவு வசதியோ, தண்ணீர் வசதியோ கிடையாது எனவே நாம்தான் எடுத்துச் செல்ல வேண்டும்.

வேதங்கள், உபநிஷத்துகள், பைபிள், குரான் ஆகிய எல்லா மத நூல்களையும் படைத்தவன் ஒரே இறைவன்தான். தவம் செய்து  சீவனை தரிசித்து, அதோடு தமது சூக்கும சரீரத்தை ஐக்கியப் படுத்தி பேரின்ப நிலையை அடைய சித்தர்கள் கூறிய செயல் முறை விளக்கமே சித்தாந்தம்.

தென் தமிழ் நாட்டில்தான் சுமார் 179 சித்தர்கள் தவச்சாலைகள் அமைத்து மூலிகைகளிலிருந்து காயகல்பம் தயாரித்து மரணமில்லாப் பெரு வாழ்வு  வாழ்ந்தனர் எனவும், சஞ்சீவி மூலிகையை தெரிந்து வைத்திருந்தனர் எனவும் தெரிகிறது. 

அநுமான் சஞ்சீவி மலையை திருப்பி எடுத்துக் கொண்டு போகும் போது, சித்தர்கள் அதன் ஆற்றலை உணர்ந்து ஒரு பகுதி சதுரகிரியில் விழ வேண்டுமென நினைத்தனர் என்றும், அவ்வாறே பெருங்காற்று எழுந்து சஞ்சீவி மலையின் சிறுபகுதி இங்கே வீழ்ந்தது எனவும் சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.

சித்தர்கள் கூடுவிட்டுக் கூடு பாயும் கலை, யார் கண்ணிலும் புலப்படாமல் விண்வெளிப்பயணம் செய்யும் கலை அறிந்தவர் எனவும், பல மூலிகைகளையும் பயன்பாடுகளையும் அறிந்தவர் எனவும் ஆசிரியர் கூறியுள்ளார்.

கோரக்கசித்தரின் வாழ்க்கை வரலாறு, அவருடைய பாடல்கள் சொல்லும் ஞானமார்க்கம், ''கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி'' என்ற குறுந்தொகைப் பாடலின் விளக்கம் சிந்தனைக்குரியது. அண்ணாமலை தீபத்தை தரிசிக்க வேண்டியது மனித உடம்பிலாகும் என்று கூறி  திருமந்திரம், பெரிய புராணம், அப்பர் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா பாடல்களை உதாரணம் காட்டி விளக்கியுள்ளமை படித்து இன்புறத்தக்கதாகும்.

கலியுகத்தில் நாட்டு நடப்பு பற்றி கோரக்கர் சொல்லும் செய்திகளுக்காக 16 பக்கங்கள் ஒதுக்கியுள்ளார் ஆசிரியர்.

ஆசிரியரின் மூன்றாண்டுகால விடா முயற்சியின் பயனாக வெளிவந்துள்ள இந்நூலில் சித்தர்களைப் பற்றிய பல உண்மைகள் தெளிவாகப்  புலப்படுகின்றன.
கோரக்க சித்தர் இன்றும் சதுரகிரியில் தவம் செய்து வருவதாகக் கூறும் ஆசிரியர் அவருடைய உருவப்படத்தையே புத்தக  முகப்பிலும் அமைத்துள்ளார்.

''யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
  யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
  யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
  யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே - திருமந்திரம்252 

பொதுவில் இந்த நூலைப் படிக்கும்போதே சதுரகிரிக்கு நேரில்போன அநுபவம் ஏற்பட்டது. மேலும் சித்தர்களையும் இந்த எழுத்துகள் மூலம் தரிசித்த மனநிறைவு  உண்டாயிற்று என்பதையும் மறுக்க முடியாது. பல புதிய செய்திகளை நமக்கு விளக்கிச் சொல்லும் இந்த புத்தகம் ஒரு பொக்கிஷமாகும்.















11 Mar 2013

மோரோ மோர் - More

அம்மா 'மோர்' வரையிலும் போய் வரலாம் வருகிறாயா? கொஞ்சம் சாமான்கள் வாங்க வேண்டும் என்றாள் மகள். மதியத் தூக்கக் கலக்கத்தில்,'மோரைக் குடிக்கதான் செய்வார்கள், அதிலிருந்து எப்படி சாமான் வாங்குவது' என்று கேட்டேன். 'போம்மா, ராமகிருஷ்ணா மடம் பக்கத்தில் பெரிய ''mega more'' திறந்திருக்கிறார்கள்,  போகலாம் வா,' என்றாள்.

மோர் என்றவுடன் குடிக்கின்ற மோர் நினைவுக்கு வந்துவிட்டது. அறுபதுகளில் மாலை நேரத்தில் மோர்தான் குடிப்பதற்குத் தருவாள் அம்மா. இரவு நேரங்களில் ஒரு கிண்ணம் மோர் எப்போதும் திடீர் விருந்தினர் வந்தால் இருக்கட்டும் என எடுத்து வைத்து விடுவாள். குளிர் சாதனப் பெட்டி கலாசாரம் இல்லாத நாட்கள் அவை.

காலை நேரத்தில் மோர்க்கூடையைத் தலையில் சுமந்து கொண்டு மோரோ, மோரு என்று கூவிக் கொண்டு வருவாள் மோர்க்காரி. கூடையினுள் மூன்று பானைகள் இருக்கும். ஒன்றில் மோர், இரண்டாவதில் கட்டித் தயிர், மூன்றாவதில் வெண்ணெய் வைத்திருப்பாள்.  நல்ல உயரம், பெயருக்கேற்ப கரிய நிறம், கையிலே வெள்ளியினால் ஆன கெட்டிக்காப்பு  கையை இறுக்க, காலிலே வெள்ளித் தண்டை அணிந்திருப்பாள். புடவைத் தலைப்பை சுருட்டி சும்மாடாக்கி அதன் மேலே கூடை கொலுவிருக்க கொடியிடை அசைய வருவாள்.

அவள்  வந்தவுடன் அம்மா முன்பக்கம் பிடித்துக் கொள்ள கூடை கீழே இறக்கப்படும். பாத்திரமும் கையுமாக அம்மாவும் உட்கார்வாள். மோரோ, தயிரோ, வெண்ணையோ வாங்குவாள்.  பள்ளிக்கூடம் போவலையா ராசாத்தி கைய நீட்டு என்பாள் கருப்பாயி.  பிடி வைத்த கொட்டாங்காச்சி கரண்டியால் தயிரைக் கையில் கொடுப்பாள். மண்பானையில் பிறையூற்றிய தயிரின் மணமும் ருசியும் ருசித்த நாக்குகளுக்கு மட்டுமே தெரியும். கீழே சிந்தாத கெட்டித்தயிர். தலை பாதி கீழே வர, கைபாதி மேலே போக லபக் என்று வாயில் போகும் தயிர் தான் என்ன ருசி, என்ன ருசி!

தண்ணீரை வாங்கிக் குடித்தபின் மண்ணிலே விரலைத் தோய்த்து சுவரில் ஒரு பதிவு வைப்பாள். எத்தனை ஆழாக்கு என்ற கணக்கு! மாதக் கடைசியில் எல்லா விரல் பதிவும் எண்ணப்பட்டு பணம் கொடுக்கப்படும்.

இந்த நேரத்தில் காளமேகப் புலவரின் பாட்டு ஒன்று நினைவுக்கு வந்தது. சிலேடை பாடுவதில் வல்லவரான புலவர் மோர்க்காரி கொடுத்த மோரைப் பார்த்து கிண்டலடிகிறார். ஓ மோரே, ஆகாயத்தில் நீ இருந்த போது உன்னை மழை மேகம் என்றனர், பூமியில் மழையாய் பெய்த போது நீரென்றனர், இந்த ஆய்ச்சியின் பானைக்குள் வந்ததும் பேர் மாறிப் போச்சே! மோர்னு பேர் வைச்சுடுச்சே இந்த அம்மா. உனக்கு ஒன்றல்ல, இரண்டல்ல மூணுபேர், பலே பலே என்கிறார். மோருல அவ்வளவு தண்ணி இருக்காம்!

பாடலைப் பாருங்கள்:
காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும் போது
நீரென்று   பேர் படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின்
வாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப் பட்டதற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.

காளமேகப் புலவரின் நகைச்சுவை, நக்கல், கிண்டல், சாமர்த்தியம் எல்லாம் வெளிப்படும் இந்தப் பாடலில்தான் எத்தனை சுவை?

இந்தப் பால், தயிர்னு சொன்னவுடனே ஆழ்வார் பாசுரம் நினைவுக்கு வருது. பாலில பாசுரமா?  ஆமாங்க, கடவுள், கடவுள்னு சொல்றோமே அவரக்காட்டுன்னு பிடிவாதம் பிடிச்சானாம் சீடன்.
குரு கேட்டாராம் சாப்பாட்டுல தினந்தோறும் நெய் ஊத்துவாங்களே அது எங்கேந்து வருது தெரியுமான்னு!வெண்ணையிலிருந்து நெய் காச்சுவாங்க.
சரி வெண்ணை எங்கிருந்து வந்தது? என்னங்கய்யா பாலில் மோர் ஊற்றினால் தயிராகும்,தயிர் கடைந்தால் வெண்ணை வரும்.
பாலைப் பார்த்தா வெண்ணையோ, நெய்யோ கண்ணுக்கு தெரியுதா? அதுபோல தான் கடவுளும். மறைந்து இருக்கிறார்! நாம்தான் அவரைக் கண்டு கொள்வதில்ல என்றாராம்.

''விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியன்
உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்நிற்குமே''

வெயில் காலங்களில் சிறிது உப்பும், பெருங்காயமும் சேர்த்த மோர்த்தண்ணிக்கு ஈடு இணையான பானம் ஏதாவது உண்டா? சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு, கசக்கிப் போட்ட கருவேப்பிலையுடன், கடுகு தாளித்த மோர்தான் ராமநவமியன்று பிரசாதம். மோருடன் பழையசாதம் கலந்த நீராகாரத்துக்குதான் எத்தனை ருசி!

சரிதான் "மோருக்குப்'' போனோம். கீழே சாமான்கள் வாங்கிவிட்டோம். மாடியில் ஒரு ரவுண்ட் போகலாம் என்றால் படிக்கட்டைக் காணும். இந்த புஷ்பக வண்டியை,''Escalator'' பார்த்தால் ஒரு பயம். நான் வரமாட்டேன் என்றேன். நானிருக்க பயமேன் வா என்று சொல்ல அதன் மேல் ஏறிவிட்டேன். 
பக்கவாட்டில் இருக்கும் பிடிமானத்தைப் பிடித்துக் கொள்ள, ஒன்,டூ, த்ரீ காலை மேலே வை என்றாளா, காலை வைத்தேன் கைப்பிடியை ஒரு கணம் விடாததால் ஒரு ஆட்டம் ஆடி ......பாவம் என் இதயம் பயத்தால் ஆடிப் போய்விட்டது.

சரி சரி வீட்டிற்குப் போனதும் கொழு மோர் காய்ச்சித்தருகிறேன் குழந்தை மாதிரி பயந்து போய் விட்டாயே என்று என் கைகளைத் தன் கைகளில் இணைத்துக் கொண்டாள் என் மகள். இதற்காகவாவது கொஞ்சம் பயப்படலாம் போல! என்ன சொல்றீங்க?




















10 Mar 2013

பசிப்பிணி நீக்குக


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

இயற்கை விளக்கமாய் அனைத்து உயிரிலும் விளங்குகின்ற இறைவன் திருவடி மலர்களுக்கு வணக்கம். இந்த மானுட உயிரை உண்டாக்கிய அந்த சக்திக்கு எத்தனை நுண்ணிய திறமை என்று வியந்து நிற்கிறது என் மனம்! இந்த உடலின் அவயவங்கள்தான் எத்தனை சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளன? எண்சாண் உடல்! பிரதானமாக இருப்பது வயிறு! வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவதுபோல உணவினால் வாழும் உடல்!

ஒரு நாளில் காலையில் எழுந்ததும் காப்பி, பின்பு நாவுக்கு ருசியாய் சிற்றுண்டி, பகலில் அரிசிச் சோற்றுடன் அவியல், பொரியல், கூட்டு, கறி, இரவில் மீண்டும் என பசி தோன்றும் போதெல்லாம் எதையாவது நிரப்பினால்தான் சும்மா இருக்கிறது வயிறு. 
இதனை ''அவா அறுப்பு'' என்ற தலைப்பில் பதின்மூன்று பாடல்களில் அற்புதமாய்ச் சொல்லியிருக்கிறார் வள்ளலவர்கள்.

''காலையாதிய முப்போதினுஞ் சோற்றுக் கடன் முடித்திருந்தனன் எந்தாய்'' எனவும், ''சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம் எல்லாம் சுருங்கி, ஆற்றிலே கரைத்த புளியெனப்போம் என அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் போற்றிலேன்'' எனவும் மனிதர்களுக்கு உணவின் மீது உள்ள ஆசையை அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்.
நிறைய சாப்பிட்டாலும், ஒன்றுமே சாப்பிடாமல் இருந்தாலும் இறைவனைப் பற்றிய சிந்தனை ஒருவனுக்குத் தோன்றாது. எதற்கு இறைவனைப் பற்றிய சிந்தனை தோன்றவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்குத்தானே பிறந்திருக்கிறோம்! 

வள்ளலார் வாய்மொழியிலே கேளுங்கள்,''நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து,  நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பே நிறைந்து நிறைந்து'' இறைவனை உணர்ந்தால் என்ன ஆகும்? கண்ணீர், ஊற்றெழும், அதனால் உடம்பெல்லாம் நனைந்து போய் நாக்குழற, ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல, இன்னமுதே, நல்ல செல்வமே, ஆனந்த நடனமிடும் என்னுடைய அரசே என்றெல்லாம், 'வனைந்து வனைந்து' சொல்லவேண்டுமாம்! அப்போது இறையருள் சித்திக்குமாம். மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டுமானால் இறைவனை உங்களில் உணருங்கள் என அழைக்கிறார்.
ஆனால்......

இறைவன் யார், எங்கிருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது இல்லையா? துன்பம் நேர்கையில் ஐயோ, கடவுளே நீ எங்கே இருக்கிறாய் என்று புலம்புகிறோம்! கடவுள் எங்கே இருக்கிறார்?
அணுவிற்கு அணுவாய், நுணுக்கறிய நுண்ணறிவாய் எங்கும் விளங்குகிறார்.
கடவுளை எப்படி அறிந்து கொள்வது?
அதற்கு ஆன்ம அறிவு வேண்டும்.
ஆன்ம அறிவு எப்போது வெளிப்படும்?
ஜீவகாருண்யத்தால் வெளிப்படும். 
ஜீவன் என்றால் உயிர். 
கருணை என்றால் இரக்கமும், தயையும், அன்பும் கொண்டு விளங்குதல்.

உயிருள்ள அனைத்து உயிர்களும் பசியினால் வாடக்கண்டாலும், தாகத்தினால் வருந்தக்கண்டாலும், நோய்களால் துன்புறக்கண்டாலும் மனம் உருகி, அன்பு நிறைந்து அத்துன்பத்தை நீக்குவதே தெய்வ வழிபாடாகும். அதுவே ஆன்ம உருக்கம். இதனால் அறிவும் அன்பும் உடனாக நின்று உபகார சக்தி விளங்கும். 

எந்தப் பொருளாலும் மனித மனம் திருப்தி அடைவதில்லை. ஆனால் உணவு உண்ணும் போது மட்டுமே போதும் போதும் என்று சொல்ல முடிகிறது. 
சமீபத்தில் ஒரு பத்திரிகைச் செய்தி! நம் நாட்டில் உணவு உற்பத்தி பெருகி இருந்தாலும் பசியினால் வாடுகின்ற ஏழை எளியவர்கள் நிலை என்ன?

பல இடங்களிலும் பசியினால் வாடும் பச்சிளங் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இல்லாத நிலையில், வாங்கிக் கொடுக்க காசு இல்லாமல் புகையிலைச் சாற்றினை சிறிது கொடுப்பதாகவும், சற்றே வளர்ந்த குழந்தைகளாயின் அடித்து தூங்க வைப்பதாகவும், நன்றாக இருக்கிற உடம்பை விகாரப்படுத்தி பிச்சை எடுக்கச் செய்வதாகவும்  மனதை நெகிழச் செய்யும் செய்திகள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆட்டோவில் பயணம் செய்ய நேர்ந்தது. போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட நிலையில் நடைபாதையிலே தள்ளாடி வந்தார் ஒருவர். தற்செயலாக விழுந்தோ, கெட்டுப் போனதால் எறியப்பட்டோ ஒரு பொட்டலம் முறுக்கு நடைபாதையில் சிதறிக்கிடக்க, வந்தவர் அதைக் குனிந்து எடுத்துத் தின்றதைப் பார்த்து என் உள்ளம் நெகிழ்ந்தது.

பசிவந்திடப் பத்தும் பறந்துபோம் என்பது பழமொழி. பசியினால் உடலுக்கு மயக்கம் உண்டாகிறது. மனம் தடுமாறிச் சிதைகின்றது. புத்தி கெடுகின்றது சித்தம் கலங்குகின்றது. இந்தத் துன்பங்கள் எல்லாம் ஆகாரம் கிடைத்தபோது உண்டு பசி நீங்க நீங்குகின்றன. உள்ளம் குளிர்ந்து அறிவு விளங்கி அகத்திலும் முகத்திலும் ஜீவகளை உண்டாகிறது.

பசியுடன் இருப்பவரின் பசி நீக்குதலாகிய புண்ணியச் செயலைச் செய்பவர்கள் கடவுள் அம்சமென்று அறிய வேண்டும் என்பது வள்ளல் பெருமான் கூற்றாகும். 
''உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'' என்கிறது மணிமேகலை.
'' தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம்' என்பது பாரதி வாக்கு.
''இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
 கெடுக உலகியற்றி யான்'' என்கிறார்  வள்ளுவர்.

''வையிற் கதிர்வேலனை வாழ்த்தி வறிஞர்க் கென்றும் 
நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்- நுங்கட்கிங்கன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா வெறுநிழல் போல் 
கையிற் பொருளும் உதவாது காண் கடை வழிக்கே.'' 

''பிடி சோறு இட்டு உண்டு இருமின், வினையோம் இறந்தால் ஒரு பிடி சாம்பரும் காணாது மாய உடம்பிதுவே'' எனவும் வாழ்க்கை நிலையாமையைச் சொல்லும் அருணகிரியாரின் வாக்கினை எண்ணிப்பார்ப்போமாக.

''யாதும் கொள்வாரில்லாமையால் கொடுப்பார்களுமில்லை'' என கோசலநாட்டின் சிறப்பைப் பாடுகிறார் கம்பர். அத்தகைய வறுமையற்ற பாரத நாட்டை என்றாவது காணும் பேறு கிடைக்குமா?

எங்கே எப்போது பசியுடன் இருப்பவரைப் பார்க்க நேரினும்  அங்கேயே அப்போதே உங்களால் ஆன அளவுக்கு அவர்கள் பசியை நீக்குங்கள். அதனால் கிடைக்கும் மன அமைதியையும், ஆனந்தத்தையும் அப்போது அறிந்து கொள்ளலாம்.

 ஏழையும்  பணக்காரர்களுமில்லாத ஒரு புது உலகம்!? நம்பிக்கை வரவில்லை! ஆனால் நம்மால் முடிந்த அளவு தேவையானவர்களுக்கு உதவி செய்வோம். சிறு துளி பெரு வெள்ளம்.

இன் தொண்டர் பசியறக் கச்சூரின் மனைதொறும்
இரக்க நடை கொள்ளும் பதம்.

இளைப்புறல் அறிந்தன்பர் பொதிசோறு அருந்த முன்
இருந்துபின் நடக்கும் பதம்.

என்இருகண் மணியான பதம் என் கண் மணிகளுக்கு
இனியநல் விருந்தாம்  பதம்.

என்குரு வெனும்பதம் என் இட்ட தெய்வப்பதம்
எனது குல தெய்வப் பதம்.                 ---திருவடிப்புகழ்ச்சி

                                                          
--------

























   

25 Feb 2013

திருவொற்றியூர் தரிசனம்

'' ஒற்றி ஊரனைப் பற்றி நெஞ்சமே நிற்றி நீ அருள் பெற்றி சேரவே. இல்லை இல்லைகாண் 
  ஒல்லை  ஒற்றியூர்   எல்லை சேரவே அல்லல் என்பதே'' முத்தி உபாயம்.

சென்னைக்குப் போக வேண்டும் என்று எண்ணிய உடனேயே கண்டிப்பாக என்னைக் காணவர வேண்டும் என்று ஒற்றியூர்ப் பெருமான் சொல்லிவிட்டார். திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றிய பதிகங்களில் 68 பதிகங்கள் ஒற்றியூரைப் பற்றினவாகும். அருட்பா பாக்களைப் படித்துப் படித்து, உள்ளம் உருகி, காதலாகிக் கசிந்து, ஒற்றியூரப்பனைக் காணவிரும்பியது மனம்.

''திருவார் கமலத் தடம்பணை சூழ் செல்வப் பெருஞ் சீரொற்றி, கண்கள் களிப்ப வீண்டு நிற்கும் கள்வர் இவரூர்  ஒற்றி, முந்தை மறையோன் புகழொற்றி, திருவை அளிக்கும் திருவொற்றி,'' என இங்கித மாலையின் 165 பாடல்களில் ஒற்றியூர்ப் பெருமை பேசும் வள்ளலார் சென்னையில் 33 ஆண்டுகள்  வாழ்ந்தார். பெரும்பாலும் திருவொற்றியூரிலேயே இருந்திருக்கிறார்.

சென்னையின் வடக்கில் கடற்கரைச்சாலையில் உள்ளது திருவொற்றியூர். இறைவன் ஆதிபுரீஸ்வரர், படம்பக்கநாதன், எழுத்தறியும் பெருமான், தியாகேசர், புற்றிடங்கொண்டார் என்னும் திருநாமங்கள் உடையவர். இறைவி வடிவுடைநாயகி. தல விருட்சம் மகிழமரம்

ஒற்றியூரில் மூலட்டானத்தை ஒட்டிய திருச்சுற்றில் உள்ள திருமுருகன் திருமுன் ஒருமையுடன் முருகன் திருவடியை நினைந்த காரணத்தால் உத்தமனாகும் பெருமை பெற்றவர் வள்ளல் பெருமான்.
''துன்று தீம்பலாச் சுளையினும் இனிப்பாய்த்
தொண்டர் தங்கள் நாச் சுவைபெற ஊறி
ஒன்றும் ஓம்சிவ சண்முக சிவஓம்
ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே''
என 'அருள் நாம விளக்கப்'பாடல்களில்  முருகப் பெருமானை துதிப்பதற்குரிய மந்திர எழுத்துக்களை அமைத்துப் பாடியுள்ளார்.

நானும் என் சகோதரியும் காலை 8.30 மணியளவில் திருவொற்றியூருக்குப் புறப்பட்டோம். 9.30 மணிக்கு கோயில் வாசலை அடைந்தோம்.

ஒற்றியூர் என்பதன் பொருள் என்ன? உடம்புடன் இணைந்து இவ்வுலகில் வாழ்கின்ற எந்த உயிரும் ஒற்றியூர் என்பதாகும். ஒன்று எனத்தோன்றும் உயிர், உடம்பு என்ற இரண்டையும் இணைத்து   நிறுத்தி, அந்த இரண்டையும் ஒற்றி, ஊர்ந்து மேல் சென்று தங்கி இருப்பவன் என்பது பொருள். எல்லாப் பொருள்களையும் உயிர்களையும் ஒற்றி - இணைந்து நின்று தனக்கெனத் தனியே ஊர் இல்லாமல் ஒற்றிய அந்த இடத்தையே ஊராகக் கொண்டு வாழ்கிறான். எல்லா உயிர்களும் இறைவன் உறையும் இடங்களே என்னும் உண்மையை உணர்த்த அமைந்த தலமே ஒற்றியூர்.

 இந்த ஊருக்கு ஆதிபுரி என்ற பெயரும் உண்டு. உயிர்களில் பரம்பொருளாம் இறைவன் இடம் கொண்டு விளங்குவதால் அப்பெயர். ஊழிக்காலத்தும் அழியாத ஊர் என்பது விளக்கம்.

திருவொற்றியூரில் முற்காலத்தில் கோயில் இருந்ததாகத் தெரியவில்லை. ஒற்றியூர் ஒரு தலம். ''படம் பக்க நாதன்'' என்ற பெயர் இறைவனுக்கு உண்டு. படம் என்பது வாசுகி என்னும் பாம்பு. அது இறைவனிடம் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டது. அதை ஏற்றுக் கொண்ட இலிங்கம் வாசுகியின் படத்துடன் விளங்குவதால் ''படம் பக்க நாதன்''

''ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்
மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
துக்க மியாவையும் தூர ஓடுமே.'' - நெஞ்சொடு நேர்தல்

இவ்வூர்ப் பெருமானுக்கு ''எழுத்தறியும் பெருமான்'' என்ற பெயரும் உண்டு. அரசன் ஒருவன் தனது ஆட்சிக்கு உட்பட்ட கோயில்களின் நாள் செலவுக்கு உரிய பொருள் அளவை குறைக்க எண்ணி, அவ்வளவை நிர்ணயித்து ஆவணம் அமைத்தனாம். மறு நாள் காலையில் அந்த ஆவணத்தில் நடுவே பிளந்து ''ஒற்றியூர் நீங்கலாக'' என எழுதப் பெற்றிருந்த காரணத்தால் இப்பெயர் பெற்றதாம். ஒற்றியூர்ப் பெருமான் அந்தந்த உயிரை ஒற்றித் தங்கியிருக்கிறான் அதனால் அங்கே வரிவிதிக்கவோ விலக்கவோ, செலவுக்குப் பொருள் கொடுக்கவோ தேவையில்லை.

''உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணிஉழந்து
புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே
கண்ணாளா உன்தன் கருணை எனக்களிக்க
எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமானே.'' என்ற பாடலைப் படித்து இன்புறுங்கள்.

இவ்வூரில் இறைவனுக்கு ஒருநாளில் சைவர், வைணவர், ஆதிசைவர், மலையாளத்து நம்பூதிரியர், ஸ்மார்த்தர், உவச்சர் என அறுவர் பூசை செய்யும் வழக்கம் இருந்ததாக ஒரு செய்தி கூறுகிறது. இங்கே ஒரு பொதுமை அனுபவத்தைத் தான் பெற்றதாக வல்ளலார் ஒரு பதிகத்தில் கூறுகின்றார்.

ஒற்றிப் பெருமான் ஒன்பது உருவில் விளங்குபவன் என்பதை

''துன்ப வாழ்வினைச் சுகம் என மனமே
சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்து நிற்கின்றாய்
வன்பதாகிய நீயும் என்னுடனே
வருதியோ அன்றி நிற்றியோ அறியேன்
ஒன்பதாகிய உருவுடைப் பெருமான்
ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க்கு இன்றே
இன்ப வாழ்வுறச் செல்கின்றேன் உனக்கும்
இயம்பினேன் பழி இல்லை என் மீதே'' என்ற பாடல் கூறுகிறது.

இங்கு வட்டப் பாறை என்றொறு இடம் உண்டு. சென்று நிற்பவர் எந்த தெய்வத்தை விரும்பினாரோ அந்தத் தெய்வமெல்லாம் வருதற்குரியது ஆதலின் வட்டப்பாறை என்று பெயர் வந்திருக்கலாம் என்கின்றனர்.
மேலும் 27 நட்சத்திரங்களும் லிங்கவடிவில் அமைந்துள்ளது மற்றொறு சிறப்பாகும்.
தேவாரம் பாடிய சுந்தரர் சங்கிலியாரை மணம் செய்து கொண்டது இங்குதான்.

ஒற்றியூர் இறைவனுக்கு தியாகராஜன் என்ற திருநாமமும் உண்டு. ''திவ்ய ஒளி திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே,'' எனவும் ''ஒற்றியூர்த் தியாகநாயகனே'' எனவும்,'' ஒற்றியூர் அரசே, உயிரே, கரும்பே,உறவே, உவப்பே, செழுந்தேனே'' எனவும் உருகுகிறார் வள்ளலார். அத்தனை பாடல்களும் தித்திக்கும் தேனா, பாலா, செழுந்தேனா என எடுத்துச் சொல்ல முடியாது!  இந்தத் திருத்தலத்தைக் காணவிரும்பியதில் என்ன வியப்பு இருக்கிறது?

சரி, திருவொற்றியூர் கோயில்  வாசற் புறமெங்கும் கூட்டம். சைக்கிள், மோட்டார் பைக், ஆட்டோ, கார் என வாகன நெரிசல். காய்கறிகள்,கீரைகள் விற்போர் கடைவிரித்திருக்க, தட்டுத்தடுமாறி கோயிலுள் நுழைந்தோம். தியாகராஜ மண்டபத்தில் சுமார் பத்து ஜோடிகள் திருமணக்கோலத்தில்! கூட்டத்தைப் பிளந்து சென்று, "ஹலோ தியாகப் பெருமானே, தெரியாமல் முகூர்த்த நாளில் வந்து விட்டோம்! என்றாலும் உனக்கு வந்தனங்கள்,"  என்று சொல்லி  விடை பெற்றோம்.

அடுத்து ஒற்றியூர்ப் பெருமான் சந்நிதி! உள்ளே நுழையும் மண்டபத்தில் சுமார் 60 மாணவர்கள் அமர்ந்திருக்க, பிரமுகர் ஒருவர் துணைகளுடன் நின்றிருக்க, ஆசிரியப் பெருமக்கள் காவல்  செய்ய, ஒரு பேச்சாளர் மாணவர்களிடம், ''அவர்களுக்கு மூளை என்று ஒன்று இருக்கிறது'' என்று எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். கோயிலுக்குள் நுழைய முடியாமல் இதென்ன புதிதாய் என்று நினைத்தேன். பின்னர் தான் தெரிய வந்தது அது அறநிலைத் துறையின் நிர்வாகத்தில் இருப்பது.

சரிவிடுங்கள், மாணவக்கூட்டத்தைப் பிளந்துகொண்டு சந்நிதியடைந்தோம். அர்ச்சகர் போனால் போகிறது என்று விளக்கை இறைவனிடம் காண்பித்தார். என் மனமோ இறைவனைப் பற்றிக் கொண்டது.

' 'வில்வத் தொடும்பொன் கொன்றைஅணி வேணிப் பெருமான் ஒற்றிநகர்
  செல்வப் பெருமான் சிவபெருமான் தியாகப் பெருமான் திருஅழகை
  கல்வைப் புடைய மனம்களிக்கக் கண்கள் களிக்கக் கண்டுநின்றேன்
  இல்வைப் புடையேன் அம்மாநான் என்ன தவந்தான் செய்தேனோ.''

விடைபெற்று வடிவுடை மாணிக்கத்தை, இறைவனின் இடப்பாகம் கொண்டாளை, கோமளவல்லியை, தரிசித்தோம்.

 ''போற்றிடு வோர்தம் பிழைஆ யிரமும் பொறுத்தருள்செய்
  வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே
  ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார் இடத்தில் இலங்குமுயர்
  மாற்றொளி  ரும்பகம் பொன்னே வடிவுடை மாணிக்கமே.''

வடிவுடை மாணிக்கமாலையில் 101 பாடல்கள்.
மாணிக்க வடிவுடையாள், மாணிக்கமாலையினாள் பாடல்களைப் பாடிப்பரவினால் பிறவிப் பயன் எய்தலாம்.

திரு. வள்ளலாரின் காலம் 1823 முதல்1874 வரை. 1825 முதல் 1858 வரை சென்னையில் வாழ்ந்தார். அந்த நாட்களில் வாகனங்களும், நெரிசல்களும் இல்லாத காலகட்டத்தில் திருவொற்றியூர் அமைதியின் இருப்பிடமாக, தெய்விக அலையொளிகளால் நிரம்பியிருந்திருக்க வேண்டும். தங்க சாலையிலிருந்து தினந்தோறும் ஒற்றியூர் செல்வதை வழக்கமாய்க் கொண்டிருந்தார் என அவர் வாழ்க்கை வரலாறு கூறுகிறது.

அப்பரும், சுந்தரரும், பட்டினத்தாரும், வள்ளலாரும் போற்றிய பாடல் பெற்றதலம்! சரியான பராமரிப்பு இல்லை என்ற குறைகள் கண்முன் நின்றாலும் உயிருடன், உடலை ஒற்றி நிற்கும் திருவொற்றியூரனின் தரிசனம் பெற்றது நான் பெற்ற பேறாகும். 

இன்னுமொரு செய்தி.
ஒரு சமயம் மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் வேதங்களைத் திருடிக் கிழித்து கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தனர். மகாவிஷ்ணு அசுரர்களுடன் போராடி வெற்றி பெற முடியாமல் சிவபெருமானின் உதவியை நாடினார். அவரோ ''மகரம்'' நண்டு உருவம் எடுத்துக் கொண்டு கடலடியில் இருந்த வேதங்களை மீட்டு இந்தத் தலத்து இறைவனிடம் சேர்த்தாராம். அது மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டதாம். எனவே ஒற்றியூர்  என்ற பெயர் என்கிறது வலைத்தளம்.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!

















31 Jan 2013

உப்போ உப்பு

அப்பா அந்த கழுதைக் கதையைச் சொல்லுன்னு வந்தான் முருகன். 

ஒரு ஊரில ஒரு வியாபாரி இருந்தானாம். அவன் உப்பு வியாபாரம் செய்து வந்தானாம். அந்தக் காலத்தில எல்லாம் உப்ப வாங்கி மூட்டையில கட்டி, படியால அளந்துதான் உப்பு விப்பாங்க. உப்போ உப்புன்னு கூவுவாங்க. அந்த வியாபாரி பக்கத்து ஊருக்குப் போக ஒரு சின்ன ஆற்றுப் பாலத்துல நடக்கணும். ஒரு நாள் கழுதை கால் தடுமாறி தண்ணிக்கு உள்ள விழுந்திடுச்சாம். 
உப்பு என்ன ஆச்சு?
தண்ணில கரைஞ்சு போயிடுச்சாம். கழுதைக்கு ஒரே குஷி. அதுக்கு தெரிஞ்சிடுச்சு தண்ணில விழுந்தா உப்பு கரைஞ்சிடும்னு. அதுனால அடுத்த நாள் வேணுமின்னே விழுந்திச்சாம்.
வியாபாரிக்கு கழுதையோட குறும்பு புரிஞ்சிடுச்சாம்!
வீட்டுக்குப் போனா அவன் பொண்ணு சமையல் பண்ணி இருக்கல. அவனுக்கு கோவம் வந்திச்சாம்! பொண்ணுகிட்ட சொன்னான்,'' இதோ பாரு நீ செரியா சமைக்கலைனா இந்தக் கழுதைக்கு ஒன்னைய கட்டி வெச்சுடுவேன்,'' அப்பிடின்னானாம்.
கழுதைக்கு ஒரே குஷி. ஆகா இந்த அழகான பொண்ணு என்பொண்டாட்டியா வரணும்னா நாளையிலிருந்து ஒழுங்கா வேலை செஞ்சு நல்ல பேரு வாங்கோணும்னு சமத்தா மூட்டைய தூக்கிட்டுபோச்சாம்.
பொண்ணுக்கு பயம் வந்திடுச்சு! சின்னப் பொண்ணுதானே! இந்தக் கழுதைய கட்டிக்கிட்டு எப்படி வாழறதுன்னு நல்லா தினம் சமையல் செஞ்சுது! கழுத மட்டும் கனவு கண்டுட்டே இருந்தது!

முருகன் சிரித்துக் கொண்டே தூங்கிவிட்டான். தினமும் இந்தக் கதையைக் கேட்டால் தான் அவனுக்கு தூக்கம் வரும். காலைல எழுந்தா தினம் அப்பா அவனை உப்பு மூட்டை தூக்க வேண்டும். அதாங்க, முதுகில தூக்கி வெச்சுக்கிட்டா, கை இரண்டும் கழுத்தை வளைத்துக் கொள்ள, கால்களால் இடுப்பைச் சுற்றி வளைத்துக்  கொண்டு செல்லம் கொண்டாடுவான். அதிலதான் எத்தனை சந்தோஷம்!

உப்பு நம் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பொருள். உப்பில்லாமல் நாம் உணவுப் பொருள்களை சமைப்பதில்லையே! 
இவ்வளவு பிரபலமான உப்பைப் பற்றி தெரிஞ்சுக்க வேண்டாமா? 
கடல் உப்பு, கல்லுப்பு, சோடியம் குளோரைடு முதலிய செயற்கை உப்புகளையே நாம் உப்பு என்கிறோம்.

நல்ல ஆரோக்கியம் வேண்டுமென்றால் மூன்று வெள்ளைக்காரர்களை விரட்டி அடிக்கவேண்டுமாம். "ஆரோக்யத்துக்கும் வெள்ளைக்காரனுக்கும் என்னய்யா சம்பந்தம்" என்கிறீர்களா?

வெள்ளையா இருக்கிற மனுஷனைச் சொல்லவில்லை! உணவு! நம் உணவிலிருந்து விரட்ட வேண்டிய முதல் வெள்ளைக்காரன் உப்பு. 
அடடா, '' உப்பில்லாத பண்டம் குப்பையிலே'' என்ற பழமொழி என்னாவது?  
பழமொழி கிடக்கட்டும், உடம்பு சீராக இருக்க  உப்பைக் குறைக்க வேண்டும். 

அப்படின்னா, யாராவது உப்பு போட்டு சாப்பிடுவது இல்லையா, அப்பதானே வெக்கம், மானம், சூடு, சொரணை இருக்கும்னு சொன்னா என்னசெய்வது?

கேட்கிறவனைப் பார்த்து நீ சிரி. உப்பினால் உடம்பு உப்பும், தெரியுமா? இரத்த அழுத்தம் வரும். சிறுநீரகம், இருதயம், இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படும். உப்பில் மனித உடம்புக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் இல்லை. காய்கறிகளிலும், கீரைகளிலும் உள்ள இயற்கையான உப்புச் சத்தே நம் உடலுக்குப் போதுமானது. அதனால்தான்  இலை தழைகளைத் தின்னும் மிருகங்கள்  ஆரோக்யமாக இருக்கின்றன.

உப்பு அதிகமானால் அது உணவுப் பொருள் அல்ல என புழு, பூச்சிகளுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் உப்புப் போட்டு ஊற வைத்த ஊறுகாய்களை அவை சாப்பிடுவதில்லை.
நம் உடலில் உள்ள தண்ணீரை தேவைப் படும் போது உபயோகிக்க முடியாமல் தடையாக இருப்பது உப்புதான். உடலில் உள்ள கால்சியம் சத்தைத் திருடி, பற்களையும், எலும்புகளையும் சக்தி இழக்கச் செய்வது உப்புதான்.

''உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்,'' என்பது பழமொழி. உப்பு எந்த அளவு கூடுதலாக உள்ளதோ அந்த அளவு தண்ணீரையும் கூடுதலாக உட்கொள்ள வேண்டும். அதனால் சிறு நீரகங்களின் வேலையும் கூடுதலாகிறது.

துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என்பன அறுசுவைகள். அறுசுவை உணவை உண்ண வேண்டும் எனப் பழங்காலச் சித்தர்கள் கூறியுள்ளனர். அவர்கள் சொல்லியுள்ள உப்புச்சத்துக்கள்  காய்கள், பழங்கள் ஆகியவற்றில் இயற்கையாக  உள்ளனவாகும்.

என்னுடன் பணியாற்றிய பாலா திரிபுரசுந்தரி வீட்டிற்கு அழைப்பின் அன்பிற்காக சென்றிருந்தோம். வடை, பொங்கல் கொடுத்து உபசரித்தார்கள். வடையை வாயில் வைத்ததும் முகம் அஷ்டகோணல் ஆயிற்று! உப்பு, உப்பு, உப்பு! பாலா சிரித்தார்? என் கணவருக்கு உப்பு தூக்கலாக இருந்தால்தான் பிடிக்கும் என்றார். மிக அதிகமோ என்றார்! தெரியாமல் அதிகம் போட்டாரா அல்லது நிஜமாகவே அவங்க வீட்டுக்காரருக்கு உப்பு அதிகம் வேண்டுமோ நானறியேன்! "உப்பிட்டவனை உள்ளளவும் நினை,'' என்பது இன்னொறு பழமொழி. இன்றுவரை வடையைப் பார்த்தால் பாலா ஞாபகம்தான் வருகிறது! 
(Fewer Englishmen adding salt at the table
The number of people in England adding salt to food at the table fell by more than a quarter in the five years following a national campaign, according to research published in the British Journal of Nutrition.
The Hindu, 31.1.2013)