30 May 2014

அலையின் அலைகள்

வழக்கம்போல பூங்காவிலிருந்து திரும்பி வரும்போது  இயற்கை உணவுப் பொருட்கள் விற்கும் கடைக்குள் நுழைந்தேன்.  அங்கே காய்கறிகளை நோட்டம்விட்டபோது அலைபேசி அடிக்கவும் அதை எடுத்துப் பேசினேன். முடித்தவுடன் அந்தக் கடையில் பகுதி நேர வேலை செய்யும் வாலிபர்,''அட நீங்க கூட Android phone எல்லாம் வெச்சிருக்கீங்களே! பரவாயில்ல, என் பாட்டிகிட்ட அலைபேசியக் கொடுத்தா தள்ளிவிடறாங்க. போடா, எனக்கு இதெல்லாம் வேண்டாம், யாரு இதயெல்லாம் கத்துப்பாங்க? அப்படீங்கறாங்க,' என்றார்.

அதுக்கு என்னப்பா செய்யறது? ஒவ்வொருத்தருக்கு ஒன்னொன்னு பிடிக்கும் என்றேன்.
ஆமாங்க, இன்னி தேதிக்கு செல் போனும், லேப்டாப்பும் உபயோகப் படுத்தாதவங்க ரொம்ப கம்மி. அதனால எத்தனை சீக்கிரமா எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்க முடியுது என்றான்.
சரிதான் என்று சிரித்தேன்.

உண்மையைச் சொல்லப் போனால் இடுப்பிலே குழந்தையையும், தலையில் அன்று சமைக்க வேண்டியு உணவுப் பொருளையும் சுமந்து கொண்டு நாள்முழுதும் உழைத்த உழைப்பின் துன்பத்தையெல்லாம் மறந்து, தலயை ஆட்டி ஆட்டி, அலை பேசியில் சிரிக்க சிரிக்க  எந்த உறவுடனோ பேசிச் செல்லும் ஏழை எளிய மக்களைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இங்கே மரத்தடியில் ஒரு வயதான அனாதைத் தாய் அமர்ந்திருப்பார். கையில் அலை பேசி.பேசும் போது பொங்கி வழியும் ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே! அலை பேசி நம் சமுதாயத்திற்கு மிகப் பெரிய நன்மையைதான் செய்துள்ளது. பயன் படுத்தத் தெரிந்த சந்தோஷம். அன்பு மிக்கவர்களின் குரலைக் கேட்பதில் ஆனந்தம்.

என்னுடைய தோழியர் வட்டத்தைப் பார்த்தால் நிறைய பேர்,'' அட போப்பா, இந்த 'டச் போன் தலைவலியெல்லாம் நமக்கு எதுக்குன்னு நான் அந்தப் பக்கமே போவதில்லை. பேரன் பேத்திகிட்ட கேட்டா கூட சொல்லித்தரமாட்டேங்குதுங்க. தப்பா எதாச்சும் செஞ்சா திருதிருன்னு முழிக்க வேண்டி இல்ல இருக்கு? கரண்ட் இல்லைன்னா 'நெட்' இல்ல! இருந்தா அத்தன பேரும் 'செல்ல' சார்ஜ் பண்ண போட்டியே நடக்குது.  எல்லாம் இருந்தா நேரம் இல்ல! டீ. வி. சீரியல் பார்த்தாலே பொழுது போயிடும் என்கிறார்கள்.

என்ன செய்வது? எனக்குக் கூட எதுவும் தெரியாமல்தான் இருந்தது! இப்போ மட்டும் என்ன ரொம்ப தெரியுமா? காலத்தின் கட்டாயம், வேற வழியில்ல பொழுதுபோக்க! கொஞ்சம் தெரிஞ்சுகிட்டேன், அவ்ளவுதான்!

வாழ்க்கையின் திருப்பு முனையில், திகைத்து நின்ற கால கட்டத்தில் 'உனக்கு ஒரு துணை வேண்டும்' என்ற போது,''ஐயய்யோ, திரும்பவுமா'' என்றேன். அட பயப்படாதே!  மடிக் கணிணியும், அலைபேசியும்
உன்னை ஒன்றும் செய்யாது. சொன்னபடி கேட்கும். உலகம் சுற்றச் செய்யும்! நண்பர்களோடு மீண்டும் இணைக்கும். ஊர்வம்பு, உலக வம்புகள் உடனுக்குடன் உன்னை சிரிக்கச் செய்யும்!இங்கு நகைச்சுவையும் உண்டு சோகமும் உண்டு! இலக்கிய உலகில் உன் விருப்பப்படி படிக்கலாம், பாட்டுக்கேட்கலாம், எல்லாம் அடங்கிய சிறு பெட்டியம்மா இது. உன் வாழ்வை புதிப்பிக்கும் கற்கண்டுக் கட்டி என்றதும் பயமாகதான் இருந்தது. ஆம் என் கல்லூரித் தோழிக்ளைக் கண்டு பிடித்துத் தந்துள்ளது முக நூல். எத்தனை சந்தோஷம்! சொல்லி முடியாது!

தமிழ் தட்டச்சு, ட்விட்டர், முகநூல் எல்லா அறிமுகங்களும் கிடைத்தன. இன்றைக்கும் கூட ட்விட்டர், முக நூல் எல்லாவற்றிலும் நான் 'பெயில்'தான். இருபது வருடங்களுக்கு முன்னென்றால் நன்றாக இருந்திருக்கும். இப்போது இரண்டு வரி எழுத ஆயிரம்தடவை யோசிக்க வேண்டியிருக்கிறது. அதனாலென்ன? காதலும், பாடலும், இலக்கியமும், அரசியலும், சினிமாவும் கலந்து கட்டி நகைச்சுவை விருந்தளிக்கிறது ட்விட்டர். ஒரு பார்வையாளியாக சிரிக்கிறேன் ரசிக்கிறேன்.

சமூகவலைத் தளங்கள் நிச்சயமாக தன்னம்பிக்கையை வளர்க்கிறது. பலவற்றையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் உதவுகிறது. புதிய அறிமுகங்கள், புதிய நட்புகள்!
எத்தனையோ வலைப்பதிவாளர்களின் பதிவுகள் சிந்தனையைத் தூண்டிவிடுகின்றன.  பரந்து விரிந்த இந்த உலகின் பல்வேறு பரிமாணங்களைப் பார் என்கின்றன.

இராமாயண, மகாபாரத, புராண பழங்கதைகளைக் கேட்டு என்ன ஆகப் போகிறது? கற்றுக் கொள்ளப் போவது என்ன? நம்மால் பின்பற்றமுடியாத எந்த ஒரு அறிவுரையையும் விட்டுவிடுவது நல்லது அல்லவா?

நான்கு ஆண்டுகள்!நம்பதான் முடியவில்லை! ஆனால்,

இந்த நிமிடம் தரும் சந்தோஷம் மட்டுமே சத்தியம், நித்தியம்!
வாழ்க்கை கடந்த காலத்தில் இல்லை! இணைய தளத்தின் வலையில், பிரபஞ்ச அலைகளின் ஊடே நம்மை  நாமறியாமல் இணைக்கும் அலை பேசியின் ஒலியில்.................
தன்னைத்தானே உணர்ந்த, சுமைகளற்ற சுதந்திரப் பறவையாய்ப் பறப்பதில் ஒரு சுகம். அந்த சுகத்தின் அமைதியில், ஆனந்தத்தில், வானவெளியில், நீலவானத்தின் மடியில்,கடலலைகள் சாட்சியாக நான்..... !
















26 Apr 2014

காதல் பரிசு!

''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,'' என பக்தியின் உச்சத்தில் பாடி அனைவரையும் சிவஜோதியில் கலக்கச் செய்தது திருஞானசம்பந்தரின் பாடல்.

காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல்' என்று பாடினான் பாரதி.
காதல் சாதி, மத, இனங்களுக்கு அப்பாற்பட்டது.  வாலிப வயதில் காதல்வருவது இயற்கை. வயதாகி திருமணம் முடித்து இரண்டு மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆனபின் வருவது காதலா, காமமா? 
   
வாசல் கேட் சத்தப்பட்டால் காலை மணி பத்து என்று கடிகாரத்தை சரி செய்து கொள்ளும் அளவுக்கு நேரம் தவறாதவள் கண்ணம்மா! அன்று... அம்மா..ஆ.. என்று சத்தம் போட்டபடி வந்து நின்றாள்.

என்னம்மா ஆயிற்று, என்று திடுக்கிட்டுப் போய் கதவைத் திறந்தோம். பாருங்கம்மா, காப்பி ஆச்சான்னு கேட்டதுக்குப் போய், பத்துப் பாத்திரம் தேய்க்கிற கழுதைக்கெல்லாம் பதில் சொல்லணுமோன்னு இந்தப் பெருமாள் கேலி செய்யறான். பத்துப் பாத்திரம் தேய்க்கிறவ குடுக்கற பணம் மட்டும் நல்லாயிருக்காமில்ல......கெட்ட வார்த்தைகளால் கொஞ்சம் அர்ச்சனை.... முணுமுணுப்பு..... கண்கசக்கல்..மூக்குசிந்தல்......!

    எங்கள் வீட்டில் பணி செய்யும் உதவியாளர் மிகவும் சுறு சுறுப்பானவர். கருப்பேயானாலும் முகத்தில் ஒரு களை! அழகு!கிராமத்தில் பிறந்து தினை,கம்பு, கேழ்வரகு சாப்பிட்ட வலிமையுள்ள உடற்கட்டு. ஒரு தடவை அழகு நிலையம் அழைத்துப் போய் வந்தபின், நல்ல பட்டுப் புடவை கட்டி, காதிலும், மூக்கிலும் வைரத்தைப் போட்டு விட்டால் அழகாகவே காட்சி அளிப்பார்! கடவுளுக்குதான் எத்தனை ஓர வஞ்சனை? ஏழைக்குடும்பத்தில் பிறக்க வைத்து, குடிகாரனுக்கு வாக்கப் பட வைத்து, காலை முதல் மாலை வரை சொந்தமில்லாத வீடுகளை சொந்தமானது போல் கூட்டி மெழுகி வாழ வேண்டிய கட்டாயம்.
      ஒரு தடவை சொன்னால் போதும் அந்த வேலையை சரியாக செய்து விடுவார். மாடியும் கீழுமாக தோட்டத்தோடு கூடிய வீடு எங்களுடையது.  எங்களுக்கு வலது, இடது கை எல்லாமே அவர்தான். திருமணமாகி வந்ததில் இருந்து பதினேழு ஆண்டுகளாக வேலை செய்கிறார். எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பதெல்லாம் அவருக்கு அத்துபடி. ஏதாவது காணோமென்றால் அவரைக் கேட்டால் போதும், சரியாகச் சொல்லிவிடுவார். அதாவது சமையல் தவிர மற்ற எல்லா வேலைகளும் கச்சிதமாக செய்வார். நாம் எதுவும் சொல்லவே வேண்டாம். அதற்குத் தகுந்தார் போல் சம்பளமும் அதிகம்தான். காலை பத்தரை மணிக்கு டிகிரி காப்பி. பன்னிரண்டரை மணிக்கு மதிய உணவு. ............ வீட்டில் அவரை வேலையாளாகக் கருதுவதில்லை.

 கண்ணம்மாவுக்கு மூன்று பையன்கள்.
பெரியவன் பி.யூ.சி முதல் வருடம் சிலகாலம் படித்து விட்டுவிட்டான். இரண்டாவது மகன் எட்டாம் வகுப்பிலேயே வேலைக்குப் போய் விட்டான். கடைசி மகன் படித்துவருகிறான். சின்ன சொந்த வீடு. வேலை செய்யும் வீடுகளில் கொடுக்கப்பட்ட கட்டில், மெத்தை இன்ன பிற சாமான்கள். நாங்கள் கொடுத்த டீ. வி, தானே வங்கிய கேஸ் அடுப்பு. சுமார் ஆறு வீடுகளில் வேலை செய்வதால் கிட்டத்தட்ட 10000 ரூபாய் சம்பாதிக்கிறார்.

புருஷன் வேலனுக்கு  இவள் இரண்டாவது பெண்டாட்டி. முதல் மனைவி கொஞ்சம் வசதியானவள்.  அவளுக்கு ஒரு பெண். பக்கத்து ஊரில் வசிக்கிறாள். வேலன் மொடாக் குடியன். வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பணம் அப்படியே குடிக்குப் போய் விடும். போதாக்குறைக்கு கண்ணம்மாவிடம்  பணம் பிடுங்கிக் கொண்டு போய் விடுவான். கொடுக்காவிட்டால் அடிஉதைதான்.  இவன் அடிக்கடி  முதல் மனைவியிடம் போய்  ஒரு சில நாட்கள் தங்குவதும், திரும்பி வரும் போது எங்க ஜெயந்தி போல வருமா என்று பெருமையடித்துக் கொள்வதையும்,  மூஞ்சியப் பாரு கருப்பி என்று இவளைத் திட்டுவதையும் கேட்டு அழுகையாக வரும் கண்ணம்மாவுக்கு. அவளுக்கு இலவச இணைப்பு அவனுடைய அம்மா!

அன்பு செலுத்தவும், அன்பைப் பெறவும் யாருமில்லாமல் தவித்தது கண்ணம்மாவின் மனம்.  அட, நல்ல புடவை கட்டி, தலையில் பூச்சூடி அலங்காரம் செய்து கொண்டு, ஆசையாய் ஒருநாள் ஹோட்டலுக்கு சேர்ந்து போய் பிடித்தமானதை சாப்பிட்டு, திரைப் படம் பார்த்துச் சிரித்து, இவையெல்லாம்  இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா? பிள்ளைகளோ சொன்ன பேச்சைக் கேட்பதில்லை. புருஷனும் சரியில்லை. இவ்வாறு இருந்த வாழ்க்கையில் அவள் கண்ணில் பட்ட மன்மதராஜாதான் பெருமாள்.

பெருமாள் ஒரு டிரைவர். கன்னங்கருப்பு! சிரித்தால் வெளுப்புப் பற்கள் அழகூட்டும். கையில் தங்கப் பட்டை வாட்ச் கருப்பில் மினுக்கும். ரொம்ப மென்மையாகப் பேசுவான்.  குடி, சிகரெட் கெட்ட பழக்கங்கள் அவனுக்குக் கிடையாது. நீலகிரியில் பிறந்தவன். பெங்களூரில் பல வேலைகளும் செய்ய வைத்து, கடைசியில் காரோட்டும் திறமையைக் கண்டறிந்த அவன் அண்ணன் அவனுக்கு லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தார்.

காரோட்டியாக அவனுடைய வாழ்வு நன்றாகவே நடந்தது. திருமணம், ஒரு பெண், ஒரு பையன் எனப் பெருகியது குடும்பம். இதற்கிடையில் விற்பனைக்கு அந்த வீடு ஒன்றை 'வங்கிக் கடன்' பெற்று வாங்கிக்
கொண்டான். பேராசையால் இரண்டாவதாக வீடு வாங்கிய போது கடனாளியானான்.அவனுக்கு ஒரே வருத்தம் கடன் வாங்க பிரம்மா 1000 கைகளை வைக்க மறந்துவிட்டாரே என்பதுதான். அவனுடைய முகராசியும், நடிப்பும் அவன் யாரிடம் கடன் கேட்டாலும் அவனுக்குக் கிடைத்தது.

ஆனால்  அவன் கேட்காமலே கிடைத்தது கண்ணம்மாவின் காதலும், கடனுக்குப் பணமும். விட்டுவிட மனம் வருமா? போகவர பேசுவது, 'செல்' பேச்சில் வளர்ந்து, 'பைக்கில்' பூங்காவுக்குப் போவது, எஜமானுடைய கார் கிடைக்கும் போது சொந்தக் கார்போல பெங்களூர் சாலைகளில் பவனி  வருவது மிக ரகசியமாகத் தொடர்ந்தது.
பெருமாளுக்குப் பணம் தேவைப் பட்டபோது சீட்டுப் பணத்திலிருந்தும், சேமிப்பிலிருந்தும் பணம் கொடுத்து உதவிய கண்ணம்மா அவனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சொல்ல ஆரம்பித்தாள்.  அவன் மனைவியிடம் கண்ணம்மாவே தங்கள் தொடர்பைச் சொல்ல வந்தது வினை. பெரியவர்கள் புத்தி சொல்ல ஆரம்பித்தார்கள்.

வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுத்த பெருமாள் சிறிது சிறிதாக அவளிடமிருந்து விலக ஆரம்பிக்கவே  கண்ணம்மா அவனை எஜமானிடம் காட்டிக்கொடுப்பேன் என்று பயமுறுத்த ஆரம்பித்தாள்.  எதையாவது சொன்னே கொலை பண்ணிடுவேன்னு மிரட்டினான் பெருமாள். காதல் போயிற்று  சண்டை தொடங்கியது.

 அன்று........அதுதான் 'அம்மா' என்று சத்தமிட்டு வந்த அன்று......சாயம் வெளுத்துப் போச்சு......

பெருமாள் தான் செய்த தவறை சொல்லி வேலையை விட்டு நின்றுவிடுகிறேன் என்று எஜமானர் காலில் விழுந்துவிட்டுச் சென்றான். மறுநாள் பெருமாள் வேலையை விட்டுவிட்டான் என்றதும் அவன் இல்லாத வீட்டில் நானும் வேலை செய்ய மாட்டேன் என்று கண்ணம்மாவும் வேலையை விட்டாள்.

இருவரும் வெவ்வேறு இடத்தில் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் எங்களால் இவர்களுடைய 'காதல் பரிசின் 'அதிர்ச்சியிலிருந்து வெளியே வரமுடியவில்லை. அது என்ன காதல் பரிசு எங்களுக்கு? அதுதாங்க இதுவரை எந்த வேலையானாலும் கவலையில்லாமல் இருந்த எங்களுக்கு ஞானோதயம் ஏற்படச் செய்து, யாரையும் நம்பாதே, பிறரைச் சார்ந்து இருக்காதே
என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்திய பரிசுதான்....!

பாத்திரம் தேய்க்கும் எந்திரமும் (Dishwasher) மந்திரம் போட்டதுபோல் வீடு துடைக்கும் கோலையும்
( Magic mop) வாங்கி விட்டோம். வீட்டு வேலைகள் பத்து மணிக்குள் முடிந்து விடுகிறது.
ஆனால்.......
எத்தனை நம்பிக்கை துரோகம்! வீட்டு மனுஷியாய் அவளுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் தீர்வு சொல்லி, வங்கிக் கணக்கு ஆரம்பித்துக் கொடுத்து, ஊரே பொறாமைப் படும்படி அவளைப் பெருமைப் படுத்தி....................! தான்செய்த தவறை ஒப்புக்கொண்ட போதும் சிறிது கூட எந்த உணர்வுமின்றி......அவள் போனாள்! எப்படி என்று ஆச்சர்யப் படுகிறது மனம்! காதலுக்கு கண் இல்லை என்பது உண்மைதான்! 
ஆனால் எங்களுக்கு...ஞானக்கண் திறந்தது!

காதலுக்கு கண் இல்லை, வயது இல்லை! உறவுகள் இல்லை!பிள்ளைக்குட்டிகள், பெண்டாட்டி புருஷன் தடையில்லை!?
யாரும் லட்சியமில்லை!

பெருமாளோ எல்லாம் அந்தக் கண்ணம்மா தப்புதான், நான் ரொம்ப நல்லவன் என்று தன் ஆண்பிள்ளைத் தனத்தை பெருமையுடன் சொல்லி விட்டுப் போனான். எங்களிடம் வாங்கிய கடன் இரண்டு லட்சம்..........?  \|/ ....

பெருமாளின் பெண்டாட்டி குழந்தைகளையும், கண்ணம்மாவின் மூன்று பிள்ளைகளையும் நினைத்தால்தான்  பாவமாயிருக்கிறது!

(இது ஒரு உண்மைக்கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)


















6 Apr 2014

சும்மா இருங்க?

பள்ளிக்கூடம்  என்றாலே மாணவர்களுக்கு நினைவு வருவது, 'சத்தம் போடாதீங்க! அமைதி! வாய்மேல விரல் வையுங்க,' என்று ஆசிரியர் அலறுவதுதான். மாணவர்கள் வாயிலோ துள்ளிக் கீழே விழத் தவிக்கும் வார்த்தைகள். எவ்வளவோ கஷ்டப்பட்டு சும்மா இருக்கிறார்கள். ஆசிரியர் முகத்தில் நட்பான ஒரு புன்னகை போதும், மீண்டும் நீர் வீழ்ச்சியாய் சளசளவென்று பேச்சு.
''சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றுமறிந்திலனே" என்கிறது கந்தரனுபூதி. மனிதனால சும்மா இருக்க முடியுமா? ஒன்று ஏதாவது வேலை செய்யணும், இல்லை யார்கிட்டயாவது பேசணும், சும்மா எப்படி இருப்பதாம்? எவ்வளவு படிச்சாலும், எழுதினாலும், பாட்டுக் கேட்டாலும், இறைவனை பிரார்த்தித்தாலும் கடைசியில் மனிதனுக்கு யாரிடமாவது பேசாமலிருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும்.
சமீபத்தில் ஒரு 'ஆஸ்கார் அவார்ட்' படம், சிறந்த நடிப்புக்குக் கொடுக்கப்பட்டது. கதாநாயகி பல இடங்களிலும் தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள். அவளுடன் பேச யாருமில்லை. எல்லோரும் அவளை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். மிகச்சிறப்பாக நடித்திருக்கும் 'நீல மல்லிகை' திரைப்பட கதாநாயகிக்குதான் சிறந்த நடிக்கைக்கான பரிசு.
எங்கள் வீட்டு ஜன்னலில் சதா புறாக்கள் தொந்தரவு. நானும் சில சமயங்களில் அவற்றுடன் பேசுவேன்! எங்க வீட்டுக்காரர் சிரிப்பார்.ஒரு'நெட்' போடுங்கன்னா, கேட்க மாட்டேன் என்று சும்மா இருக்கும் உங்களைத் திட்ட முடியுமா? அதுதான் புறாவிடம் சொல்கிறேன் என்று சிரிப்பேன். ஆம் தனக்குத் தானே பேசிக் கொள்வது குறித்துதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பேச்சு!
 எல்லாக் கடமைகளும் முடிந்து, பிள்ளைகள் கூட இல்லாமல்'தனிக்குடித்தனம்' இருந்தால் கேட்கவே வேண்டாம்! டெலிபோன் மணி அடித்தால் நிறையப் பேச ஆள் கிடைத்தது என்று சந்தோஷப்படும். நண்பர்களை வழியில் பார்த்தால் ஆனந்தப்படும். உறவுகள் வரும்படி அழைத்தால் உற்சாகப்படும்.
பூங்காவில் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே நடப்பவர்களைக் கண்டு பொறாமைப்படும்!
பேசுவது என்பது மூச்சுவிடுவது போல! இளமையில்  வேலைகள், குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் எனக் கவலைப்பட நேரமில்லாமல் போய்விடும்! முதுமையில் பேச ஏங்கும். உறவுகளைத் தேடும்!

 யாரிடமும் பேசாமல் இருப்பவர்களுக்கு உம்மணாமூஞ்சி என்று பெயர்! சிலர்  வாங்க என்று ஒரு புன்னகையோடு நிறுத்திக்கொள்வார்கள். 'வாயிலிருந்து முத்து உதிர்ந்துவிடும் போல,' பேசாமல் நம்மையும் பயமுறுத்தி எழுந்து போகவைத்துவிடுவார்கள்!
ஒரு சிலர் கேள்வியும் நானே பதிலும் நானே என்று திறந்த வாயை மூட மாட்டார்கள்.  சமீபத்தில் தெரிந்த சினேகிதியிடம் மாட்டிக் கொண்டேன். ரத்த அழுத்தம் இருக்கா? சர்க்கரை, கால்வலி,தொடங்கி எல்லா நோய்களும் இருக்கிறதா எனப் பட்டியல் இட்டார்! இந்த மாதிரி ஆட்களைப் பார்த்தால் மாயமாய் மறைந்து போகலாம்னு தோணும்.
கூட்டுக் குடும்பங்கள் இருந்த காலத்தில் வீடு எப்போதும் கலகலப்பாய் இருக்கும். தனித் தீவுகளாகிவிட்ட இன்றைய குடும்பங்களில் வீட்டுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வது அரிதாகிவிட்டது.
என் சகோதரர் மனைவியுடன் தங்கியிருக்கும் முதியோர் இல்லம் போயிருந்தேன். வயல் வெளிகளுக்கு
நடுவே ஊரிலிருந்து சற்றே தள்ளி, அமைதியின் மடியில், பறவைகளின் இசைத் தாலாட்டில், தென்றல்
கிசுகிசுக்கும்  சொல்லற்ற செய்திகளின் மறைவில் குடியிருப்புகள்! சவுகரியங்களின் தேவையை உணர்ந்து பக்காவாகக் கட்டப்பட்ட விடுதிகள்.
எல்லோராலும் கைவிடப்பட்டு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு - விட்டு விடுதலையாகித் தன்னந்தனியே எல்லோருடனும்  வாழும்  வாழ்க்கை! வேளாவேளைக்கு  சாப்பாடு! படிக்க ஆங்கில, தமிழ்  பத்திரிகைகள், மாத இதழ்கள், நாவல்கள் அடங்கிய நூலகம்!
பல்லாங்குழியிலிருந்து  விளையாட ஓர் அறை, நடை பழக  மைதானம்! ஆண்டவனைத் துதிக்கவோர் கோயில்! சகல வசதிகளும் செய்து கொடுத்து எல்லோருக்கும் உறவாக ஒற்றை மனிதர்!
ஒவ்வொருவரிடமும் ஒரு கதை. சம வயதுடையவருடன்  எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். ஓ நம்மைப் போல நிறையபேர் இருக்கிறார்கள் என்று ஒரு சமாதானம். இதுதான் நமக்கு என்று ஒரு ஆறுதல்! சில நாட்கள் இருந்தால் தனிமை பழகிவிடும்.
பேச்சுத் துணைக்கு நிறைய பேர். பேச ஆளில்லையே என்று கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் வாழ்நாளைக் கழிப்பவர்களுக்கு முதியோர் இல்லங்கள் ஒரு வரப்பிரசாதம்.
என்னதான் சொல்லுங்கள் கடைசியில் மனிதனுடைய வாழ்வு அவனுள் தோன்றி அவனுள் தனியே மறைந்துவிடுகிறது. தனியே பிறக்கும் மனிதன் தனித்தே வாழ்கிறான். மறைகிறான். அதுதான் உண்மை.

22 Mar 2014

An announcement

Please post this message in the known groups so that it gets circulated.

If you have come across any bright students coming from poor financial background who have finished their 10th std this year and scored more than 80% please ask them to contact the NGO - Prerana(Supported by Infosys foundation).

The NGO is conducting a written test and those who clear the test will be eligible for financial help for their further studies.

Please ask the students to contact the people mentioned below to get the form:
580, Shubhakar, 44th cross, 1stA main road, Jayanagar, &th block, Bangalore.
Contact numbers:
MS.Saraswati 99009 06338
MR.Shivakumar  99866 30301
Ms.Bindu 9964534667

Please pass on this information, someone might be in need of this.Thank You.

26 Jan 2014

மிட்டாய் கதைகள் - ஒரு விமர்சனம்

நான் சின்னப் பெண்ணாய் இருந்த காலத்தில் கண்ணாடிப் பெட்டியில் பஞ்சு மிட்டாய் விற்பார்கள்! சுவைமிக்க பஞ்சு மிட்டாய் நல்ல ரோஸ் நிறத்தில் இருக்கும். ஒன்று சாப்பிட்டால் போதும், வாயெல்லாம் ரோஜா நிறமாகும். அதைக் கண்ணாடியில் பார்ப்பதில் ஓர் ஆனந்தம்.
பள்ளியில் படிக்கும் காலத்தில் கம்மர் கட்டு மிட்டாய், வாயில் ஒட்டிக் கொள்ளும் ஜவ்வு மிட்டாய், கையில் கடிகாரமாய் கொஞ்சநேரம் அழகு காட்டும் கலர் மிட்டாய் எனப் பலவகை மிட்டாய்களைச் சுவைத்ததுண்டு.
பாரி& கோ வின் மிட்டாய்கள் எல்லாம் அக்காலத்தில் பிரபலமானவை. ஆரஞ்சு சுளை வடிவில் வரும் மிட்டாய், வடிவிலும், நிறத்திலும் மட்டுமே தவிர சுவை ஆரஞ்சுடையது அல்ல! அது மஞ்சள் நிறத்திலும் உண்டு. சுக்கு மிட்டாய், சீரக மிட்டாய், புளிப்பு மிட்டாய், லாலிபாப் எனப் பல வகைகளிலும் மிட்டாய்கள் வருகின்றன. சாக்லேட்டிற்கும், மிட்டாய்களுக்கும் போட்டி வைத்தால் என் ஓட்டு மிட்டாய்களுக்குதான்.

வெகு நேரம் வாயில் வைத்துச் சுவைத்து இனிப்பை அனுபவிக்க மிட்டாய்தான் சரி. எதைப்போல என்றால்  திரு. சொக்கன் அவர்களின் 'மிட்டாய்க் கதைகள்' போல! அது என்ன 'மிட்டாய்க் கதைகள்'?பலவிதமான மிட்டாய்களின் தனித்துவமான சுவையைப் போல் அவர் 'கலீல் கிப்ரனின்' எழுத்துக்களிலிருந்து தேர்ந்தெடுத்து,  வடிவம் கொடுத்துள்ள 50  குட்டிக் கதைகள்  நகைச்சுவையோடு நம் சிந்தனையைத் தூண்டுவதாகவும், ஆழ்ந்த கருத்துடையனவாகவும் அமைந்துள்ளன. ஆம் கதைகளிலும் மிட்டாய்ச் சுவை!

முதல் பக்கமே அசத்தலாக 'பால் வெள்ளைக் காகிதம்' என்ற தலைப்பில்! பாலும் காகிதமும் வெண்மை நிறத்தன. எழுத்தினால் பெருமையுடைத்து காகிதம்!  ஆராய்ந்து பார்க்குமிடத்து  காகிதம் என்றால் என்ன, அதை எப்படித்தயாரிக்கிறார்கள், எத்தனை மரங்கள் வெட்டப்படுகின்றன, பால் எங்கிருந்து கிடைக்கிறது, முக்கியமான அடிப்படை நிறங்கள், நிறங்களில் வெண்மையின் பங்கு என விவாதம் செய்ய பல விஷயங்களை உள்ளடக்கியதாம். ஆயின் 'பால் வெள்ளைக் காகிதம்' கற்புடைத்து!

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று இன்றும் ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறோம். கடவுளைக் கண்டவரைப் பற்றிச் சொல்கிறது ஒரு கதை. தவளைகள் பாடுகின்றன, கட்டைமேல் அமர்ந்து பயணிக்கின்றன! மரக்கிளைகள் பேசுகின்றன. விசிறிகள் கூட விவாதம் செய்கின்றன. உலகத்தின் மொழி உங்களுக்குத் தெரியுமா?  குயிலும் பாம்பும் பேசுமா? பேசுகின்றன! தூக்கத்தில் நடக்கிறவர்கள் நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள்.

'கலீல் கிப்ரன்' ஆழ்கடல். அதில் இறங்கி அருமையான முத்துக்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் திரு. சொக்கன் என்றால் அது மிகையாகாது. ஒரு ரோஜா மலரைப் பார்க்கிறோம். ஓ அதன் அழகு, நிறம், மணம் அனைத்தும் நம்மைக் கவர்கின்றன. என்ன நேர்த்தியான படைப்பு என வியக்கிறோம்! அதுபோல தான் ஒரு எழுத்தாளனின் எழுத்துகளும். சிறந்த நடை, சிந்தனையைத் தூண்டும் கருத்துகள், மிளிரும் நகைச் சுவை. படித்து முடிக்காமல் கீழே வைப்பதில்லை என்று படிப்பவர் முடிவெடுத்தால் அது எழுத்தாளனின் வெற்றி. சிந்திக்கவும், சிரிக்கவும் தூண்டும் அருமையான மொழி பெயர்ப்புக் குறுங்கதைகள் 'மிட்டாய் கதைகள்.'

ஆசிரியர் - என். சொக்கன்
மதிநிலையம் வெளியீடு.







31 Dec 2013

கூவம் நதிக் கரையினிலே..............

எங்கள் அண்ணாநகர் இல்லம் - அன்னை L7/2
மெரினாவின்  இனிய காற்று வீசும் மாலைப் பொழுது! உனக்காக கூவம் நதிக்கரையில் ஒரு மாளிகை வாங்கியிருக்கிறேன் என்று சொல்லியபடி வந்தார் மகாராஜா! ஆகா அங்கே கூவத்தில்  படகில் போக முடியுமா என்றேன்! ஹி...ஹி.. ஹி..ஹி..ஹி..............!ஆகா அது உன்னுடைய தாங்கும் சக்தியைப் பொறுத்தது என்றார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரின் படகு வீட்டில் குழந்தைகளோடு சென்று குதூகலித்தோம். பம்பாயில், அந்தமானில் என்று படகுப் பயணங்கள் நிறையவே  செய்து என் ஆசை பூர்த்தியானது!

பாண்டிச் சேரியில் இருக்கிறது 'ஆரோவில்'. ஆனால் கூவம் நதிக்கரையில் பல ஆண்டுகளுக்கு முன் என் கணவரால் பெயர் சூட்டப்பட்ட 'ஆரோவில் குடியிருப்பு'களில் சுமார் 10 வீட்டுவரிசைகள், 40 குடியிருப்புகள். கூவம் நதியிலிருந்து சுமார் நூறடி தூரத்தில்! அதிலே ஒன்று தான் எங்களுடைய மாளிகை. குறைந்த வருமானக் குடியிருப்பு வீடு.

திருவல்லிக்கேணி ஒண்டுக் குடித்தனத்தில் குப்பை கொட்டியவர்களுக்குதான் தெரியும் இந்த ஒற்றைப் படுக்கையறை வீடு பிரிட்டிஷ் மஹாராணியின் மாளிகைக்கு சமம் என்று. நல்ல காற்று, வெளிச்சம், முன்னும் பின்னும் நடமாட இடம்! இரவில் ஓயாமல்  தவளைகளின் இன்னிசை, இலவசமாக!

எங்கேயோ தொலைவில் இருக்கிறது , தெற்குப் பார்த்த வீடு  என்றெல்லாம் போகிற போக்கில் உறவுகளின் புகார்கள். போக்குவரத்து வசதிகள் அதிகம் கிடையாது. மாலை ஆறு மணிக்கு மேல் வெளியே போக முடியாது, தெரு விளக்குகள் அற்ற சாலைகள். அவ்வப்போது கூவம் மணம் வீசும்! கூவத்தின் மறுகரையிலிருந்து சுடுகாட்டு நாற்றம் மூக்கைத் துளைக்கும். 

பதினேழாம் நூற்றாண்டின் புனித நதி கூவம்.  அதன் கரைகளிலே மூன்று சிவன் கோயில்கள் இருந்ததாகவும், கூவத்தில் நீராடி வழிபாடு செய்தார்கள் அன்றைய தமிழர்கள் என்றும் கூகுள் செய்தி கூறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி, பூந்தமல்லி வழியே அரும்பாக்கத்தில் உள் நுழைந்து வங்காள விரிகுடாவில் சென்று சேர்கிற கூவம் இருபதாம் நூற்றாண்டில் அதில் இணைக்கப்பட்ட கழிவு நீர்களால் புனிதம் இழந்து, மக்களால் வெறுக்கப்படும் நிலையில் சீரழிந்து போனது. 

ஒரு நதியை உருவாக்க முடியாவிடினும் எப்பாடுபட்டாவது அழிப்பதிலே வல்லதாயிருக்கும் மானிடம்!

பூந்தமல்லி நெடுஞ்சாலையை அண்ணாநகரிலிருந்து பிரிக்கிறது நடுவே ஓடும் கூவம். இணைப்பது தாழ்ந்த பாலம். பெருமழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் நிதானமாக சங்கிலி போல் கை கோர்த்துக் கொண்டு எல்லோரும் பாலத்தைக் கடந்து செல்வோம்.

ஒரு முறை பெரு மழையால்   தன்னைப் பார்த்து ஓடும் எங்களை விடாமல் துரத்தி, வீட்டுக்குள் அழையாத விருந்தாளியாய் சர்வ சுதந்திரத்தோடு நுழைந்து, தன்னுடைய அழுக்குகளைப் பரிசளித்து ஒரு நாள் முழுதும் சுத்தம் செய்யும் உபகாரத்தைச் செய்தது! குழந்தைகளை மாடி வீட்டுக்கு அனுப்பிவிட்டு கட்டில் மேல் நாற்கலிகளைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். தண்ணீரில் நெளிந்து வந்த பாம்புகள் பயமுறுத்த, தண்ணீர்ப் பெருக்கு அதிகமானால் என்ன செய்வது என்ற கிலியுடன் விடியலை நோக்கிக் காத்திருந்த தருணங்கள்!

பாரதியார் பாடியது போல பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் இல்லாவிட்டாலும் மூன்று தென்னை மரங்கள் வீட்டு வாசலில். மருதாணி, கொய்யா, பவழமல்லிச் செடிகள்! அடுக்குச் செம்பருத்தி சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும், நீல, வெள்ளை சங்கு புஷ்பங்கள் வேலி நிறைய அழகு செய்யும். மாடி வீட்டுத் தென்னை மரங்கள்,  பூந்தோட்டம் பக்கவாட்டில்.  கோடை காலத்திலும் வெயில் தெரியாமல் செய்யும் தென்னங் கீற்று நிழல்.

வெளியிலே ஒரு உலகம் இருப்பதே தெரியாமல் அண்ணாநகரில் வாழ்ந்து வந்தோம்! எங்கள் வாழ்க்கையின் மிக முக்கிய காலகட்டம் அது. அலுவலகப் பணி காரணமாக நாங்கள் சென்னையிலிருந்து இடம் பெயர வேண்டியிருந்தது. ஆனாலும் 19 ஆண்டுகளின் கதைகளை தன்னுள் புதைத்துக் கொண்டு வேறொருவர் வீடாக அது இன்னும் இருக்கிறது. தென்னை மரங்கள்தான் இல்லை! 

சாதாரணமாக கடந்த காலத்தை நான் நினைப்பதில்லை. அந்த நேரத்தில் வாழ்க்கை எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்து விட்டது! நடந்ததை மாற்றியிருக்க முடியுமா? வரப் போவதைத் தடுக்க முடியுமா? இதோ நேற்றுக் காலையில் எங்கள் குடும்பத்தில் ஒருவரின் இதயம் நின்று போனது! யாரால் என்ன செய்ய முடிந்தது? மாறுதல்கள்தான் வாழ்க்கை!

இப்போது என்ன திடீர் ஞாபகங்கள் என்கிறீர்களா?  

 நான் பத்தொன்பது ஆண்டுகள் ஒரு ஆசிரியையாக ஓடிக்  கொண்டிருந்த காலகட்டம் அது. அதிகமாக எல்லோருடனும் பேசி மகிழவோ, மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ நேரமிருக்காது.

எங்கள் மாடி வீட்டின் சொந்தக்காரர்கள்தான் திருமதி. மல்லிகா, சபாநடேசன் தம்பதியர். இவர் நடராஜர், கீழே பக்கத்து வீட்டில் சண்முகம்! திருமதி. மல்லிகா - நல்ல உயரம். எப்போதும் சுங்கடி சேலைதான் உடுத்துவார். முருக பக்தை. அவர்தான் செந்தில் முருகனை எனக்கு அறிமுகப்படுத்தியவர். வெஜிடபிள் பிரியாணி, ஆம்லெட், இடியாப்பம், கோதுமை ஹல்வா என எனக்கு அவர் சொல்லித் தந்த சமையல் மெனுக்கள் நிறைய! தோட்டம் போடுவதில் அவர்களுக்கும் ஆர்வம் அதிகம்.நவராத்திரி நாட்களில் பொம்மைக்கொலு அருமையாக வைப்பார்கள்.

பெரும்பாலும் ஜன்னல் வழியேதான் பேச்சு நடக்கும். அவர்களுடைய சகோதரர்  டாக்டர். என் மகனுக்கு மருத்துவம் பார்த்தவர்.

எங்கள் நட்பு வட்டம் பெரியது.   திருமதிகள். ஹேமா, பாப்பா, ஜெயா, ராதா,  சாந்தா, ஜூலா எல்லோர் வீட்டிலும் பண்டிகைகள் சமயத்தில் ஒன்று சேர்வோம். இன்னும் அங்கேயே 43 ஆண்டுகளாக வசிக்கும் இவர்களால் எங்கள் நட்பு இன்னும் தொடர்கிறது என்பது சந்தோஷம் தருகிறது.

ஆறு மாதங்களுக்குமுன் ஒரு நாள் சகோதரி மல்லிகா என்னை அலை பேசியில் அழைத்தார். இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ஒருவருடன் ஒருவர் மீண்டும் பேசிய அந்தக் கணம் தந்த சந்தோஷத்தை எழுத்துக்களால் வர்ணிக்கவும் முடியுமோ? நல்ல நண்பர்கள் கடவுள் மாதிரி! எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, அன்பை மட்டுமே நாடி நிற்கும்  பேச்சுத் துணைவர்கள். மூச்சு நிற்கும் மட்டும் எங்கள் நட்பு தொடர்வதாக!

பூந்தமல்லி நெடுஞ்சாலையை அண்ணாநகருடன்  இணைத்த பாலம் உயரமாகக் கட்டப்பட்டு விட்டது.
ஆனால் கூவம் நதி மட்டும் சாக்கடை நாற்றம் வீசும்,  கழிவுகளின் மையமாய், கொசுக்களின் உற்பத்தித் தலமாய் அமைதியாய் தன்பாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சிவனே என்று நடை பயில்கிறது! அதற்கு ஏது விமோசனம்?

எது எப்படியோ, கூவமும் கூவம் நதிக்கரையும் அப்படியே இருந்தாலும் எங்கள் வீடுகள் இரண்டும் இணைக்கப்பட்டு ஒரே வீடாக மாறிவிட்டது. ஆம், புதிதாக அந்த வீட்டை வாங்கியவர் கீழ்,மேல் என இரண்டையும் வாங்கி ஒன்றாக்கி விட்டார். எங்களுடைய நட்பும் புதிப்பிக்கப் பட்டு இடையே நடந்த கதைகளை இன்று பேசிவருகிறோம்.

என்றென்றும் மறக்க முடியாத கூவம் (நதிக்கரை)!............................. அண்ணாநகர்!எங்களுடைய வரலாற்றின் ஒரு பக்கம்!

அனைவருக்கும் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். 2014 ஆம் ஆண்டில் நோய் நொடியற்று, ஆரோக்யமாக அனைவரும் அனைத்தின்பங்களும் பெற்று இன்புறுவார்களாக!






23 Dec 2013

திருப்பாவை - ஆண்டாள்

மார்கழி மாதம் என்றாலே நினைவுக்கு வருவது திருப்பாவை. விடியலின் பஜனைப் பாட்டு, வாசல்கள்தோறும் அலங்கரிக்கும் அழகிய பெரிய கோலங்கள். கோயில்களில் கிடைக்கும் சூடான பொங்கல்!
தனுர் மாதம் எனப் போற்றப்படும் மார்கழி - மார்கசீர்ஷம் என்ற பெயரும் பெற்றுள்ளது. (மார்கம் - வழி, சீர்ஷம் - முதன்மையான) இவ்வுலகில் பிறந்த எல்லோருமே ஏதாவது ஒரு தருணத்தில் எல்லாவற்றுக்கும் மேலான, எவராலும் அறிய முடியாத இறைவனை அறிந்து கொள்ள முயல்கிறோம். அவசர உலகில் அல்லல் படும் அனைவரும் பின்பற்றி அடையக் கூடிய மிக எளிய வழியை நமக்குக் காட்டுகிற மாதம்  மார்கழி.
பலவிதமான யோகங்கள், பக்தி மார்க்கங்கள், அறிவியல் ஆராய்ச்சிகள் பரம் பொருளைப் பற்றிப் பேசுகின்றன. இறைவனுடை நாமத்தைச் சொல்லுதல், மலரிட்டு வணங்குதல், முழுமையான நம்பிக்கையை அவனிடம் வைத்தல் அடங்கிய பக்தி மார்க்கமே அந்த எளிய வழி என்கிறது  முப்பது பாசுரங்கள் அடங்கிய திருப்பாவை. இசையோடு
இயைந்த செந்தமிழ். திருமாலின் திருநாமங்கள்! மாயக்கண்ணனின் விளையாட்டு லீலைகள். ஒருஅழகிய நாடகத்தை அற்புதமாகப் பாடி அரங்கேற்றுகிறாள் கோதை நாச்சியார். ஆயர்பாடியில் தன்னோடு சேர்ந்து பாசுரம் பாட வைக்கிறாள். இந்திய பக்தி வானிலே ஒளிரும் நட்சத்திரங்களாக பெயரும் புகழும் பெற்ற பெண்டிர் இருவர். வட நாட்டில்  கண்ணனையே காதலித்து, மேவார் மன்னனின் பட்ட மகிஷியான பின்பும் சுக போகங்களில் திளைக்காமல், இசையால் கிரிதரகோபாலனைக் கட்டுவித்து அவனுடன் ஒன்றிய பக்த மீராபாய் முதல்வர். மீரா பஜனைப் பாடல்கள் இன்றும் வடநாட்டினரால் போற்றப்படுகின்றன.
 இரண்டாவதாக, கருவிலே தோன்றாமல், விஷ்ணு சித்தரின் துளசி வனத்தில் தோன்றி, அவருடைய செல்லப் பெண்ணாய் வளர்ந்த சூடிக் கொடுத்த சுடர்க் கொடி, திருவரங்கத்து திரு அரங்க நாதனின் இதயத்தையும், நம்முடைய மனதையும் ஆள்பவள் ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியார். கோதை நாச்சியார் கண்ணனிடம் கொண்ட காதல் நினைந்து நினைந்து இன்புறத்தக்கதாகும்.
கோதை யார்? திருமாலின் பத்து அவதாரங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது  வராக அவதாரம்.  ஹிரண்யாட்சன் என்ற அரக்கனிடமிருந்து ஆழ்கடலில் ஒளித்து வைக்கப்பட்ட பூமியை திருமால் மீட்டெடுத்தான். வராஹத்தின் மூக்கிலே ஒட்டிக் கொண்ட பூமி தேவி அழ, காரணம் கேட்கிறார் வராஹமூர்த்தி. தன்னைக் காப்பாற்றியதுபோல் அவஸ்தைப்படும் மற்றவர்களும் அழைத்தால் நீ சென்று காப்பாற்றுவாயா?  என்று கேட்கிறாள் பூமித்தாய். என்னை வழிபட்டு, என்னை அழைத்தால் காப்பாற்றுவேன் என்கிறான் திருமால். 
அது சரி. உன்னை வழிபட எளிதாக எல்லோராலும் பின்பற்றமுடிந்த வழியைச் சொல் என்கிறாளாம் அன்னை.
என்னை வழிபட என்ன செய்ய வேண்டும்? என்னைக் கூப்பிட வேண்டும், மலரிட்டு என்னை வணங்க வேண்டும், சரணாகதி பண்ண வேண்டும். அவ்வளவுதான். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம் என்கிறான் திருமால்.
பெரிய மனிதர்களைச் சந்திக்கச் சென்றால் மிகவும் மரியாதையாக அவர் பெயரைச் சொல்கிறோம்; பூச்செண்டு கொண்டு போகிறோம். உங்களை விட்டால் யாரால் செய்ய முடியும் என்று சொல்கிறோம்.அது போலதான் இதுவும்.

எல்லா அவதாரங்களும்  முடிந்தபின் வைகுந்தத்தில் பள்ளிகொண்டிருந்த பரந்தாமன் தான் உபதேசித்த 'கீதா' சாரத்தினால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்று எண்ணுகிறான். மஹாலட்சுமியை மீண்டும் அவதாரம் செய்யச் சொல்கிறானாம். அவள் மறுக்க பூமாதேவி அவதரிக்க ஒப்புக் கொண்டு கலி 98, நளவருடம், ஆடிமாதம், சுக்கில பட்ச சதுர்த்தசி, செவ்வாய்க் கிழமை, பூர நட்சத்திரத் திரு நாளில் ஶ்ரீ வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தரின் மகளாய் அவதரித்தாள். அவள்தான் கோதா என்ற கோதை. கோதா என்றால் நல்ல வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடி! ஸ்ரீ ரங்கனை ஆண்டாள்!

கோதையால் புகழ் பெற்ற ஊர் ஸ்ரிவில்லிபுத்தூர்.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர்
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர்
நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லி புத்தூர் வேதக் கோனூர்.

கோதையின் தமிழ்ப்பாசுரம் எப்படியானது? 'பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும், வேதமனைத்துக்கும் வித்தாகும்.' இதை அறியாதவர்கள் பூமியில் இருக்கவே லாயக்கற்றவர்களாம்! 'கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும்
அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு.'

கோதை இருவிதமான மாலைகளைக் கட்டினாள். ஒன்று பூக்களால் ஆன மாலை. அந்த மாலையின் பூக்களே அவளுடைய தூதுவர்கள் ஆயின. மற்றொன்று பாமாலை! திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற பெயரில் விளங்கும் கொஞ்சும் தமிழ்ப் பாடல்கள்.

வேதங்களின் சாரத்தைத் தன்னுள் அடக்கிய பாடல்கள் திருப்பாவை என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர்.
திருப்பாவை காட்டும் பாவை நோன்பு, ஆத்ம சமர்ப்பணம் செய்தல் என்ற உயரிய வழியைக் காட்டுகிறது.
திருப்பாவையை ஓதுவது மஹா யாகம் செய்வதற்கு ஒப்பாகும்.


''திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே''

                                                          -------------------------------