15 Aug 2017

ஶ்ரீஅரவிந்தர் -15

ஶ்ரீஅரவிந்தர் -15


சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்குப்பின் அரவிந்தருக்கு  யோக வாழ்வில் மேலும் நாட்டம் ஏற்பட்டதுசூரத்தில் அவர்  'சகரே பாபா'என்ற மகாராஷ்ட்ர யோகியை சந்தித்தார். பாபாவும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஆர்வமுடையவராக இருந்தார். பல வினாக்களை எழுப்பினார்.  

அரவிந்தரும் தன் சாதனைகளைத் தொடர தனக்கு ஒரு வழிகாட்டி தேவை என்பதை  உணர்ந்தார்தன் விருப்பத்தை தன் சகோதரர் பாரினிடம் தெரிவித்தார்

பாரினுக்கு விஷ்ணு பாஸ்கர் லேலே என்ற யோகியின் அறிமுகம் இருந்தது. எனவே பரோடா வரும்படி அவருக்குத் தெரிவித்தார். விஷ்ணு பாஸ்கரும் தானொரு மேன்மையான மனிதரை சந்திக்கப் போவதை உணர்ந்து பரோடா விரைந்தார்.

பரோடாவின் "டாண்டியா பசாரில்" உள்ள கேசவ்ராவ் ஜாதவ் அவர்களின் இல்லத்து மாடி அறையில், 1908 ஜனவரி திங்கள் முதல் வாரத்தில் விஷ்ணு பாஸ்கர் லேலே, அரவிந்தரை அரைமணி நேரம் சந்தித்துப் பேசினார்.

அரசியலிலிருந்து விலகினால் தன்னால் உதவ முடியும் என்றார் லேலே! அரவிந்தரோ தற்காலிகமாக விலக ஒப்புக் கொண்டார். எல்லோரிடமிருந்தும் விலகி தனியே தன்னை சந்திக்குமாறு கூறினார் லேலே. மூன்று நாட்கள் அவர்களுடைய சந்திப்பு நிகழ்ந்தது. விஷ்ணு பாஸ்கரும் அரவிந்தரை அமரும்படி சொன்னார். "கண்களை மூடிக்கொண்டு உங்களுடைய எண்ணங்களை கவனியுங்கள். அவை வெளியிலிருந்து உங்கள் மனதில் நுழைவதைக் காண்பீர்கள்! ஆனால் அவை உங்களுக்குள் நுழைவதன் முன் அந்த எண்ணங்கள் நுழையாதவாறு தள்ளிவிடுங்கள். தடுத்து நிறுத்தி விடுங்கள் " என்றார்

 என்ன நடந்தது என்று அரவிந்தர் சொல்வதைக் கேட்போம்: "வெளியிலிருந்துதான் எண்ணங்கள் மனதுக்குள் நுழைகின்றன என்பதை அதுநாள்வரை நான் அறிந்திருக்கவில்லை. அதே நேரத்தில் அப்படி இருக்கக்கூடும் என்பது  உண்மைதானா என்று கேள்வி கேட்கவும்விரும்பவில்லை. நான் அப்படியே அமர்ந்து கொண்டு அவர் சொன்னபடியே செய்தேன்! என் மனம் ஒரு கணத்தில் அமைதியுற்றது. மலைச் சிகரத்தின் உச்சியில் அமரும் போது கிடைக்கும் அசைவற்ற ஆழ்ந்த அமைதி! அப்போது எண்ணங்கள் ஒவ்வொன்றாக வெளியிலிருந்து என் மனதில் நுழைவதைக் கண்டேன். அவை உள் நுழையும் முன்னர் அவற்றைத் தூக்கி எறிந்தேன். மூன்று நாட்களில் நான் எண்ணங்கள் என்னுள் நுழையாமல் பாது காப்பதில் வெற்றி அடைந்தேன். என் மனம் என்றும்  நீங்காத ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது. அது இன்னும் இருக்கிறது.

அதன்பின் பல தீவிரமான தாக்கங்கள் உடைய பல அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. பரந்த  பெருவெளியில் உலகமே ஒரு திரையரங்காய்க் காட்சி அளித்தது.
எழுத்துக்களால் வர்ணிக்கமுடியாத அமைதி, மிகப்பெரிய மெளனம்,
அனைத்திலிருந்தும் விடுபட்ட சுதந்திரம் என்னை அரவணைத்தது."

எண்ணங்களின் மூலம் இறந்த காலமும், எதிர் காலமும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன.எனவே எண்ணங்கள் எழாமல் தடுக்க முடிந்தவர்களால்தான் ஆன்மிக வாழ்வில் வெற்றி அடைய முடியும்

இந்த நிலையில் மும்பையின் நேஷனல் யூனியன் அரவிந்தரைப் கூட்டமொன்றில் பேச அழைத்தது.எண்ணங்களற்ற வெற்றிடமாக இருந்த மனதை வைத்துக் கொண்டு எவ்வாறு உரையாற்றமுடியும் என வியந்தார் அரவிந்தர். மக்களிடையே மிகவும் பிரபலமான, மதிப்புமிக்க பேச்சாளரான அவர் பேச முடியாது என மறுக்கமுடியுமாஆகவே விஷ்ணு பாஸ்கரிடம் என்ன செய்வது எனக் கேட்டார்.
அவரோ பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்
பிரம்மத்தின் பரிபூரண அமைதியில் ஆழ்ந்துகிடந்த தன்னால் பிரார்த்தனை செய்யவும் முடியாது என்றார் அரவிந்தர்.
சரி, அப்படியானால் பரவாயில்லை. உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். நீங்கள் உங்கள் முன்னால் இருக்கும் கூட்டத்தினரை  இறைவனாகக் கருதி வணங்குங்கள். பின் என்ன நடக்கிறது எனப் பாருங்கள் என்றார் லேலே
அதன்படியே அவர் கூட்டத்தினரை வணங்கியதும்  அவர் உள்ளே இருந்து ஏதோ ஒன்று பேசியது
 " உங்களுக்கு உள்ளே இருக்கும் வலிமை வாய்ந்த இறை சக்தியை , சத்தியத்தின்  ஒளியை உணர்ந்து, வெளிக் கொணரப் பாருங்கள்.அது நீங்களல்ல!அது உங்களுக்குள்ளே மறைந்திருக்கும் இறையுருவாகும்"எனப் பேசினார் அரவிந்தர். நீயே அது, 'தத் த்வம் அசி' என்ற பேருண்மையே அது.

பிறகு விஷ்ணு பாஸ்கர் அரவிந்தரிடம் அவருள் ஒளிரும் இறை சக்தியிடம் தன்னை பரிபூரணமாக, சமர்ப்பித்து சரணடையுமாறு கூறினார். அரவிந்தரும் 
தன் ஆன்ம குருவிடம் தன் உடல், உயிர், உணர்வுகள் அனைத்தையும் முழுமையாக சமர்ப்பித்தார். அன்று முதல் அவருடைய ஆன்மாவின் குரல் அவருக்கு வழிகாட்டியானது.
இந்த ஆத்ம சமர்ப்பணத்திற்குப் பின் பல கூட்டங்களிலும் அவர் ஆற்றிய உரைகள் மேல் மனதிலிருந்து தோன்றியதாகும். (Over mind)
மீண்டும் அரசியலில் நுழைந்தார் அரவிந்தர். ஆனால்  இறையருள்  வேறுவிதமாக இருந்தது.  
குறிப்புகள்:
(ஶ்ரீஅரவிந்தர்,யோக வாழ்வு, விஷ்ணு பாஸ்கர் லேலேயுடன் சந்திப்பு, மேல்மனம்)











31 Jul 2017

ஶ்ரீஅரவிந்தர்-14

ஶ்ரீஅரவிந்தர்- 14 (காஷ்மிர்)

"எண்ணங்களை அமைதிப்படுத்துவதே யோகம் எனப்படும்" என்று யோகத்திற்கு வரையறை செய்கிறார் பதஞ்சலி முனிவர்.

எல்லா யோகங்களின் நோக்கமும் ஒன்றே! எண்ணங்களை அழித்தல் அல்லது நிறுத்துதல்.

"எண்ணமே மனிதனின் முதல் எதிரி; எண்ணத்திலிருந்தே எல்லா பிரச்னைகளும் தோன்றுகின்றன" என்பார் ஜே. கிருஷ்ணமூர்த்தி.

மவுனமாய் இருத்தல் எண்ணங்கள் இல்லாத நிலையாஇல்லவே இல்லை! மவுனமாய் இருக்கும் போதும் எண்ணங்கள் உற்பத்தியாகிக் கொண்டேதான் இருக்கும்மவுனத்தில் உணர்வை நுழைத்து அங்கேயே தங்கும் போது  எண்ணங்கள் நீங்கிவிடும், அதுவே மாமவுனம் எனப்படுகிறது.
இந்த மாமவுனநிலையை அறிய முடியுமா? அரவிந்தருக்கு இந்த நிலையை அறிய உதவியது அவருடைய காஷ்மிர் விஜயம்.

பரோடா மகாராஜா  ஒருமுறை காஷ்மிருக்குச் செல்ல விரும்பினார். உடன் அரவிந்தரையும் வரும்படிப் பணித்தார். அப்போதுதான் திருமணம் செய்து கொண்டிருந்த அரவிந்தர் தன் மனைவியுடனும், சகோதரியுடனும் 1903 ஆம் ஆண்டு காஷ்மிர் சென்றார்

அங்குள்ள ஶ்ரீநகரில் சங்கரர் குன்று உள்ளது.
(Takht-e- Suleiman, THRONE OF Solomon)  என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இக்குன்று 'கோபதாரி' என்னும் பெயரும்,1000 அடி உயரமும் உள்ளது. ஆதிசங்கரர் இவ்விடம் வந்ததால்  சங்கரர் குன்று எனப்படுகிறது. புத்தர்கள் இக்குன்றை புனிதமாகக் கருதுகிறார்கள். 19 ஆம் நூற்றாண்டில் சீக்கியர்கள் ஆண்ட போது இங்கே சிவலிங்கம் பதிக்கப்பட்டது.

இக்குன்றின் மீது ஏறுவதே ஒருபுதிய அனுபவத்தைக் கொடுக்கும். ஒவ்வோர் இடத்திலிருந்தும் காட்சிதரும் இயற்கையின் கைவண்ணம்  தன்னை மறக்கச் செய்யும். இக்குன்றில் ஏறி அதன் விளிம்பில் நின்ற அரவிந்தருக்கு வெட்ட வெளியில் பிரம்மத்தை உணர்ந்த அனுபவம் ஏற்பட்டது. வானம் முழுதும் வெண்மையான மேகங்கள் கண்ணுக்கு எட்டும் தூரம் முழுதும் பரந்திருக்க சுத்த சைதன்யத்தின்,
 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றேயான பரம்பொருளின் அனுபவத்தை அரவிந்தர் பெற்றார்.எண்ணங்கள் அடங்கி, மனம் ஆன்மாவில் நிலையுற்ற தவசீலர்களுக்கே இவ்வனுபவம் வாய்க்கும் என்கிறது திருவருட்பா!"பரசிவம் சின்மயம் பூரணம்" எனத்தொடங்கும் திருவடிப் புகழ்ச்சியில் இவ்வனுபவத்தைப் பெறலாம்.
இவ்வனுபவத்தை"அத்வைதம் " என்ற கவிதையால் வெளிப்படுத்துகிறார் ஶ்ரீ.

இதன்பின் தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட அரவிந்தருக்கு  சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்குப் பின் தன்னத்தான் அறியும் யோக வாழ்வில் மீண்டும் நாட்டம் ஏற்பட்டது. எனவே தன் சகோதரர் பாரின் உதவியுடன் 'லேலே' என்ற யோகியை சந்திக்கிறார் அரவிந்தர்

( யோகா, மனம், காஷ்மிர், சங்கராச்சார்யர் குன்று, அத்வைத அனுபவம்,லேலே)













23 Jul 2017

ஶ்ரீஅரவிந்தர் - 13


பிராணாயாமம் / மூச்சுப் பயிற்சி

பிராணாயாமம் என்பது வடமொழிச் சொல்.
ப்ராணன் - என்றால் உயிர்க்காற்று.
அயாமம்என்றால் கட்டுப்படுத்துதல்.
மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே ப்ராணாயாமம்.
மூச்சுப் பயிற்சியால் என்ன பயன்?
ஆயுள் நீடிக்கும்
நோய் நொடி அகலும்,
மூளை புத்துணர்ச்சி பெறும்
ஞாபக சக்தி  அதிகரிக்கும்
படிப்பாற்றல், புத்திசாலித்தனம் கூடும்.

பிராணாயாமம் பற்றிய மற்ற செய்திகள் நமக்குத் தேவையில்லை எனவே ஶ்ரீஅரவிந்தர் பிராணாயாமம் பற்றி என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம்.

நர்மதை நதிக்கரையில் உள்ள ஊர் 'சாந்தோத்'. அங்கு வசித்தவர் ஸ்வாமி பிரம்மாநந்தா. அவருடைய சீடர் 'தேவ்தர்' என்பவர். அவரிடம் அரவிந்தர் பிராணாயாமம் பற்றிய செய்திகளைக் கேட்டறிந்தார். பிராணாயாமம் செய்யாமல் யோகா கற்றுக்கொள்ள முடியாது என்று ஒரு அபிப்ராயம் இருந்தது. இருக்கிறது.
ஆனால் "தன்னை அறியும் "முயற்சிக்கு அது ஓரளவுதான் உதவுகிறது என்பது அனுபவ உண்மை! அரவிந்தர் சொல்கிறார்,

" பரோடாவில் இருக்கும்போது நான் பிராணாயாமம் கற்றுக்கொண்டேன். ஒரு நாளைக்கு காலையில் மூன்று மணி , மாலயில் மூன்று மணி நேரம் பயிற்சி செய்வேன். அதனால் என் மனம் மிகுந்த அறிவாற்றலுடனும்சக்தியோடும் வேலை செய்ததுஎன் மூளையில் ஒளியும், மின் அதிர்வுகளும் ஏற்பட்டன. பிராணாயாமப் பயிற்சிக்கு முன் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து வரிகள் கவிதைகள் எழுதுவேன்
பிராணாயாமம் செய்ய ஆரம்பித்தபின் அரை மணி நேரத்தில் இருநூறு வரிகள் எழுதும் திறமை வளர்ந்தது. சர்வ சாதாரணமாக தடங்கலின்றி, கட்டுக் கோப்பாக வார்த்தைகள் அமைந்தன
என் உடல் நல்ல ஆரோக்யம் பெற்றது. நான்கு ஆண்டுப் பயிற்சிக்குப் பின் நான் அரசியல் வேலைகளால் இப்பயிற்சியைக் கை விடும்படி நேர்ந்தது."

அடுத்து நம் அறிவுக்கு எட்டாத  யோகசக்தியின்  மேன்மையை எவ்வாறு அறிந்தார் என்பதைக் காணலாம். அரவிந்தரின் சகோதரர் பாரின் (Barin). இவர் அன்னை பவானிக்குக் கோயில் எழுப்ப ஓர் இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக விந்திய மலைக் காடுகளில் சுற்றினார். அதனால் அவருக்கு மலைக் காய்ச்சல் ஏற்பட்டது. எந்த மருந்தும் சிகிச்சையும் பலனளிக்காத அந்த சமயத்தில் ஒரு நாக சன்னியாசி வந்தார். அவர் பாரினைத் தன்னால் குணப்படுத்த முடியும் என்றார். ஒரு கோப்பையில் தண்ணீர் கொண்டு வரச்சொன்ன அவர் அந்தத் தண்ணீரின் மேல்  ஏதோ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கத்தியால் குறுக்குக்கோடு வரைந்தார். அந்தத் தண்ணீரை பாரின் அருந்தும்படிச் செய்தார். மறுநாள் பாரினின் காய்ச்சல் குணமானதுஆக யோகசக்திக்கு பலனுண்டு என்பதை உணர்ந்தார் அரவிந்தர்.

அடுத்து குஜராத் மாநிலம், நர்மதை நதிக்கரையில் உள்ள சாந்தோத்  (chandod) என்னும் ஊருக்கு அரவிந்தரும் நண்பர்களும் சென்றனர் அங்கு யோகி பிரம்மானந்தரின் ஆசிரமம் உள்ளது. அங்கு வரும் பக்தர்கள் அவரை நமஸ்கரிக்கும் போது எப்போதும் அவர் கண்கள் மூடியபடி தான் இருக்கும்! ஆனால் அரவிந்தர் அவரை வணங்கச் சென்றபோது அவர் தன் அழகிய கண்களைத் திறந்து ஏதோஅற்புதத்தைக் கண்டார் போலும்  வியந்து நோக்கினார்.

நர்மதை நதிக்கரையில் ஒரு காளி கோயில் உண்டு. அங்கு நண்பர்களோடு சென்றார் அரவிந்தர். அவருக்கு கடவுள் நம்பிக்கையும், உருவ வழிபாடும் விருப்பமானதல்ல. உண்மையில் அவர் உருவ வழிபாட்டை வெறுத்தார். அன்று அவர் அந்தக் கோயிலில் நுழைந்ததும் வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றார்.ஆம், அங்குள்ள காளியின் உருவம் உயிரூட்டப்பட்ட ஒன்றென அவருக்குக் காட்சியளித்ததுதன் அனுபவத்தை ஒரு கவிதையாக வடித்தார்.

"புனிதமான 
நர்மதை நதி,
கரையில்
காளியின்  ஆலயம்!,
 உள்ளே நான் 
கண்டதென்ன?
கல்லோ,  
சிற்பியின் 
கை வண்ணமோ
கல்லல்ல
அவள்
உயிரோடு காண்,
முகமலரில் ஓர் சக்தி,
ஊடுருவும் பார்வை!
இதயத்தில்
கணநேரத்தில் 
அன்னை முகம்!"( இது மொழி பெயர்ப்பு அல்ல)

இந்த அனுபவத்தால் உருவ வழிபாட்டின் உண்மையை அவர் உணர்ந்தார்.

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும் பவதாரிணியின் சிலை உயிர்த்தெழுந்ததைக் கண்டாரல்லவா?

(அரவிந்தர், ஆன்மிகம், பிராணாயாமம்,நாகசன்னியாசி, சாந்தோட் காளி,சுவாமி பிரம்மானந்தா)