14 May 2017

ஶ்ரீஅரவிந்தர் -8


இந்திய விடுதலைப் போரில் பெரும் பங்கு வகித்தவர்கள் வங்காளிகள். இன்றைக்கும் அந்தமான் சென்று அங்குள்ள " செல்லுலார் ஜெயில்" என அழைக்கப் படும் சிறை வளாகத்தைக் காண்போர் அங்கு உயிர் நீத்த வங்காள  விடுதலைச்சிங்கங்களின் பெயர்ப் பட்டியலைக் காணலாம்.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்கம் முழுமையாக ஆங்கிலேயர் வசமானது.அது வங்கத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனக்கருதப்படுகிறதுமக்கள் ஐரோப்பிய நாகரிகம் என்ற மதுவுண்டு அடிமைத்தனத்தில் திளைத்திருந்தனர்.

ஆகவே மக்களுடைய  மனதில் பூரண சுதந்திரம் பெற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் தன் முதல் கடமையென அரவிந்தர் தீர்மானித்தார். அதே சமயம் ஆங்கிலேயர்களுடன் நேருக்கு நேர் போராடி சுதந்திரம் பெற, துப்பாக்கி ஏந்திப்  போரிடும் வீரர்களைத் தயார்செய்ய வேண்டும். அதற்கு சுமார் முப்பது ஆண்டுகள் ஆகும் என்பது அவருடைய எண்ணமாக இருந்தது.

அந்தக்காலத்தில் வங்காளிகளுக்கு யாரும் போர்ப்பயிற்சி அளிக்கக் கூடாது என ஒரு சட்டம் இருந்ததுஆனால் 1899 ஆம் ஆண்டு தன் நண்பர்களின் உதவியுடன் ஜாடின் பானர்ஜி என்ற பெயருடைய  வங்காள இளைஞனை யாரும் அறியாமல் பரோடா சமஸ்தான ராணுவத்தில் சேர்த்து போர்ப் பயிற்சி பெற வைத்தார் அரவிந்தர்.ஓராண்டுப் பயிற்சி முடிந்ததும் கல்கத்தாவிற்கு அனுப்பி வங்காள இளைஞர்களுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கத் தேவையான பணம், செய்ய வேண்டிய வேலைகள், தேவையான பொருட்கள் ,தீவிரவாதிகளை தயார் செய்யும் முறை ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் அளித்தார். ஜாடின் திறமையும்,பொறுப்பும்,உடல் வலிமையும் உள்ளவராக இருந்தார். எனவே வங்காளத்தின் மூலை முடுக்குகளில் உள்ள இளைஞர்களைப் பல குழுக்களாகச் சேர்த்து சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கத் தயார் செய்துவந்தார்.

1902 ஆம் ஆண்டு கல்லூரி விடுமுறையின் போது வங்கம் சென்ற அரவிந்தர் துப்பாக்கி சுடும் பயிற்சியைப் பெற்றார். வங்கத்தின் சுதந்திரப் போராட்ட புரட்சியாளர்களை ஒன்று சேர்த்து ஒரு கையில் வாளும்,மற்றொரு கையில் பகவத்கீதையையும் ஏந்தி, பாரதத்தாயின் சுதந்திரத்திற்குப் பாடு படுவேன், . தீவிர வாதிகளின் குழுக்களைப்பற்றி யாரிடமும்  எதையும் சொல்லாமல் ரகசியம் காப்பேன் என சத்தியப் பிரமாணம் செய்ய வைத்தார். மகாராஷ்ட் ராவில் லோகமான்யதிலகர் தலைமையில் இத்தகைய தீவிரவாதக் குழுக்கள் செயல் பட்டுவந்தன.

அரவிந்தரின் சகோதரர் ' பாரின்' சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தார். அரவிந்தரின் வழி காட்டுதலால் வங்கத்தின் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட உதவி செய்தார். பல இடங்களிலும் தீவிரவாத பயிற்சி முகாம்களை ஏற்படுத்தினார். விளையாட்டுத் துறை என்ற பெயரில் குதிரை ஏற்றம், கம்பு சுழற்றுதல்,துப்பாக்கியைக் கையாளுதல், ஆகிய பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப் பட்டன. ஆயிரக்கணக்கான வங்க இளைஞர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க முன் வந்தனர். 1903 ஆம் ஆண்டு மீண்டும் வங்கம் சென்று அனைத்தையும் பார்வையிட்டார்  அரவிந்தர்

1905 ஆம் ஆண்டு ஆங்கில அரசு வங்காளத்தை இரண்டாகப்பிரித்தது. அது இந்திய வரலாற்றில் கருப்புதினமாகக் கருதப்படுகிறது. இப்பிரிவினைக்கு  இஸ்லாமியர்களின் ஆதரவு இருந்தது. இந்துக்கள் இதனை எதிர்த்தனர்.இந்தியா முழுவதும் வங்கப்பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.பொதுக் கூட்டங்களும்போராட்டங்களும் நடத்தப்பட்டன.
ஸ்வராஜ்யம், சுதேசி இயக்கம் தோன்றியது. சிதறிக்கிடந்த இந்திய நாட்டில் முதன்முதலாக தேசிய இயக்கமாக விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.

இந்த காலகட்டத்தில் , 'நாட்டுப்பற்றும், இந்தியத்தாயின் மேல் அன்பும் உடைய இந்த நாட்டுமக்களுக்கு ஆன்மிகவலிமை கண்டிப்பாக வேண்டும்' என்பதை வலியுறுத்தும் ஶ்ரீ அரவிந்தரால் எழுதப்பட்ட " பவானிமந்திர்" என்ற தீவிரவாதப் புத்தகம் இந்தியா முழுதும் வழங்கப்பட்டது.

வலிமையின் அன்னை(சக்தி) எனவும், இந்தியத்தாய் எனவும் அழைக்கப்படும் அன்னை பவானிக்கு மிக உயரமான, தூய்மை வாய்ந்த இடத்தில் கோயிலொன்று  கட்டப்படவேண்டுமென்றும், தங்களுடைய குடும்ப,சுக சவுகரியமான வாழ்க்கையைத் தியாகம் செய்யத்தயங்காத கர்மயோகிகள் இங்கே அன்னையின் முன் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவோம் என சத்யப்பிரமாணம் செய்ய வேண்டுமென்றும் இந்த நூல் கூறிற்று.

இந்திய நாட்டின் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க விழைந்தனர்.

(ஶ்ரீஅரவிந்தர், பரோடா, வங்காள இளைஞர்கள்,போர்ப்பயிற்சி.)



6 May 2017


முகப்பானை
அலுவலகத்தில் வேலை செய்வோர் விடுமுறை எடுத்துக் கொள்ள விரும்பினால் 'பாட்டி செத்துட்டாங்க' லீவு வேணும் என்று அந்தக்காலத்தில் கேட்பார்களாம் !காரணங்கள் கண்டு பிடிப்பது ஒன்றும் கடினமானதல்ல என்கிறார் பாரதியார். ஆனால் பொய் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்ல வேண்டும் அல்லவா?' பானைக்குள் தேளிருந்து பல்லால் கடித்தது, அதுதான் லீவு எடுத்தேன் என்று சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது? பானை....பானை

குயவன் திறமையாகச் செய்யும் மண்பானையைப் பார்த்து ஆச்சரியப்படாதவர் உண்டா? மண் பானை நீர் வெயில் காலத்தில் தேவாமிர்தம்! மண்பானைச் சமையல் உடல் நலத்திற்கு நன்மை செய்யும். பானை வயிறு உடையவன் வினாயகப் பெருமான். மனிதர்களுக்குப் பானை வயிறு இருந்தால் தொப்பை

மண்பானையை விடுங்கள், வெண்கலப்பானை தெரியுமா?

கேரளமாநிலத்தில் புகழ் பெற்றது வெண்கல உருளிகள்செம்பும், ஈயமும் கலந்த கலவையே வெண்கலம். இந்த உருளிகள் மிகவும் கனமாயிருக்கும். உயரம் குறைவாக, வட்ட வடிவில் தேய்த்துக் கிளற வாகாயிருக்கும். நன்றாகத் தேய்த்து உபயோகப் படுத்தப் படுத்த வெள்ளிபோல் பளபளக்கும்கேரளக் கோயில்களில் நைவேத்யமாகச் செய்யப்படும் 'அடைப்பிரதமன், பாயசம்' எல்லாம் இதில்தான் செய்வார்கள். வெண்கலத்தால் பானை போல செய்யப்படும் பாத்திரம்தான் வெண்கலப்பானை!

 எங்க வீட்டில்  அழகான வெண்கலப்பானை உண்டு. வாய் குறுகியும்,அடி பெருத்தும் இருக்கும்.அதில்தான் அம்மா அந்தக்காலத்தில் பாலைக் குறுக்கி, திரட்டுப் பால் செய்வாள். நிதானமான தணலில் அடிபிடிக்காமல் பால் கொதிக்கும். மூக்கைத் துளைக்கும் வாசனையுடன் திரட்டுப்பாலின் சுவை இன்னும் என் நாவுக்கு
சொந்தம்

என்ன இப்போது வெண்கலப்பானை ஆராய்ச்சி என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். சீதாவின் வீட்டிற்கு அவள் சினேகிதிகள் வந்திருந்தார்கள். எங்கே உன் மாமியாரைக் காணோம் என்று ரகசியமாகக் கேட்டாள் ரமா. கையை உள்ளே காட்டி, முகத்தை உப்பிக்காட்டினாள் சீதா! " வெங்கலப்பானையா, என்ன ஆச்சு?" எனச்சிரித்தாள் ரமா! அதாவது மாமியாருக்கு மருமகள் மீது கோபம், முகத்தைத்தூக்கி உம்மென்று வைத்துக் கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்!

சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே கூட ஆண் பெண் வித்யாசம் இல்லாமல் பல வெங்கலப்பானைகள்! வெண்கலப்பானை அழகானது
அப்படியென்றால் வெங்கலப் பானை சமையல் பாத்திரம் இல்லையா?இல்லை வெங்கலம், வெம்மையான பாத்திரம் தொட்டால் சுடும்! உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளும்
உலக நாடக மேடையில் ஒரு சிலர் வெங்கலமாக இருக்கிறார்கள். உம்மணாமூஞ்சிகள்!

மனிதனுக்குத் தன் மனதிலுள்ள பொறாமை, கோபம், எரிச்சல் ஆகிய கீழ்மைக் குணங்களை என்ன செய்வது என்று தெரியாத போது தனக்குப் பிடிக்காதவர்களைப் பார்த்துக் கடுஞ்சொற்களை வீசுதல், பழித்தல் எனத் தன்வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறான். அதில் அவனுக்கோர் நிம்மதி கிடைக்கிறது. பார்த்தாயா நான் அவனை ஒரு கிழி கிழித்துவிட்டேன் என்று பெருமையடித்துக் கொள்கிறான். தன்னிடம் யாரும் நெருங்காதவாறு முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்கிறான். சிடு மூஞ்சி என்ற பட்டப்பெயர் பெறுகிறான். அங்குதான் வருகிறது வெங்கலப்பானை!

சமீபத்தில் ஜெயநகரில் உள்ள வங்கிக்குப் போயிருந்தேன். ஓராண்டுக்கு முன் அதே வங்கிக் கிளையில் பணியாற்றியவர்கள் எல்லோரும் போனவுடன் வணக்கம் சொல்வார்கள், என்ன வேண்டுமென்று கேட்டு  செயலாற்றுவார்கள். சீனியர் சிடிசன் என்ற ஒரு மரியாதையிருக்கும். நிறைய புது முகங்கள் இப்போது. அதனாலென்ன? ஆளாளுக்கு வெங்கலப்பானை முகமூடி அணிந்திருக்கிறார்கள்.

மோதிஜியின்  பணப்பரிமாற்றமில்லா வாழ்வுதான் நல்லது போல! அது போலவே சாப்பிடும் அவசியமில்லா மனிதனை கடவுள் படைத்தால், அல்லது வலை மூலமாக அரைக்கணத்தில் செய்திப் பரிமாற்றங்கள் செய்வதுபோல் பசித்தவன் வயிறு நிறைந்தால்  வங்கிக்குப் போகவேண்டாம் என்று ஞானம் வந்துவிட்டது! நடக்குமா?

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டால் முகத்தசைகள் இறுகி பார்க்க சகிக்கமுடியாமல் பயமுறுத்தும். அதுவே அமைதியான முகத்தில் தசைகள் இளகி பளபள என  ஜொலிக்கும். பார்ப்பவர்களுக்கும் அன்பை வழங்கும். முகத்தில் சிரிப்பு மலர காசா, பணமா செலவு? வெங்கலப்பானையாய் இருக்காதீர்கள், புன்னகை பூக்கவைக்கும் மலராய் இருங்கள்! 🌻அதை விடுங்கள்.....

ஞானப்பானை' கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் வாழ்ந்தவர், குருவாயூரப்பனிடம் அதீத பக்தி பூண்டவர் "பூந்தானம்" என்பவர். அவர் பாடிய பாடல்கள் சந்தான கோபாலம், ஞானப்பான, என்ற பெயர்களில் நூல்வடிவில் உள்ளன.
'ஞானப்பான' என்றால் "ஞானத்தைத் தரும் களஞ்சியம்" எனப்பொருள்படும்.
அதாவது 'பான' என்றால் களஞ்சியம். கலைக்களஞ்சியம் என்கிறோம் அல்லவா?

'ஞானப் பான', ஒரு வேளை வெங்கலப் பானையாகாமல் இருக்க மனிதர்களுக்கு உதவுமா?





F7B50B6F-7253-468C-A598-F1CEB097A5BD-1-2048x1536-oriented.png

2 May 2017

ஶ்ரீஅரவிந்தர்-7



இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய வரலாற்றைப் பற்றி சற்றே அறிந்து கொள்வது இங்கே அவசியமாகிறது.
(1885 ஆம் ஆண்டு உமேஸ்சந்திர பானர்ஜி,சுரேந்திரநாத்பானர்ஜி, ஆலன் அக்டேவியன் ஹ்யூம்,வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது.
1888 டிசம்பர் 27 ல் இக்கட்சியின் தலைவராக தாதாபாய் நவ்ரோஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது முயற்சியால் காங்கிரஸ் கட்சி, Indian National  Congress  என்ற பெயர் மாற்றம் பெற்றது.
இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட காங்கிரசில் இரண்டு உட்பிரிவுகள் இருந்தன.
பாலகங்காதரதிலகர் தலைமையில் தீவிர வாதிகளும்,கோபாலகிருஷ்ண கோகலேதலைமையில் மித வாதிகளும் செயல் பட்டனர்.
இவர்கள் ஆங்கில அரசில் பங்கேற்பதில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருந்தனரே அன்றி விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானவர்களாக இருக்கவில்லை.)

எனவே இந்திய மக்களின் மனதில் சுதந்திர தாகத்தை மூட்டும் பெரும்பணியில் அரவிந்தர் ஈடுபட்டார். " New Lamps for old" என்ற தலைப்பில் காங்கிரசின் மிதவாதிகளை கடுமையாக விமர்சித்து விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதினார். அவர்கள் கொண்டுவரும் அரசியல் தீர்மானங்களால் எந்தப் பயனுமில்லை என்று சாடினார்.

தீப்பொறி பறக்கும் இவரது எழுத்துக்கள் ஆங்கிலேயர்களை மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் கலக்கியது.

அரவிந்தரின்   நுட்பமான செய்திகளைச் சொல்லும் சக்தி, ஆங்கில மொழியின் ஆளுமை, நேர்மை, தைரியம்,கொழுந்துவிட்டு எரியும் தேசப்பற்று, சுயநலமின்மை ஆகியவை காங்கிரசாரின் மனதில் எழுதுவது யார் என்ற கேள்விக்குறியை எழுப்பியது! கோபப்படச் செய்தது.

 அப்படி என்னதான் எழுதினார் என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம்....
  1. "காங்கிரசின் லட்சியத்தில், சுய ஆட்சி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் நேர்மை இல்லை, முழுமனதான ஈடுபாடு இல்லை!சரியான வழிமுறை இல்லை! ......அதாவது வழிநடத்தும் தலைவர்கள் சரியில்லை.....நாம் இப்போது குருடர்களால்.... ஒற்றைக்கண்ணர்களால்  ( காங்கிரஸ் கட்சியால்) வழிநடத்தப்படுகிறோம்..."
....we are at present the blind led, if not by the blind, at any rate by the one - eyed....

  2. நம் லட்சியத்தில் தெளிவும்,அதை நடைமுறைப் படுத்துவதில் சரியானதிட்டமிடுவதும்தான் அரசியலில் வெற்றி பெறுவதன் ரகசியம். ஆனால் தோற்றுவிட்டோம் என்பதுதான் உண்மை!

  3. நேர்மையின் மற்றொரு பெயர் வலிமை, சக்தி! மன உறுதி! நம்முடைய முதல் எதிரி வெளியில் இல்லை! நம்முடைய பயந்தாங்குளித்தனம்தான் நமது முதல் எதிரி!
நம்முடைய ஆற்றலின்மை, சுயநலம், போலித்தனம் அல்லது பாசாங்கு, கண்மூடித்தனமான நம்பிக்கைகள், உணர்ச்சிவயப்படுதல் இவற்றை வீசி எறிந்துவிட்டு வீறு கொண்டு  எழவேண்டும் .

சற்று  மென்மையாக எழுதும்படி வேண்டுகோள் வர மனமில்லாமல் ஒப்புக்கொண்ட அரவிந்தர் சில நாட்களில் எழுதுவதை நிறுத்தினார்.

இந்த காலகட்டத்தில் சம்ஸ்கிருத, குஜராத்தி, பெங்காலி, மராத்தி மொழிகளையும் பயின்றார். வேதங்களும், உபநிஷதங்களும், பகவத் கீதையும் அவர் மனதைக் கவர்ந்தன.
ஆகச்சிறந்த படிப்பு என்று கருதப்பட்ட ஐ சி எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர், ஆங்கிலக்கல்வி பயின்று ஐரோப்பிய நாகரிகம் அறிந்தவர் பரோடாவில் எவ்வாறு தோற்றமளித்தார்?
அவருடன் இரு ஆண்டுகள்  தங்கி வங்கமொழியை கற்றுக் கொடுக்க வந்த தீரேந்திர குமார் ராய் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

 " நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது கோட்டும் சூட்டும்,கருப்புக் கண்ணாடியும் அணிந்த, முன்கோபமும், சகிப்புத் தன்மையுமில்லாத ஆங்கில கனவான் ஒருவரைதான் கற்பனை .செய்திருந்தேன்.

ஆனால் என் கண்முன் காட்சி தந்தவரோ, கூச்சசுபாவமுடைய, மாநிற இளைஞன்! கனவு காணும் அருள்நிறைந்த விழிகள், நடுவகிடு எடுக்கப்பட்ட,தோள்களில்சரியும் மென்மையும் பளபளப்பும் நிறைந்த கூந்தல். கரடுமுரடான வேட்டி,அதன்மேல் கோட்டு, பழமைவாய்ந்த காலணிகள். எளிமையான அவரது தோற்றம் என்னை வாயடைத்துப் போகச் செய்தது.கிரேக்கம்,பிரெஞ்சு,லத்தீன் மொழிகளிலே தேர்ச்சி பெற்ற அறிஞரா இவர் என ஆச்சர்யப்பட்டேன்.

அது மட்டுமா, அவரது தூய்மையான இதயத்தைப் பிரதிபலிக்கும் குழந்தைத்தனமான புன்னகை,மன உறுதியைக் காட்டும் உதடுகள்,சுய நலமற்ற, உலகப்பற்று சற்றும் இல்லாத ஆளுமை, உலகத் துயரங்களை நீக்குவதற்காக தன்னையே தியாகம் செய்யத்தயங்காத மனத் திண்மை! அவர் சாதாரண மனிதனாகவே எனக்கு தோன்றவில்லை.சுயக் கட்டுப் பாடுடைய, சந்யாசியாகவே அவர் வாழ்ந்தார்.அவர் கோபப் பட்டு நான் பார்த்ததே இல்லை''என்கிறார் ராய்.

பரோடாவின் பிரபல வக்கீல் ஶ்ரீயுத் பட்கர். அவர் சொல்கிறார், அரவிந்தருக்கு பணத்தின் மீது பற்று கிடையாது. மூன்றுமாதத்திற்கு ஒரு முறை ஒரு பையில் கட்டப்பட்ட அவரது ஊதியத்தைக் கொண்டுவருவார். வந்தவுடன் தனது மேசையின் மேல் உள்ள ஒரு தட்டில் அதனைக் கொட்டுவார். அது அங்கேயே இருக்கும். அலமாரியில் வைத்துப் பூட்டும் பழக்கமெல்லாம் அவருக்கு கிடையாது. எவ்வளவு செலவழித்தோம் என்பதற்கான கணக்கும் வைத்துக் கொள்ளமாட்டார்.

ஒரு நாள் நான் அவரை ஏன் இப்படி பணத்தைப் போட்டு வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டேன்.சிரித்தவர் சொன்னார்,"நல்லவர்களுடன் வாழ்கிறோம் என்பதற்கு இது ஒரு சான்றாகும். கடவுளே என் வரவு செலவு கணக்குகளைப் பார்த்துக் கொள்கிறார். எனக்குத் தேவையானதை நான் எடுத்துக் கொள்கிறேன். மிச்சமெல்லாம் அவனுடையதுதான். "

ஶ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர், ஶ்ரீரமணர், வள்ளலார் முதலிய வணங்கற்குரிய தவசீலர்களும் பணத்தின் மீது பற்றில்லாதவராக வாழ்ந்தனர்.

(லண்டனில் இருக்கும் போதும் அரவிந்தருக்குக் கிடைத்த குறைவான நிதிஉதவியை சகோதரர்களுடன் பங்கிட்டுக் கொண்டே அவர் வாழ்ந்தார். அதேபோல் இந்தியா வந்தபின் தன் தாயின் பராமரிப்புக்கு உரிய தொகையை அரவிந்தரே கொடுத்து வந்தார்)


( பரோடாவில் அரவிந்தர், பணிகள், பத்திரிகைக் கட்டுரைகள், குணநலன்கள், காங்கிரஸ் தோன்றிய வரலாறு,)       இன்னும் வரும்.


25 Apr 2017

ஶ்ரீஅரவிந்தர்-6

 ஶ்ரீஅரவிந்தர்-6

பரோடாவில்..
(ஶ்ரீஅரவிந்தர் பரோடாவில் 1893, பிப்ரவரி 8 முதல், 1906, ஜூன் 18 ஆம் தேதிவரை 13 ஆண்டுகள் சாயாஜிராவ் மகாராஜாவின் சமஸ்தானத்தில் பணியாற்றினார். பணியில் சேரும் போது அவருடைய வயது 21.  தனது 34 ஆம் வயது வரை பணியாற்றிய பின் அவர் வங்கத்திற்குச்சென்றார்.)

 அரவிந்தருக்கு அவரது தந்தையார் மறைந்த துயரச் செய்தி துன்பத்தை அளித்தது. ஆனாலும் கடமை உணர்வு மிக்க அரவிந்தா ஊருக்குச் செல்லாமல் பரோடா மகாராஜாவின் சமஸ்தானத்தில் அவரது உதவியாளராகச் சென்று சேர்ந்தார். அங்கு பலவிதமான அரசாங்கப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டார்.  சில நாட்களுக்குப் பின் பரோடா சாயாஜிராவ் கல்லூரியில் ஆங்கிலமும், பிரெஞ்சும் கற்றுக் கொடுக்க நியமிக்கப்பட்டார்.பிறகு துணை முதல்வரானார்.

ஆனால் மகாராஜா அழைக்கும் போதெல்லாம் சென்று முக்கியமான கடிதங்களையும், அவர் ஆற்ற வேண்டிய சொற்பொழிவுகளையும்,அரசாங்கத்தின் முக்கியமான தஸ்தாவேஜுகளையும் தயார் செய்து கொடுப்பார்.

ஒரு முறை மகாராஜா சொன்னார்," அரவிந்த்பாபு, மிகச் சிறந்த இந்தக் கட்டுரையைக் கொஞ்சம் எளிய நடையில் எழுதிக் கொடுங்கள். இதை நான் வாசித்தால் யாரும் இதை நான் தயாரித்ததாக எண்ணமாட்டார்கள்!

அரவிந்தர் - " எப்படி இருந்தாலும் நீங்கள் தயாரித்த சொற்பொழிவு என்பதை யாரும் நம்பப் போவதில்லை! சொல்ல வந்த கருத்து இருக்கிறதா என்பதை மட்டும் பாருங்கள், போதும். மொழியின் ஆளுமையைப் பற்றி கவலைப் படாதீர்கள். "

சாயாஜிராவின் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்ற அவர் தயங்கியதே இல்லை. தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மிகுந்த கவனத்துடன், அக்கறையாக செய்து கொடுப்பதில் மகிழ்வார். அவர் மிகக் குறைவாகவே பேசுவார். கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிப்பார்.மற்ற நேரங்களில் புத்தகங்கள் வாசிப்பதிலும், கவிதை, கட்டுரைகள் எழுதுவதிலும் நேரத்தைச் செலவழித்து வந்தார்.

பரோடா வந்த ஆறு மாதங்களில் இந்திய அரசியல் நிலைமை,  மக்களின் மனநிலை,  அரசியல்தலைவர்கள், அவர்களுடைய கொள்கைகள், ஆகிய அனைத்தையும் அறிந்து கொண்டார்.

 கே.ஜி. தேஷ்பாண்டே என்பவர் கேம்பிரிட்ஜில் அரவிந்தரின் நண்பர்.
அவர்  " இந்துப்பிரகாஷ்" என்ற பத்திரிகையின் எடிட்டராக இருந்தார்.அவர் அரவிந்தரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், அவர்களுடைய லட்சியம், அரசியல் முன்னேற்றம்,  ஆகியவற்றைப் பற்றி எழுதும்படி கேட்டுக் கொண்டார்.🙏

19 Apr 2017

வண்ணங்கள்

சென்ற வாரம் ஒரு நாள் கண்ணாடி பாட்டில்கள் விற்கும் கடையொன்றுக்குச் சென்றிருந்தேன். ஜெயநகரில்தான்! பீங்கான் மற்றும் சமையலறைச் சாமான்கள் சிலவும் அங்கே உண்டு.

ஊறுகாய் பாட்டில்கள் எல்லாம் பழைய காம்ப்ளான், ஹார்லிக்ஸ் பாட்டில்கள்! பார்த்து அலுத்துப் போனதால் புதிதாய் வாங்கலாம் என்றுதான்.

எல்லா வடிவங்களிலும் அளவுகளிலும் இங்கே பாட்டில்கள் உள்ளன. குட்டியூண்டு பாட்டில்கள் ஊருக்குப்போகும்போது மாத்திரைகள் போட்டுக்கொள்ள வசதியாய்! சும்மா கொலுவில்கூட வைத்து அழகு பார்க்கலாம்!

பாட்டில்கள் வாங்கி முடித்த நேரத்தில் கண்ணில் பட்டது பூச்சாடிபோன்ற ஒரு குடுவை.  உடனே செல்லமாக என் அறையில் வளரும் கொடியொன்றை வைக்க ஆசை கொண்டேன். லேசான குடுவைதான்.

பத்திரமாகக் கொண்டு வந்து அதைச் சற்றே சிறு கற்களால் நிரப்ப ஆரம்பித்தேன்! டொக்கென்று விரிசல்.ம்...என்ன செய்வது.?

இரண்டு நாட்களாக அலமாரியில் தூஙகியது ஓய்வாக. இன்று பொழுது போகாமல் சுற்றிய நேரத்தில் கண்ணில்பட்டது கலர் ட்யூபுகள். பாட்டிலின் கலர் மாறிப்போச்சு.

இப்படியாக பாட்டிலில் வண்ணம் பூசியதற்காக ...ஆனந்தம்.

12 Apr 2017

ஶ்ரீஅரவிந்தர் -5




இந்தியா வந்த ஶ்ரீ அரவிந்தரின் மனநிலை என்ன?  அவருடைய லட்சியம் என்ன?
தன் தாய் நாட்டையும், பெற்றோரையும் பல ஆண்டுகள் பிரிந்து, பல துன்பங்களுக்கு ஆளானவராக இருந்தாலும் இந்தியா திரும்பியதும் அளப்பரிய அமைதியால் ஆட்கொள்ளப்பட்ட அரவிந்தர் கடவுள் நம்பிக்கை அற்றவராகவே இருந்தார்! ஆனால் ஆன்மிக வாழ்வும், அரசியலும் அவருடனே பயணித்தன.

கடவுளின் அருள் பெற்றவர்களை அவனே வந்து தன்னைக் காண்பித்து, ஆட்கொள்வான் என்பதற்கு அரவிந்தரின் வாழ்க்கை சிறந்த எடுத்துக் காட்டாகும்.

பிற்காலத்தில் அரவிந்தர் தன் மனைவி மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் தன்னுடைய லட்சியத்தைப் பற்றி மனம் திறந்துகூறுகிறார்.  " எல்லோரும் தம் தாய்த் திருநாட்டை மலைகளும்,நதிகளும், காடுகளும், வயல் வெளிகளும் நிறைந்த வெறும் பூமியாகக் கருதுகிறார்கள். ஆனால் நானோ உயிருள்ள என் தாயாகக் கருதுகிறேன். ஒரு பூதம் தன் தாயின் மேல் அமர்ந்து அவளின் இரத்தத்தை உறிஞ்சுவதை வேடிக்கை பார்க்க ஒரு மகனால் முடியுமா? அந்த நேரத்தில் அவன் தன் மனைவியுடன் கொஞ்சி விளையாடி, மக்களோடு அமர்ந்து உண்டு மகிழ்வானா? தன் தாயைக் காப்பாற்ற ஒடிச் செல்வானா?

வீழ்ந்து கிடக்கும் இந்த பாரதசமுதாயத்தை வீறு கொண்டு எழச் செய்யும் சக்தி என்னிடம் இருக்கிறது. நான் ஆயுதங்களைக் கொண்டோ, துப்பாக்கி ஏந்தியோ பிரிட்டிஷாருடன் போரிடப்போவதில்லை! என் அறிவின் தெளிவினால், எழுத்தின் வலிமையால்தான் அதை சாதிக்கப் போகிறேன்!

கடவுள் என்னை அதற்காகவே படைத்தார். பதினான்காம் வயதில் இந்த சுதந்திர தாகத்தின் விதை என்னுள் விதைக்கப்பட்டது! எனது பதினெட்டாம் வயதில் அது வளர்ந்து வேர்விட்டு உறுதியாகிவிட்டது. இந்தியாவின் சுதந்திரமே என் வாழ்நாளின் லட்சியமாகும்."
இந்த லட்சியத்தின் காரணமாகவே அவர் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்றர்.

அதே சமயத்தில் அவர் ஶ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் கடவுளைக் காண விரும்பினார்.
"என்னுடைய இன்னொரு விருப்பம் எப்படியாவது கடவுள் என்று ஒருவர் இருப்பாராகில் அவரை நான் நேரில் காணவேண்டும். உணரவேண்டும்.அதற்கும் ஏதாவது ஒரு வழி நிச்சயமாக இருக்கும். எத்தனை கடினமான பாதையாக அது இருப்பினும் நான் அந்தப் பாதையில் நடக்கத் தீர்மானித்து விட்டேன்.இன்றைய மதங்கள் இறைவன் நாமத்தை சொல்வதைக்கூட தற்பெருமைக்காக, விளம்பரத்திற்காக செய்கின்றன. எனக்கு அது வேண்டாம் .

முக்தியடையவோ, தனிப்பட்ட என் சுக செளக்கியங்களுக்காகவோ நான் கடவுளை அறிய விரும்பவில்லை. பாரத நாடு அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும்,வீழ்ந்து கிடக்குமிந்த நாட்டு மக்கள் வீறு கொண்டு எழவேண்டும் என்பதே என் விருப்பம்

 அடுத்ததாக ," என்னுடைய இன்றைய திறமை,பெருமை, கல்வி, அறிவு, செல்வம் அனைத்தும் இறைவன் எனக்கு அளித்தவை என்றே நான் கருதுகிறேன்.எனக்கு மிகத்தேவையானவற்றுக்கு மட்டுமே நான் என் பணத்தை செலவழிப்பேன். மீதியுள்ளது இறைவனுடையதாகும்." இதுவே அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தின் சாராம்சமாகும்.(மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதங்கள்)

(ஶ்ரீ அரவிந்தர், தேசப்பற்று, மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதங்கள்)
Ref:SriAurobindo
A biography and a history,by K.R. Srinivasa Iyengar

3 Apr 2017

ஶ்ரீஅரவிந்தர்-4



அரவிந்தருக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் என்ன தொடர்பு?

அரவிந்தர் பதினான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் வசித்தபோதிலும்  அவருக்கு அந்த நாட்டின் மீது பற்றுதல் ஏதும் இருக்கவில்லை. மாறாக அவருக்கு இந்திய நாட்டின் மீது தனியானதொரு பாசம் இருந்தது. அவர் இந்தியாவை வெறும் பூமியாக நினைக்கவில்லை. உயிருள்ள தாயாகவே கருதினார். சிறுவயதிலிருந்தே தாயன்பைப் பெறாத அரவிந்தர் தான்பிறந்த நாட்டை தன் தாயாகக் கருதியதில் வியப்பில்லை.

 அவருடைய தந்தையார் கிருஷ்ணாதன்தாஸ்  தன் பிள்ளைகளுக்குப் பண உதவி செய்யவில்லை என்றாலும் இந்திய நாட்டில் ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றிய செய்திகளை, செய்தித்தாள்களின் வெட்டப்பட்ட பகுதிகளை அனுப்பி தெரிவித்து வந்தார்.எனவே தன்னுடைய கடமை ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டியதுதான் என்று எண்ணியதால்தான்  அரசாங்கப் பதவி வகிக்க அவர் விரும்பவில்லை.

அரவிந்தர் லண்டனில் படித்துவந்த காலத்தில் 'மஜ்லிஸ்' என்ற மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவராக விளங்கி பல உணர்ச்சிகரமான சொற்பொழிவுகளை ஆற்றினார்.
ஆங்கில ஆட்சியை எதிர்த்த இந்திய மாணவர்களின்  ரகசியக்குழு ஒன்று இருந்தது.
 அதற்கு " தாமரையும் குத்துவாளும்" என்று பெயரிட்டிருந்தனர்.  அதன் ஒவ்வொரு அங்கத்தினரும் இந்தியாவின்  விடுதலைக்கு தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிப்பதாக சத்யப்பிரமாணம் செய்ய வேண்டும்.  அரவிந்தர் லண்டனை விட்டுக் கிளம்புவதற்குமுன் ஒரே ஒரு கூட்டம் மட்டுமே கூட்டப்பட்டது.


அரவிந்தர் ஐசிஎஸ்  தேர்வில் வெற்றி பெற்றாலும், பட்டம் பெறத் தேவையான குதிரை ஏற்றத் தேர்வுக்குச் செல்லாததால் ஐசிஎஸ் பட்டம் அவருக்குக் கிடைக்கவில்லை. பின் என்ன செய்வது என்று எண்ணிய தருணத்தில் அரவிந்தரின் தந்தையின் சினேகிதர் ஜேம்ஸ் காட்டனின் உதவி மீண்டும் கிடைத்தது.
அந்த நேரத்தில் லண்டன் வந்திருந்தார் பரோடா மஹாராஜா, சர் சாயாஜிராவ் கெய்க்வாட்.  அவர் பல இடங்களுக்கும் பயணம் செய்தவராகவும், சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் திறமை வாய்ந்தவராகவும் விளங்கினார். அரவிந்தர் மகாராஜாவைச் சந்தித்தார். 200 ரூபாய் சம்பளத்தில்  அவரது உதவியாளர் பணியைப்பெற்றார்.

பதினான்கு ஆண்டுகள் இங்கிலாந்தின் தவவாழ்வை முடித்துக்கொண்டு 1893 ஆம் ஆண்டு, பிப்ரவரி 6ஆம் தேதி, தனது 21 ஆம் வயதில் பம்பாயின் அப்பலோ பந்தர் துறைமுகத்தில் S.S. Carthage என்ற பெயருடைய கப்பலில் பயணித்த அரவிந்தர் இறங்கினார்.

இந்தியத்தாயின் வரவேற்பு எப்படி இருந்தது? இதுநாள்வரை இல்லாத ஒரு
மிகப்பரந்த அமைதியைத் தன் மகனுக்கு அளித்து அரவிந்தரை அணைத்துக் கொண்டாள் அன்னை பவானி. அதுவே அவருடைய லட்சியத்திற்கு அவள் அளித்த அனுமதியாகும்!
"A vast calm descended upon him with his first step on Apollo Bunder."

அதே நேரத்தில் அவர் தன் தந்தையின் மரணச் செய்தியை அறிந்து துயரம் கொண்டார்.
ஆம், தனது ஐ சி எஸ் பாஸ் செய்த அருமை மகன் வரும் நாளுக்காகக் காத்திருந்த கிருஷ்ணதான்தாஸின் தலையில் பேரிடியாக விழுந்தது அவர் பயணம் செய்த கப்பல், போர்ச்சுகல் நாட்டினருகே முழுகிப் போயிற்று என்ற தவறான செய்தி.

ஏற்கெனவே அவரது மனைவியார் குழந்தைகளைப் பிரிந்த ஏக்கத்தினால் மனப்பிறழ்வு நோய்க்கு ஆளாகியிருந்தார்.எந்த வைத்தியத்தாலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. அதிர்ச்சிக்கு ஆளான கிருஷ்ணதான் தாஸ் மனமுடைந்து அரவிந்தரின் பெயரைக் கூறியவாறு உயிர் நீத்தார்.

விதியின் விளையாட்டை யாரே அறியமுடியும்?ஏழு வயதில் பெற்றோர்களைப் பிரிந்த சகோதரர்கள் திரும்பி வந்த போது தந்தை உயிருடன் இல்லை! தாயோ மக்களை அடையாளம் காணும் நிலையில் இல்லை!!!

( ஶ்ரீ அரவிந்தர், இந்தியா திரும்புதல், தந்தை  உயிரிழத்தல், ஆழ்ந்த அமைதியின் வரவேற்பு)