23 Apr 2012

வானம் பார்க்கும்.........

மழைத் துளி மழைத்துளி, என்று வானம் பார்த்து நிற்கிறது பூமி. எங்கேயோ சிறு மேகங்கண்டால் மனமெல்லாம் பூரிக்க காதலன் வரும் வழிபார்த்து நிற்கும் பேதைப் பெண் போல சிலிர்த்துப் பார்க்கும்! தன் மீது தாகத்தால் தவிக்கும் வேர்கள் கண்டு வருந்தும். பறந்து, திரிந்து நீர் வேண்டிப் பரிதவிக்கும் பறவைகளைப் பார்த்துப் பார்த்து நெஞ்சம் நெகிழும். சூரியக் கதிர்களால் வாடிய மரம், செடி, கொடிகளின் இலைகள் தலைசாய்த்து நிற்கக் கலங்கும்.

மேகங்களற்ற தூய நீலவானம் கண்டு ஆனந்தித்த நாட்கள் பூமிக்கு உண்டு!  கரிய மேகம் கண்டு  விஷமச்சிரிப்போடு இளங்காதலனைப் போல கரியவளே, உடல் கருத்தவளே என்று கேலி செய்த நாட்கள் உண்டு. கரு மேகக் குவியல்கள் நடுவே வெளுத்த நாரைக் கூட்டங்கள் பறப்பதைப் பார்த்து மெய் மறந்ததுண்டு. மழை பொழியும் முன்னே மின்னல்களின் களிநடனம் கண்டு ஆடல் வல்லானை அழைத்ததுண்டு. இடி இடிக்க பயந்ததுபோல் நடித்ததுண்டு!

கருமேகமே வருவாயாக! மழை நீரைப் பொழிந்து மண் தாகம் தணிப்பாயாக. மேகங்கள் முழங்கட்டும், மின்னல் நடனம் ஆடட்டும், வானவில்லின் வர்ண ஜாலம்  வந்து வந்து சூரியக் கதிரோடு ஒளிந்து விளையாடட்டும். மண்ணின் மணம் மனமெங்கும் நிறையட்டும்.

வா மழையே வா! வந்து பூமியை அணைப்பாயாக!
மழைத் துளி மழைத் துளி மண்ணின் மேலே!
மண்ணின் மணமோ விண்ணின்மேலே!
எண்ணத்துளிகள், கண்ணீர்த் தடங்கள்
எழுத்தின் மேலே! மேலே!மேலே!
மழை மழை எனப் புலம்பி அழைக்கிறது பூமி! மனிதர்களும் தான்.


15 Apr 2012

Honorable Begging

 சமீபத்தில் எங்கள் குடும்ப வட்டத்தில் ஒரு நிச்சயதார்த்தம்! எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று சொன்னவர்கள் ஒரே வாரத்தில் எல்லாம் ரத்தாகிவிட்டது என்று செய்தி சொல்ல ஆச்சரியமானது!  என்ன காரணமோ?
பையனின் அம்மாவுக்கு ஆசை, பெரிய பெரிய ஆசை!
இரண்டு சாண் அகலத்தில் ஜரிகை போட்ட புடவைகள் மைசூர், காஞ்சி, ஆரணி,  பட்டுகளை
மருமகள் கட்டினால்தான் கழுத்தில் தாலி ஏறுமாம். அந்தப் பெண் பார்த்தது! பட்டுப் புடவைகளைக் கல்யாணம் செய்து கொள்ளாமல் என்னைக் கல்யாணம் பண்ண வந்தானோ! நோ கல்யாணம் என்றது.

இன்னொன்று! இப்போதுதான் இருக்கிறதே 'வலை' விரித்துப் பார்த்து, தேடிவந்து பொண்ணு குடுங்க என்றார்கள். மிச்ச கதையெல்லாம் வேண்டாம். நிச்சயதார்த்தமும் நடந்தது.

மேல்கொண்டு பேச வந்தாங்க மாமியார் மேடம்.
1. பெரீய கல்யாண மண்டபம் நாங்கள் ஒத்துக் கொள்வது தான் புக் செய்யவேண்டும்.
2. எங்களுக்குத் தெரிந்த சமையல்காரர்தான்.
3. உறவுகளுக்கு  எல்லாம் கொடுக்க லட்டு, முறுக்கு, மைசூர்பாக், மிக்சர் பாக்கெட்டுகள் வகைக்கு 100, சீர் தவிர வேண்டும்.
4. பையனுக்கு வைரமோதிரம், பிரேஸ்லெட், மைனர் செயின், பெண்ணுக்கு பெரிய வைரத்தோடு.

எங்களுக்கு இதெல்லாம் செய்யமுடியாது. எங்கள் சக்திக்கு உட்பட்ட அளவு செய்வோம் என்றாள் பெண்ணின் அம்மா.

பையன் பெண்ணிடம் சொல்கின்றான், இதோபார் நீதான் இன்னும் படிக்கின்றாயே 'Education loan,' வாங்கு. செலவு செய். இல்லாவிட்டால் என் அம்மாவிடம் கடன் வாங்கிக் கொள். பின்னால் திருப்பிக் கொடு, என்று. எப்படி இருக்கிறது பாருங்கள்!

பத்து லட்சம் செலவு செய்து,'' கடன் வாங்கிக் கல்யாணம்''  பண்ணிக்கொள்ள அவன் என்ன மஹாராஜாவா? கல்யாணத்தை நிறுத்திவிட்டேன் என்று சொன்னாள்  அந்தப் பெண்.
சபாஷ், சரியான முடிவு என்றேன்.

எங்களுடைய கார் சாரதியின் உறவுப் பெண். சொந்த முயற்சியில் படித்திருக்கிறாள். நல்ல வேலை. மாதம் இருபதாயிரம் சம்பளம். பையனுடைய அம்மா ஒரு லட்சம் விலையுள்ள மோட்டார் பைக் கேட்கிறாளாம். HONORABLE  BEGGING!

கழுத்தில தாலியக்கட்டறவன் என்கிற ஒரே காரணத்துக்காக கேட்கறத எல்லாம் வாங்கிக் குடுக்க காசு காய்க்கிற மரமா இருக்கு?  நிம்மதியா இருக்கறதவிட்டு, கல்யாணம் ஒரு கேடா? ஒன்னும் வேண்டாம் அப்பிடின்னு சொல்லிடிச்சு பொண்ணு! அச்சா! நல்லமுடிவு!

பெண்கள் தைரியசாலிகளாகி வருவது பெருமைக்குரியது!

வாங்கி வைத்த பட்டுப்புடவைகள் எல்லாம் 'காட்ரெஜ்,' பீரோவில்.
தங்க நகைகள் எல்லாம் வங்கி லாக்கரில்!
வெள்ளிப் பாத்திரங்கள் இரும்புப் பெட்டியில்! சும்மா அது வேணும் இது வேணும் என்று ஆட்டிவைக்கிறது சரியா?

மொத்தத்தில் "பெண்ணுக்கு முதல் எதிரி பெண்தான்" என்பது என் அபிப்ராயம்.
இந்த  சீர் செனத்தி கொடுக்க இயலாமையின் காரணமாகவே பெண் குழந்தைகள் வேண்டாம் என்கிறார்கள் என்கிறது ஒரு பத்திரிக்கை செய்தி.

இருக்கின்ற பணக்காரர்களைப் பார்த்து, இல்லாதவர்களும் கற்றுக்கொள்கிறார்கள்.  எளியவர்களுக்கு  உள்ள ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி! அதில்தான் எத்தனை நகை விளம்பரங்கள்! ஆசைக் கனலை மூட்டும் பட்டுப் புடவை, அழகு சாதன ஏமாற்றல்கள்! அடுத்தபடியாக எப்படி ஆட்டிப் படைப்பது என்று கற்றுத் தர தொலைக்காட்சி மாமியார்கள், வில்லிகள்!

இம்சிப்பவளும்,  இம்சைப்படுபவளும் பெண்தான் என்று நினைக்க ஆச்சரியம்தான்!

என்றைக்கு இந்த ஆடம்பரங்களையும், அனாவசிய செலவுகளையும் விட்டுவிட்டு, எளிமையான திருமணம் செய்யப்போகிறோம்?

ஒன்றாம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் எங்கள் குடும்பம் என்று ஒரு பாடம் வரும். அது போல 'குடும்பக் கல்வி,' என்று இனிமேல் மனித உறவுகளைப் பற்றி பாடம் நடத்த வேண்டும்.  பெண்களுக்கு பள்ளிகளில் 'கராத்தே' கலையைக் கற்றுக் கொடுக்க வேண்டும். பயப்படாதீங்க! எல்லாம் ஒரு  தற்காப்புக்குத் தான்.

நேற்று வந்த அவள் விகடன் செய்தி ஒன்று! மருத்துவம் படிக்கும் போது சகமாணவரைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டாள் ஒரு பெண். இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு சந்தேகம் காரணமாக மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தினானாம் அந்த முட்டாள் டாக்டர்.

குடும்பங்கள் எல்லாம் தீவுகளாகிவிட்ட இந்த காலகட்டத்தில்  பரஸ்பரம் நம்பிக்கையும், மதிப்பும், விட்டுக்கொடுத்தலும், மனிதாபிமானமும் குறைந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும். அதற்கு எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் காரணமாக இருக்கிறோம்  என்பதையும் மறுப்பதிற்கில்லை.

முதியோர் வழிகாட்டவும், வாழ்த்தவும், உறவுகள் கைகொடுக்கவும் என இருந்தது ஒரு காலம்.
இப்போது முதியோர்களுக்கு வழி காட்டிவிட்டோம்! உறவுகளையே காணவில்லை!

பட்டப்படிப்பு வேறு, மனித உறவுகள் வேறு! இரண்டிற்கும் தொடர்பேயில்லை!  நிச்சயமாக அன்பையும், பரஸ்பர நம்பிக்கையையும், விட்டுக்கொடுத்தலையும், போதிக்கும் மனித உறவுகள் பற்றிய கல்வி அவசியம்தான்.

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
நீங்க எப்படின்னு கேட்கறீங்க. காதில விழுது!
நாங்க மனித நேயத்திற்கும், அன்பிற்கும் எப்போதோ அடி பணிந்தவர்கள்.

















12 Apr 2012

நந்தன வருஷம்

நல்லா இருக்கீங்களா, என்று நேரிலோ தொலைபேசியிலோ கேட்காதவர்களே இருக்கமுடியாது.   ஏதோ இருக்கேங்க, போயிட்டிருக்கு என்று பதில் சொல்பவர்களாகதான் பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள். மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்குமே எதோ ஒரு வடிவில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. இல்லாவிட்டாலும் கஷ்டப்பட்டு நாமே எதையாவது வரவழைத்துக் கொள்கிறோம்.

இந்த வாழ்க்கைச் சிக்கல்களில் இருந்து விடுதலை பெற மனிதன் பலவாறு முயன்று வருகிறான். இறைவழிபாடு, யோகம், தியானம் எனப் பல பாதைகள் அவன் முன்னே!

 'சும்மா இரு சொல்லற,' என்பார் அருணகிரிநாதர்! அவரே சொல்லிட்டார், 'சும்மா அதப்பண்ணு, இதப்பண்ணு என்காதே, நான் ஒன்னும் செய்யமாட்டேன்,' என்று சொன்னால் அது சோம்பேறித்தனம்.

சும்மா இரு என்றால் மனதை அடக்கவேண்டுமாம்! கோடிப் பணம் கொடுத்தாலும் அந்த ஒன்றை மட்டும் செய்யமுடியாதே!  ஒரு கணத்தில் ஒரு மூட்டை எண்ணங்கள்.

 ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. சந்நியாசி ஒருவருடைய மடத்திற்கு ஒரு வழிப்போக்கர் வருகிறார். அவரை சாப்பிட அழைக்கிறார்கள். இலை போட்டு உணவு வகைகள் பரிமாறப்படுகிறது.  அவர் முன்னால் சந்யாசி, கையில் கோலோடு! பக்கத்தில் ஒரு குரங்கு.

இந்தக்குரங்கு இருந்த இடத்தைவிட்டு அசைந்தால் சந்யாசி கம்பைத் தட்டுவார்.  குரங்கு கொஞ்ச நேரம்  சும்மா இருக்கும். பிறகு மறுபடியும்  நகரும். இப்படியாக கொஞ்ச நேரம் போயிற்று. சாப்பிடுகிறவருக்கோ ஒரே எரிச்சல். என்னடா இது, நிமிஷத்திற்கு ஒரு முறை கம்பைத் தட்டினால் ருசித்து சாப்பிடமுடியவில்லையே என்று சந்யாசியிடம் சொன்னார்,    

''சுவாமி, பாவம் குரங்கு! சும்மா அதை ஏன் மிரட்டி அடிக்கிறீர்கள்?
ஐயா, நான் கையில் உள்ள கம்பை கீழே போட்டுவிட்டால் இந்தக்
குரங்கு சும்மா இருக்காது. நீங்கள் பாட்டுக்கு சாப்பிடுங்கள்.
பாவம் குரங்கு. விட்டுவிடுங்கள்!
நிச்சயமாக? அப்புறம் நீங்கள் வருத்தப்படக்கூடாது!" இப்படியாக சந்யாசி கம்பைக் கீழே போட்டார்.

குரங்குக்குத் தெரிந்து விட்டது எஜமானர் அடிக்கமாட்டார் என்று. மெதுவாக வழிப்போக்கரின் இலையின் பக்கத்தில் போனது. கொஞ்சமாக சாப்பாட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தது. வழிப்போக்கர் விரட்ட குரங்கு அவர் தலைமேல் ஏறிற்று. அலறி அடித்துக் கொண்டு எழுந்தார் அவர். அவ்வளவுதான் அவருக்கு உணவு.
சந்யாசியிடம் சொன்னார், ஐயா, கையில் நீங்கள் கம்பு ஏன் வைத்திருந்தீர்கள் என்று இப்போதுதான் எனக்குப் புரிந்தது!

நம்முடைய மனமும் இந்தக்குரங்கைப் போன்றதுதான். அதனால்தான் பெரியவர் முதல் குழந்தைவரை எல்லோருக்குமே பிடித்த மிருகம் குரங்கு. எப்பொழுது பார்த்தாலும் நிம்மதியாக இருக்கவிடாமல் ஏதேதோ எண்ணங்கள். மனம் தான் நினைவுகளின் உற்பத்தித்தலம். பழைய நினைவுகளை சேர்த்துவைக்கும் பொக்கிஷ அறை.

இந்த மனதை நம் வசப்பட வைக்க முடியும் என்று முயன்று வென்றவர்கள் காட்டும் பாதைகளில் ஒன்றுதான் பக்தி. ஆயிரம் நாமங்களை மனனம் செய்கிறோம். அது மனதை ஒருமுகப்படுத்தும். கூடவே இறைவனைக் கற்பனை செய்து கண்முன் கொண்டு வருவது அடுத்தபடி.

இந்தப் பிறவியில் நாம் அடையக்கூடிய பெரிய செல்வம் சிவபெருமானின் திருஅருளைப் பெறுவதுதான் என்கின்ற வள்ளலார் சிவபெருமானை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் அழகைப் பாருங்கள்.
சற்றே கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்யுங்கள்.  இதோ, காட்சி தருகிறார் முக்கண்ணனார்.

''கங்கைச் சடையழகு! அதைப் பார்த்தவுடன் காதல் பெருகுகிறது. அச்சடைமேல் பிறைநிலா. அதன் மேல் கொன்றைமலர் மாலை. மாலையின் மேல் வண்டுகள் அணிவகுத்து நிற்கின்றன.
சிவபெருமானின்  அழகிய நெற்றியில் திலகம்.  தன்னைப் பார்க்கின்றவர்கள் மேல் அருள்மழைபொழியும் கண்ணழகு.
தன்னை நேசிக்கின்ற அடியவர்கள் இதய மலரின் மணத்தை முகரும் நாசித்திருக் குமிழின் நல்லழகு.
ஒளி நிறைந்த முல்லை அரும்புகளைப் போல் இருக்கிறது புன்முறுவல். பவழம் போல் சிவந்த
இதழ்கள்! அவர் என்ன செய்கிறார்? வந்த அடியார்களை  இனிக்க இனிக்க வாவென்று மலர் போன்ற வாயினால் அழைக்கின்றாராம்.
அடியவர்கள் செய்யும் விண்ணப்பங்களை கேட்டு அருள் புரியும் செவி. அன்பர்களின்  தேன் மொழிகளைக் கேட்கும் சங்கக் குழை அணிந்த காதுகள்.
சைவம் தழைப்பதற்காக அருள் சுரக்கும் திருவழகு நிறைந்த தெய்வமுகம், முகத்திலிருந்து பொழியும் கருணை, அமுதச் சிரிப்பு.
ஆலகால விஷத்தை அருந்தி, அதனை அன்னை தடுத்து நிறுத்த நீலமணி போல ஒளிரும் கழுத்து.
அன்பர்கள் மனதைப் போல தூய்மை ஒளிரும் வெண்ணீறு அணிந்த திருத் தோள்கள்!
சிவந்தகை மலரில் மான்; செங்கமலக் கையில் மழு! அடியவர்களின் அச்சத்தைப் போக்கும் அபயம் காட்டும் மலர்க்கை; சீரும், சிறப்பும், அருளும் பெறச் சரணமடையக் காட்டும் கைத்தலம்.
பாம்பணியும், வெண்ணீரும் அழகு செய்யும் திருமார்பு! யானைத்தோல் ஒளிரும் இடுப்பு.
மெய்யான அன்பர்களின் உள்ளத்தை எல்லாம் சேர்த்துக் கட்டியிருக்கின்ற வீரக்கழல்கள்.
பதினாறு சித்திகளும் அடைந்த யோகியர்கள் சிந்தையிலே தேனெனத் தித்திக்கும் சேவடிகள்!
மாலும், அயனும், வேதங்களும் காண முடியாத செல்வத் திருவடிகள்.
செம் மலையில் காட்சிதரும் பசுங்கொடிபோல், அம்பிகைக்கு இடப்பாகம் அளித்த, செம்பவளத் திருமேனி."

இத்தகைய பொன்மேனித் திருக் கோலத்தை  தினமும்  பார்த்திருந்தால்  அல்லல்கள் நீங்கும், அவன் புகழைப்  பாடுகின்றவர்கள்  பக்கத்திலே  நின்று  கேட்டால்  வினைகள்  விடை  பெற்றுப்  போகும், துயரமெல்லாம் போகும், தீமையெல்லாம்  ஓடிவிடும்  என்கின்றார்  வள்ளல் பெருமான்  திருஅருட்பாவில்.

இந்தக்  கேசாதி பாத வர்ணனையை மெதுவாக மனக் கண்களினால் கண்டு உள்ளமும், உயிரும், அறிவும் ஒன்றாக நிலைத்து நிற்க நாமே அவன் என்ற பாவனையோடு செய்தால் நிச்சயமாக மனம் நம் வசப்படும்.

இந்த நந்தன வருஷத்  தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று வாழ 
ஜோதி  ஸ்வரூபமான தெய்வசக்தியை வணங்குகிறேன். 

         
 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!








2 Apr 2012

தேடித் திரிகின்ற கண்கள்



 மடியிலே பால்மணம் மாறாத பச்சைக்  குழந்தையை வைத்துக்கொண்டு புன்னகை முகத்துடன் பூக்கட்டி,  வருவோர் போவோரையெல்லாம்,'' வாசனை  மல்லி வங்குங்கம்மா,'' என்று கூவி அழைக்கும் பொன்னம்மா!

மடக்குக் கட்டில் மேல் புத்தகங்களைப் பரப்பி வைத்து யாராவது வாங்க மாட்டார்களா என்று முகம் பார்க்கும் கன்னையன்!

சாக்குப் பையை மண்ணிலே விரித்து பச்சைமிளகாய், இஞ்சியை கூறுகட்டி விற்கும், காலத்தின் கோடுகளை முகத்தினிலே பிரதிபலிக்கும் வயதான பாட்டியம்மா!

கால்களில் செருப்புக்கூட இல்லாமல் கோணிப்பையை தோளிலும், நாய்களை விரட்டவும்,குப்பையைக் கிளறவும் நீண்ட கழியைக் கைகளிலே பிடித்துக்கொண்டு  ஒரு மஹாராணியைப் போல் கம்பீரமாக நடந்து போகும்  குப்பையில் பேப்பர்களையும், அட்டைகளையும் பொறுக்கி விற்கும்  சின்னத் தாய்!

சீசனுக்கு ஏற்ற மாதிரி ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம் விற்கும் தமிழ் நாட்டுத் தங்கராசு!

மாமூலாக பச்சை வாழைப்பழம் வாங்கும் பஸ் நிலைய, தள்ளு வண்டிக்காரா  அப்துல் பாய்!

பச்சைக் கிளிபோல, பளபளக்கும் காவிரிப் பாசன வெற்றிலையும், காரமடிக்கும்  மைசூர், கும்பகோணம் வெற்றிலைகளை  ஈரத்துடன் கூடை கூடையாக,  பக்கவாத்ய   சுண்ணாம்பு, பாக்குடன்  விற்கும் பழனி!

சிவத்த நிறமும்,வெளுத்த சிரிப்பும்  வரவேற்க, பர பரவென  குரல் கொடுத்து, விறுவிறுவென பில் போட்டு மடமடவென  காசை வாங்கி கல்லாவை நிரப்பும்  அன்னபூரணா அரிசிக் கடை பசவராஜ்!

''என்ன சார், நல்லா இருக்கீங்களா ?'' எனப் புன்முறுவல் பூக்கும் மருந்துக் கடைக்காரர்.

காலை நேரத்தில் காதுக்கு பூபாளம், நாவுக்கு டிகிரி காப்பி; ''பீபெரியா, ரோபெஸ்ட்டாவா, மிக்ஸா, பில்டரா, நைசா,'' என்று கேட்கும் காப்பிப் பொடிக் கடை அனந்தா!

''பார்வதி, பரமேஸ்வரா பந்தாயித்து, ஏனு ஸார் சமாச்சாரா,''எனப் புன்னகைக்கும் தாட்சாயணி!

ஆஜானுபாகுவாய் ஆறடி உயரத்தில் தலையில் முண்டாசுக் கட்டுடன் சைக்கிளில் பால் பாக்கெட்டுகள் வினியோகிக்கும் 70 வயது இளைஞர்  தாசப்பா!

 இருக்கும் இடம் தேடித்தேடி, மானுடக் கண்களுக்குத் தெரியாது மறைந்து கிடக்கும் மதுவை, மலர்கள் தோறும் சென்றணைத்துக் கவர்ந்து வரும் தேனியின் கூட்டை, நெருப்பிட்டுக் கலைத்து, தேனெடுக்க அனுமதி கொடுக்கவில்லை என்று கோபத்துடன் முகம் சிணுங்கும் பீஹாரி!

அன்பைப் பொழிந்து செய்த ரவாகேசரியும் கையுமாக அப்பா என்று ஆழ்மனதின் நேசமுடன்  பாசக்குரல் கொடுக்கும் ரமா!

ஆன்மீக தாகங் கொண்டு அனுதினமும், அன்னைக்கு மலர்களினால் அலங்காரம்! அரவிந்த மாமுனியின் தெய்வீக வாழ்க்கை வழிவகுக்கும் சாவித்ரி வழிநடக்கும் அன்பர் வட்டம்!

வள்ளலார் புகழை மடைதிறந்த வெள்ளமெனப் பாடும் கார்த்திகேயன்!இத்தனை நட்புக்கும்  நடுவே........

 உடற்பயிற்சிக்கு நடைபாதை, ஓய்வெடுக்க சிமெண்ட் இருக்கை, விளையாட ஊஞ்சல், சறுக்கு மரம், முதியோரும், இளையவரும் முன்னாலே வந்து முகம் பார்த்துச் சிரித்து, அரசியல் முதல் குடும்பப் பிரச்சினைகள் வரை அலச  ஆசனங்கள் போடப்பட்ட வட்டச் சிறு கூடமுள்ள  அழகான பூங்கா...

விடியலிலே முகம் காட்டி, காலை  வணக்கத்தை தென்றலின் துணையோடு மெல்லெனப் புகலும் சில்வர் ஓக் மரம்!

ஓயாமல் ஓடுகின்ற வாகனங்களின் ஓசை  நடுவே, செவியற்ற மகிழ்ச்சியினை சொல்லாமல் சொல்லி, ஆனந்தமாய் வான் பார்க்கும் எங்கள் குடியிருப்பு!

சின்னக் குழந்தையைப் போல் மாடிப் 'பால்கனியில்,' வருகின்ற வழி மேலே விழி வைத்துப் பார்த்து நிற்பாய்!

இப்போதோ,

போவையிலே வருவையிலே வெள்ளைச் சிரிப்போடு, கையும் பையுமாய் உன்  நரைத்த தலை எங்காவது தெரிகிறதா என்று  பார்த்துத் திரிகின்றன என்  கண்கள்!!!!!!!!

















31 Mar 2012

பாரத மாதாவிற்கு வந்தனங்கள்!

நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது. கல்லூரிப் படிப்பின் கடைசி வருடத்திலேயே விமானப்படையில் சேர விளம்பரம் பார்த்து  விளையாட்டாக விண்ணப்பிக்க, நேர்முகத் தேர்வுக்கு வரும்படி அழைப்பு வர இந்தப்பையன் நான் அதில்தான் சேருவேன் எனப் பிடிவாதம் பிடித்து மைசூருக்குப்  போனான். உயரம், எடை, அவர்கள் நடத்திய கடுமையான  உடல்பயிற்சித் தேர்வுகளில் நன்றாகச் செய்ததால் படிப்பு முடிவதற்குள்  வேலையில் சேர உத்தரவு வந்துவிட்டது.

எத்தனையோ எடுத்துச் சொல்லியும், வேறு வேலைகளுக்கு முயற்சிக்கலாம், அல்லது மேல்படிப்பு படிக்க, அமெரிக்கா செல்ல முயற்சி செய்யலாம் என்று மனதை மாற்ற எண்ணியும் பிடிவாதம் காரணமாக விமானப் படையில் சேர்ந்தான்.

நாங்கள் பெங்களூர் மாற்றலாகி வந்த வருடம், அவனுக்கும் இங்கேயே இரண்டு வருடம்  பயிற்சிக் கல்லூரியில் டிரெயினிங்.  செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி, பிள்ளையார் சதுர்த்தி தினம். காலை ஒன்பது மணிக்கு ரயில்வே நிலையத்தில் ரிப்போர்ட் செய்யவேண்டும். விடியற்காலையில் எழுந்து, அவனுக்குப் பிடிக்கும் என்று கொழுக்கட்டைகள் செய்து, பொட்டலம் கட்டி ஸ்டேஷனுக்குப் போனது நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது.

அவனுடைய டிரெயினிங் காலம் முடியும் வரையிலும் ஒவ்வொறு பண்டிகைக்கும், அவனுக்குப் பிடித்த சமையல் செய்யச் சொல்லி, டிபன் கேரியரில் நிரப்பி, தான் சாப்பிட்டாரோ இல்லையோ, எங்கள் காதல் வாகனம் ''லூனா,''வில் என்னையும் வற்புறுத்தி ஏற்றிக் கொண்டு  வழிதெரியாமல் சுற்றி வந்து திண்டாடி, ஒரு வழியாய் ''ஜலஹள்ளி''யைக்  கண்டு பிடித்து அவன் ரசித்துச் சாப்பிடுவதைக் கண்டு ஆனந்தப்பட்டிருக்கிறார் அவன் தந்தை.

தேசத்தின் பாதுகாப்புக்காக சேவை செய்யும் ஒரு பணியில் மகன் இருப்பது பெருமைக்குரிய ஒரு விஷயந்தான் என்றாலும் வசதிகளற்ற, தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுடையது.

கட்டுப்பாடுமிக்க இவர்களுடைய வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் துணையாக பொது வாழ்க்கை! பரோடா, ஶ்ரீநகர், லூதியானா, மும்பை என எல்லா ஊர்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது என்றாலும் என் கணவருக்கு மனதில் ஒரு குறைதான். தன் பிள்ளையும் நண்பர், உறவினர் குழந்தைகளைப் போல  கை நிறைய வெளி நாடுபோய் சம்பாதிக்கவில்லை என்று!  ஆனாலும் எல்லோரிடமும் தன் பிள்ளையின் 'Rank,' சேர்த்துதான் பெருமையாக சொல்லுவார்! எல்லோருக்கும் தேச சேவைக்காக தங்கள் குழந்தைகளை அனுப்பும் வாய்ப்பு கிடைப்பதில்லையே!

 நாங்கள் ஜம்மு-காஷ்மீர் சென்றிருந்த போது நூறடிக்கு ஒருவராக பாதுகாப்பு கவசம் அணிந்து, கையில் கனமான துப்பாக்கியை ஏந்திக் கொண்டு கடும் குளிரில் நின்று கொண்டிருந்த ஜவான்களைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்ந்தேன். பெருமையடைந்தேன்.  என்னுடைய குழந்தைகளாக அவர்களை நினைத்து அவர்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்.

என் வாழ்வில் மறக்கமுடியாத தருணம் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நடந்தது. அமிர்தசரஸ் பொற்கோவிலைத் தரிசித்தபின்  (Wagah) 'வாகா' எல்லையை அடைந்தோம். மாலையில் தேசக் கொடி இறக்கும் வைபவம்! பார்வையாளர்களால் நிரம்பியிருந்த அரங்கில் பாரதமாதாவிற்கு ஜே என்ற கோஷம்  வானை நிரப்பியது. பாதுகாப்பு வீரர்கள் கால்களை வீசி வீசி நடக்க, பார்வையாளர்கள் தேசியக் கொடியை கைகளில் வைத்து அசைக்க  எங்கும் தேசபக்தி வெள்ளம்!

என் கைகளுக்கும் கிடைத்தது தேசியக் கொடி! இரு கைகளிலும் அதனைப் பற்றிக் கொண்டு, உணர்ச்சி வசப்பட்டு ''பாரத் மாதா கி ஜே'' என்ற கோஷத்தால் நிரம்பிய வான வெளியில் ,  காற்றில் அசைந்த தேசக் கொடியைப் பார்த்து நின்ற அத்தருணம்  என் கண்ணீர் மலர்கள் பூமித் தாய்க்கு சமர்ப்பணமாயிற்று! இந்தியத் தாயின் மகளாய், அவளுடைய பாதுகாப்பிற்காக மகனை அர்ப்பணித்த தாயாய் பூரிப்படைந்தேன்.

பார்லிமெண்ட் தாக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் இருந்த  வீரர்கள் அனைவரையும் மீண்டும்அழைத்தது ராணுவம். நாடு தாக்கப்பட்டால் தயார் நிலையில் இருக்கவேண்டிய நிர்பந்தம்.  இந்தியாவின் ஒவ்வொரு ஊரின் ரயில் நிலயங்களிலும் ராணுவ வீரர்கள் பயணம் செய்த ரயில்களைச் சூழ்ந்தது மக்கள் கூட்டம்.

கிராம ஜனங்கள் விற்பனைக்குக் கொண்டுசெல்ல வேண்டி வைத்திருந்த உணவு,
காய்கறி மூட்டைகளை ஜவான்களுக்கு அளித்து, கட்டியணைத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்த செய்திகளைச் சொல்லக்கேட்டு, நம் நாட்டு மக்களின் தேசப்பற்றையும், ஓற்றுமையுணர்வையும் உணர்ந்து பெருமையடைந்தேன்.

மஹாகவி பாரதி பாடினானே,

''ஆயிரம் உண்டிங்கு ஜாதி -எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி? ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?''---என்று!

ஆம் நம் நாட்டு மக்கள் தேசப்பற்று மிக்கவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இமாலயப் பனியிலும், குளிரிலும், மழையிலும், வெயிலிலும், இருபத்து நான்கு மணி நேரமும், முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும்  நாட்டுக்காகப் பணிபுரியும் நம் வீரர்களின் பணி மகத்தானது.   இளமைக் காலம் முழுவதையும் நாட்டின் பாதுகாப்புக்காக அர்ப்பணித்த, அர்ப்பணிக்கும் ஒவ்வொரு இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வந்தேமாதரம்! பாரதத் தாய்க்கு என்றும் வெற்றி உண்டாவதாக! ஜெய பாரதம்!




28 Mar 2012

Humour

In 1990's the most popular programme broadcasted by All India Radio Chennai was ''Today's information'' ( இன்று ஒரு தகவல்). This programme  was presented by Sri. Thenkachi  swaminathan daily. Every household waited to hear him so that the day began with a sense of humour. The two minute story with a joke will make us laugh for a long time. Here are two such narratives.

An industrialist gave a party to a VIP. After the party he came forward to present the VIP  a brand new car.
The VIP refused the offer saying that he has come to such a high post only to serve the people and that he was honest and will not accept anything  free.
But the industrialist told him to give only one rupee as a token amount and take the car so that it is not free.
The VIP called the industrialist near him, gave him 10 Rs and said,''Kindly send 10 cars to my address.''

---

One man known to me met his friend in the market. He went to him and gave a nice blow. The friend asked him, ''Why did you beat me?''

Why did you go and tell my wife that I am a fool?

Oh, did you beat me for telling that?

It is okay if you tell somebody. But why did you tell it to MY wife!!??

---

25 Mar 2012

A Question Mark?

                    A college student was in a philosophy class, where a class discussion about ''whether or not God exists'' was in progress. The professor had the following logic;
"Has anyone in this class heard God?''
Nobody spoke.
"Has anyone in this class touched God?''
Again nobody spoke. 
''Has  anyone in this class seen God?''
When nobody spoke for the third time he simply stated, ''Then there is no God.''

One of the students stood up and asked the following questions:
"Has anyone in this class heard our professor's brain?''  Silence.
''Has anyone in this class touched our professor's brain?'' Absolute Silence.
''Has anyone in this class seen our professor's brain?''

When nobody in the class dared to speak, the student concluded, ''Then according to our professor's logic, it must be true that our professor has no brain!''

( Reproduced from ''The Awakening Ray, March 1999. The Gnostic centre)